எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, July 5, 2012

அரவணைப் பாயசம்

ஐயப்பன் பூஜைக்கு அரவணைப் பாயசம் செய்யறது உண்டு.  இன்னிக்கு லக்ஷ்மியோட பதிவிலே நெய்ப்பாயசம்னு பார்த்ததும் அது நினைவில் வந்தது. இதற்குத் தேவையான பொருட்கள்:

நல்ல பச்சரிசியாக ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். நெய் அரைகிலோவில் இருந்து ஒரு கிலோ வரையிலும் தாராளமாய்த் தேவை.  வெல்லம் ஒரு கிலோ. தேங்காய் ஒன்று. உடைத்துப் பல்லுப் பல்லாகக் கீறிக்கொள்ளவும்.  ஏலக்காய்ப் பொடி. 

வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியில் அரிசியை நன்கு கழுவிக் களைந்து கொண்டு சாதமாகக் குழைத்துக் கொள்ளவும்.  ஒரு கிலோ நெய்யில் அரைகிலோ நெய்யை அந்தச் சாதத்தில் விட்டு நன்கு மசிக்கவும்.  தனியே எடுத்து வைக்கவும்.  அதே உருளியில் ஒருகிலோ வெல்லத்தைத் தூள் செய்து போட்டு நீர் சேர்த்துப் பாகு வைக்கவும். பாகு நன்கு காய்ந்து வரும்போது நெய்யில் கலந்த சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  வெல்லப் பாகும் சாதமும் சேர்ந்து வந்து கொதித்ததும், அடுப்பை அணைக்கவும்.  மிச்சம் நெய்யை ஒரு கடாயில் ஊற்றித் தேங்காய்க் கீறி வைத்திருப்பதை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.  ஏலப் பொடி சேர்க்கவும். 

சூடாகவும் சாப்பிடலாம்.  ஆறினாலும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.