எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, March 21, 2017

உணவே மருந்து! எலுமிச்சை!

எலுமிச்சை ரசம்: தேவையான பொருட்கள்.

நான்கு பேருக்கு

ஒரு நடுத்தர அளவிலான எலுமிச்சை ஒன்று

துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்புக் குழைய வேக வைத்தது (மஞ்சள் பொடி சேர்த்து) அரைக்கிண்ணம்

தக்காளி (நாட்டுத் தக்காளி தான் நன்றாக இருக்கும்.) நடுத்தர அளவிலானது எனில் 2 அல்லது 3, பெரிது எனில் ஒன்று போதும். (இங்கே அம்பேரிக்காவில் தக்காளி ஒன்று ஆப்பிள் சைசுக்கு இருக்கு, ஆகவே பாதி தான் போடுவேன். நேத்தித் தான் எலுமிச்சை ரசம் வைச்சேன், படம் எடுக்கலை!)

பச்சை மிளகாய் காரம் அதிகம் இல்லை எனில் இரண்டு! காரம் அதிகம் இருந்தால் பாதி போதும்.

ரசப்பொடி  ஒன்றரை டீஸ்பூன், மிளகு, ஜீரகப் பொடி அரை டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு கட்டி அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

பொடி போடுவதற்கு பதிலாக மி.வத்தல், கொ.விதை, துபருப்பு, மிளகு, ஜீரகம் வறுத்துக் கொண்டு பொடி செய்து கீழே இறக்கும்போது போடலாம். 

உப்பு தேவைக்கு ஏற்ப

கருகப்பிலை(தேவையானால்) கொத்துமல்லி

தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, ஜீரகம்

துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக வைத்துக் கொண்டு அதிலே தக்காளி,பச்சை மிளகாய், ரசப்பொடி, பெருங்காயம், உப்புச் சேர்த்துத் தேவையான அளவு நீர் விட்டுக் கொதிக்க விடவும். தக்காளி நன்கு குழைந்து உருத்தெரியாமல் ஆனதும். தேவைக்கு ஏற்ப ரசத்தை நீர் விட்டு விளாவவும். தக்காளியை முதலில் வேக வைத்துக் கொண்டு பின்னர் பருப்பு ஜலம் விட்டும் கொதிக்க விடலாம். அல்லது தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு அடித்துக் கொண்டு அந்தச் சாறோடு பருப்பு ஜலம் சேர்த்தும் பொடி, உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடலாம்.

கருகப்பிலை, கொத்துமல்லியைக் கொதிக்கும்போதே போடப் பிடித்தால் போடலாம். அல்லது ரசம் விளாவிய பின்னர் போட்டு நுரைத்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக் கொண்டு எலுமிச்சைச் சாறைச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்ததும் ரசத்தைச் சூடு செய்யக் கூடாது.

எலுமிச்சைச் சாதம்

தேவையான பொருட்கள்

சமைத்த சாதம் உதிர் உதிராக இரண்டு கிண்ணம்

எலுமிச்சை நல்ல சாறுள்ளது எனில் பெரிதாக ஒன்று போதும். இல்லை எனில் இரண்டு தேவை.

தாளிக்க நல்லெண்ணெயே இதற்கு நன்றாக இருக்கும்.

நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ஆகியவை தாளிக்கலாம்.

பச்சைமிளகாய் அவரவர் காரத்திற்கு ஏற்றாற்போல் 2 அல்லது மூன்று.

கருகப்பிலை

பெருங்காயத் தூள்

மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கு.

சமைத்த சாதத்தில் எலுமிச்சைச்சாறு,  உப்பு, நல்லெண்ணெய் அரைக்கரண்டி, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயைச் சூடு பண்ணித் தாளிக்கும் பொருட்களை வரிசையாகச் சேர்த்துக் கடைசியில் பச்சைமிளகாய், கருகப்பிலை சேர்த்துக் கொண்டு சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.  சற்று நேரம் எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின்பு பரிமாறவும்.