எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, October 31, 2012

தம், தம், ஆலூ தம், தம் தம்!

இப்போ அடுத்து நாம் தக்காளி ப்யூரி எனப்படும் தக்காளிச் சாறு அல்லது விழுதை வைத்துச் செய்யும் ஒரு  சமையல் குறிப்பைப் பார்ப்போம்.

தக்காளி ப்யூரி எடுக்கும் விதம்:  ஒரு கிலோவுக்குக் குறையாமல் தக்காளியை வாங்கி நன்கு கழுவிக் குக்கரில் அல்லது கொதிக்கும் வெந்நீரில் போட்டு நன்கு வேக விடவும்.  பின்னர் அந்தச் சாறில் இருந்து விதைகளை வடிகட்டிவிட்டு, விழுதைக் கெட்டியாகச் சேகரித்துக்கொண்டு குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரில் வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.  இதை உடனடியாக உபயோகிப்பதே பொதுவாக நல்லது.  அப்படி நீண்ட நாட்கள் வேண்டுமெனில் வினிகர் ஊற்றிக் கலக்கி ஃப்ரீசரில் வைத்துக்கொள்ள வேண்டும்.  இப்போது நாம் பார்க்கப் போவது ஆலு தம் என அழைக்கப் படும் ஒரு கூட்டு.  நான்கு பேருக்கான அளவு இங்கே சொல்கிறேன்.

சின்ன உருளைக்கிழங்கு அரைகிலோ வாங்கி வேக வைத்துத் தோலுரித்துக்கொள்ளவும்.  பின்னர் அதில் ஊசியால் சுற்றிலும் துளைகள் போடவும்.  துளைகள் போடுவதால் உ.கி. உடையக் கூடாது.  முழுசாகவே இருக்கணும்.  வெங்காயம் பெரிது ஒன்று அரைக்க. தக்காளி இரண்டு அரைக்க.பச்சைமிளகாய் 2, இஞ்சி ஒரு துண்டு, கொத்துமல்லி, (பூண்டு சேர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பூண்டுப் பற்களையும் சேர்த்துக்கொள்ளலாம்) இவற்றைத் தனியாகவும், வெங்காயம் தக்காளியைத் தனியாகவும் அரைத்துக்கொள்ளவும்.  மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன், கொத்துமல்லித்தூள் இரண்டு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை.  தக்காளி ப்யூரி ஒரு கிண்ணம் நிறைய.  வெண்ணெய் அல்லது க்ரீம் உங்கள் ருசிக்கு ஏற்றாற்போல் சாதாரணமாக இந்த அளவுக்கு அரைக்கிண்ணம் வெண்ணெய் தேவைப்படும். க்ரீம் எனில் சாப்பிடுகையில் மேலே ஊற்றிக்கொள்ளலாம்.  அதுவும் அரைக்கிண்ணம் இருக்கலாம்.  கரம் மசாலாப் பொடி இரண்டு டீஸ்பூன், உப்பு. தாளிக்க, வதக்க எண்ணெய், மேலே தூவப் பச்சைக்கொத்துமல்லி.

அரைக்கச் சொன்ன வெங்காயம், தக்காளியைத் தனியாக அரைக்கவும்.  பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லியையும் நன்கு விழுதாக அரைக்கவும்.  இப்போது அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்துக் கொண்டு எண்ணெய் விடவும்.  எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும்.  சர்க்கரை எண்ணெயில் கரையட்டும்.  இம்மாதிரி மசாலா சேர்த்துச் செய்யப் படும் சமையல்களில் கொஞ்சம் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தால் மசாலாவின் தாக்கம் குறைவதோடு வயிற்றிலும் வேதனை செய்யாது.  சர்க்கரை கரைந்ததும், வெங்காயம் தக்காளி விழுதைப் போட்டு வதக்கவும்.  நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வருகையில் பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டுச் சிறிது வதக்கவும்.  பின்னர் உருளைக்கிழங்குகளைச் சேர்த்து மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கொஞ்ச நேரம் வதக்கவும்.  பின்னர் தக்காளி ப்யூரியை விடவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் அரைக்கிண்ணம் நீரைச் சேர்க்கவும்.  தேவையான உப்பைப் போடவும்.  நன்கு கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கும் முன்னர் கரம் மசாலாப் பொடியைப் போட்டுவிட்டுப் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.  சூடாக இருக்கையிலேயே வெண்ணெயைச் சேர்க்கவும். அல்லது க்ரீமை மேலே ஊற்றி அலங்கரிக்கவும்.  உருளைக்கிழங்கில் துளைகள் போடுவதால் கொதிக்கையில் காரம், மசாலா ருசி உள்ளே போய் இறங்கிக் கொள்ளும்.  ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தி, பராட்டா போன்றவற்றோடு சாப்பிடலாம்.  நான் செய்யற அன்னிக்குப் படம் எடுத்துப் போடறேன்.

13 comments:

  1. படிக்கவே சுவாரஸ்யமா இருக்கு. இதையும் ஒருதரம் செய்யணும். செய்து பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் நிறைய சேர்ந்து விடும் போல இருக்கு!

    ReplyDelete
  2. வாங்க அப்பாதுரை, ஆலு தம் நிறையச் சாப்பிட்டுட்டீஙக போல! :)))))

    ReplyDelete
  3. ஸ்ரீராம், இது ரொம்பவே சுலபம். எங்க வீட்டிலே சின்ன உருளைக் கிழங்கு தயாரா இருக்கு. ஆலு தம் பண்ணு, பண்ணுனு சொல்லிட்டு இருக்கு. இட்லி மாவு நிறைய இருக்கேனு பேசாம இருக்கேன். பண்ணினதும் படம் எடுத்துச் சேர்க்கிறேன். :))))

    ReplyDelete
  4. தக்காளி ப்யூரி எடுக்க குக்கர்ல தக்காளியை வேகவைக்கறதுதான் சுலபமான வழியா இருக்கும்னு நினைக்கறேன். நான் ஒரு தடவ புளி சேக்காம தக்காளி ரசம் வைக்க தக்காளியை தனியா வேக வெச்சபோது அது வேக ரொம்ப நேரம் ஆச்சு. அப்படியும் நல்லா மசிக்க முடியல. அப்போலேந்தே தக்காளியை குக்கர்ல சாதத்தோடவோ, பருப்போடவோ வேக வெச்சுடறேன். இந்த முறைல தக்காளியை நிமிஷமா மசிக்க முடியறது. இப்போ தினப்படி சாம்பார், ரசம் வைக்கவே தக்காளியை குக்கர்ல வேக வெச்சு மசிச்சு புளியோட சேத்துடறேன். இந்த முறைல சாம்பார், ரசம் கலரும் நல்லா இருக்கு. ருசியும் இன்னும் நல்லா இருக்கு.

    தம் ஆலு தம் ரொம்ப நல்லா இருக்கு. அரைக்கிண்ணம் வெண்ணையை அது தலைல கொட்ட சொல்றதுதான் கொஞ்சம் பயமா இருக்கு. ஏத்தின எடையை
    குறைக்கவே பெரும்பாட இருக்கு. :) பேசாம வெண்ணை சேக்கறதுக்கு முன்னாடி எனக்கு எடுத்து வெச்சுண்டு, பசங்களுக்கு மட்டும் வெண்ணை சேத்து குடுக்கறேன். ஒரு வேளை அவங்களும் வேண்டாம்னு சொன்னா வெண்ணைக்கு ஜூட் விட்டுடலாமா? இப்படி பண்ணினா டேஸ்ட் ரொம்ப மாறி போய்டுமா?

    உங்ககிட்ட என்னோட அடுத்த வேண்டுகோள் ரசபொடி ரெசிபி. என்னோட ரசபொடில நான் பண்ற ரசம் நல்லாவே வரது. எனக்கும் பிடிச்சிருக்கு. :)) இருந்தாலும் எனக்கு உங்களோட ரெசிபி வேணும். சாம்பாரை விட எனக்கு ரசம்தான் ரொம்ப பிடிக்கும். சாப்பாடு விஷயத்துல உங்க டேஸ்ட்
    கூட நான் நிறைய ஒத்து போறேன். ஒரு அடை ரெசிபி குடுத்து நீங்க மொத்தமா என்னை கவுத்துடீங்க. :)) அதனாலதான் உங்களை இப்படி ரொம்ப தொந்தரவு
    பண்றேன். :) உங்களோட கண்டதிப்பிலி ரசம் ரெசிபி குறிச்சு வெச்சுண்டாச்சு. ஆனா ஊருக்கு வந்த பிறகுதான் பண்ணனும். இந்த அதெல்லாம் கிடைக்கறதில்லை.

    ReplyDelete
  5. வாங்க மீனாக்ஷி, யு.எஸ். தக்காளிகள் ரொம்பவே அழுத்தமா இருக்கிறதாலே நேரம் எடுக்குதோ? நான் கட் பண்ணிப் போட்டுடுவேன் கொதிக்கும் வெந்நீரில். விரைவில் வெந்துவிடும். அதென்னமோ எ.ரசத்துக்கு வெந்நீரில் தக்காளியைப் போட்டுச் சாறு எடுத்துப் பண்ணினால் தான் ரசம் மாதிரி எனக்குத் தோணும். எல்லாம் பழக்கம் தான். :))))) நீங்க தக்காளியைக் குக்கரிலே வைக்கிறாப்போல் நான் சாதம், பருப்போட, புளியை ஒரு சின்னக் கிண்ணத்தில் உருட்டி வைச்சுடறேன். அப்புறம் எடுத்துக் கரைத்துக் குழம்பு, ரசம் செய்கையில் ஒட்டச் சாறு வரதோட இல்லாமல் புளியும் குறைச்சலாக ஆகிறது. அதோட ஏற்கெனவே புளி வாசனை போகக் குக்கர் வாசம் செய்ததால் புளிவாசனையும் வராது. சாம்பார், வ.கு. ரசம் சீக்கிரம் ஆயிடும்.

    ReplyDelete
  6. வெண்ணெய் சேர்ப்பது மசாலாத் தாக்கத்தைக்குறைப்பதற்காகவே. நீங்க வெண்ணெய் சேர்க்காமல் எடுத்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் சாப்பிடுகையில் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது ப்ரெட்டுக்கான பட்டர் ஸ்ப்ரெட்(கலோரிகள் இல்லாதது), வெண்ணெய் மாதிரி :) சேர்த்துக்கொள்ளலாம். டேஸ்டெல்லாம் மாறாது.

    ReplyDelete
  7. ரசப்பொடிக்குச் சீக்கிரமா வரேன்.

    ReplyDelete
  8. அப்புறம் கண்டந்திப்பிலி அங்கே இந்தியன் ஸ்டோர்ஸிலே குஜராத்தியர்/ராஜஸ்தானியர் நடத்துவது இருந்தால் கேட்டுப்பாருங்க. பிபர்மோர் என்ற பெயர் ஹிந்தியிலே. கட்டாயமாய்க் கிடைக்கும். விலை தான் யானைக்குட்டி விலையாக இருக்கும். நான் இந்தியாவிலே இருந்து போறச்சே இம்மாதிரிச் சாமான்கள் வாங்கிட்டுத் தான் போயிட்டு இருந்தேன். அப்புறமாப் பொண்ணு, பையர் இரண்டு பேரும் இங்கேயே கிடைக்குது; இங்கே இந்த விலை எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நீ ரூபாயிலே மாத்திப் பார்த்துட்டு மயக்கம் போடாதேனு சொல்லிட்டாங்க. எல்லாமே கிடைக்குது ஹூஸ்டன், மெம்பிஸிலே.

    ReplyDelete
  9. உங்க வீட்டுக்கு வரப்ப கவனமா இருக்கணும். பேசுற உருளைக்கிழங்கெல்லாம் வச்சிருக்கீங்க?

    ReplyDelete
  10. நானும் எப்பவும் புளியை மைக்ரோவேவ்ல நல்லா கொதிக்க வெச்சுடுவேன். இதனால கொஞ்சம் புளி எடுத்தாலே நல்ல மையம் கிடைக்கறதோட, புளி வாசனையும் நல்லா போய்டறது. சாம்பார் ரசமும் சீக்கிரம் ஆயிடறது.
    வெண்ணைக்கு பதிலா நீங்க சொன்ன மாதிரி பண்ணி பாக்கறேன். எனக்கு ஹிந்தி தெரியாது. 'கண்டதிப்பிலி' ஹிந்தி பெயர் சொன்னதுக்கு நன்றி. இங்க கிடைக்கறதான்னு பாக்கறேன். இந்த ரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கிடைச்சா உடனே பண்ணிட வேண்டியதுதான். ரொம்ப நன்றி! :)

    ReplyDelete
  11. தம்ஆலூ நன்றாக இருக்கின்றது.

    நாங்களும் இதுபோல செய்வதுண்டு.
    சில தடவைகள் தக்காளிசேர்க்காமல் இறுதியில் எலுமிச்சம்சாறு சேர்ப்போம்.

    ReplyDelete