எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, May 16, 2014

பருப்புக் கலவை சப்பாத்திக்கு!



படத்துக்கு நன்றி கூகிளார்:

ஹிஹிஹி, முதல்லே இதைப் போடணும்னு நினைக்கலை. அதான் நேத்திக்குப் படம் எடுக்கலை.  திரும்ப ஒரு நாள் பண்ணுவேன். அப்போ நினைவா எடுத்துடணும். முடிச்சுப் போட்டு வைச்சுக்கறேன்.  செரியா?

எப்போவும் சப்பாத்திக்குக் காய்கள் ஏதானும் தான் பண்ணுவேன். மத்தியானம் சாப்பாடுக்குச் சப்பாத்தி பண்ணினால் சில சமயம் தால், ரொட்டி, சப்ஜி பண்ணிட்டு மோர்சாதமாச் சாப்பிட்டுக்குவோம்.  நேற்று ராத்திரிக்குச் சப்பாத்தி.  திரும்பத் திரும்ப காய் எல்லாம் பண்ணி அலுத்துப் போச்சு. ரங்க்ஸ் கிட்டே கேட்காமலேயே மிக்சட் தால் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டு மாலை காஃபி கலக்கும்போதே தால் எல்லாம் எடுத்து ஊற வைச்சேன்.  நான் இரண்டு பேருக்குத் தான் பண்ணினேன்.  இங்கே அளவு நான்கு பேருக்கானது சொல்றேன்.

துவரம்பருப்பு  ஒரு சிறு கிண்ணம்

கடலைப்பருப்பு  அரைக்கிண்ணம்

பாசிப்பருப்பு         அரைக்கிண்ணம்

உளுத்தம்பருப்பு  கால் கிண்ணம்

நான்கையும் நன்கு கழுவிக் களைந்து குறைந்தது ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.

தேவையான பொருட்கள்

தாளிக்க

ஜீரகம், சோம்பு

பச்சை மிளகாய்  2

இஞ்சி      ஒரு சின்னத் துண்டு

கருகப்பிலை

மி.வத்தல் ஒன்று

பெருங்காயம் (தேவையானால்)

வெங்காயம்   2 பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

தக்காளி         3 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

மிளகாய்த் தூள்  ஒரு டீஸ்பூன்

தனியாத் தூள்  ஒரு டீஸ் பூன்

மஞ்சள் தூள்   அரை டீஸ்பூன்

ஜீரகத் தூள்       அரை டீஸ்பூன்

மிளகுத் தூள்   கால் டீஸ்பூன்

வெந்தயப் பொடி  கால் டீஸ்பூன்

கரம் மசாலாப்பொடி  அரை டீஸ்பூனில் இருந்து ஒரு டீஸ்பூனுக்குள் அவரவர் தேவைக்கேற்ப

தயிர் கெட்டியாக அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சைக் கொத்துமல்லி அலங்கரிக்க

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

எண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்


ஊறிய பருப்பைத் தேவையான உப்புச் சேர்த்து, மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் போட்டு நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாய் அல்லது வாணலி அல்லது ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முதலில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், ஜீரகம், சோம்பு தாளித்துப் பின் பச்சை மிளகாய், இஞ்சி, மி.வத்தல், பெருங்காயம் சேர்க்கவும்.  வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.  தக்காளி சேர்த்து வதக்கிக் கொண்டே மஞ்சள் பொடி, மி.பொடி. த.பொடி சேர்க்கவும்.  கொஞ்சம் வதக்கி விட்டுத் தயிர் அரைக்கிண்ணம் சேர்க்கவும்.  தக்காளி நன்கு வேகும் வரை தயிர் சேர்த்து வதக்கவும்.  பின்னர் ஜீரகப் பொடி, மிளகு பொடி, வெந்தயப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து சற்றுக் கிளறி விட்டு வேக வைத்த பருப்பை இதில் சேர்க்கவும்.  ஒரு மூடியால் மூடிச் சிறிது நேரம் கொதிக்க விடவும்.  பருப்பு தானே கெட்டியாக தோசை மாவு பதத்துக்கு வந்துவிடும்.  கொத்துமல்லி சேர்க்கவும்.

ஃபுல்கா ரொட்டி அல்லது பரோட்டா, (பராந்தா) வோடு பரிமாறவும்.

Monday, May 5, 2014

கிள்ளு மிளகாய் சாம்பார்

இது குறிப்பாய் மதுரைப் பக்குவம்னு சொல்லலாம்.  அல்லது எங்க வீடுகளில் மட்டும் செய்து வரலாம்.  தெரியலை.  ஆனால் யாரும் அதிகம் செய்து பார்த்திராத இதை நம்ம ரங்க்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி தனியாச் சமைச்சுச் சாப்பிடறச்சே சாம்பார்ங்கற பேரிலே புளியே போடாமல் செய்து வந்திருக்கார்.  கல்யாணம் ஆனதுக்கப்புறமா என்னால் முடியாமல் போகும் தினங்களில் குழந்தைங்களுக்கு இந்த சாம்பாரைச் செய்து மேலே தெளிவாக் கிடைப்பதை ரசம்னு ஊத்திட்டு, அடியிலே கெட்டியா இருப்பதை சாம்பார்னு சொல்லிப்பார்.  இத்தோட அருமையான காம்பினேஷனா காரட்+தக்காளி+வெள்ளரிக்காய்+வெங்காயம்+கொத்துமல்லி+மிளகு+உப்பு சேர்த்த சாலட்.  தினம் தினம் புளி சேர்த்து சமையல் என்றால் ரொம்பவே சலிப்பாய் இருக்கும்.  அதற்கு ஒரு மாற்று இது.  இப்போ நம்ம செய்முறை பத்திப் பார்ப்போமா?  சாம்பாராவே தான் பண்ணுவேன்.  எனோட அம்மா இதை வாரம் ஒருமுறையாவது பண்ணுவாங்க.  அதிலே போடும் மிளகாயெல்லாம் பிஞ்சு மிளகாயாக இருக்கும் என்பதால் மிளகாயோடு சேர்த்தே சாப்பிட்டிருக்கோம்.  இங்கே சின்ன மிளகாயே காரம் அதிகமா இருக்கு.  சுமார் நாலு பேருக்குத் தேவையான அளவு


புளியே இதுக்கு வேண்டாம்.  ஆகவே இன்னிக்கு நோ புளி டேனு வைச்சுக்குங்க.

தக்காளி பெரிது எனில் 2
நடுத்தர அளவு எனில் 3 அல்லது 4

பச்சை மிளகாய்ப் பிஞ்சு எனில் 50 கிராம் அல்லது 5 பச்சை மிளகாய்(காரமுள்ளது)

சாம்பார்ப் பொடி  அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்     கால் டீ ஸ்பூன்

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது ஒரு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

கருகப்பிலை, கொத்துமல்லி

தாளிக்க எண்ணெய்

கடுகு, வெந்தயம், 

பெருங்காயம் ஒரு துண்டு

தேவையான அளவு தண்ணீர் குழம்பில் சேர்க்க. ஒரு கிண்ணம் போதும்.

தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.  துவரம்பருப்பை முன்னதாக நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  நான் ஸ்டிக் கடாய், வாணலி அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருகப்பிலை தாளித்து நறுக்கி வைத்த தக்காளி, பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்.  மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு ஒரு கிண்ணம் நீரை ஊற்றித் தேவையான உப்புப் போடவும்.  தக்காளி நன்கு வேகும் வரை காத்திருந்து பின்னர் வெந்தபருப்பில் ஒரு கரண்டி நீர் விட்டுக் கரைத்துக் கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.  ஒருகொதி வந்ததும் இறக்கிக் கொத்துமல்லி போடவும்.  சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எதோடும் துணை போகும்.  இதிலேயே சின்ன வெங்காயமும் வதக்கிச் சேர்க்கலாம்.  அல்லது பெரிய வெங்காயம் நறுக்கி வதக்கிச் சேர்க்கலாம்.  சுவை மாறுபடும். படம் எடுத்திருக்கேன்.



அப்பாடா, ஒரு வழியாய் சமைக்கிறச்சேயே நினைவாய்ப் படம் எடுத்துட்டேன். :)

Thursday, May 1, 2014

ஃபலூடா சாப்பிட வாங்க!

மாங்கொட்டைக் குழம்பு யாருக்கும் பிடிக்கலை போல. பத்தியக் குழம்பு இல்ல, அதான்! போகட்டும். முந்தா நாள் உறவினர் வருகைக்கு மசால் தோசையும், ஃபலூடாவும் செய்தேன்.  மசால் தோசை பத்திச் சொல்ல வேண்டாம். :)  ஃபலூடா தமிழ்நாட்டில் தெரியுமானு புரியலை.  வட மாநிலங்களில் குறிப்பாய் மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தானில் பிரபலமானது. இதைக் கடைகளில் கொடுக்கையில் அது கொஞ்சம் மாறுபடும். வீடுகளில் செய்வது வேறே மாதிரி.  அஜ்மேரில் சில கடைகளில் கூட வீட்டில் செய்யும் ஃபலூடா மாதிரியே தருவாங்க.  இப்போ வீட்டில் செய்யும் முறை பார்ப்போம். கொஞ்சம் நேரம் எடுக்கும்.  அலுத்துக்காமல் செய்யணும். :)

முதலில் கேக் தயாரிப்பு. இதற்கு ப்ளம் கேக் , பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டது நல்லா இருக்கும்.  முன்னெல்லாம் வீட்டிலேயே கேக் செய்திருக்கேன்.  இப்போ அவன் இல்லை.  தானம் கொடுத்தாச்சு.  ஆகவே வாங்கறது தான்.  ப்ளம் கேக்  ஒரு முழு கேக் வாங்கிக்கலாம்.  விலை ஜாஸ்தினு நினைப்பவர்கள் ஒரு துண்டு இருபது ரூபாய்னு விற்கும் கேக் துண்டுகள் நான்கு வாங்கிக்குங்க.  அதிலே மேலே க்ரீம், சாக்லேட் சாஸ் ஊற்றித் தயாரித்திருப்பார்கள். அதுவும் நல்லாவே இருக்கும்.  நேத்திக்கு நாங்க இந்தத் துண்டு கேக்  4 துண்டுகள் வாங்கினோம்.


அடுத்து சேமியா தயாரிப்பு.  கடைகளில் ஃபலூடாவுக்கெனத் தனியா விற்கும். அதை வாங்கிச் சேர்ப்பாங்க.  நாமதான் அப்படி எல்லாம் இல்லையே.  நல்ல எம்டிஆர் சேமியா அல்லது பொம்பினோ சேமியா (இது இரண்டு தான் குழையாது.  தனித்தனியாக வரும்) நெய்யில் வறுத்துக் கொண்டு, பாலில் வேக வைக்கவும்.   நான்கு நபர்களுக்குத் தேவையான சேமியா இரண்டு குழிக்கரண்டி அல்லது ஒரு கிண்ணம். சேமியா நன்கு வெந்து கெட்டிப்பட்டதும், நெய்யில் பாதாம் பருப்பு, பிஸ்தாப்பருப்பு, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து ஏலக்காய், குங்குமப் பூ, பச்சைக்கற்பூரம்(பிடித்தால்) சேர்க்கவும்.  தனியாக ஆற வைக்கவும்.

அடுத்துக்  கஸ்டர்ட் தயாரிப்பு.   இதற்கு அரை லிட்டர் பால் தேவை.  காய்ச்சி ஆற வைக்கவும். வனிலா கஸ்டர்ட் பவுடர் வாங்கவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் காய்ச்சி ஆற வைத்த பாலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு நன்றாகக் கலக்கவும்.  கலந்ததை மீதம் உள்ள பாலில் விட்டு அடுப்பில் மீண்டும் வைத்து, குறைவான தீயில் கொதிக்க விடவும்.  கை விடாமல் கிளற வேண்டும்.  ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, இரண்டு டீ ஸ்பூன் வெண்ணை சேர்த்துக் கிளறவும்.  கெட்டியாக வரும்போது இறக்கவும்.  ஆற வைக்கவும்.

அடுத்து ஜெல்லி தயாரிப்பு.  ஒரு பாக்கெட் ஸ்ட்ராபெரி ஜெல்லி அல்லது க்ரேப் ஜெல்லி பவுடர் வாங்கிக் கொள்ளவும்.  அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து ஆற விடவும்.   ஆறிய நீரில் ஜெல்லிப் பவுடரைக் கொட்டிக் கிளறவும்.  ஒரு கண்ணாடிக் கிண்ணம் அல்லது டிசைன் போட்ட ஸ்டீல் கிண்ணம் இருந்தால் அதில் ஜெல்லியைக் கொட்டிக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஜெல்லி கெட்டிப்படக் கொஞ்சம் நேரம் எடுக்கும்.  மேற்சொன்ன முறையிலோ அல்லது ஜெல்லிப் பவுடர் பாக்கெட்டில் போட்டிருக்கும் செய்முறைப்படி செய்யவும்.

அடுத்துப் பழங்கள்.  உங்க இஷ்டப்படி பழங்களை வாங்கி நறுக்கி வைங்க.  மாம்பழம் இதுக்கு வேண்டாம்.  மற்றபடி வாழைப்பழம், அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பேரிச்சை, திராக்ஷை, பப்பாளி  போன்ற பழங்கள் எல்லாமும் அல்லது இவற்றில் ஏதேனும் மூன்று, நான்கு பழங்கள் நறுக்கிக் கொண்டு மொத்தத்துக்கும்  அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத் தூள், அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம். அல்லது ஃபாமிலி பாக் வாங்கிக் கொள்ளவும்.  நேத்து அடிச்ச வெயிலில் ஐஸ்க்ரீம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வரதுக்குள்ளே உருகிடும்னு ஐஸ்க்ரீம் வாங்கலை.  அதே போல் ஜெல்லி பவுடரும் இல்லை. அதனால் ஜெல்லியும் சேர்க்கலை.   இப்போக் கலக்கும் முறை.

மேற்சொன்னவற்றைச் செய்து ஆற வைத்துக் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைச்சிருங்க.  பழ சாலடையும் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருக்கட்டும்.
சாப்பிடும் நேரம் வெளியே எடுக்கணும்.

ஒரு நீண்ட கண்ணாடி தம்ளர் அல்லது வட்டமான வாயகன்ற கண்ணாடி பெளல் ஒவ்வொருத்தருக்கும் எடுத்துக்கொள்ளவும்.  சாப்பிடும் ஸ்பூனும் கொஞ்சம் நீளமாக இருத்தல் நலம்.  மர ஸ்பூன் விற்பாங்க, அதையும் பயன்படுத்திட்டுத் தூக்கி எறியலாம்.






ஃபலூடா சேர்க்கும் முறை:

முதலில் கேக் ஒரு துண்டு அடியில் வைக்கவும்.

அதன் மேல் சேமியா வெள்ளை வெளேர்னு இருக்கும். ப்ரவுன் நிறக் கேக்கின் மேல் வெள்ளை சேமியா தேவையான அளவு போடவும்.

அதன் மேல் சிவந்த நிற ஜெல்லி அல்லது க்ரேப் நிற ஜெல்லி

அதன் மேல் மஞ்சள் கஸ்டர்ட்

அதன் மேல் பழங்கள் தூவவும்.  தேவையான அளவுக்குப் பழங்கள் போடலாம்.

அதன் மேல் ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்.

சாப்பிடும்போது ஸ்பூனால் அப்படியே அடி வரை குத்தி எடுத்துச் சாப்பிடணும். கலந்து சாப்பிட்டால் பிடிக்கும்னால் கலந்தும் சாப்பிடலாம்.   மேலே சொன்ன அளவில் ஒருத்தர் இருமுறைகள் ஃபலூடா சேர்த்துச் சாப்பிடலாம்.  கூடியவரை மர ஸ்பூனே நல்லது.


ஃபலூடா தேவையான பொருட்கள்

கேக் ப்ளம் கேக் அல்லது சாக்லேட் கேக் போன்ற ஏதானும் ஒன்று அல்லது துண்டாக்கப்பட்ட கேக் துண்டங்கள் நாலு அல்லது ஐந்து

சேமியா கேசரி போல் தயாரித்தது  200 கிராம் அளவு

கஸ்டர்ட் கலவை    அதே 200 கிராம் அளவுக்குத் தயாரித்தது

ஜெல்லி கலவை  ஒரு பாக்கெட் ஜெல்லிப் பவுடரின் அளவுக்குத் தயார் செய்தது


பழங்கள் ஆப்பிள் ஒன்று, ஆரஞ்சு ஒன்று, மாதுளை ஒன்று, வாழைப்பழம் மூன்று, பப்பாளி பாதி இவை இருந்தால் போதும்.  தேவை எனில் மற்றப் பழங்களையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்க்கலாம்.

உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம். நான் ஐஸ்க்ரீம் சேர்க்கவில்லை. 

நேத்திக்குப் பேச்சு மும்முரத்திலும், தொடர்ந்த தொலைபேசி அழைப்புகளினாலும் ஃபலூடா கலக்கும்போது படம் எடுக்க முடியலை.  :(