எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, December 10, 2015

உணவே மருந்து---பிரண்டை

Image result for பிரண்டை

பிரண்டையைப் பொதுவாக அப்பளம் தயாரிக்கும்போது அப்பள மாவில் சேர்த்தே பார்த்திருக்கலாம். இதை அரைத்து நீரை வடிகட்டி அப்பளமாவில் சேர்த்துப் பிசைவார்கள். கையெல்லாம் அரிப்பு எடுக்கும். தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்வார்கள். இத்தகைய பிரண்டையைத் துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.  பிரண்டையில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இரண்டு வகை உண்டு.  முப்பிரண்டை என்ற ஒரு வகையும் உண்டென்றும் அது மிகவும் அபூர்வமாகவே கிடைக்கும் எனவும் சொல்கின்றனர்.

பிரண்டையின் கணு ஒன்று முதல் ஒன்றரை அங்குலம் இருந்தால் அது பெண் பிரண்டை என்றும் கணு 2 முதல் 3 அங்குலம் இருந்தால் ஆண் பிரண்டை எனவும் கூறுகின்றனர். கணுவின் அருகில் இலைகள் காணப்படும். பிரண்டை பசியைத் தூண்டும் என்பதால் வயிற்றுச் செரிமானம் சரியாக இல்லை எனில் பிரண்டைத் துவையல் அரைத்து சூடான சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.  பிரண்டையின் இலையும் மருத்துவ குணம் கொண்டதே! இலை, தண்டு ஆகியவற்றை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமஅளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் அஜீரணத்துக்கு நல்லது. உடல் வலிமை வேண்டுமெனில் இந்தச் சூரணத்தைப் பாலில் பனங்கல்கண்டு கலந்து அருந்தி வரலாம்.

மூல நோய்க்கும் பிரண்டை சிறந்த மருந்து என்கின்றனர் சித்த மருத்துவர்கள். பிரண்டைத் தண்டை நெய் விட்டு வதக்கிக் கொண்டு அரைத்துத் தினந்தோறும் ஒரு கொட்டைப்பாக்கு அளவுக்கு உண்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மட்டுப்பட்டு ரத்தப்போக்கும் நிற்கும் என்கின்றனர்.  பிரண்டையைத் தீயில் வதக்கிச் சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலிக்கும் காதில் சீழ் வடிதலுக்கும் சிறந்த மருந்தாகும். இந்தச் சாறை மூக்கில் விட்டால் மூக்கில் ரத்தம் வருவது நிற்கும். உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகள் தீரும்.

வயிற்றில் வாயுத் தொந்திரவு இருந்தல் பிரண்டையோடு பேய்ச்சிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருக்கன் விதை, ஓமம் போன்றவற்றைச் சம அளவு எடுத்துக் கஷாயம் காய்ச்சி அருந்தலாம். வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் இறந்து போகும். பிரண்டை வேர் முறிந்த எலும்பை விரைவில் சேர்க்கும் என்கின்றனர். பிரண்டை வேரை உலர்த்திப் பொடி செய்து உள்ளுக்கு தினம் 2 கிராம் வரை சாப்பிட்டு வந்தால் முறிந்த எலும்பு சேரும் என்கின்றனர். வெந்நீரில் குழைத்து எலும்பு முறிந்த இடத்தில் பற்றுப் போட்டாலும் சரியாகும். பிரண்டையை விட பிரண்டை உப்பு இன்னும் சிறந்தது எனவும் அதைத் தினமும் பாலில் அருந்துவதால் உடல் எடை குறைந்து வேண்டாத ஊளைச் சதைகள் குறைந்து கரைந்து போகும் என்கின்றனர்.

ஆண்களுக்கும் பிரண்டை உப்போடு சாதிக்காய்த் தூளைச் சமஅளவு எடுத்துக் கொண்டு நெய்யுடன் தினம் மூன்று வேளையாக ஒரு வாரம் உண்டு வந்தால் விந்து நீர்த்துப் போதல், பலவீனம் போன்றவை நீங்கும்.  பிரண்டை உப்பு வயிற்றுக் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்து.  சுளுக்கு, வீக்கம், சதை பிரண்டு போதல் ஆகியவற்றுக்குப் பிரண்டை ரசம் எனப்படும் பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளி, உப்பு சேர்த்துக் காய்ச்சிக் குழம்புப் பதத்தில் இறக்கிப் பற்றுப் போட்டு வரலாம்.

பிரண்டைத் துவையல் செய்முறை:

ஒரு கட்டுப் பிரண்டை

மி.வத்தல் 3 அல்லது நான்கு(அவரவருக்குத் தகுந்த காரத்திற்கு ஏற்ப)

உப்பு தேவையான அளவு

புளி ஒரு சுண்டைக்காய் அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு

வதக்க தேவையான நல்லெண்ணெய்

பிரண்டையை இலைகள் நீக்கிக் கணுவின் அருகே மட்டும் கொஞ்சம் போல் நீக்கிவிட்டு மீதத்தைத் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு முதலில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிதத்தைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மி.வத்தல் போட்டு வறுத்துக் கொண்டு அதைத் தனியாக எடுத்துக் கொள்ளவும். பிரண்டையைப் போட்டு நன்கு வதக்கவும்.

நன்கு ஆறவிடவும். பின்னர் மி.வத்தல், புளி, உப்பு, வதக்கிய பிரண்டை சேர்த்து மிக்சி ஜாரில் போட்டுத் துவையலாக அரைக்கவும். நன்கு மசிந்ததும் வெளியே எடுக்கும் முன்னர் தாளித்து வைத்திருந்த கடுகு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து ஒரே சுற்றுச் சுற்றிவிட்டுக் கரகரவென இருக்கும்போதே எடுத்துவிடவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைச் சேர்த்துச் சாப்பிடலாம்.