எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 3, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள்! வேர்க்கடலைச் சுண்டல்!

வேர்க்கடலைச் சுண்டல்

வேர்க்கடலை கால் கிலோ

தாளிக்க எண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு

மி.வத்தல்,

கருகப்பிலை

உப்பு தேவையான அளவு

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்  இரண்டு டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலையை முதல் நாளே களைந்து ஊற வைக்கவும்.  மறுநாள் வழக்கம் போல் நீரை மாற்றிக் கொண்டிருக்கவும்.  பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு, மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்து வெந்த வேர்க்கடலையை நீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும்.  இதற்கு மி.வத்தல், தனியா வறுத்துப் பொடி செய்த பொடி போடலாம் அல்லது சாம்பார்ப் பொடியே போடலாம்.  அவரவர் விருப்பம் போல்!  பின்னர் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.  கீழே இறக்கி விநியோகம் செய்யலாம்


நவராத்திரி இல்லாத சாதாரண நாளில் வேர்க்கடலையை வேக வைத்துக் கொண்டு, பச்சை மிளகாய், இஞ்சி தாளித்துக் கொண்டு, கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் காரட் துருவல், தேங்காய்த் துருவல், சேர்த்துக் கிளறி இறக்கும்போது  வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் பச்சைக் கொத்துமல்லி தூவி சாட் மசாலா மேலே சேர்த்துவிட்டுப் பின்னர் சாப்பிடலாம்.


நவராத்திரி நிவேதனம் கேசரி

கேசரி கிளறுவது ரொம்பவே சுலபம்.  யாராக இருந்தாலும் சீக்கிரம் கற்றுக் கொண்டு செய்துடலாம்.


ரவை      ஒரு கிண்ணம்


சர்க்கரை  இரண்டு கிண்ணம்

நெய்      முக்கால் கிண்ணம்

ஏலக்காய்த் தூள் செய்தது அரை டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம் இரண்டும் சேர்ந்து 2 டேபிள் ஸ்பூன்


கொதிக்க வைத்த நீர் தேவையான அளவு


வாணலி அல்லது வெண்கல உருளியில் நெய்யைச் சூடு பண்ணிக் கொண்டு ரவையை அதில் போட்டுச் சிவக்க வறுக்கவும்.  ரவை வறுபட்டதும் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதைச் செய்யும்போதே இன்னொரு பக்கம்  மூன்று கிண்ணம் நீரைக் கொதிக்க வைக்கவும்.  ரவையும், சர்க்கரையும் நன்கு கலந்ததும், கொதிக்கும் வெந்நீரைக் கொஞ்சமாக விடாமல் மொத்தமாக ஊற்றவும்.


கை விடாமல் கிளறவும்.  சர்க்கரை இளகிப் பாகும் நீரும் சேர்ந்து கொதித்து ரவை கெட்டியாக வர ஆரம்பிக்கும்.  மீதம் இருக்கும் நெய்யை ஊற்றவும்.  இன்னொரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழத்தைப் போட்டுச் சிவக்க வறுத்துக் கேசரியில் கொட்டவும்.  ரவை நன்கு கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் கீழே இறக்கி ஏலப் பொடி தூவி நன்கு கிளறவும்.  விநியோகம் செய்யத் தயார்.