எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 28, 2011

காஞ்சிபுரம் இட்லி சாப்பிடக் காஞ்சிபுரத்துக்கு ஏன் போகணும்?

ஒரே இட்லியாய்ச் செய்துட்டு இருக்கியே? போர் அடிக்கலை?

நான் என்ன ஏடிஎம் மாதிரி இட்லியைக்குடிக்கவா சொன்னேன்?

அது சரி! ஆனால் இட்லியால் அடிச்சால் எப்படி?

என்னது? இட்லியால் அடிச்சேனா? நானா? இருங்க, இருங்க நிஜமாவே இட்லியால் அடிக்கிறேன். நாளைக்குக்காஞ்சிபுரம் இட்லிதான் செய்யப் போறேன்.

கடவுளே, காப்பாத்து!
***************************************************************************************

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி(இட்லி) ஒரு கிண்ணம்

பச்சை அரிசி ஒரு கிண்ணம்

முழு உளுந்து தோல் நீக்கியது ஒரு கிண்ணம்

மூன்றையும் கலந்து களைந்து ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் ஊறியதும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ரொம்பவே நைஸாகவும் கூடாது. ரொம்பக் கொரகொரப்பாகவும் கூடாது. ரவை போல் அரைக்கவும்.

சுக்கு, மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டது இரண்டு டீஸ்பூன், உப்பு, நெய்.

தாளிக்க எண்ணெய் அல்லது நெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (எல்லாம் சேர்த்து) இஞ்சி தேவையானால் ஒரு துண்டு. கருகப்பிலை, கொத்துமல்லிபொடிப்பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்.

ஊற வைத்த பட்டாணி, துருவிய காரட்(தேவையானால் மாவில் கலக்கலாம். இது அவரவர் விருப்பம்போல். தேங்காயும் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம்)


இப்போது அரைத்த மாவில் பொடித்த சுக்கு, மிளகு, ஜீரகக்கலவையோடு உப்பையும் போட்டு நெய்யையும் விட்டுக் கலந்து புளிக்க வைக்கவும்.

மறுநாள் இட்லி செய்யும் முன்னர் தாளிக்க எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அதில் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொட்டி மாவில் கலக்கவும். தேவையானால் ஊற வைத்த பட்டாணி, காரட், தேங்காய்க் கீறல் சேர்க்கலாம்.

இட்லிப் பாத்திரம் அல்லது இட்லிக்குக்கரில் நீரை ஊற்றிச் சூடாக்கவும். நீர் கொதித்து வந்ததும், இட்லித்தட்டுக்களில் நன்றாகத் ததும்ப எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். எல்லாத்தட்டுக்களையும் குக்கரினுள் அடுக்கிவிட்டு மூடி வைக்கவும். இட்லி வேகப் பத்து நிமிடங்கள் ஆகும். பின்னர் வெளியே எடுத்து சுவையான சட்னி அல்லது கொத்சோடு பரிமாறவும்.

கொத்சு:

தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய நீர் இரண்டு கிண்ணம். உப்பு, மிளகாய் வற்றல் 3, பச்சை மிளகாய் 2 அல்லது 3. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, பெருங்காயம் ஒரு துண்டு. கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை. கத்தரிக்காய் நடுத்தரமாக ஒன்று, சின்ன வெங்காயம் பத்துப் பனிரண்டு, அல்லது ஒரு நடுத்தரப் பெரிய வெங்காயம், தக்காளி ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளிக்க எண்ணெய்.

அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டுப் பின் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறவும்.

Sunday, November 27, 2011

இப்போ என்னோட முறை ராஜ்மாவில்! :))

ராஜ்மாவிலே மருமகள் ரொட்டி பண்ணினால் மாமியார் ஏதானும் செய்ய வேண்டாமா? ஆகவே நான் பஞ்சாபிலே பிரபலம் ஆன ராஜ்மா கிரேவி(குழம்பு மாதிரி)+ ஃபிரைட் ரைஸ் செய்தேன். இதற்கு வெண்ணெய் அல்லது நெய் இருந்தால் நன்றாக இருக்கும். பஞ்சாபில் வெண்ணெய், நெய் தாராளமாய்க் கிடைப்பதால் அதிலேயே செய்வார்கள்.

தேவையான பொருட்கள்: நாலு பேருக்கு.

ராஜ்மா இரண்டு கிண்ணம் எடுத்துக்கொண்டு முதல் நாளே ஊற வைத்துக்கொள்ளவும்.

மசாலாவிற்கு: ஒரு ஸ்பூன் சோம்பு, உடைத்த மிளகு ஒரு ஸ்பூன், பெரிய ஏலக்காய் 4, லவங்கப் பட்டை ஒரு துண்டு, தேஜ்பத்தா எனப்படும் மசாலா இலை, இலவங்கம் 4

தாளிதம் செய்ய:

ஜீரகம்,சோம்பு ஒரு டீஸ்பூன்,

வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் ஒரு கிண்ணம்

தக்காளி பொடியாக நறுக்கியது ஒரு கிண்ணம்.

பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், 2 ஸ்பூன் தனியாத் தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

கெட்டித் தயிர் ஒரு கிண்ணம். மேலே தூவ சீஸ் துருவல் அல்லது புதிதான க்ரீம்.

பாஸ்மதி அரிசி 2 கிண்ணம், உப்பு, பட்டாணி(பச்சை அல்லது காய்ந்த பச்சைப்பட்டாணி ஊற வைத்தது அரைக் கிண்ணம். கிராம்பு, ஏலக்காய் வகைக்கு இரண்டு. வறுக்க நெய் ஒரு டீஸ்பூன்.

பாஸ்மதி அரிசியையும், பட்டாணியையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் அல்லது பிரஷர் பானில் நெய்யை ஊற்றி கிராம்பு, ஏலக்காய் போட்டுக்கொண்டு பாஸ்மதி அரிசியைப் போட்டு வறுக்கவும். அரிசி முழுதும் நெய்யோடு நன்கு கலந்ததும், பட்டாணியைச் சேர்த்து உப்பையும் போட்டுவிட்டுத் தேவையான நீரை விட்டுக் குக்கரை மூடி சாதம் தயார் செய்து கொள்ளவும். இப்போது ராஜ்மா கிரேவி தயாரிக்கும் முறை.


முதலில் சொல்லி இருக்கும் மசாலாப் பொருட்களை நசுக்கிக் கொண்டு ஒரு சின்ன வெள்ளைத்துணியில் கட்டி ராஜ்மாவை வேக வைக்கையில் அதோடு போட்டுவிடவும். வேகும்போதே இந்த மசாலா அதற்குள் போய் இறங்கிக்கொள்ளும். முதல் நாளே ஊற வைத்து அளவாக நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். வெந்த ராஜ்மாவில் இருந்து மசாலாப் பையை எடுத்துவிடவும்.

அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்துக்கொண்டு வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, ஜீரகம் தாளித்துக்கொண்டு வெங்காயத்தைப்போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் இஞ்சி பேஸ்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்து ஒரு கொதி விடவும். கெட்டித் தயிரில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையானால் அம்சூர் பொடி சேர்த்து ராஜ்மாவில் கொட்டிக் கலக்கவும். மறுபடி ஒரு கொதி விடவும். இதற்கு கரம் மசாலாப் பொடி தேவையில்லை. தேவை எனில் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம், பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம்.

தயாரிக்கப்பட்ட சூடான சாதத்தில் இந்தக் குழம்பை விட்டுச் சாப்பிடலாம். குளிர்நாட்களுக்கு ஏற்ற உணவு. படம் இன்னொரு முறை செய்கையில் எடுத்துச் சேர்க்கிறேன்.

ராஜ்மாவில் ரொட்டியா? கடவுளே!

அப்படித்தான் நானும் நினைச்சேன் முதல்லே. ஆனால் நல்லாவே இருந்தது. ஊருக்குப் போகையிலே ராஜ்மா ரொட்டி பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு மருமகள் சொன்னாள். எனக்குக் கொஞ்சம் யோசனை தான். அன்றே சாயந்திரமாப் பண்ணினா. சாப்பிட்டால் நல்லாவே இருந்தது. எனக்குத் தெரிந்த வரையில் அவள் போட்டிருந்த பொருட்கள்:

ராஜ்மா ஒரு கப் முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன அளவு ராஜ்மா விழுதுக்கு இரண்டு கப் கோதுமை மாவு தேவைப்படும்.

மற்றத் தேவையான பொருட்கள்: மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, உப்பு, மாவில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். மாவு பிசைய நீர். ரொட்டியைத் தட்டி எடுக்கத் தேவையான எண்ணெய் தனியாக.

கோதுமை மாவில் ராஜ்மா விழுதைப் போட்டுக் கலந்து கொண்டு அதோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, தேவையான உப்புச் சேர்த்துக் கலக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான நீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசையவும். ரொட்டி மாவு பதத்துக்கு வந்ததும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ரொட்டியை ஒவ்வொன்றாக இட்டுத் தவாவில் எண்ணெய் தடவிப் போட்டுச் சுட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள ராய்தா எனப்படும் பச்சடி நன்றாக இருக்கும்.

ராய்தா:

வெங்காயம், காரட், வெள்ளரிக்காய் துருவிப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி போட்டு, நல்ல கெட்டித் தயிரில் உப்பு, ஜீரகப்பொடி, காலா நமக் பொடி ஒரு சிட்டிகை போட்டுக் கலந்து வைக்கவும்.

Tuesday, November 15, 2011

ரங்கு சமையல் கத்துக்கிறார்

அப்பாடா!

என்ன அப்பாடா! இன்னிக்கு சமையல் இல்லையா?

நோ, இன்னிக்கு நோ சமையல் டே. தங்குவின் அறிவிப்பு.

என்னது? அப்போ என்ன சாப்பிடப் போறோமாம்?

பட்டினி தான்!

அடிப் பாவி! சரி, நானாவது சமைத்துத் தொலைக்கிறேன்.

அப்படி வாங்க வழிக்கு! ஹாஹாஹாஹா, தங்குவின் வெற்றிச் சிரிப்பு.

நான் வெறும் ரசம் தான் வைக்கப் போறேன். ரங்குவின் அறிவிப்பு.

சரி, போகட்டும், வைக்கிறது வைக்கிறீங்க, மைசூர் ரசமா வைச்சுடுங்களேன்.

நல்லா நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துட்டா பாரு!

ஏன்? தினம் தினம் நான் தானே சமைக்கிறேன். இன்னிக்கு ஒரு நாள் செய்தா என்னவாம்?

எனக்கு மைசூர் ரசமும் தெரியாது, மங்களூர் போண்டோவும் வராது.

நான் சொல்லித் தரேன். செய்ங்க. தங்கு ஓர் அதட்டல் போட வேறு வழியில்லாத ரங்கு பணிகிறார்.

முதல்லே பருப்பை வேக வைக்கணும். அது பாட்டுக்கு வேகட்டும். அதுக்குள்ளே நாம் இதெல்லாம் தயார் பண்ணிக்கலாம்.

என்னது?

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சுக்குங்க. அதைத் தனியா வைங்க, சரியா?

சரி, சரி, அப்புறமா சொல்லித் தொலை. அடம்!

மி.வத்தல் 4, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கோங்க. ஜீரகம் வறுக்காமல் பச்சையாக எடுத்து வறுத்த சாமான்களோடு சேர்த்துக்கோங்க.

ஐயையே, வறுக்கச் சொன்னால் என்ன செய்யறீங்க? இப்படியா கறுப்பா ஆக்கறது? நகருங்க நானே வறுத்துத் தந்து தொலைக்கிறேன்.

நல்லா வறு, என்னை வறுக்கிறாப்போல் நினைச்சுக்கோ!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே நீங்க தான் என்னை வறுக்கிறீங்க.

தங்குவே எல்லாவற்றையும் வறுத்து எடுத்தாச்சு.

இப்போ இதை எல்லாம் மிக்சியில் போட்டு அரைங்க.

எப்படி? எங்க வீட்டு மனுஷங்களை நீ வாயில் போட்டு அரைப்பியே, அப்படியா?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சரி, சரி,அரைச்சுட்டேன், இதோ.

இப்போப் புளி ஜலத்தை அடுப்பில் வைச்சு அதிலே ஒரு தக்காளிப்பழத்தை நறுக்கிப் போடுங்க. உப்புச் சேர்த்துக் கொஞ்சம் போல் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடுங்க. வேணுமானால் ஒரே ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடலாம். கொதி வந்ததும், வெந்த பருப்பைச் சேர்த்துட்டு, அரைச்சு வைச்சதையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க. அப்புறமா ஜலம் விட்டு விளாவிவிட்டு நெய்யில் கடுகு, மி,வத்தல் ஒண்ணு, கருகப்பிலை தாளிச்சு, கொத்துமல்லி நறுக்கிப் போடுங்க.

அப்பாடா, எல்லாம் முடிச்சுட்டேன். வா, சீக்கிரமா வந்து படம் எடுத்துட்டு நீ எழுதுவியே அதிலே போடு.

அதெல்லாம் நான் சமைக்கிறச்சே தான். இதை எல்லாம் எடுக்க மாட்டேன்.

Thursday, November 10, 2011

சாதாரணமா சமையல் முறையை எழுதினா யாருமே வந்து பார்க்கிறதில்லை. அதனால் இனிமேல் ரங்குவும் தங்குவும் சமைக்கப் போறாங்க. வந்து பாருங்க.

Wednesday, November 9, 2011

தினம் தினம் என்னத்தைச் சமைக்கிறது?

போர் அடிக்குதா? புளியஞ்சாதம், தேங்காய்ச் சாதம் எல்லாமும் அலுத்துப் போச்சா? இதோ கொஞ்சம் புது மாதிரியான சமையல். சாப்பிட்டுப் பாருங்க வாங்க.தினம் ஏதேனும் குழம்பு, ரசம்னு வைச்சால் மிஞ்சிப் போகிறது. மறுநாளைக்குச் சுட வைத்துச் சாப்பிடும் வழக்கமும் இல்லை. துவையல், பொடி, எலுமிச்சை சாதம்னு எல்லாம் அலுப்பாய்ப் போச்சா! சரினு புதுமாதிரியா இருக்கட்டும்னு புளியோகெரெ பண்ணினேன். எம்.டி.ஆருக்குத் தான் விளம்பரமா? நமக்கும் வேணுமில்ல? அதான் படம் எடுத்துப் போட்டாச்சு. படத்திலே பார்ப்பது புளியோகெரெ! கடுகோரைனும் சிலபேர் சொல்றாங்க.
 
ஒரு கர்நாடக சமையல்:

கடுகோரை:
தேவையான பொருட்கள்:

அரைக்க: புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.

தாளிக்க: கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்

ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.

அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும்.

இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.

 

தொட்டுக்க மோர்க்கூட்டு: இங்கே சைனீஸ் பஜாரில் பூசணிக்காய்(வெள்ளை) நல்லாவே கிடைக்குது. அது வாங்கிட்டு வந்தாங்க. அதிலே செய்தேன். பூசணிக்காயை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதிகப்படி நீரை வடிக்கவேண்டும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து நைஸாக அரைக்கவும். வெந்த பூசணிக்காயில் கொட்டிக் கலந்து ஒரு கொதி வந்ததும் கெட்டித் தயிர் சேர்த்து லேசாய்க் கொதித்ததும் கீழே இறக்கிக் கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்

ரசமே இல்லைனா சாப்பாடும் ரசம் இல்லை; வாழ்க்கையிலும் ரசம் இல்லை.

எலுமிச்சை ரசம்.

பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று தக்காளியை மிக்சியில் போட்டு அடித்து அதில் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்துக்கொண்டு, பச்சை மிளகாய், ரசப் பொடி,பெருங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் நீர் விட்டு விளாவி நுரைத்து வருகையில் கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கலாம். அல்லது சீரகப் பொடி போட்டுவிட்டுக் கடுகு மட்டும் தாளிக்கலாம். பச்சைக்கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சைச் சாறையும் சேர்க்கவேண்டும்.


 
Posted by Picasa

Monday, November 7, 2011

சில உருளைக்கிழங்கு செய்முறைகள் !

உருளைக்கிழங்கு சமையல்கள்:

உருளைக்கிழங்குக் காரக்கறி: உருளைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் வதக்க. கடுகு தாளிக்கத் தேவையான அளவு.

உருளைக்கிழங்கை மண்போக நன்கு கழுவித் தோலை நீக்கவேண்டுமானால் நீக்கிவிட்டுப் பொடிப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மொறுமொறுவெனப் பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.

உருளைக்கிழங்கு காரக்கறி 2-ஆம் வகை: உருளைக்கிழங்கு கால் கிலோ, வெங்காயம் பெரியதெனில் இரண்டு, சின்ன வெங்காயம் என்றால் நூறுகிராம் தோல் உரித்துப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் ஒன்று, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கருகப்பிலை, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயத்தூள். வதக்க எண்ணெய்.

உருளைக்கிழங்கைக் கழுவி வேக வைத்துத் தோலுரித்துக்கொண்டு ஒன்றிரண்டாக மசிக்கவும். அல்லது நான்கு பாகமாகவோ சிறிய துண்டுகளாகவோ நறுக்கிக்கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயப்பொடி, கருகப்பிலை, க.பருப்பு, உ.பருப்பு தாளித்துக்கொண்டு, பச்சைமிளகாயையும் அரிந்து போடவும். பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு பொடி வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும். இதிலேயே இறக்குகையில் கொஞ்சம் கரம்மசாலாவைப் போட்டால் மசாலா கிழங்காக ருசிக்கலாம். தேவை எனில் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.

உருளைக்கிழங்கு போண்டோ:

மேலே சொன்ன மாதிரி கொஞ்சம்காரத்தைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்கு கறி தயாரித்துக்கொள்ளவும்.

மேல்மாவுக்குத் தேவையான பொருட்கள்; கடலைமாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், கரைக்க நீர்.

பொரிக்க எண்ணெய்

கடலைமாவு, அரிசிமாவு,மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்புச் சேர்த்துக்கலந்து கொண்டு நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

இப்போது தயாராக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கறியை ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். நன்கு திருப்பிப் போட்டு வெந்ததும் கரண்டியால் அரித்து எடுத்து வடிகட்டவும். சூடான தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்

உருளைக்கிழங்கு பஜ்ஜி:

உருளைக்கிழங்கு பெரிதாக ஒன்றிருந்தாலே போதும். நன்கு கழுவிக் கொண்டு தோலைச் சீவி விட்டு வட்ட வட்டமாகச் சீவித் தண்ணீரில் போடவும். உருளைக்கிழங்கை நன்கு தண்ணீரில் போட்டு அலசிவிட்டால் அதிலுள்ள மாவுச்சத்து குறையும் என்பார்கள். உண்பதில் கவலைப்படவேண்டாம்.

பஜ்ஜி மாவுக்கு: 2 கிண்ணம் கடலைமாவு, அரைக்கிண்ணம் அரிசி மாவு,அரைக்கிண்ணம்மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,கரைக்க நீர், பொரிக்க எண்ணெய்

எல்லா மாவுகளையும் ஒன்றாய்க் கலந்து கொண்டு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நீர் விட்டுக் கொண்டு தோசைமாவு பதத்துக்குக் கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளை மாவில் தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். சூடான தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியோடு பரிமாறவும்.

உருளைக்கிழங்கு வடை: ஜவ்வரிசி ஒரு கிண்ணம். தயிரில் ஊறப் போடவும். உருளைக்கிழங்கு பெரிதாக இரண்டு. வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளவும். வேர்க்கடலை ஒரு கிண்ணம் நன்கு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். 6 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு சின்னக் கட்டுக் கொத்துமல்லி சேர்த்து அரைத்த விழுது ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, பெருங்காயப் பொடி, காரப்பொடி(தேவையானால்) பச்சைமிளகாய்க் காரமே போதுமெனில் அதோடு நிறுத்திக்கொள்ளலாம். காரம் போதவில்லையெனில் அரைத்த விழுதையே இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.

இப்போது ஜவ்வரிசி நன்கு ஊறி இருக்கும். அதில் வேர்க்கடலை மாவு, வெந்த உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பிசையவும். காரத்திற்குத் தேவையான அளவு அரைத்த விழுது, உப்புச் சேர்க்கவும். பெருங்காயத்தூள், கருகப்பிலை தேவை எனில் சேர்க்கவும் அநேகமாகப் பிசைந்த மாவு கெட்டியாகவே இருக்கும். இல்லை எனில் கொஞ்சம் மைதாமாவோ அல்லது கடலைமாவோ சேர்க்கலாம். சற்றுநேரம் வைத்திருந்தால் ஜவ்வரிசி நன்கு ஊறி ஈரத்தை இழுத்துக்கொள்ளும்.

இப்போது கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாய்த் தட்டி எண்ணெயில் போடவும். ஜவ்வரிசி நன்கு பொரிந்து வடை மொறுமொறுவென வரும். சூடான தக்காளிச் சட்னி அல்லது புளிச்சட்னி, பச்சைச் சட்னியோடு சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு தம் அல்லது ஆலு தம்: ஓரே மாதிரியான சின்னச் சின்ன உருளைக்கிழங்கு கால் கிலோ. வேகவைத்துத் தோல் உரித்துக்கொள்ளவும். வெந்த கிழங்கில் இரண்டு மூன்று இடங்களில் சற்றுப் பெரிய ஊசி அல்லது பல் குத்தும் குச்சியால் குத்திவிட்டுவிட்டு மிளகாய்த்தூள், உப்புச் சேர்த்து
வதக்கி வைத்துக்கொள்ளவும்.

தக்காளி கால் கிலோ நன்கு வேக வைத்துச் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய்(தேவை எனில்) சேர்த்து அரைக்கவும். வெங்காயம் தேவைப்பட்டால் சேர்க்கலாம். பூண்டைக் குறைத்து வெங்காயம் சேர்க்கலாம். அல்லது பூண்டு போடாமல் வெங்காயம் சேர்க்கலாம்.

வதக்க, தாளிக்க எண்ணெய் அல்லது வெண்ணெய்/வனஸ்பதி, க்ரீம் அல்லது வெண்ணெய், அல்லது சீஸ், தயிர் கெட்டியாக. மஞ்சள் தூள்

கரம் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன். கரம் மசாலா பவுடர் தயாரிப்பு முறை

சோம்பு 50 கிராம்
லவங்கப்பட்டை 25 கிராம்
லவங்கம் என்ற கிராம்பு ஐந்து எண்ணிக்கை
பெரிய ஏலக்காய் நான்கு

இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். கிராம்பு அதிகம் சேர்த்தால் காரம் அதிகமாக இருக்கும்.

இப்போது கடாய் அல்லது நான்-ஸ்டிக் பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த மசாலா விழுதைப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிகையில் வடிகட்டி வைத்த தக்காளிச் சாறை ஊற்றவும். தேவையான உப்பைப் போடவும். சற்றுக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போடவும். உருளைக்கிழங்கு சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கையில் தயிரை நீர்விடாமல் நன்கு கடைந்து அதில் மேலே ஊற்றவும். சற்று நேரம் பொறுத்துக் கீழே இறக்கிவிட்டுக் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். இல்லை எனில் சீஸைத் துருவிச் சேர்க்கவும். பச்சைக்கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம். சப்பாத்தி, பராட்டாவிற்கு ஏற்ற சைட் டிஷ் இது.