எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, September 19, 2018

உணவே மருந்து! கம்பு 3 உணவு வகைகள் சில!

தினம் போட முடியாட்டியும் வாரம் 2,3 பதிவாவது போட நினைச்சு ஆனால் முடியறதில்லை. சில நேரம் மற்றப்பதிவுகள் படிப்பதிலும் பதில் சொல்வதிலும் சென்றால் மற்ற நேரம் மற்ற வேலைகள்! இத்தனைக்கும் மதியம் குறைந்தது 3 மணி நேரமாவது தொடர்ந்து இணையத்தில் அமர்கிறேன். அதில் இடைவெளி அரைமணி போக மற்றபடி நான்கு, நான்கரை மணி வரை இருப்பேன். ஆனாலும் சில சமயங்களில் எதுவும் எழுத முடியறதில்லை. கவனத்துடன் எழுத வேண்டிய பதிவுகளை அதற்குரிய கவனத்துடன் பதியணுமே!

இப்போ உணவே மருந்து வகைகளில் சிறுதானிய உணவுக் குறிப்புகள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதில் கம்பில் செய்யப்படும் உணவுவகைகளில் கம்பு அடை, கம்பு தோசை, இட்லி போன்றவற்றை ஏற்கெனவே பார்த்து விட்டோம். இப்போப் பார்க்கப் போவது கம்பில் சோறு. இதற்கு நன்கு உலர்ந்த கம்பை நன்கு கழுவிக் கொண்டு நீரை வடிகட்டி அந்த மிச்ச நீரிலேயே சிறிது நேரம் ஊற வைக்கவும். அரை மணி ஊறிய பின்னர் கம்பைக் குத்திப் புடைக்கணும். மர உரல் அல்லது கல்லுரலில் முன்னெல்லாம் குத்திப் புடைப்பார்கள். இப்போவெல்லாம் குத்திப் புடைப்பது என்றாலே என்னவென்று தெரியாது; புரியாது. ஆகவே கம்பை மிக்சி ஜாரில் போட்டு நன்கு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். ஒதுங்கும் தூசி போன்ற தவிட்டை முறத்தில் போட்டுத் தட்டி எடுத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் நாலு கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். உப்பைச் சேர்க்கவும்.

சுத்தம் செய்து வைத்த கம்பைக் கொட்டிக்கிளறவும். ஒரு சிலர் இதோடு அரிசியும் ஒரு கைப்பிடி சேர்க்கின்றனர். புழுங்கல் அரிசி தான் சேர்க்க வேண்டும். ஒரு சிலர் சமைத்த சாதத்தை இதோடு சேர்த்துக் கலந்து வைக்கின்றனர். இந்தக் கம்பை அடுப்பில் கொதிக்கும் நீரில் கொட்டிக் கிளறி விட்டால் சிறிது நேரத்தில் நன்கு வெந்து விடும். இம்மாதிரிக் கம்புச் சோறை முதல்நாளே தயார் செய்து கொண்டு வைக்கவும். மறுநாள் அதில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுத் தயிரை விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வெங்காயம் பிடிக்காது எனில் ஏதேனும் துவையலும் அரைத்துக் கொள்ளலாம். தேங்காய்த் துருவலோடு மிளகாய் வற்றல், துவரம்பருப்பு வறுத்து உப்பு, புளி, பெருங்காயத்தோடு சேர்த்து அரைத்துத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். ஒரு சிலர் துவரம்பருப்புக்குப் பதிலாகக் கொள்ளு வைத்துச் சேர்த்து அரைக்கின்றனர். அவரவருக்கு ஒத்துக்கொள்ளுவதைப் பொறுத்து வைத்து அரைத்து உண்ணலாம். அல்லது வெங்காயத் துவையல், பீர்க்கங்காய், பறங்கிக்காய்த் துவையல் போன்றவையும் நன்றாக இருக்கும்.

அடுத்துக் கம்பங்கூழ். இதற்கும் முன் சொன்னாப்போல் கம்பைச் சுத்தம் செய்து கொரகொரவென அரைக்காமல் கொஞ்சம் நைசாக அரைத்துக் கொள்ளவும். ரொம்பக் கொரகொரப்பாக இருந்தால் சல்லடையில் சலித்துக் கொள்ளலாம். இந்த மாவு ஒரு கிண்ணம் எனில் அதோடு இரண்டு கிண்ணம் தண்ணீரும் தேவையான உப்பும் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். கம்பங்கூழ் தயாரிப்பதற்கு முதல்நாளே இந்த மாவுக்கலவையைக் கலந்து வைக்கலாம். ஏனெனில் கொஞ்சம் புளிப்பு வந்தால் தான் நன்றாக இருக்கும். அடுத்த நாள் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி மேற்சொன்ன அளவுக் கம்பு மாவுக்கு ஒரு கரண்டி எடுத்துக் கொண்டு களைந்து மிக்சி ஜாரில் போட்டு உப்புமா ரவை போல் பொடிக்கவும். இதை முதலில் கொதிக்கும் வெந்நீரில் போட்டுக் கரைய விடவும். இது வெந்தபின்னர் முதல் நாளே கரைத்து வைத்த மாவை மெதுவாக ஊற்றிக்கொண்டே இன்னொரு கையால் கிளறவும். இதையும் ஒரு நாள் வைத்து விட்டு மறுநாள் தயிரோ, மோரோ ஊற்றிக் கொண்டு ஊறுகாய் அல்லது சின்னவெங்காயம் அல்லது மாங்காய் ஊறுகாய் அல்லது மாங்காய்த் தொக்கு போன்றவற்றோடு குடிக்கலாம். ரொம்ப நீர்க்க இருக்காது. கொஞ்சம் கெட்டியாகவே இருக்கும்.

Tuesday, September 4, 2018

உணவே மருந்து! கம்பு! 2 கம்பில் அடை!













கம்பு அடை!

தேவையான பொருட்கள்

கம்பு ஒரு கிண்ணம்

இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்

துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.

4  மி.வத்தல்+பச்சை மிளகாய் 2

உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான்  ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்..  காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவுக்கான உணவு தயார். எந்தச் சிறு தானியம் போட்டாலும் கொஞ்சம் போல் இட்லிப் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் சேர்த்தால் செய்வதற்கு எளிது.

இதே போல் கம்பில் தோசையும் வார்க்கலாம்.

கம்பு+புழுங்கல் அரிசி+பச்சரிசி  இரண்டு பங்கு கம்புக்கு புழுங்கலரிசியும், பச்சரிசியுமாய்க் கலந்து ஒரு பங்கு. முக்கால் கிண்ணம் உளுத்தம்பருப்பு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம். கம்பைத் தனியாக ஊற வைக்க வேண்டும். புழுங்கலரிசி+பச்சரிசியை ஒன்றாக ஊற வைத்துக் கொண்டு வெந்தயத்தையும் உளுத்தம்பருப்பையும் சேர்த்து ஊற வைக்கவேண்டும். கம்பை முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் அரிசிகளைச் சேர்த்து அரைக்க வேண்டும். நல்ல நைஸாகவே அரைக்கலாம். பின்னர் உளுத்தம்பருப்பு+வெந்தயம்  போட்டதை அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கூ அரைப்பது போல் உளுத்தம்பருப்பை அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்புப் போட்டுக் கரைத்து வைத்துப் புளிக்க விட வேண்டும். இட்லி அல்லது தோசை எது வேண்டுமானாலும் செய்யலாம். சட்னி, சாம்பார், கொத்சு என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.