எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, February 20, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்

பசலைக்கீரை மசியல்: தேவையான பொருட்கள்

பசலைக்கீரை ஒரு கட்டு

உப்பு தேவைக்கு

ஜீரகம் ஒரு டீஸ்பூன்   , பெருங்காயம் சின்னத் துண்டு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல்.

பசலைக்கீரையைப் பொடியாக நறுக்கி நன்கு அலசவும். கீரையை அலம்பிவிட்டு நறுக்குவது கொஞ்சம் கஷ்டம். ஆகவே நறுக்கிய பின்னர் அலம்பலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அரிசி களைவதைப் போல் நிறைய தண்ணீர் ஊற்றி அலசவேண்டும். பின்னர் அதை வடிகட்டி நீர் சேர்க்காமல் கல்சட்டி, உருளி அல்லது சமைக்கும் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். கீரையைச் சமைக்கும்போது அது எந்தக் கீரையாக இருந்தாலும் மூடிய பாத்திரத்தில் வேக வைக்க வேண்டாம். அப்படி வேக வைத்தால் கீரையிலுள்ள ஒருவிதமான உப்புக்கலந்த நச்சுக்காற்று வெளியேறாமல் கீரையிலேயே தங்கிவிடும்.

கீரை நன்கு வெந்த பின்னர் ஜீரகத்தைப் பச்சையாகக் கைகளால் தேய்த்துச் சேர்க்கவும். உப்பையும் பெருங்காயத்தையும் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்துக் கீரை மத்தால் மசித்தால் கீரை நன்கு மசிந்து விடும். நீர் இருந்தால் நீர் வற்றும் வரைக்கும் கீரையைக் கொதிக்கவிடவும். பின்னர் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல் தாளித்துக் கீரையில் சேர்க்கவும். துருவிய தேங்காய்த் துருவல் இருந்தாலும் சேர்க்கலாம். இது பொதுவாக எந்தக்கீரை மசியலுக்கும் இதே குறிப்பில் செய்யலாம்.

பசலைக்கீரைக் கறி அல்லது பொரியல்!

கீரை ஒரு கட்டு

உப்பு தேவையான அளவுக்கு

பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (ஊற வைக்கவும்)

தாளிக்க

தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல், தேங்காய்த் துருவல்

வெங்காயம்(தேவைப்பட்டால்) பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொண்டு பொடியாக நறுக்கிய கீரையுடன் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும். முதலிலேயே உப்பைச் சேர்த்தால் கீரை நிறம் மாறி விடும். கீரை வெந்ததும் அதில் உள்ள நீரை வடிகட்டவும். அந்த நீரைக் கொட்ட வேண்டாம். சாம்பாருக்குப் புளி கரைக்கப் பயன்படுத்தலாம். அல்லது அந்த நீரில் மிளகு, சீரகப் பொடி கலந்து சூப் மாதிரி குடிக்கலாம்.

கடாயில் தேங்காய் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிவத்தல் தாளிக்கவும். வடிகட்டி வைத்திருக்கும் கீரையைப் போட்டு நன்கு கிளறவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கலாம். (விருப்பம் இருந்தால்) பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறிய பின்னர் கீழே இறக்கவும்.

வெங்காயம் போடுவதெனில் கடுகு, உபருப்பு தாளித்த பின்னர் வெங்காயத்தையும் மிவத்தலையும் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு கீரையைச் சேர்க்கவும். இதற்குத் தேங்காய்த்துருவல் போடாமலும் இருக்கலாம். அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது!

பசலைக்கீரைக் குழம்பு/சாம்பார்! புளி சேர்த்தது.

தேவையான சாமான்கள்

பசலைக்கீரை ஒரு சின்னக் கட்டு! நன்கு கழுவிக் கொண்டு பொடியாக நறுக்கிக் கொண்டு கடாய் அல்லது கல்சட்டி அல்லது உருளியில் கீரையை வேக விடவும்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு இரண்டு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு குழைந்தது ஒரு சின்னக் கிண்ணம்

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவுக்கு

பெருங்காயம்

தாளிக்க தே.எண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய்

கடுகு, வெந்தயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு சின்ன மி.வத்தல்

கல்சட்டியில் வெந்து கொண்டிருக்கும் பசலைக்கீரையை ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைச் சேர்க்கவும். மசித்த கீரையில் புளி ஜலத்தைச் சேர்த்துக் கொண்டு சாம்பார்ப் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது வெந்த துவரம்பருப்பையும் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிட்டுத் தேங்காய் எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். சூடான சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். 

Sunday, February 18, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்!

ஏற்கெனவே வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை பார்த்துட்டோம். ஆனாலும் இப்போப் பார்க்கப் போவது நாம் அன்றாடப் பயன்பாட்டில் வரும் கீரை வகைகளான முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, பசலைக்கீரை, பாலக் கீரை போன்றவை. பாலக்கும் பசலையும் ஒன்றே என்று சிலர் சொன்னாலும் பசலைக்கீரைத் தண்டு கொஞ்சம் அடர் சிவப்பாகவே இருக்குனு நினைக்கிறேன்.

Image result for பசலைக்கீரை     இது பசலைக்கீரை, தானாகவே தோட்டங்களில் காணப்படும். நல்ல காய்ச்சல் இருப்பவர்களுக்கு இதைச் சமைத்துக் கொடுப்பார்கள். தரையிலும் படரும். கொடியாகவும் படர்ந்து மேலேறிச் செல்லும். குத்துச் செடியாகவும் காணப்படும். ஶ்ரீலங்காவில் அதிகம் காணப்படும் இதை சிலோன் கீரை என்றும் சொல்வார்கள். இதன் பூர்விகம் அமெரிக்கா என்று சொல்லப்பட்டாலும் எங்கு வேண்டுமானாலும் வளரும். தண்டைக் கிள்ளி நட்டால் போதும்! தானாக முளைக்க ஆரம்பிக்கும்.

Image result for பாலக் கீரை

இது பாலக் கீரை! இரண்டுமே ஆங்கிலத்தில் ஸ்பினாச் என்றே அழைக்கப்படுகிறது. இதுவும் பசலைக்கீரையின் குடும்பத்தைச் சேர்ந்ததே இதன் இலைகள் வட்டமாகவும் பச்சையாகவும் காணப்படும். இரண்டுமே மருத்துவ குணம் நிரம்பியவை!

பெரிய அளவில் வைடமின்கள் நிறைந்திருப்பதோடு இரும்புச் சத்தும் தேவையான அளவுக்கு இருக்கிறது.  தொற்று நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்து விடும். அவற்றை எதிர்க்கும் ஆற்றல் இந்தக்கீரைகளில் உண்டு. இவற்றில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நறுக்கி வேக விடும்போது அதிகத் தண்ணீர் சேர்க்கக் கூடாது! பார்வைக்கோளாறைச் சரி செய்வதோடு ரத்த விருத்தியையும் ஏற்படுத்தும். கொழுப்புச் சத்தே இல்லாததால் எளிதில் செரிமானம் ஆகிவிடும். குளிர்ச்சி தருவதோடு உடலுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். எரிச்சல், பித்தம் போன்றவைக்கு நல்லது. 

இதை நீர் விட்டுச் சமைத்தால் கீரையில் மிகுதியாக இருக்கும் நீரைக் கீழே கொட்டாமல் அதில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டு சூப் மாதிரிக் குடிக்கலாம். அல்லது மிளகு, பூண்டு சேர்த்து இந்த நீரை விட்டு அரைத்து ரசத்தில் கலக்கலாம். இளம் கீரைகளை நறுக்கி வதக்கிப் பச்சடி போல் செய்யலாம். பருப்புக்களுடன் சேர்த்துக் கடைந்து சாப்பிடலாம். நல்ல மலமிளக்கியாகவும் செயல்படும்.  நீரிழிவுக்காரர்கள் தினம் ஒரு கீரை என்னும் விதத்தில் வாரம் ஒரு முறை இந்தக்கீரையையும் சமைத்துச் சாப்பிடலாம்.  உடலில் ரத்தக்குறைவு இருந்தால் அதைச் சமன் செய்துவிடும் இந்தக்கீரை!  கால்களில், விரல்களில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் பெரிய அளவில் இந்தக்கீரை பயன்படும். தொண்டைப்புண்ணும் இந்தக்கீரையின் நீரை வடிகட்டிக் குடிப்பதால் சரியாகும்.

குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே கீரையைச் சமைத்துக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். முக்கியமாக இளம்பெண்களுக்குக் கீரையை தினம் சேர்த்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.