எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, September 2, 2016

உணவே மருந்து! நெல்லிக்காய்--தொடர்ச்சி--3

நெல்லிக்காய் சாதம்.

தேவையான பொருட்கள்: நான்கு அல்லது ஐந்து பெரிய நெல்லிக்காய்கள். துருவிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் அவரவருக்கு காரத்துக்கு ஏற்ப 2 அல்லது 3
இஞ்சி  ஒரு சின்னத் துண்டு
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்
சமைத்த சாதம் ஒரு கிண்ணம் அல்லது அரைக்கிண்ணம் அரிசியைக் களைந்து ஊற வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு,
உ.பருப்பு, கபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன்
மி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு
பெருங்காயம் தூளானால் கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
கருகப்பிலை

நெல்லிக்காய்த் துருவலைத் தனியாக வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, கொத்துமல்லி ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கிக் கொண்டு கடுகு, உ.பருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். பெருங்காயமும், கருகப்பிலையும் சேர்த்து மிவத்தலையும் அதில் சேர்க்கவும். அரைத்த விழுதை அதில் போட்டுக் கலக்கவும். நன்கு கலக்கவும். நெல்லிக்காய்த் துருவலையும் சேர்த்து மஞ்சள் பொடி போட்டுத் தேவையான உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். கலவை நன்கு வதங்கியதும் சமைத்த சாதத்தைச் சேர்த்துத் தேவையானால் அரை டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும். ஏற்கெனவே உப்புப் போட்டிருப்பதால் சாதத்தைச் சுவைத்துப் பார்த்த பின்னர் கூட உப்புத் தேவை எனில் சேர்க்கலாம். சாதம் கலவையோடு நன்கு கலந்த பின்னர் தயிர்ப் பச்சடி ஏதேனும் துணைக்கு வைத்துப் பரிமாறவும்.  இது ஒரு தனிச் சுவையோடு இருக்கும்.

நெல்லிக்காய் ரசம்

நெல்லிக்காய் ஐந்து அல்லது ஆறு

குழைவாக வேக வைத்த துவரம்பருப்புக் கரைத்த நீர் ஒரு கிண்ணம்

தக்காளி ஒன்று

மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாகப் பொடித்தது ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் ஒன்று

கருகப்பிலை, கொத்துமல்லி

பெருங்காயம்

தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன்

உப்பு, தேவையான அளவு

மஞ்சள் பொடி

நெல்லிக்காய்களைத் துருவிக் கொண்டு பச்சை மிளகாயோடு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு நீரில் உப்பு, மஞ்சள் பொடி , தக்காளி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்த நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பொங்கி வரும்போது அணைத்து விட்டு ஓர் இரும்புக்கரண்டியில் நெய்யை ஊற்றிக் கடுகு, கருகப்பிலை தாளிக்கவும். பொடித்த மிளகு, ஜீரகத்தை அதில் சேர்க்கவும். பின்னர் நெய்யோடு சேர்த்து அந்தக் கலவையை ரசத்தில் கொட்டிக் கலக்கவும். தேவையானால் கொத்துமல்லித் தழை சேர்க்கலாம்.

நெல்லி முறப்பா

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் அரைக்கிலோ

சர்க்கரை அரைக்கிலோ

வேகவைக்கவும் சர்க்கரைப் பாகு வைக்கவும் தேவையான நீர்

நெல்லிக்காயை முதலில் நீரில் வேக வைக்கவும். ரொம்பக் குழைவாக வேகக் கூடாது. கையால் அழுத்தினால் அழுந்த வேண்டும். பின்னர் ஓர் பெரிய ஊசியால் நெல்லிக்காய்களைச் சுற்றிப் பொறுமையாகத் துளை போட வேண்டும். சர்க்கரையை அடுப்பில் ஏற்றி நீர் விட்டுக் கரைந்ததும் சர்க்கரையின் அழுக்கை எடுத்து விட்டுப் பாகு வைக்கவும். பாகு கையால் உருட்டும் பதம் வந்ததும், வேகவைத்த, ஊசியால் குத்தப்பட்ட நெல்லிக்காய்களை அதில் சேர்க்கவும். பத்து நிமிஷம் கொதிக்க விடவும். பாகும் நெல்லிக்காயும் சேர்ந்து வரும். அப்போது இறக்கி ஆறவைத்துக் கொண்டு ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் போட்டுக் கொள்ளவும். தினம் காலை ஒரு நெல்லிக்காயை இதில் இருந்து எடுத்துச் சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது. தொண்டையில் இருக்கும் பிரச்னைகளும் சீராகும்.குரல் வளம் பெறும்.