எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, March 11, 2020

பாரம்பரியச் சமையலில் சில பச்சடி வகைகள்!

வாழைப்பழத்திலும் பச்சடி பண்ணலாம். கனிந்த வாழைப்பழத்தை வில்லைகளாக நறுக்கிக்கொண்டு அதோடு தேங்காய் சேர்த்துக்கொண்டு கொஞ்சம் சர்க்கரையும் உப்பும் கலந்து பிசறிக்கொண்டு தயிரில் போட்டுச் சாப்பிடலாம். எல்லோருக்கும் இது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதே போல் ஜவ்வரிசியை நன்கு எண்ணெய் விட்டுப் பொரித்துக் கொண்டு உப்புச் சேர்த்துத் தயிரில் போட்டு ஊறியதும் கடுகு, பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துச் சாப்பிடலாம். கெட்டி அவலிலும் இதே மாதிரி பண்ணலாம் என்றாலும் அது சாப்பிடுவதற்குச் செய்யும் தயிர் அவல் மாதிரி இருக்கும். அவ்வளவாக ருசிக்காது.

மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு அதோடு ஒன்றோ இரண்டோ பச்சை மிளகாயைத் தேவையான காரத்துக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துத் தயிரில் கலக்கலாம். பின்னர் தேவையான உப்பைப் போட்டு எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துக் கொத்துமல்லி தூவலாம். வடு மாங்காய் ஊறுகாயிலும் கொஞ்சம் வெம்பினாற்போல் இருக்கும் மாங்காய்களை எடுத்துக்கொண்டு மேற்சொன்ன மாதிரி காரம் சேர்த்து அரைத்துத் தயிரில் கலந்து தாளிதங்கள் செய்து சாப்பிடலாம்.

வெண்டைக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு தாளிதம் செய்து உப்புச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தயிரிலும் போட்டுச் சாப்பிடலாம். முன்னர் வெண்டைக்காய்ப் புளிப்பச்சடி பார்த்தோம். மாற்றாக தயிரில் போட்டும் பண்ணிக்கொள்ளலாம். வெறும் தேங்காய் மட்டும் போட்டுப் பண்ணும் தயிர்ப் பச்சடியிலும் மேற்சொன்ன மாதிரி காய்களைச் சேர்த்தும் பண்ணலாம். தேங்காய் மட்டும் போட்டும் பண்ணலாம். வாழைத்தண்டையும் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்புப் போட்டுச் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் நீரை வடித்துக் கொண்டு தயிரில் போட்டுக் கலக்கிக் கொண்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு சாப்பிடலாம். வெள்ளரிக்காய்ப் பச்சடி போல் இதுவும் நன்றாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

பச்சடி வகைகள் முடிந்தன.

Saturday, March 7, 2020

பாரம்பரியச் சமையலில் பலாப்பழப் பச்சடி போன்றவை!

பலாப்பழக் காலம் நெருங்கி விட்டது. அரைக்காயாக இருந்தாலும் சரி, பலாப்பழமாக இருந்தாலும் சரி, நான்கு பேருக்குத் தேவையான அளவு சுமார் 12 சுளைகள்.  வெல்லம் தூள் செய்தது ஒரு கிண்ணம், அரிசி மாவு கரைத்து விட 2 டீஸ்பூன். தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, பச்சை மிளகாய் ஒன்று

Image result for பலாப்பழப் பச்சடி

படத்துக்கு நன்றி கூகிளார்

பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை அல்லது கனமான பாத்திரத்தை வைத்து நறுக்கிய சுளைகளைப் போட்டு நீரைத் தேவையான அளவுக்கு விட்டு வேகவிடவும். தேவையானால் கால் டீஸ்பூன் உப்புச் சேர்க்கலாம். சுளைகள் நன்கு வெந்ததும் வெல்லத்தூளைச் சேர்த்துக் கரைய விடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் அரிசிமாவைக் கரைத்து விட்டு நெய்யில் கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.

இதையே வெல்லம் சேர்த்துக் கரைந்த பின்னர் தேங்காய் அரை மூடியைத் துருவிக் கொண்டு நன்கு அரைத்துச் சேர்க்கவும். கெட்டியாகவேண்டுமெனில் அரிசி மாவை அந்தத் தேங்காயோடு சேர்த்து அரைத்து விடவும். தேங்காய் சேர்த்த பின்னர் அதிகம் கொதிக்கவிடாமல் ஏலக்காயைப் பொடித்துப் போட்டு நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை தாளிக்கவும்.

பழப்பச்சடிகள்: தக்காளிப் பழப் பச்சடி முதலில். நான்கு பேருக்குத் தேவையான அளவு கால்கிலோ தக்காளி நன்கு சிவந்த பழங்களாக எடுத்துக் கொண்டு கொதிக்கும் தண்ணீரில் போட்டுப் பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்துத் தக்காளிகளை எடுத்து ஆறவிட்டுத் தோலை உரித்தால் தோல் மட்டும் உரிபடும். இவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஓர் அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கவிடவும். இந்த அளவுக்குச் சுமார் 200 கிராம் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் பச்சடி நீர்க்க ஆகிவிடும். ஆகவே நன்கு கொதிக்கவிடவும்.  சர்க்கரை நன்கு கெட்டியாகிப் பச்சடியும் கெட்டியான பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஏலக்காய் சேர்த்து நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை போன்றவற்றை வறுத்துச் சேர்க்கலாம்.

மேற்சொன்ன மாதிரித் தக்காளிப் பச்சடியைக் கெட்டியாகப் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, வாழைப்பழம், திராக்ஷை போன்றவற்றை எடுத்துக் கொண்டு திராக்ஷையை நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும். மாதுளை முத்துக்களை எடுத்துத் திராக்ஷையோடு சேர்க்கவும். ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா ஆகியவற்றை ஒரே அளவில் நறுக்கிக் கொள்ளவும். ஆரஞ்சை உரித்துத் தோலை நீக்கிச் சுளைகளை எடுத்துக்கொள்ளவும். பேரீச்சம்பழம் இருந்தால் கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். எல்லாப்பழக்கலவையையும் ஓர் வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் செய்து வைத்திருக்கும் தக்காளிப் பச்சடியைக் கொட்டிக் கலக்கவும். பெரிய விசேஷங்கள், கல்யாணங்கள், நிச்சயதார்த்தம், கிரஹப்ரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் பண்ணும் பழப்பச்சடி இது. எங்க வீட்டில் சின்ன சமாராதனை, வீட்டு மட்டுக்கும் பண்ணும் ஹோமங்கள், மற்றும் சில விசேஷ நிகழ்வுகளுக்கு இந்தப் பச்சடியை முதல் நாளே தனியாக செய்து வைத்துக் கொண்டு விடுவேன்.இதை சுமார் பத்து நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.

Image result for பழப் பச்சடி

 படத்துக்கு நன்றி கூகிளார்.