எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, July 27, 2014

கத்தரிக்காய் ரசவாங்கியும், மற்றும் சில ரசவாங்கிகள் செய்முறையும்!

கத்தரிக்காய் ரசவாங்கி:  நாலு பேருக்கு.

கத்தரிக்காய் பிடிக்குமெனில் குறைந்தது கால் கிலோவுக்குக் குறையாமல் வேண்டும்.  சின்னதாய் ஒரே மாதிரியாக இருத்தல் நலம்.  நன்கு கழுவிவிட்டுக் காம்பை முழுதும் நறுக்காமல் கொஞ்சம் போல் அரை இஞ்ச் நறுக்கிவிட்டுக் கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும்.  காம்போடு இருக்குமாதலால் காய் அப்படியே முழுதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு.  நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.  உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வைக்கவும்.   துவரம்பருப்பு ஐம்பது கிராம் நன்கு குழைய வேக விட்டு வைக்கவும்.

வறுத்து அரைக்க:

மிவத்தல் எட்டு,
தனியா 50 கிராம்,
மஞ்சள் தூள், பெருங்காயம்,
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்,
உ.பருப்பு ஒரு டீஸ்பூன்,
மிளகு ஒரு டீஸ்பூன்.
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்.
 உப்பு சுவைக்கு ஏற்ப.
எண்ணெய், தேவையான அளவு வறுக்க,

தாளிக்க.  கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், ப.மிளகாய் ஒன்று.

காரம் தேவை எனில் மிளகு இரண்டு டீஸ்பூனாக வைத்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும்.   கொஞ்சம் பொடியைத் தனியாக வைத்துவிட்டு மிச்சப் பொடியை   அலம்பி நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயில் ஒரே சீராக அடைத்து வைத்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும்.

அடுப்பில் உருளி அல்லது வாணலியை ஏற்றி  எண்ணெய் ஊற்றி விட்டுக் கடுகு போட்டுத் தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று, ப.மிளகாய் ஒன்று இரண்டாய்க் கிள்ளிச் சேர்க்கவும்.  பெருங்காயம் சேர்த்துக்கொண்டு அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும்.  மூடி வைத்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் புளி ஜலம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்ததை அதிலே சேர்க்கவும்.  சாம்பார் போல ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரசம் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் நிதானமாகப் புளி கரைத்தது இருத்தல் நலம்.  புளி வாசனை போகக் கொதித்ததும்,  வேக வைத்துள்ள துவரம்பருப்பில் நீர் 200 கிராமுக்குக் குறையாமல் ஊற்றிக் கரைத்துக்கொண்டு அதைக் கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.  நன்கு பொங்கி வருகையில் கீழே இறக்கி வைத்து மிச்சம் எடுத்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கலக்கவும்.  இது கத்தரிக்காயில் மட்டுமே செய்யப் படும் ரசவாங்கி.  இதிலேயே கத்தரிக்காய்களும் நிறையச் சேர்க்கப் படுவதால், சாம்பார் என்று ஒன்று தனியாக வைக்காமல் ரசமும் வைக்காமல் சாப்பிடப் பிடிக்கும் என்றால், அப்பளம், கறிவடாம் பொரித்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.


அடுத்துத் தஞ்சை ஜில்லாவில் செய்யப்படும்  கூட்டு வகை ரசவாங்கிகள்.

இது ஏற்கெனவே பொரிச்ச கூட்டுச் செய்முறையில் வந்திருக்கலாம்.  என்றாலும் ரசவாங்கி என்றால் கொஞ்சம் புளி கரைத்த நீர் சேர்க்கவேண்டும்.  இதில் துவரம்பருப்புப் போட்டுச் செய்யும் முறையும், பாசிப்பருப்பும், கடலைப் பருப்பும் மட்டும் போட்டுச் செய்யும் முறையும் உண்டு.  இரண்டிலும் பருப்புத் தான் மாற்றிக்கொள்ளவேண்டும்.  செய்முறை ஒன்றே.

இதற்கு வெள்ளைப் பூஷணி, செளசெள, கத்தரிக்காய்  போன்றவைகள் மட்டுமே நன்றாக இருக்கும்.  மேற்சொன்ன காய்களை நன்கு அலம்பி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்,
கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன் ,
 மி.வத்தல்2 அல்லது 3,
கொ.மல்லி விதை  ஒரு டேபிள் ஸ்பூன்,
ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு,
ஒரு டீஸ்பூன் உ.பருப்பு,
 1/2 டீஸ்பூன் மிளகு,
1/2 டீஸ்பூன்  வெந்தயம்,
பெருங்காயம்
தேங்காய் துருவல்.

இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொஞ்சம் நீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.

எண்ணெய் தாளிக்க, வறுக்க. கருகப்பிலை, கொத்துமல்லி.
உப்பு, சுவைக்கு ஏற்ப,
 புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைக்கவும்.

ஒரு சின்னத் துண்டு வெல்லம், (பிடித்தமானால்), மொச்சை, கொண்டைக்கடலை, காராமணி போன்றவற்றை முதல் நாளே ஊற வைத்துப் பின்னர் வேக வைக்கும்போது சேர்க்கலாம்.  அப்படி முதல்நாள் ஊற வைக்கவில்லை என்றாலும் வறுக்கும் பொருட்களை வறுக்கும்போது மேற்சொன்னவற்றில் இரண்டையோ அல்லது எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமோ எடுத்துக்கொண்டு எண்ணெயில் போட்டு வெடிக்க விட்டுச் சேர்க்கலாம்.  இது கடிக்கக் கஷ்டம் எனில் வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் சேர்க்கலாம்.  பருப்பு வேகும்போதே சேர்த்தால் நன்கு வெந்துவிடும்.  அல்லது பச்சை மொச்சை கிடைக்கும் காலங்களில் அதை மட்டும் சேர்க்கலாம்.


பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் களைந்து கழுவிக்கொண்டு ஒரு உருளி அல்லது கடாயில் நீர் விட்டுக்கொண்டு அதில் போட்டு வேக வைக்கவும்.  நன்கு குழைந்து வரும் சமயம் நறுக்கி வைத்துள்ள காய்களைப் போட்டு மஞ்சள் தூள் சேர்க்கவும்.  காய்கள் பாதி வெந்ததும், கரைத்து வைத்துள்ள புளி நீரைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும்.  சேர்ந்து கொதிக்கையில் வறுத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.  அதுவே கெட்டியாக இருக்கும்.  நன்கு சேர்ந்ததும் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.

அடுத்தது துவரம்பருப்புச் சேர்ப்பதற்கு மேற்சொன்ன சாமான்களில் பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் தவிர்த்துவிட்டுத் துவரம்பருப்பை நன்கு குழைய வேக விட்டுச் சேர்க்கவும்.  ருசியில் மாறுபாடு தெரியும்.

Friday, July 4, 2014

கண்டு பிடி, கண்டு பிடி!

நேத்திக்கு இட்லி மாவு மிச்சம்.  செய்முறைப் பதிவிலே சொன்னபடிக்கு நான் ஒரு கிண்ணம் எல்லாம் போடலை.  அரைக்கிண்ணம் தான் எல்லாமும் போட்டேன்.  அப்படியும் மிச்சம் தான்.  அதை இன்னிக்கு வேறே மாதிரிப் பண்ணப் போறேன். என்னனு  யோசிச்சு வைங்க.  ராத்திரி  டிஃபன் செய்ததும் படம் எடுத்துப் போட்டுப் பகிர்ந்துக்கறேன். 

Thursday, July 3, 2014

காஞ்சிபுரம் இட்லி சாப்பிட வாங்க!

தேவையான சாமான்கள்:  சுமார் நான்கு பேருக்கு!

இட்லி அரிசி ஒரு கிண்ணம்

பச்சரிசி ஒரு கிண்ணம்

உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம்

மூன்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைக்கவும்.  குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வேண்டும். பின்னர் மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்.  உப்புப் போட்டுக் கலக்கவும்.  இரவு ஒரு துண்டு சுக்கை நன்கு பொடி செய்து மாவில் கலந்து வைக்கவும்.



காலை இட்லி வார்க்கும் முன்னர் மாவில் சேர்க்க வேண்டியவை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்

கடுகு

உளுத்தம்பருப்பு

கடலைப்பருப்பு வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன்

மிளகு, ஜீரகம் உடைத்த பொடி 2 டீஸ்பூன்

பெருங்காயம் சின்னத் துண்டு

கருகப்பிலை, கொத்துமல்லி ஆய்ந்து நறுக்கியது

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது 2 டேபிள் ஸ்பூன்



நெய்யை நன்கு காய வைத்துக் கடுகு , உ.பருப்பு, கபருப்பு, பெருங்காயம், கருகப்பிலை தாளித்து மாவில் போட்டுக் கலக்கவும்.  அந்தச் சட்டியிலேயே நறுக்கிய தேங்காய்களைப் போட்டுக் கொஞ்சம் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.  முந்திரிப்பருப்பு இருந்தாலும் போடலாம்.  அவரவர் விருப்பம். கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.  பின்னர் இட்லிப் பானையில் துணி போட்டோ  அல்லது இட்லி குக்கரில் உள்ள தட்டுக்களில் எண்ணெய் தடவியோ  இட்லி மாவைக் கரண்டி கரண்டியாக எடுத்து ஊற்றி வேக வைக்கவும்.  வெந்ததும் சட்னி, சாம்பார், கொத்சு  எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  காஞ்சீபுரத்தில் தம்பளரில் எண்ணெய் தடவி மாவை விட்டு வேக வைப்பாங்க.  இங்கே நாம் வீட்டில் பண்ணுவதை விட அங்கே இன்னமும் உதிர் உதிராக இருக்கும். நான் ரொம்பக் கொரகொரப்பாக அரைப்பதில்லை.



வெந்த இட்லிகள்


சாம்பார் இட்லிக்குத் தொட்டுக்கொள்ளப் பண்ணியது.

இதோடு குழந்தைகள் சாப்பிட வேண்டி பச்சைப் பட்டாணி அல்லது ஊற வைச்ச பட்டாணியோ, வேர்க்கடலையோ, காரட் சீவியோ சேர்க்கலாம். இதை இட்லியாகச் செய்ததும் ஒரு வாணலியில் நல்லெண்ணையைக் காய வைத்துக் கடுகு தாளித்து இட்லிகளை நான்காக நறுக்கிப் போட்டு மிளகாய்ப் பொடியைக் கலந்து(தோசை மிளகாய்ப் பொடி தான் கலக்க வேண்டும்) கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவி, எலுமிச்சம்பழம் பிழிந்து சில்லி இட்லி என்று சாப்பிடலாம்.  பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்திலேயே எலுமிச்சைச் சாறைக்கலந்து அதையும் இந்த சில்லி இட்லி மேல் தூவிக் கொண்டு சாப்பிடலாம். பிடிக்கிறவங்களுக்குப் பிடிக்கும். :)

என்னதான் திரும்பத் திரும்பச் சமைக்கிறது! :)

கொஞ்ச நாட்களா இந்தப்பக்கம் வர முடியலை. வேலையும் இருந்தது என்றாலும் திடீர்னு ஒரு அலுப்பு, சலிப்பு. எல்லாத்திலேயும் தான்.  அதுக்காக வழக்கமான வேலைகளைக் குறைச்சுக்கல்லாம் இல்லை.  அதது அததுபாட்டில் நடக்கிறது. தினம் தினம் என்ன டிஃபன் பண்ணறது?  அதுவும் இரண்டு வேளை பண்ணணும். இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், வெந்தய தோசை, பொஹா எனப்படும் அவல் உப்புமா, புளி அவல், சேமியா, ரவை உப்புமாக்கள், அரிசி உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ், சப்பாத்தி, ஃபுல்கா ரொட்டி,  பரோட்டா(ஒரிஜினல், மைதா புரோட்டா இல்லை), பூரி, சேவை னு எல்லாமும் பண்ணி அலுத்தாச்சு.

திடீர்னு ஒரு வெற்றிடம் வந்தாப்போல் எண்ணம். அப்போத் தான் ரங்க்ஸ் காஞ்சிபுரம் இட்லி வேணாப் பண்ணேன் ஒரு மாறுதலுக்குனு கேட்டார். காஞ்சிபுரம் இட்லினாலே அதாலேயே என்னை அடிக்க வரும் மனுஷன் காஞ்சிபுரம் இட்லி கேட்கிறார்னா இந்த ஶ்ரீரங்கம் வெயிலிலே அவருக்கு ஏதோ ஆச்சுனு நினைச்சேன்.  சரினு நேத்திக்கு காஞ்சிபுரம் இட்லிக்குனு அரைச்சு வைச்சேன்.

சரியா ஒரு வேளைக்கு மட்டும் வராப்போல் அரைக்கணும்னு ரங்க்ஸ் சொல்றார்.  அது எப்படி முடியும்? கொஞ்சமாவது மிஞ்சாதா?  மிக்சி ஜாரில் முக்கால் பாகத்துக்காவது வரும்படி சாமான்களைப் போட்டால் தானே அரைபடும்.  இதெல்லாம் அவருக்குப் புரியறதில்லை. :( எல்லாம் அரை, அரை ஆழாக்குத் தான் போட்டேன்.  அதிலேயே மாவு மிச்சம். அதை எப்படியானும் செலவு செய்யணும்.  தினம் பத்துப் பேருக்குக் குறையாமல் சமைச்சுட்டு இப்போ இரண்டு பேருக்குச் சமைக்கிறது சொப்பு வைச்சு விளையாடுவது போல் இருக்கு. அப்படித் தான் விளையாடிட்டு இருக்கோம். :)  இன்னிக்குப் பண்ணும்போதே படங்களும் எடுத்துட்டேன்.  படங்களைக்கணினியில் இணைக்கணும்.  இணைச்சுட்டுச் செய்முறையும் எழுதறேன்.