எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, January 17, 2021

திடீர்னு ஒரு பனீர் புலவு! :)

 சென்ற வாரம் ஸ்ராத்தத்தின் போது வாங்கி வந்த காய்கள் நேற்று வரை வந்து விட்டன! இன்னிக்குக் காய் இல்லை.  கொஞ்சம் போல் காரட்டுகளும் ஒரு கைப்பிடி அவரைக்காயும் தான் இருந்தது. நம்மவருக்கு உடனே குஷி வந்துடுமே. நான் போய்க் காய்களெல்லாம் வாங்கிண்டு அப்படியே மத்தியானத்துக்குக் குழம்பு, ரசம், கறி, கூட்டும் வாங்கிடறேன். நீ சாதம் மட்டும் வை! நேத்திக்கே கை வலினு சொன்னியே! இன்னிக்குச் சமைக்க வேண்டாம்னு சொல்ல எனக்குள் உத்வேகம். பின்னே? நான் சமைக்கிறேன். நீங்க ஒண்ணும் போய் அலைய வேண்டாம் என்று பெரிய முட்டுக்கட்டையாய்ப் போட்டேன். இன்னிக்கே சந்தைக்குக் காய்கள் எல்லாம் வந்திருக்காது. நாளையிலிருந்து தான் வழக்கமான முறையில் இருக்கும்னு சொன்னேன். ஆனால் அவர் கிளம்பிட்டார்.

நான் தீர்மானமாக நீங்க காய் வாங்கி வந்தாலும் நான் பனீர் புலவ் தான் இன்னிக்குப் பண்ணப் போறேன் என்று சொல்லி விட்டேன். சரி, ஆனால் கொஞ்சம் ரசம் வேண்டும் எனக்கு என்றார். தொட்டுக்க அப்பளம் வாட்டிக்கலாம், இல்லாட்டியும் வாழைக்காய் வறுவல் இருக்குனு நானும் சரினு சொல்லிட்டேன். ஆனால் அவரால் சந்தைக்கே போக முடியாமல் வண்டி படுத்தி எடுத்துக் கடைசியில் வீட்டுக்கு வந்துட்டார். இஃகி,இஃகி,இஃகி!



நான் திட்டம் போட்ட படி பனீர் புலவ் செய்தேன். அதுக்குக் காய்கள் வேண்டும்னு எல்லாம் இல்லை. வெங்காயம் இருந்தாலே போதும். ஆனால் காரட் வாங்கிப் பல நாட்கள் ஆகி விட்டதால் அதைத் தீர்க்கணும்னு காரட்டுகளை எடுத்துக் கொண்டேன். பச்சைப் பட்டாணி இல்லை; அதனால் என்ன? காய்ந்த பட்டாணியை நேற்றே எதுக்கும் இருக்கட்டும்னு ஊற வைச்சிருந்தேன். அதை நன்கு கழுவிக் கொண்டு சிறிது உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன். இல்லைனால் பட்டாணிக் கல்லைப் போல் உட்கார்ந்திருக்கு! 

அதற்குள்ளாகப் பனீரை எடுத்து அலம்பித் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் மஞ்சள் பொடி, கொஞ்சமாக மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப் பொடி) ஜீரகப் பொடி, உப்பு ஆகியன சேர்த்து நன்கு கலந்து வைத்தேன். வீட்டில் அதிர்ஷ்டவசமாக பாஸ்மதி அரிசி இருந்தது. அதை ஒரு சின்னக் கிண்ணம் எடுத்து நன்கு கழுவி விட்டுப் பின்னர் நீரை வடிகட்டிக் கொண்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு அரிசியை வறுத்துவிட்டு அரிசி எடுத்த கிண்ணத்தாலேயே ஒன்றேகால் கிண்ணம் நீரை அதில் விட்டு அரிசியை ஊற வைத்தேன்.

இதெல்லாம் ஆவதற்குள்ளாகப் பட்டாணி வெந்து விட்டதைக் குக்கர் அறிவிக்க, ரசத்துக்கும், மோருக்கும் வெறும் சாதம் அரை ஆழாக்கு வைத்துவிட்டு ஈயச் செம்பில் ரசத்தையும் வைத்தேன். பின்னர் வந்து 2 பெரிய வெங்காயம், காரட் ஒன்று பொடியாக நீளவாட்டில் நறுக்கிக் கொண்டேன். தக்காளி சேர்க்கலை. வீட்டில் தக்காளியும் இல்லை. கொத்துமல்லி, புதினா எதுவும் இல்லை. நல்லவேளையாகப் பச்சை மிளகாயும், இஞ்சியும் இருந்தன. அதைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். பச்சை மிளகாய் இரண்டைப் பிளந்து வைத்துக் கொண்டேன்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

அடுப்பில் குக்கரை வைத்துக்கொஞ்சம் எண்ணெய்/வெண்ணெய் சேர்த்துக் காய வைத்துக் கொண்டேன். ஜீரகம், சோம்பு, முழு மிளகு வகைக்கு ஒரு தேக்கரண்டி போட்டுத் தாளித்து லவங்கப்பட்டை ஒரு துண்டு பச்சை ஏலக்காய் 2, ஒரு கிராம்பு போட்டுக் கொண்டேன்.  பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு அது வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டேன். வெங்காயம் வதங்கியதும் காரட்டைப் போட்டு வதக்கினேன். காரட் கொஞ்சம் வதங்கியதும் அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி, கால் தேக்கரண்டி மிளகாய்ப் பொடி(காரம் அதிகம்) ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி, கால் தேக்கரண்டி கரம் மசாலாப் பொடி போட்டுக் காய்களோடு நன்கு கலக்கும்படி வதக்கிக் கொண்டேன். எல்லாம் நன்கு கலந்ததும் நீரோடு  ஊற வைத்திருக்கும் அரிசியை அப்படியே அதில் சேர்த்தேன். மேற்கொண்டு நீர் வேண்டாம். பாஸ்மதி அரிசி அதிகம் நீர் தாங்காது. தேவையான உப்பைச் சேர்த்தேன். ஏனெனில் பட்டாணியில் கொஞ்சம் உப்புப் போட்டிருக்கோம். பனீருக்கும் கொஞ்சம் உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே குறைவான உப்பே போதும்.

கொத்துமல்லித் தழை, புதினா இருந்தால் காரட், வெங்காயம் வதக்கையில் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கலாம். அல்லது பச்சையாகக் கடைசியில் மேலே தூவலாம். இரண்டுமே இல்லை. குக்கரை மூடித் தணித்தே அடுப்பை எரிய விட்டு நன்கு மேலே ஆவி வந்ததும் வெயிட்டைப் போட்டேன். சிறிது நேரத்தில் ஒரு விசில் வர அடுப்பை உடனே அணைத்து விட்டேன். இதற்கு நடுவில் ஒரு வாணலியில் அல்லது பிடித்தமானால் நான் ஸ்டிக் தோசைக்கல்லில் நெய்யை விட்டுக் கொண்டு மசாலா சேர்த்து ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளை நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை பிரட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் பிரட்ட வேண்டாம். ரப்பர் மாதிரி ஆயிடும். இங்கே குக்கர் திறந்ததும் வறுத்த பனீர்த் துண்டுகளை அதில் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா போடுவதானால் போட்டுவிட்டு மெதுவாகக் கிளறணும். அரிசி உடையாமல் கிளறிக் கொடுக்கணும். 

இதை வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, தக்காளிப் பச்சடி ஆகியவற்றோடு சாப்பிடலாம். பண்ணும்போதோ, சாப்பிடும்போதோ இதைப் பதிவாகப் போடும் எண்ணமே இல்லை. ஆனால் சாயந்திரம் திடீர்னு தோன்றிய ஓர் உந்துதலில் மிச்சம் இருக்கும் புலவைப் படம் எடுத்துக் கொண்டேன். மற்றப் படங்கள் வழக்கம் போல் எடுக்கலை. ஹிஹிஹிஹி. கீழே மிச்சம் இருக்கும் பனீர் புலவ். பனீர் எங்கேனு கேட்காதீங்க! பொறுக்கிச் சாப்பிட்டுட்டேன்! :)))))


இன்று செய்த பனீர் புலவ் படம்

எல்லாப்படங்களையும் ஒழுங்கா எடுத்திருந்தால் எ.பி.க்குத் திங்கக்கிழமைப் பதிவுக்கு அனுப்பி இருப்பேன். இதையே "எண்ணங்கள்" வலைப்பக்கம் போட நினைச்சு அப்புறமா இங்கேயே போடலாம்னு போட்டுட்டேன். யாருக்கெல்லாம் முடியுதோ வந்து சாப்பிடுங்கப்பா!

Friday, January 8, 2021

தக்காளி சாத வகைகள்!

 கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகிவிட்டன, இந்தப் பக்கம் வந்து. பாரம்பரியச் சமையல்கள் பகுதி2 வெளியிடுவதற்காகப் பதிவுகளைச் சேர்த்து எடிட் செய்யத் தயார் செய்து கொண்டிருந்தேன். நடுவில் கண் பிரச்னைகள்/அடுத்தடுத்து வேறு சில பிரச்னைகள்! சுத்தமாய் எந்தப் பதிவுமே எழுதவில்லை. இப்போத் தான் மற்றப் பதிவுகளும் எழுத ஆரம்பித்திருக்கேன். இங்கேயும் போடலாம்னு வந்தேன். இப்போத் தக்காளி சாதம் செய்முறையைப் பார்க்கலாம். இதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு முறையில் செய்யறாங்க. நான் பொதுவாகச் செய்யும் முறையைப் போட்டுவிட்டுப் பின்னர் மற்றவற்றையும் பகிர்கிறேன்.

*************************************************************************************

நான் பொதுவாக இதற்கென பாசுமதி அரிசியெல்லாம் வாங்கிச் சமைத்தது இல்லை. சாதாரணமாகச் சமைக்கும் அரிசியிலேயே செய்துடுவேன். மிகவும் எளிதாகச் செய்து விடலாம். நான்கு பேருக்கான அளவைக் கீழே கொடுக்கிறேன்.

சமைத்த சாதம் உதிர் உதிராக இரண்டு கிண்ணம். 

தக்காளி, நல்ல பழுத்ததாக நான்கு/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் பெரிது ஒன்று/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் ஒன்று, மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி

சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய்ப் பொடி+தனியாப் பொடி வகைக்கு ஒரு தேக்கரண்டி. அல்லது சாம்பார்ப் பொடி எனில் ஒன்றரை தேக்கரண்டி.

ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, மசாலா இலை வகைக்கு ஒன்று லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு.

தாளிக்க : கடுகு, ஜீரகம், சோம்பு, தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி

உப்பு தேவைக்கு

பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு மேஜைக்கரண்டி

ஆரம்ப காலங்களில் இதற்கு மசாலாப் பொடி எல்லாம் போட்டதில்லை. மசாலா சாமான்களும் பின்னாட்களிலேயே தாளிக்க ஆரம்பித்தேன். 

சாதத்தை உதிர் உதிராக உதிர்த்துக் கொண்டு அரைத் தேக்கரண்டிஉப்புச் சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு வைத்துக் கொள்ளவும்

கடாயில் சமையல் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, ஜீரகம், சோம்பு வரிசையாகத் தாளிக்கவும். பிடித்தால் பெருங்காயத் தூள் அரைத்தேக்கரண்டி சேர்க்கவும். பின்னர் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். வாசனை வந்ததும் பச்சை மிளகாயைப் போட்டுக் கூடவே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க அரைத் தேக்கரண்டி சர்க்கரை அல்லது உப்பைச் சேர்க்கலாம். வெங்காயம் வதங்கியதும் நீளமாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளியை நன்கு வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும் மஞ்சள் பொடி, சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய்த்தூள்/தனியாத் தூள் சேர்க்கவும். நன்கு வதக்கவும். அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொண்டு தக்காளி நன்கு குழைந்து சேர்ந்து வரும்வரை வதக்கிக் கொள்ளவும். குழைந்த நிலையில் உப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். 

உதிரான சாதத்தை அதன் மேல் போட்டுச் சாதம் உடையாமல் நன்கு கிளறவும். உப்புச் சேர்க்க வேண்டாம். நன்கு கிளறி எல்லாம் நன்கு கலந்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைப் போட்டுக் கலக்கவும். தயிர்ப்பச்சடி காரட்/வெங்காயம் போட்டுப் பண்ணி அதோடு சாப்பிடலாம். 

இன்னொரு முறையில் தக்காளியை அரைத்துக் கொண்டு சாறு எடுத்துக் கொண்டு செய்வது. இம்முறையில் அரிசியைச் சமைக்காமல் அந்தத் தக்காளிச் சாறிலேயே வேக வைக்கலாம்.

தக்காளி நான்கு (ப்ளாஞ்சிங் முறையில் வெந்நீரில் ஊற வைத்து) சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் சாறு இருந்தால் போதுமானது.

அரிசி ஒரு கிண்ணம் (இதற்கு பாஸ்மதி அரிசி நன்றாக இருக்கும். அரிசியைக் களைந்து கொண்டு வடிகட்டி நெய்யில் வறுத்து ஒன்றரைக் கிண்ணம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

தேங்காய் (பிடித்தமானால்) இரண்டு மேஜைக்கரண்டி துருவலை அரைத்துத் தேங்காய்ப் பால் எடுக்கவும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் பெரிது ஒன்று பொடியாக/நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

தாளிக்கும் பொருட்கள்

ஜீரகம், சோம்பு, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை

தாளிக்க எண்ணெய்/நெய் கொஞ்சம்

உப்பு தேவைக்கு

மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி

கொத்துமல்லி பொடியாக நறுக்கியது. 

தாளிக்கும் எண்ணெயைக் குக்கரில் விட்டுத் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் பொடி சேர்க்கவும்.  வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த அரிசியை நன்கு வடிகட்டி ஒரு கிண்ணம் அரிசிக்குத் தக்காளிச் சாறும் தேங்காய்ப் பாலும் சேர்ந்தாற்போல் ஒன்றரைக்கிண்ணம் வரும்படி எடுத்துக் கொண்டு அரிசியோடு கலக்கவும். இந்தக் கலவையைக் குக்கரில் வதங்கிய வெங்காயத்தோடு சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். குக்கரை மூடி ஒரே விசில் கொடுத்து அடுப்பை அணைக்கவும். பின்னர் குக்கர் தானாகத் திறக்க வந்ததும் திறந்து பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும். இதையும் வெங்காயப் பச்சடி, காரட் பச்சடியோடு சாப்பிடலாம்.