எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, October 24, 2012

சுண்டலோ சுண்டல் 1

எல்லார் வீட்டிலேயும் நவராத்திரி முடிஞ்சிருக்கும்.  சுண்டல்கலெக்‌ஷன் ஆச்சா?  இங்கே சுண்டல் போணியான அளவுக்குக் கலெக்‌ஷன் இல்லை. :)))) போனால் போகுதுனு பார்த்தா சில நாட்கள் எங்க சுண்டல் எங்களுக்கே கிடைக்காமலும் போச்சு.  அதனால் என்ன!  நவராத்திரி இல்லாட்டியும் கூடச் சுண்டல் செய்து சாப்பிடக் கூடாதா என்ன!  சுண்டல் செய்வோம்; சாப்பிடுவோம்.  சரியா!  முதல்லே பயறுச் சுண்டல்.  இதை நான் எப்போச் செய்தாலும் சாப்பிடறவங்க பலமான பாராட்டுக்களைக் கொடுப்பாங்க.  அப்படி ஒண்ணும் புதுசாச் செய்யறதில்லை.  வழக்கமான செய்முறை தான்.  நான்கு பேருக்கான அளவிலேயே சொல்லறேன்.  கால் கிலோ ஊற வைத்தால் இரட்டிப்பாகும்.

பயறு கால் கிலோ எடுத்துக் கொண்டு களைந்து கல் அரிக்கவும்.  பயறு வகைகளே சில சமயம் கல் போல இருக்கும்.  ஊறவே ஊறாது.  ஆகவே ஊற வைக்கும் முன்னரே களைந்து அவற்றை நீக்குதல் நல்லது.  பின்னர் பயறை ஊற வைக்கவும்.  நாளைக்குச் செய்ய இன்று காலையில் ஊற வைத்தல் நல்லது.  ஊற வைத்த பயறை நாலைந்து முறை கழுவிக் களைந்து நீரை மாற்றினால் ஊறிய வாசமும், வழுவழுப்பும் வராது.  இது சுண்டலுக்கு ஊற வைக்கும் அனைத்துப் பருப்பு வகைகளுக்கும் பொருந்தும்.  இரவில் அதிகம் கழுவி நீர் மாற்ற முடியாது என்பதால் காலை எழுந்ததும் நன்கு கழுவி நீரை மாற்றிவிடவும்.  இதனால் ஒரு மாதிரியான வாசம் வருவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

கால் கிலோ பயறு ஊறவைத்ததை உப்புச் சேர்த்து வாணலியில் வேகவிடவும். பருப்புக் கைகளால் அழுத்தினால் நன்கு வெந்திருக்க வேண்டும்.  வெந்த பருப்பை வடிதட்டில் போட்டு அதிகப்படி நீரை வடிக்கவும்.  பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, (நல்லெண்ணெயே நன்றாக இருக்கும்) கடுகு, பெருங்காயம், கருகப்பிலை, மி.வத்தல் இரண்டு தாளிக்கவும்.  வெந்த பருப்பைப்போட்டு ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடியையும் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  சாம்பார் பொடி வாசனை போகக் கிளறிக் கீழே இறக்குகையில் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  எல்லாச் சுண்டலுக்குமே தேங்காய்த் துருவலே நன்றாகச் சேர்ந்து வரும்.  (பச்சைப்பட்டாணிச் சுண்டல் தவிர்த்து) பின்னர் தேவையானால் பச்சைக்கொத்துமல்லி சேர்த்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பரிமாறலாம். இந்த வெங்காயம் சேர்ப்பதை ந்வராத்திரி நாட்களில் செய்யும் நிவேதனத்தில் தவிர்க்க வேண்டும்.


பச்சைப் பட்டாணிச் சுண்டல்: பச்சைப்பட்டாணி கால் கிலோ, ப.மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, கருகப்பிலை, தேங்காய் கீறியது எனில் ஒரு டேபிள் ஸ்பூன், துருவல் எனில் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ஒன்றரை டேபிள் ஸ்பூன், மாங்காய் துருவல் அல்லது கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி இரண்டு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம், கடுகு, தாளிக்க எண்ணெய், வெங்காயம் விருப்பம் போல்.

பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்தால் போதும். நன்றாக ஊறிவிடும். காலையில் எழுந்ததும் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி நீரை மாற்றி வைக்கவும்.  பின்னர் குக்கரில் கொஞ்சம் போல நீரில் உப்புச் சேர்த்துப் பட்டாணியை வேக வைக்கவும்.  அதிக நேரம் வைத்து விட்டால் குழைந்துவிடும்.  ஆகவே இரண்டு விசில் கொடுத்தால் போதுமானது.  பின்னர் இருக்கும் கொஞ்சம் நீரையும் வடித்து வைத்துக்கொள்ளவும்.  வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளித்துப் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும்.  பின்னர் வெந்த பட்டாணியைச் சேர்த்துக் கொண்டு, சாம்பார் பொடியையும் சேர்க்கவும்.  கிளறும்போது தேங்காய்க் கீறலையும், மாங்காய்க் கீறலையும் சேர்க்கவும்.  கை விடாமல் ஐந்து நிமிஷம் கிளறவும்.  சாம்பார் பொடி வாசனை போனதும் கீழே இறக்கிப் பச்சைக்கொத்துமல்லி சேர்க்கவும்.  இதற்கு வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயமும் போடலாம்.  கடுகு, பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்ததும் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கிப் பின்னர் வெந்த பட்டாணியைச் சேர்க்கவேண்டும்.  அல்லது மேலே சொன்னது போல் பச்சை வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

4 comments:

  1. என்னுடைய வோட்டு பட்டாணி சுண்டலுக்கு... 'தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்..' பழைய பாடல் நினைவுக்கு வருகிறது! வெங்காயம் சேர்த்த சுண்டலுக்குதான் விருப்பம் அதிகம்!

    ReplyDelete
  2. //பயறு வகைகளே சில சமயம் கல் போல இருக்கும்.
    ஒரு வேளை எங்க வீட்டுல கல்லை பயறுனு நினைச்சு செஞ்சிட்டிருந்தாங்களோ?

    ReplyDelete
  3. வாங்க ஸ்ரீராம், வெங்காயம் சேர்க்காட்டியும் பட்டாணிச் சுண்டல் டேஸ்ட் தான்.:))))

    ReplyDelete
  4. @அப்பாதுரை, ஹாஹாஹா! இருக்கும். :)))

    ReplyDelete