எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 19, 2012

அல்வாக் கொடுத்துட்டேன்.

எல்லாருக்கும் அல்வாக் கொடுக்க மாட்டேன்னு வருத்தம்? :))))) இதோ வந்துட்டேன், இருங்க.  அன்னிக்கு அலுவலகம் போயும் வேலை செய்யவே மனசில்லை.  அதோட ரொம்ப நெருக்கமானவங்க வேறே நாளைக்குத் திருமண ஆண்டு நிறைவு.  இன்னிக்கு ஏன் வந்தேனு கேட்டாங்க.  இதான் சாக்குனு மத்தியானமா வீட்டுக்குக் கிளம்பிட்டேன்.  ரயில்வே வொர்க்கர்ஸுக்குனு ஷிஃப்டுக்கு விடும் லோகல் தான் அந்த நேரத்திலே அப்போல்லாம் வரும்.  இருந்தாலும் பொது ஜனங்களும் ஏறிப்போம்.  அந்த லோகலில் ஏறி அம்பத்தூர் வந்து சேர்ந்தேன்.  வீட்டிலே அம்மாவுக்கு இன்னும் முடியலைனு சொன்னாங்க.  கொஞ்சம் கஷ்டமா இருந்தது.  என்றாலும் அம்மாவை மெல்ல எழுந்து உட்காரச் சொல்லி அல்வா செய்யறதுக்குச் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன்.  நின்னுண்டு கிளறணும்;  அதோட அரைச்சுப் பால் எடுக்கணுமே;  மாசமா இருக்கியே; மசக்கை வேறே படுத்தல்னு அம்மாவுக்கு யோசனை.

எதைப் பத்தியும் யோசிக்காம அல்வாக் கிளற இறங்கிட்டேன்.  முதல்லே கல்லுரலில் (அப்போல்லாம் சுமீத் மிக்சி கிடையாது. வேறே ஏதோ மிக்சியும்  யாரோ ஒருத்தர் ரெண்டுபேர் கிட்டேத் தான் இருந்தது.  அபூர்வம்!) அரைத்துப் பால் எடுத்து வைத்தேன். பால் கொஞ்ச நேரம் தெளிய விட்டுட்டு அல்வாக் கிளற ஆரம்பித்தேன்.  செய்முறை கீழே.

கோதுமை அல்வா.  நல்ல சம்பா கோதுமை.  இது சீக்கிரம் வேகும் என்பதோடு அல்வாவும் கையில் ஒட்டாமல் கிண்ணென்று வரும்.  மாவு கோதுமையிலும் செய்யலாம்.  நிறையக் காணும்.  இதுவும் கிண்ணென்று வந்தாலும் வேக நேரம் எடுக்கும்.  மற்றபடி ருசியில் மாறுதல் தெரியாது. சம்பா கோதுமை கால் கிலோ முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் காலையிலேயே பால் எடுத்து வைத்தல் நல்லது.  கோதுமையை மிக்சியில் அரைத்தால் பிரச்னையாத் தான் இருக்கு.  ஆகவே கையால் அரைத்தாலே நல்லது.  அரைத்துப் பாலை வடிகட்டி வைக்கவும்.  பால் மேலே நீர் தெளிந்து வரும்.  அதைக் கொட்ட வேண்டாம்.  அந்த நீரிலே சர்க்கரைப் பாகு வைத்தால் அல்வா ஒட்டாமல் திரண்டு வரும்.

கால்கிலோ கோதுமைக்கு முக்கால் கிலோ சர்க்கரை போதும்.  எனக்குப் பத்தாது. ஒரு கிலோ போடுவேன். பாகு வைக்கப் பாலில் உள்ள தெளிந்த நீர்.  அதைத் தவிரவும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெந்நீர் போடவும். நிறையவே வெந்நீர் போடவும்.  நன்றாகக் கொதிக்கட்டும்.  ஏலக்காய், முந்திரிப்பருப்பு, அல்வாப் பவுடர், நெய் அரை கிலோ. நெய்யை எல்லாம் கக்கிவிடும்.  என்றாலும் நெய் விடாமல் கிளறவும் முடியாது.


சர்க்கரையை ஒரு வாயகன்ற பாத்திரம் அல்லது வெண்கல உருளியில் போட்டு பாலில் இருந்து எடுத்தத் தெளிந்த நீரை விட்டுப் பாகு வைக்கவும்.  தெளிந்த நீரை விடுவதால் மேலே நுரைத்துக்கொண்டு பொங்கிப் பொங்கி வரும்.  ஆகவே கவனமாகப் பாகு கீழே பொங்கி வழிந்து விடாமல் கிட்டவே இருந்து கிளறணும்.  நல்ல கெட்டிக் கம்பிப் பாகு வைக்கவும்.  கையால் உருட்டினால் மிளகு மாதிரி உருட்ட வர வேண்டும்.  அப்போது தெளிந்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கிளற வேண்டும்.  நானெல்லாம் உதவிக்கு ஆளே இல்லாததால் ஒரு கையால் விட்டுக் கொண்டே மறு கையால் கிளறிப்பேன்.  இது அவரவர் செளகரியம்.  கிளறும்போதே கட்டி தட்ட ஆரம்பிக்கும்.  ஆகவே அடுப்பு கொஞ்ச நேரம் மெதுவாக எரிந்தால் நல்லது.

கிளறிக் கொண்டே பக்கத்தில் கொதிக்கும் வெந்நீரைக் கரண்டி கரண்டியாக எடுத்து எடுத்து அல்வா கிளறும்போது விட்டுக் கொண்டே கிளறவும்.  வெந்நீரை விட விட பால் உள்ளேயும் வெந்து கொண்டு விரைவில் கெட்டிப் படும்.  கெட்டிப் பட ஆரம்பித்ததும் நெய்யைச் சேர்க்கவும்.  இப்போதும் சிறிது நேரம் விடாமல் வெந்நீரை விடவும். நன்குதிரண்டு கரண்டியால் கிளறும் போது ஒரே பந்து போல் வர ஆரம்பிக்கும்.  நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும்.  பந்து போல் வர ஆரம்பித்ததும் உடனே இறக்கி விட வேண்டாம்.  கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.  சிறிது நேரத்தில் சுற்றிலும் நெய் கசிய ஆரம்பிக்கும்.  கசியும் நெய்யைத் தனியாக எடுக்கலாம்.  எடுத்து வேறொரு பாத்திரத்தில் விட்டு வைக்கவும்.  அரை கிலோ நெய்யில் குறைந்தது 200 நெய்யாவது இப்படியே வந்துவிடும்.  இப்போது கிளறினால் பந்து அப்படியே உருளும்.  அதிலிருந்து ஒரு சின்ன துண்டு எடுத்தால் கையில் ஒட்டாமல் வருவதோடு தாம்பாளத்தில் போட்டுப் பார்த்தால், "ணங்" என்று சப்தமும் வரும்.  இதுவே சரியான பதம்.  இப்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். வறுத்த முந்திரிப்பருப்பைத் தாம்பாளத்தில் கொட்டியதும் மேலே தூவி அலங்கரிக்கவும்.  அல்வாத் துண்டுகள் ட்ரான்ஸ்பரன்டாக இருந்தால் நீங்க அல்வா எக்ஸ்பெர்ட்.

13 comments:

  1. ரொம்ப ரொம்ப நன்றி! ரெசிபி படிச்சபோது எனக்கு கொஞ்சம் சிரமமாதான் இருக்கும் போல தோன்றது. இருந்தாலும் அல்வாதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட். அதனால முதல்ல ரொம்ப கொஞ்சமா கிளறி பாக்கறேன். இங்க சம்பா கோதுமை கிடைக்குமான்னு தெரியல. கிடைச்சாலும் கையில அரைக்க வழி இல்லை. அதனால கோதுமை மாவுல ட்ரை பண்றேன். மாவுல எப்படி பால் எடுக்கணும், இல்லன்னா அதை எந்த விதத்துல சக்கரை பாகுல கலக்கனும்னு கொஞ்சம் சொல்லுங்க.

    ReplyDelete
  2. மாவிலே பால் எடுப்பது கஷ்டம். ஆனால் நீர்க்கக் கரைக்கவும். கரைத்துத் தெளிய வைக்கணும். தெளிய வைத்துக் கொண்டாலும் கொஞ்சம் கப்பி இருக்கத் தான் செய்யும், அரைக்கிற மாதிரி வராது. சர்க்கரைப் பாகு எல்லாம் அதே மாதிரி தான். பொதுவாகவே அல்வா, மைசூர்ப்பாகு இரண்டும் கொஞ்சம் வேலை வாங்கும். அல்வாவுக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது செலவழிக்கணும். கை விடாமல் கிளற வேண்டும். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. //நானெல்லாம் உதவிக்கு ஆளே இல்லாததால் ஒரு கையால் விட்டுக் கொண்டே மறு கையால் கிளறிப்பேன்//

    ரொம்பக் கஷ்டம்! எனக்கு அல்வா வேண்டாம்! அரைத்துப் பால் எடுப்பது என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள். ரொம்ப நீர் விட்டு அரைத்துக் கொண்டே இருக்கணுமா? தேங்காய்ப் பாலுக்கே எனக்கு சந்தேகம் வரும்!! கால் கிலோ கோதுமைக்கு பால் என்பது எவ்வளவு இருக்க வேண்டும்?

    ReplyDelete
  4. கோதுமை தவிடாக வரும் வரைக்கும் அரைத்துப் பால் எடுக்கலாம். கடைசியில் கையால் பிழிந்தால் ஜலமாக வரும். அதான் கணக்கு. குறைந்தது மூன்று முறை போட்டு அரைத்தால் சரியாய் இருக்கும். கால் கிலோ கோதுமைக்கு அரைத்த பால் தெளிந்ததும் கெட்டிப் பால் 200( ஒரு தம்ளர்) இருக்கும்.

    ReplyDelete
  5. சிரமம பாராமல் செய்த
    சிரத்தையான அல்வா பகிர்வுக்கு இனிய பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. நன்றி ராஜராஜேஸ்வரி. உண்மையிலேயே அல்வா செய்யப் பொறுமை நிறைய இருக்கணும்.

    ReplyDelete
  7. செய்யவும் பொறுமை வேண்டும், சாப்பிடவும்.

    ReplyDelete
  8. கீதா ரெசிபி சூப்பர் !நானும் சர்க்கரை நிறைய போடுவேன். மீனாக்ஷி , கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து , பிசைந்த மாவை , மாவு ஒரு கப் என்றால் ஐந்து கப் தண்ணீரில் அப்படியே போட்டு ஒரு ஐந்தாறு மணி நேரம் ஊற வைக்கவும் , பிறகு அந்த மாவை நன்றாக கசக்கினால் , தவிடு அப்படியே கையில் வரும். ஒருமுறை வடிகட்டி , பிறகு நன்றாக தெளிந்தவுடன் அல்வா கிளறவும்.

    ReplyDelete
  9. ஷோபா சொல்லி இருக்கும் முறை எனக்குத் தெரியாது. முயன்று பாருங்கள் மீனாக்ஷி.

    ReplyDelete
  10. அப்பாதுரை, அல்வா தொண்டையிலே வழுக்கிக் கொண்டு போகுமே. சாப்பிடப் பொறுமை எல்லாம் வேண்டாம். :))))

    ReplyDelete
  11. நிச்சயம் முயன்று பார்க்கிறேன். ரொம்ப தேங்க்ஸ் ஷோபா.

    நேத்திக்குதான் தோழி ஒருத்தி கோதுமையை ஊற வெச்சு மிக்ஸ்சிலையே அரைச்சு பால் எடுக்க முடியும்னு சொன்னா. பாக்கறேன். ஈசியான ஒரு அல்வா 'திருவையாறு ஆண்டவர் அல்வா' ரெசிபி கிடைச்சு, பண்ணி பாத்தா சூப்பரா இருந்துது. ஆனா என்ன இருந்தாலும் ஒரிஜினல் அல்வா டேஸ்ட் அடிச்சுக்க முடியாது. ஒரிஜினல் ஒரிஜினல் தான். அதனால நிச்சயமா உங்க ரெசிபில ஒழுங்கா வர வரைக்கும் அல்வா பண்ணி கூடிய சீக்கிரம் நானும் அல்வா ஸ்பெஷலிஸ்ட் ஆக போறேன். :))

    ReplyDelete
  12. வாழ்த்துகள் மீனாக்ஷி. கோதுமையை ஊற வைக்கிறதை விடவும் அமெரிக்காவில் தலியா(கோதுமை ரவை) கிடைக்கும். அதை ஊற வைச்சுப் பால் எடுத்துப் பண்ணலாம். சிராத்தம் அன்று செய்யப்படும் கோதுமை அல்வாவுக்கு கோதுமை ரவை தான் ஊற வைப்போம். சீக்கிரம் ஊறும் என்பதோடு அரைக்கவும் சிரமம் இருக்காது. ஒரே மாற்றம் அது வெல்லப் பாகில் கொட்டிக் கிளறுவது. நல்ல முத்தின பாகிலே பாலை விட்டுக் கிளறினாச் சீக்கிரம் சுருண்டு வரும். சிராத்த தின அவசரத்துக்கு இதான் சரியா வரும். :)))))

    ReplyDelete
  13. Enjoyed reading your posts! Happy to follow you! :)

    ReplyDelete