எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, April 16, 2016

உணவே மருந்து--- பாகல்!

அடுத்து நாம் பார்க்கப் போவது அனைவரும் ஒதுக்கும் பாகல்! இதில் இலை, காய், பழம், விதை என அனைத்துமே பயன்படும். தானாகவே வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும். வேலிப் பாகல் என்பார்கள் இதை. சற்று நீளமான பாகற்காயும் உண்டு. பாகற்காயில் மிதி பாகல், பழு பாகல், கொம்புப் பாகல், நாய்ப்பாகல், நரிப்பாகல், பேய்ப்பாகல் என்று பல இனம் உண்டெனினும் இங்கே நம் நாட்டில் பயிராக்குவது மிதி பாகலும், கொம்புப் பாகலும் மட்டுமே.

Image result for கொம்புப் பாகல்

கொம்புப் பாகல் என்பது மேலே காணப்பட்ட மாதிரியில் அதிகம் பயிராகின்றது. இவற்றிலே கொஞ்சம் நடுத்தர அளவில் நீளம் உள்ள பாகற்காய்களும் உண்டு. மிதி பாகல் என்பது கீழே கொடுத்துள்ளபடி காணப்படும்.

Image result for கொம்புப் பாகல்

இவை அதிகம் பச்சையாக மேலே முனைகள் கூராகவும் இருந்தால் அவை இந்திய வகை. மேலே கொஞ்சம் மொழுக்கென்று இருந்தால் அது சீன வகை! மிதி பாகலிலும் மேலே மொழுக்கென்று ஒரு வகை கிடைக்கும். அதை அதலக்காய் என்றும் சொல்கின்றனர். இந்த அதலக்காய்ச் செடியைக் களைச் செடி என்கின்றனர். கசப்பு இருந்தாலும் பாகல் அளவுக் கசப்பு இருக்காது. இதையும் பாகலைச் சமைப்பது போலவே சமைக்கலாம். இந்தப் பாகற்காய்க் கொடி தரையிலும் படரும். பந்தல் போட்டும் படர வைக்கலாம். உடலுக்கு மிகவும் நன்மை தரும். பாகற்காய் முழுக்க முழுக்க இந்தியக் காய் ஆகும். இந்தியாவிலிருந்தே இது மற்ற நாடுகளுக்குச் சென்றது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த பாகற்காயைச் சாறாக்கிக் குடித்து வரலாம். இதன் மூலம் பலன் வருகிறது என்பது மருத்துவர்கள் கூட ஒத்துக் கொண்ட ஒன்று எனச் சொல்கின்றனர்.

இந்தக் கொடி ஐந்து மீட்டர் அல்லது பதினாறு அடி வரை வளரும் கொடி வகை! பிளவு பட்டு உள் வாங்கி இருக்கும் இலைகளைக் கொண்டது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பூக்கும். செப்டெம்பர் முதல் நவம்பர் முடிய பலன் கொடுக்கும். பூக்களில் ஆண் பூ, பெண் பூ என இருவகை உண்டு.

Image result for ஆண் பாகல் பூ

இது ஆண் பூ ஆகும். கீழே பெண் பூவைப் பார்க்கலாம். கிளையின் நுனியோடு சிறிய அளவில் காய் வந்து அதன் மேல் பூப் பூத்திருக்கும். இதிலேயே காய்கள் உற்பத்தி ஆகும். இனி அவற்றின் பலன்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பாகலின் இலை ஒரு புழுக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும் பாகல் இலைச் சாறு. பாகல் இலைச் சாறை பதினைந்து முதல் 25 மில்லி லிட்டர் வரை எடுத்து உள்ளுக்குக் குடித்துவர குடல் புழுக்கள் மலத்துடன் வெளியேறும். அதிக அளவில் இந்தச் சாற்றை அருந்த மலத்தை நன்கு வெளியேற்றுவதுடன் வாத, பித்த, கப தோஷங்களைக் கட்டுப்படுத்தும்.  ரசம் எனப்படும் ரசாயன மருந்துகளை உட்கொள்ளுகையில் ஏற்படும் தவறினால் ரச நஞ்சு உண்டாகும். வாய், குடல் முதலியனவற்றில் புண்கள் ஏற்படும். அந்தப் புண்களை ஆற்றும் வல்லமை பாகல் இலைச்சாற்றிற்கு உண்டு. வெளி மூலத்திற்கு இதன் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வரலாம்.  நாய்ப் பாகலின் ரசத்தையும் தொடர்ந்து குடித்து வர மூலம் தீரும். மாலைக்கண் நோய் உள்ளவர்கள் கொடிப்பாகல் இலை ஒரு கையளவு எடுத்துக் கொண்டு மிளகு ஐந்து அல்லது ஆறு எடுத்துக்கொண்டு அரைத்துக் கண்களைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வந்தால் கண் பார்வையில் மாற்றம் தெரியும்.

தொடரும்.