எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, June 2, 2009

பருப்பில்லாத ஹோட்டல் சாம்பார் வேணுமா?

நானானி, வெங்காயம், பூண்டு போட்ட சனா மசாலா கேட்டிருக்காங்க. அதுவும் உடனேயே. ஆனால் அதுக்குக் கொஞ்சம் காத்திட்டு இருக்கணும் நானானி. பூண்டு எனக்கு ஒத்துக்காது. பிடிக்கவும் பிடிக்காது. ஸோ நோ பூண்டு. ஓகேயா? அப்புறமா கால் கிலோ சனாவை எடுத்து ஊற வைச்சுடலாம் இன்னிக்கும். நாளைக்கு சனா மசாலா பண்ணலாம், ஓகேயா? இப்போ ஒரு திடீர் சாம்பார். ருசியான சாம்பார். இதுவும் வெங்காயம் போட்டும், போடாமலும் பண்ணலாம். எப்போவும் போல நம்ம வீட்டிலே வெங்காயம் சாப்பிடறவங்களும், அதைக் கண்டாலே ஓடறவங்களும் உண்டு. இப்போ விருந்தாளிங்க வந்திருக்கிறதாலே அவங்களுக்காக நேற்று தோசை பண்ணிக் கொடுத்தேன். தோசைக்கு சைட் டிஷ் ஆக தக்காளிச் சட்னி, மிளகாய்ப் பொடினு இருந்தாலும், வந்திருக்கிறவங்கள்ளே ஒருத்தர் திடீர்னு சாம்பார் இருந்தாத் தான் சாப்பிடுவேன்னு ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

நாம தான் அஞ்சா நெஞ்சி, எதுக்கும் கலங்காதவங்க, திடீர்னு வர எதிர்ப்புக்களையும் சவாலே சமாளினு சமாளிக்கிறவங்கனு அவங்களுக்குத் தெரியலை. பாவம்! ஒரு பிடிவாதப்புன்னகையோடு, "இப்போ என்ன பண்ணுவே?" னு பார்த்துட்டு தோசையைத் தொடாமலேயே உட்கார்ந்துட்டாங்க. அசரலையே! ஒரு சின்ன எலுமிச்சம்பழம் அளவு புளியைக் கோது இல்லாமல் சுத்தம் செய்து, அதோடு ஒரு தக்காளியையும் வைத்து, சாம்பார்பொடி ஒரு ஸ்பூன், கொஞ்சம் பச்சையாக கொத்துமல்லி விதையையும் வைத்து நல்ல நைஸாய் அரைக்கணும். வெங்காயம் சேர்க்கிறவங்க இதோடு சின்ன வெங்காயமாய் இருந்தால் ஒரு இரண்டும், பெரிய வெங்காயம் என்றால் நாலாய் நறுக்கியதில் கால் பாகமும் சேர்த்து அரைக்கவும். வெங்காயம் வேண்டாம்கிறவங்க முதல்லே சொன்னாப்போல் அரைச்சாப் போதும். ஆச்சா????

இப்போ வெற்றி உங்களுக்கே. உங்க முறை வருது, ஜெயிக்க. அடுப்பில் சாம்பார் வைக்கும் பாத்திரத்தை அல்லது ஒரு கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க விடவும். ,முன்னதாக வேண்டிய காய்களை வெட்டி வைத்துக் கொள்ளவும். இந்த சாம்பாருக்குத் தேவையான காய்கள் முருங்கைக் காய் ஒரு இரண்டு மூன்று துண்டு, குடமிளகாய் ஒன்று, கத்திரிக்காய் சின்னதாய் ஒன்று இருந்தால் போதும், இது எதுவும் இல்லையா? கவலையே வேண்டாம். வெங்காயம், தக்காளியையே நறுக்கி வச்சுக்கவும். எண்ணெயில் கடுகு, மெந்தயம், பெருங்காயம் போட்டு வெடிச்சதும் ப.மிளகாய் ஒன்று, மிளகாய் வத்தல் ஒன்று, கருகப்பிலை போட்டு, கூடவே காய்களையும் போட்டு வதக்கி இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடியையும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாய் வதக்கவும். அரைச்சு வச்சதைக் கொட்டித் தேவையான உப்பையும் போட்டுக் கொதிக்க விடவும். பொடியை எண்ணெயில் வறுத்துட்டதால் சீக்கிரமாய்க் கொதிச்சதும் உபயோகிக்க வசதியாய் இருக்கும். இப்போ ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவை அரை கிண்ணம் தண்ணீர் விட்டுக் கரைச்சு கொதிக்கும் சாம்பாரில் விடவும். நன்றாய்ச் சேர்ந்து கொதித்ததும், கீழே இறக்கிக் கொத்துமல்லித் தழை தூவி சாம்பாரை சூடான இட்லி, அல்லது தோசையோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

பருப்பில்லை என்பதை நீங்களே சொன்னால் தவிர யாரும் நம்ப மாட்டாங்க. அதனால் சொல்லாதீங்க. அட, இவ்வளவு சீக்கிரம் சாம்பார் வச்சாச்சானு கேட்டால், வெற்றிப் புன்சிரிப்பு மட்டும் சிரிக்கவும்.

நானானி, உங்க ஐடம் நாளைக்கு வருது, ஓகேயா???