எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, September 29, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள்! பச்சைப் பட்டாணிச் சுண்டல் 4

சாதாரணமாகப் பச்சைப் பட்டாணி ஊற வைத்து வேக வைத்தால் நன்கு குழைந்து விடும்.  ஆனால் இங்கே திருச்சியில் அவ்வளவு குழைவது இல்லை. இத்தனைக்கும் முதல் நாள் மதியமே ஊற வைக்கிறேன்.  கல்லுப் பட்டாணியை எல்லாம் அகற்றி விடுகிறேன்.  ஆனாலும் திருப்தி இருப்பது இல்லை.


பச்சைப்பட்டாணி கால் கிலோ

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீ ஸ்பூன்

கடுகு

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி ஒரு துண்டு

தேங்காய்ப்பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது தேங்காய்த் துருவல் அவரவர் விருப்பம் போல்

மாங்காய் கிடைத்தால் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை

கொத்துமல்லி

தேவையான உப்பு

பெருங்காயம்

சாம்பார்ப் பொடி ஒன்றிலிருந்து இரண்டு டீஸ்பூன் வரை(காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப)


பட்டாணியை முதல் நாளே நன்கு களைந்து கல்லுப் பட்டாணிகளை அகற்றி நன்கு நீர் ஊற்றி ஊற வைக்கவும்.  மறுநாள் காலையிலிருந்து மீண்டும் மீண்டும் களைந்து நீரை மாற்றிக் கொண்டிருக்கவும். பின்னர் குக்கரில் அல்லது ப்ரஷர் பானில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் பச்சை மிளகாய்ப் பொடியாக நறுக்கியது, இஞ்சி பொடியாக நறுக்கியது, கருகப்பிலை, பெருங்காயம் ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.  வெந்த பட்டாணியை நீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும்.  சாம்பார்ப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கும்படி கிளறவும்.  நன்கு கிளறி சாம்பார்ப் பொடி வாசனை போனதும், நறுக்கி வைத்த தேங்காய், மாங்காயைச் சேர்க்கவும்.  பச்சைக் கொத்துமல்லியைத் தூவிக் கீழே இறக்கவும்.  சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.



நவராத்திரிச் சுண்டல் வகைகள்! மொச்சைப்பருப்புச் சுண்டல் 3

தேவையான பொருட்கள்:-

மொச்சைப்பருப்பு கால் கிலோ

மி. வத்தல் இரண்டு

கருகப்பிலை,

பெருங்காயம்

தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்


வறுக்க:

மி. வத்தல் நான்கு

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்


மேலே சொன்னவற்றை எண்ணெயில் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.  பிடிக்காதவர்கள் சாம்பார்ப் பொடி போடலாம்.  அதுவும் பிடிக்கலை எனில் தாளிக்கையில் நான்கு மிளகாய் வற்றலாகத் தாளிக்கவும். இது சுமாராகத் தான் இருக்கும்.



மொச்சையை நன்கு கழுவிக் கொண்டு மூழ்கும் அளவுக்கு மேல் நீரை ஊற்றி முதல் நாளே ஊற வைக்கவும். மறு நாள் காலையிலிருந்து அதை வேக வைக்கும் வரை கழுவி நீரை மாற்றிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் குக்கரில் அல்லது ப்ரஷர் பானில் தேவையான உப்பைச் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.  குக்கரோ ப்ரஷர் பானோ ஒரு சத்தம் கொடுத்ததும் அடுப்பைத் தணித்து வைத்துப்பின்னர் அதே நிலையிலேயே மூன்று அல்லது நான்கு சப்தங்கள் விடவும்.  இப்படி விட்டால் நன்கு குழையும்.கையில் எடுத்து நசுக்கினால் நன்கு குழைந்திருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு மி.வத்தல், கருகப்பிலை சேர்த்து வெந்த மொச்சையை நீரை வடிகட்டிச் சேர்க்கவும்.



சிறிது கிளறியதும், வறுத்த பொடியைச் சேர்த்துக் கிளறவும்.  நன்கு சேர்ந்து வரும்போது தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கீழே இறக்கவும். விநியோகத்துக்குத் தயார்.

Saturday, September 27, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள் 2 கடலைப்பருப்புச் சுண்டல்

நேத்திக்கு இரு சுண்டல் வகைகளைப் பார்த்தோம்.  ஒன்று தித்திப்புச் சுண்டல்; இன்னொன்று காரச் சுண்டல்.  நேற்றைய சுண்டல் காரச் சுண்டல் தான்.  பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் புட்டுத் தான் செய்வார்கள்.  ஆனால் நேற்றுக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி என்பதோடு புட்டுச் செய்ய முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.  கடலைப்பருப்புச் சுண்டல் அல்லது கொண்டைக்கடலைச் சுண்டலும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம் என்பதால் கடலைப்பருப்புச் சுண்டலே செய்துவிட்டேன்.


கடலைப்பருப்பு கால் கிலோ

உப்பு தேவையான அளவு

தாளிக்க எண்ணெய்   மூன்று டீஸ்பூன்

பச்சை மிளகாய் சிறிதாக 2 பொடிப் பொடியாக நறுக்கவும்

இஞ்சி ஒரு துண்டு பொடியாக நறுக்கவும்

கருகப்பிலை பொடியாக நறுக்கவும்

கொத்துமல்லி பொடியாக நறுக்கவும்

பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்

சாம்பார்ப் பொடி  ஒரு டீ ஸ்பூன்

தேங்காய்த் துருவல்  2 டேபிள் ஸ்பூன்


கடலைப்பருப்பை மூன்று மணீ நேரம் ஊற வைக்கவும்.  ஊறிய பருப்பை நன்கு களைந்து கொண்டு கடாயில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் பருப்பை வேகப் போடவும்.  பருப்பு மூழ்கும் வண்ணம் நீர் இருக்க வேண்டும்.  அரை வேக்காடாகப் பருப்பு வெந்ததும் தேவையான உப்பைச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.  பருப்புக் கையால் எடுத்துப் பார்த்தால் நசுங்க வேண்டும்.  அந்தப் பதம் வந்ததும், இன்னும் குழைவாக வேண்டுமானால் அந்தக் கொதிக்கும் நீரிலேயே ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.  தேவை இல்லை எனில் நீரை வடிகட்டவும்.


கடாய் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகை வெடிக்க விடவும்.  பெருங்காயத் தூள், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை  சேர்க்கவும்.  ஒரு கிளறு கிளறியதும் வெந்த பருப்பைச் சேர்க்கவும்.  பருப்பைக் கிளறும் முன்னர் சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.  ஆசாரக் காரர்கள் தினம் சமைத்துச் சாப்பிடும் சாம்பார்ப் பொடி தேவையில்லை எனில் தனியாகக் கொஞ்சமாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.


நாலு டீஸ்பூன் மிளகாய்ப் பொடிக்கு , அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி,

ஒரு டேபிள் ஸ்பூன் தனியா

துபருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு ஆகியவை தலா ஒரு டீஸ்பூன் போட்டு வெறும் சட்டியில் வறுத்துக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். இதைச் சுண்டலுக்குப் போடனு தனியாக வைத்துக் கொள்ளலாம்.  மிளகு, வெந்தயம் ஜாஸ்தியாகத் தோன்றினால் அரை டீஸ்பூன் போதும்.

சாம்பார்ப் பொடி போட்டுக் கிளறியதும், தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  விருப்பமிருந்தால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்;  இது அவரவர் விருப்பம்.  பின்னர் நன்கு கிளறியதும், கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி மேலே தூவி நன்கு கிளறி எடுத்து வைத்து விநியோகம் செய்யவும்.


நவராத்திரி இல்லாத நாட்களில் இந்தச் சுண்டலை மாலை டிஃபனுக்குச் செய்து கொத்துமல்லியோடுபுதினா இலைகளையும் நறுக்கிச் சேர்த்துக் கொண்டு, பச்சை வெங்காயம் பொடியாக நறுக்கியது மேலே தூவிக் கொண்டு, எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு, ஓமப் பொடியோடு சேர்த்துச் சாப்பிடலாம். பிடித்தால் சாட் மசாலா கொஞ்சம் தூவிக்கலாம்.


Friday, September 26, 2014

நவராத்திரிக்குச் சுண்டல் வகைகள்!

முதலில் பச்சைப்பயறுச் சுண்டல்!  எத்தனை பேர் வருவாங்கங்கறது நீங்க குடி இருக்கும் இடத்தையும், உங்களோட நட்பு வட்டத்தையும் பொறுத்தது.  இங்கே நான் கால் கிலோவுக்கான அளவில் சொல்றேன்.  பொதுவாக இந்தப் பருப்பு வகைகள் ஊற வைத்தால் இரட்டிப்பாக ஆகும். ஆகவே பார்த்துக் கொள்ளவும்.

கால் கிலோ பச்சைப்பயறு நன்கு களைந்து கல் அரித்து, கல் பயறை நீக்கி (அரிக்கும்போது அடியில் தங்கிடும்;  கலகலனு கல் சப்தம் வரும்) பின்னர் நன்கு முழுகும் அளவுக்கு மேலேயே தண்ணீர் ஊற்றி முதல் நாளே ஊற வைக்கவும்.  மறு நாள் காலை களைந்து விட்டு நீரை மாற்றவும்.  ஊறிய வாச்னை போகும்.  இப்படி இரண்டு, மூன்று தரம் களைந்து நீரை மாற்றிக் கொண்டே இருக்கவும்.

நன்கு ஊறியதும், சின்னச் சின்னதாய் முளை தெரிய ஆரம்பிச்சிருக்கும்.  ஒரு கடாய் அல்லது அலுமினியம் வாணலியில் நீரை விட்டுக் கொதிக்க வைத்து பயறைச் சேர்க்கவும்.  குக்கரில் வைத்தால் குழைந்து உருத்தெரியாமல் போயிடும்.  அரை வேக்காட்டில் தேவையான உப்பைச் சேர்க்கவும்.  உப்புச் சேர்த்துச் சிறிது நேரம் வேக விடவும்.  வெந்த பின் ஒரு வடிதட்டில் கொட்டி நீரை வடிக்கவும்.  இப்போது தாளித்து எடுத்தால் சுண்டல் தயார்.  முதலில் இதில் இனிப்புச் சுண்டல் செய்முறை.


வெல்லத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்

கடுகு  ஒரு டீஸ்பூன்

மி.வத்தல் ஒன்று

கருகப்பிலை,பெருங்காயம்  இதுக்கு வேண்டாம்.

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்


கடாயில் எண்ணெய் வைத்துக் கடுகைப் போட்டு வெடித்ததும், மி.வத்தலைக் கிள்ளிப் போட்டுப் பயறைப் போடவும்.  உடனேயே வெல்லத் தூளைச் சேர்த்துவிட்டுக் கொஞ்சம் கிளறவும்.  வெல்லம் கரைய ஆரம்பித்ததும், தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  சிறிது நேரம் கிளறி விட்டுக் கீழே இறக்கவும்.  வருபவர்களுக்கு விநியோகம் செய்யவும்.


அடுத்து காரச் சுண்டல்


தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்

கடுகு

மி. வத்தல் 2

கருகப்பிலை

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கொஞ்சமாய் சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன்


கடாயில் எண்ணெய் வைத்துக் கடுகைப் போட்டு வெடித்ததும், கருகப்பிலை, மி.வத்தல் சேர்க்கவும்.  மி. வத்தல் கறுப்பானதும் பயறைப் போட்டு சாம்பார்ப் பொடியைப் போட்டுச் சிறிது கிளறவும்.  ஐந்து நிமிஷம் பொடி வாசனை போகக் கிளறியதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிவிட்டுக் கீழே இறக்கவும்.  வருப்வர்களுக்கு விநியோகம் செய்யவும்

சாம்பார்ப் பொடி போட்டால் உள்ள ருசி போடாமல் பண்ணுவதில் மாறி இருக்கும்.  அப்படியும் முயன்று பார்க்கவும்.