எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 29, 2016

உணவே மருந்து! நெல்லிக்காய்!

நெல்லிக்காயை ஒரு கடி கடிச்சுட்டு அதன் பின்னர் ஒரு தம்பளர் நீர் அருந்தினால் நீர் சுவை இனிமையாக இருக்கும்.  நெல்லிக்காய் பெரும்பாலும் தென்னிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஒன்று. முன்னெல்லாம் பள்ளி வாசல்களிலேயே நெல்லிக்காயைக் கூறு கட்டி விப்பாங்க. காலணாவுக்கு மூணு நெல்லிக்காய் கிடைச்ச காலம் அது! அப்போக் காலணாவும் கிடைக்காது. நெல்லிக்காயும் சாப்பிட முடியாது! இதன் அருமை, பெருமை தெரியாத என்னோட அப்பா நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கும்னு சொல்லிடுவார். திருட்டுத் தனமாகத் தான் நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கேன்.

நெல்லிக்காயைக் குறித்துத் தமிழ் இலக்கியத்தில் கூடச்  சொல்லப் பட்டிருக்கிறது.. ஔவையாருக்குக் கிடைத்த அபூர்வ நெல்லிக்காயைத் தன்னைக் காப்பாற்றும் மன்னன் அதியமானுக்கு ஔவை அளிக்க அதைச் சாப்பிட வேண்டியவர் ஔவைதான் சாப்பிட வேண்டும் என்று அதியமான் அவருக்கே திரும்பக் கொடுத்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.  இத்தனை பெருமையும், பழமையும் வாய்ந்த நெல்லிக்காயின் அருமை, பெருமைகளைப் பார்ப்போமா?

இது உயரமான மரமாக வளரும். இதன் காய்கள் வெளிர் பச்சை நிறத்திலோ அல்லது இளமஞ்சள் நிறத்திலோ காணப்படும். இதில் அரைநெல்லி, கரு நெல்லி என்று இருவகை உண்டு. அரை நெல்லி என்பது சிறியதாக வளரும்.

Image result for நெல்லிக்காய்

அரை நெல்லிக்காய்
பெருநெல்லி அல்லது மலை நெல்லிக்காய் அல்லது பெரு நெல்லி எனப்படும் நெல்லிக்காயே மிகவும் சத்துக்கள் நிறைந்தது ஆகும். நெல்லிக்காய் நம் நாடு முழுவதும் எல்லாக் காலங்களிலும் அநேகமாய்க் கிடைத்து வருகிறது. ஆயுர்வேதத்தில் இதை ஒரு ரசாயனம் என்ற பெயரிலேயே பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள் எதுவானாலும் அதை அப்புறப்படுத்தும் சக்தி ஆப்பிள், நெல்லிக்காய் மற்றும் ஆலிவ் ஆகியவற்றுக்கு உண்டு என்பது மருத்துவர்களின் முடிவு.
Image result for நெல்லிக்காய்

பெரு நெல்லி

படங்கள் கூகிளாருக்கு நன்றி.

நெல்லிக்காயில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, துவர்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் உள்ளன. பித்தத்தை நீக்க நெல்லிக்காயின் இனிப்பும் உவர்ப்பும் பயன்படுகிறது. நெல்லிக்காயின் புளிப்பு வாயுவையும், துவர்ப்பும், கைப்பும் கபத்தையும் போக்கும். இப்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் நீக்கும் வல்லமை ஒரு நெல்லிக்காயில் உண்டு. இதில் ஏபிசி ஆகிய மூன்று வைடமின்களைத் தவிர ஒரு கிண்ணம் சாத்துக்குடிச் சாறில் உள்ளதைப் போல் 20 மடங்கு அதிகமான இ வைடமினும் இருக்கிறது. மற்ற எந்தக் காயானாலும் கனியானாலும் வாடிப் போனால் சத்துக் குறைந்து விடும். ஆனால் நெல்லிக்காயை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதன் சத்துக்கள் வீணாவதே இல்லை.

நெல்லிக்காயைக் காய வைத்தால் அதை நெல்லிமுள்ளி என்பார்கள். இதையும் பயன்படுத்தலாம் என்றாலும் பச்சை நெல்லிக்காய் இன்னமும் சிறப்பானது. நெல்லிக்காயை அரைத்து உருண்டையாக உருட்டிக் காய வைத்து சாப்பிட்டு வந்தால் ஆறாத காயங்களும் ஆறும். நெல்லிக்காயை உண்டு வந்தால் பற்களில் ஏற்படும் பயோரியோ நோய்க்கு நல்ல மருந்தாகும். கோணல் மாணலாக முளைக்கும் பற்களையும், சின்னக் குழந்தைகளுக்குக் காலத்தில் பல் முளைக்கவில்லை என்றாலும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் கர்ப்பம் ஏற்பட்டதிலிருந்து தினமும் ஒரு நெல்லிக்காயோ அல்லது நெல்லி முள்ளியோ உட்கொண்டு வந்தால் வாந்தி முதலியன கட்டுப்படும். இரும்புச் சத்து, ரத்த விருத்தி ஆகியன ஏற்படும். பசி ஏற்பட்டு நன்றாகச் சாப்பிடுவார்கள். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

ஞாபக சக்தி அதிகரித்துக் கண் பார்வை தெளிவாகவும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம். நெல்லி மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது. நெல்லிப்பட்டை வீடு கட்டவும், கலப்பை போன்ற உழவு யந்திரங்கள் தயாரிக்கவும் பயன்படும். இதில் கிடைக்கும் டானின் என்னும் ஆசிட் தோல் பதனிடப் பயன்படும். இதன் இலைகளின் நீலச் சாயம் பட்டுத் துணிகளில் சாயம்தோய்க்கப்பயன்படும்.

Monday, July 25, 2016

உணவே மருந்து! வெந்தயம், தொடர்ச்சி!

வெந்தயக் கீரைச் சப்பாத்தி அல்லது பரோட்டா அல்லது தேப்லா

Image result for மேதி பரோட்டா


மூன்றும் ஒன்றே தான். பரோட்டா மட்டும் கொஞ்சம் உள்ளே நெய் தடவி மடித்துப் போட்டு இட்டுச் செய்யணும். மத்தது இரண்டும் இட்டுக் கொண்டு தோசைக்கல்லில் போட்டு நெய்யோ எண்ணெயோ விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை ஒரு கட்டு. நன்கு ஆய்ந்து நறுக்கிக் கழுவிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.

கோதுமை மாவு  இரண்டு கிண்ணம்

கடலை மாவு அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி(தேவையானால்) அரை டீஸ்பூன்

ஓமம் பொடித்தது அரை டீஸ்பூன்

தயிர் ஒரு கிண்ணம்

பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது ஒரு டீஸ்பூன். இந்த விழுதை அரைக்கையில் இதனோடு தேங்காயும் சேர்த்து அரைக்கலாம். நான்கு பேருக்கான சப்பாத்திக்கு இரண்டு பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் வைத்து அரைக்கலாம்.

எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் (இது மாவில் பிசையும் போது கலக்க)

இதைத் தவிர சப்பாத்தி செய்து கொண்டு சப்பாத்தியில் சுற்றியும் விட்டு எடுக்க எண்ணெய் அல்லது நெய் அவரவர் வசதிப்படி ஒரு சின்னக் கிண்ணம்.

சப்பாத்திக்கு உள்ளே தடவ வெண்ணெய் அல்லது நெய் ஒரு சின்னக் கிண்ணம்

கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம்மசாலாப்பொடி ஆகியவற்றை ஒன்றாக்கி நன்றாகக் கலக்கவும். பச்சைமிளகாய் விழுது, பொடி செய்த ஓமம் ஆகியவற்றையும் போட்டுக் கலந்து கொள்ளவும். பச்சைமிளகாய் இஞ்சி கடிபட வேண்டுமென விரும்பினால் அப்படியே பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இவற்றோடு ஆய்ந்து நறுக்கி வைத்த வெந்தயக்கீரையைச் சேர்த்துக்கலந்து கொள்ளவும்.  தயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மாவைச் சப்பாத்தி மாவு போல் பிசையவும். நன்கு மாவு பிசைந்தானதும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை மாவில் மேலாக விட்டு மீண்டும் நன்கு பிசைந்து கொண்டு  ஒரு மணி நேரம் போல் ஊற வைக்கவும்.

மாவு ஊறியதும் அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டுச் சூடாக்கிக் கொண்டு பிசைந்த மாவில் ஒரு சின்ன ஆரஞ்சு அளவு எடுத்துக் கொண்டு காய்ந்த மாவில் தோய்த்துக் கொண்டு சப்பாத்தியாக இடவும். உள்ளே நெய் அல்லது வெண்ணெய் தடவவும், மடித்துப் போட்டுக் கொண்டு மேலே மீண்டும் நெய் அல்லது வெண்ணெய் தடவிக் கொண்டு சப்பாத்தியை மறுபடி மடித்துப் போட்டு இடவும். இம்மாதிரி இரண்டு அல்லது மூன்று முறை மடித்துப் போட்டுக் கொண்டு நெய் தடவிய பின்னர் சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில் போடவும். உடனே நெய்யோ அல்லது எண்ணெயோ விட வேண்டாம். ஒரு பக்கம் கொஞ்சம் வெந்த பின்னர் திருப்பிப் போட்டு வெந்த பின்னர் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றினால் நன்றாக உப்பிக் கொண்டு வரும். பின்னர் இரு பக்கமும் திருப்பிப் போட்டு நெய்யோ அல்லது எண்ணெயோ ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஊறுகாய், தயிர்ப்பச்சடி போன்றவற்றோடு சாப்பிடலாம். மோர்க்குழம்பு, வெந்தயக்கீரைக்குழம்பு போன்றவையும் இதற்கு நல்ல துணை.


வெந்தயக் குழம்பு  தேவையான பொருட்கள்

புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கவேண்டும்

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, துபருப்பு, உபருப்பு, கபருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை ஆகியன பருப்பு கடுகு போன்றவை தலா ஒரு டீஸ்பூன் இரண்டு மிவத்தல் கருகப்பிலை கொஞ்சம் போல. பெருங்காயம் ஒரு துண்டு. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்.

குழம்பில் போடத் தான் ஏதேனும். குழம்புக் கறிவடாம் அல்லது அப்பளம் அல்லது வற்றல் ஏதேனும். எண்ணெயில் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் நான்கு வற்றல் மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன் வெந்தயம் போட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடி முழுவதும் குழம்புக்குத் தேவை இருக்காது. ஆகையால் பொடித்துக் கொண்டு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்தலாம்.

அடுப்பில் கல்சட்டி அல்லது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் பான் ஏதேனும் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றவும். கடுகு, பருப்பு வகைகளை ஒவ்வொன்றாகத் தாளித்து மி,வத்தல், கருகப்பிலை பெருங்காயம் சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றவும். உப்புச் சேர்க்கவும். முழுவதுமாக இந்தப் பொடியே போடுவதானால் புளி வாசனை போகக் குழம்பு கொதித்ததும் வற்றலைச் சேர்த்து இந்தப் பொடியைப் போட்டுக் கீழே இறக்கவும். முழுவதுமாக இந்தப் பொடி தேவையில்லை எனில் கொஞ்சம் போல் சாம்பார்ப் பொடி போட்டுக் கொண்டு வற்றலும் சேர்த்துக் கொதித்துச் சேர்ந்து வருகையில் இந்த மிவத்தல் துவரம்பருப்பு, வெந்தயம் வறுத்த பொடியை ஒரு டீஸ்பூன் மட்டும் சேர்த்துக் கீழே இறக்கவும். ஒரு சிலர் மிவத்தல் துவரம்பருப்புப் போடாமல் வெறும் வெந்தயம் மட்டும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்திருப்பார்கள். அதையும் ஒரு அரை டீஸ்பூன் சேர்க்கலாம். இறக்கியதும் கூட இந்த வெந்தயப் பொடியைச் சேர்க்கலாம். இது தான் வெந்தயக் குழம்பு!


Tuesday, July 19, 2016

உணவே மருந்து! வெந்தயம்!

இப்போது சில வெந்தய சமையல்கள் குறித்துச் சொல்லப் போகிறேன். முதலில் வெந்தயக்கீரைக் குழம்பு.

தேவையான பொருட்கள்: ஒரு சின்னக் கட்டு வெந்தயக் கீரை, நன்கு ஆய்ந்து கழுவி நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு. ஊற வைத்துக் கோது நீக்கிக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது கால் கிண்ணம் (கொஞ்சமாப் பருப்புப் போட்டால் போதும்)

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, பச்சை மிளகாய் ஒன்று, கருகப்பிலை கொஞ்சம் போல, பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

அடுப்பில் கல்சட்டி அல்லது உருளி அல்லது இது ஏதும் இல்லைனா உங்கள் வழக்கமான நான் ஸ்டிக் பாத்திரத்தை வைக்கவும். நினைவாக அடுப்பை மூட்டவும். நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டுக் கொண்டு மி.வத்தல், ப.மிளகாய் போட்டுக் கருகப்பிலை பெருங்காயம் சேர்த்துக் கொண்டு நறுக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும். கீரை சுருள வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும். சாம்பார்ப் பொடி போட்டு உப்புச் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் குழைய வேக வைத்த துவரம்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும். சூடான சாதம், சப்பாத்தி ஆகியவற்றோடு நல்ல துணை!

அடுத்து வெந்தயக்கீரையோடு உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்யும் கறி

வெந்தயக்கீரை ஒரு கட்டை முன்னர் சொன்ன மாதிரிக் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கு நடுத்தரமானது 5 நன்கு வேக வைத்துத் தோலுரிக்கவும்.

குடமிளகாய் அல்லது பச்சை மிளகாய், உங்கள் விருப்பம் போல் குடமிளகாய் என்றால் ஒன்று. பச்சை மிளகாய் என்றால் இரண்டு

தக்காளி விரும்பினால்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

தனியாப் பொடி ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா கால் டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, ஜீரகம், சோம்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்

அடுப்பில் கடாயைப் போட்டு எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம், சோம்பு தாளிக்கவும். எல்லாம் பொரிந்ததும் பெருங்காயம் சேர்த்துக் குடைமிளகாய் அல்லது பச்சை மிளகாய் சேர்க்கவும். வதங்கியதும் வெந்தயக் கீரையைப் பிழிந்து  போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். கீரை வதங்கியதும் உருளைக்கிழங்கு வேக வைத்ததைத் துண்டங்களாக்கிச் சேர்க்கவும். மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்புச் சேர்த்து வதக்கவும். விரும்பினால் ஒரு தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். எல்லாவற்றையும் நன்கு வதக்கி விட்டுக் கீழே இறக்கும்போது கரம் மசாலா சேர்த்துக் கலந்து விட்டு இறக்கவும். சப்பாத்தி, ஃபுல்கா, பரோட்டா ஆகியவற்றுக்கு நல்ல துணை!

Sunday, July 17, 2016

உணவே மருந்து! வெந்தயம்!

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு பொருள் வெந்தயம். சாம்பார், வத்தல் குழம்பு போன்றவற்றிற்குத் தாளிப்பதோடு அல்லாமல் இட்லி, தோசைக்கு அரைக்கையிலும் வெந்தயம் சேர்ப்போம். வெந்தயம் இல்லாமல் அன்றாட சமையலே இல்லை. இந்த வெந்தயம் குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள்.  வெந்தயத்தில் புரதம், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்புச் சத்து,விடமின் ஏ, தியாமின், ரிபோஃப்ளேவின், நிக்கோடினிக் அமிலம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இது வயிற்றுக்கு மட்டுமில்லாமல் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப் படுகிறது. வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் அதோடு செம்பருத்தி இலையையும் போட்டு நன்கு நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் ஷாம்பூவெல்லாம் தோற்றுவிடும் அளவுக்குத் தலை மயிர் மென்மையாகவும், பட்டுப் போலவும் இருக்கும். கூந்தல் வளரவும் செய்யும்.
Image result for வெந்தயம்

படத்துக்கு நன்றி சூரியன் டிவி கூகிளார் வாயிலாக!

வெந்தயத்தை ஊற வைத்து முளை கட்டிப் புழுங்கல் அரிசியைக் களைந்து வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து முளைக் கட்டிய வெந்தயத்தோடு கலந்து கஞ்சி காய்ச்சித் தேங்காய்ப் பால் ஊற்றிச் சாப்பிட்டால் வயிற்றிற்கு இதமாக இருக்கும். துவரம்பருப்பையும், வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்து சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் கெட்டே போகாது என்பதோடு நீரிழிவு நோய்க்கு இது அருமருந்தாகும். இட்லிப் புழுங்கல் அரிசியோடு வெறும் வெந்தயம் மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துத் தனியாக ஊற வைத்துக் கொண்டு முதலில் வெந்தயத்தை அரைத்து விட்டுப் பின்னர் அரிசியையும் போட்டு அரைத்து தோசை வார்த்துச் சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நல்லது.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குளிர்ச்சியைத் தருவதோடு சர்க்கரையும் குறைந்து வரும். இந்த வெந்தயப் பொடியை வற்றல் குழம்பு, புளிக்குழம்பு போன்றவை செய்கையில் கீழே இறக்கும்போது ஒரு டீஸ்பூன் சேர்த்தால் குழம்பு ஆஹா! மணம் தூக்கும். புளிக்காய்ச்சல், ஊறுகாய் போன்றவற்றிற்கும் வெந்தயப் பொடி சேர்ப்போம். வெந்தயத்தில் இருக்கும் வேதிப் பொருள் இதய நோய் வருவதைத் தடுத்துக் கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பும் கட்டுக்குள் இருக்கும்.  ரத்த சோகை உள்ளவர்களுக்கும் வெந்தயம் நல்ல மருந்தாகச் செயல்படும்.  முளைக்கட்டிய வெந்தயம் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

முளைக்கட்டிய வெந்தயத்தோடு பாலில் ஊற வைத்த கசகசாவையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்களால், கட்டிகளால் ஏற்பட்ட வடுக்கள், கரும்புள்ளிகள் காணாமல் போகும். முகத்தைச் சுருக்கம் இல்லாமல் வைக்கும். வெந்தயக் கீரையைக் கூட அரைத்துத் தடவலாம்.  வெந்தயத்தில் உள்ள வேதிப் பொருட்கள் ஈஸ்ட்ரோஜென் போலச் செயல்பட்டுப் பெண்களின் மாதாந்திரத் தொல்லைகளைக் குறைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பாலை அதிகரிக்கச் செய்யும் சக்தியும் வெந்தயத்தில் உண்டு.  பாலூட்டும் தாய்மார்கள் வெந்தயத்தை வறுத்துக் கொண்டு கருப்பட்டி சேர்த்துக் களி செய்து உண்டு வந்தால் பால் பெருகும். குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

உடல் எடை குறையவும் வெந்தயம் சரியான முறையில் பயனாகிறது. வெந்தயத்தை ஊற வைத்து மென்று தின்றுவிட்டு இரண்டு சின்ன வெங்காயத்தை நறுக்கி மோரில் சேர்த்துக் குடித்து வர உடல் எடை குறைய ஆரம்பிக்கும். வயிற்றில் வலி இருந்தாலோ வயிற்றுக் கடுப்பாக இருந்தாலோ வெற்றிலையோடு வெந்தயத்தை மென்று தின்று வரச் சரியாகி விடும்.  வெந்தயத்தை ஊற வைத்து எலுமிச்சைச் சாறோடு சேர்த்து அரைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளைகள் சாப்பிட்டு வரக் கல்லீரல் கோளாறுகள் சரியாகும். கோடை காலத்தில் தினம் காலை ஊற வைத்த வெந்தயத்தை மென்று தின்றுவிட்டு நீராகாரமும் குடித்து வர உடல் வெம்மை தணியும்.

Friday, July 15, 2016

உணவே மருந்து! நாரத்தங்காய்!

இப்போ நாரத்தங்காயில் குழம்பு பண்ணும் விதம் கொடுக்கப் போகிறேன். ஒரு நல்ல ஜாதி நாரத்தங்காயை எடுத்துக் கொள்ளவும். இரண்டாக நறுக்கிக் கொண்டு ஒரு பாதியின் சாறைப் பிழிந்து தனியாக வைக்கவும். ஒரு அரை டீஸ்பூன் உப்பை அந்தச் சாறில் கலந்து வைக்கவும். மீதிப் பாதியோடு சாறு பிழிந்ததின் தோலையும் சேர்த்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கலாம். கல்சட்டி அல்லது வாணலியை அடுப்பில் ஏற்றிக் கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உ,பருப்பு, கபருப்பு, துபருப்பு ஆகியன தலா ஒரு டீஸ்பூன், மி.வத்தல் 2, கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய நாரத்தங்காய்த் துண்டங்களைப் போட்டு வதக்கவும். குழம்புப் பொடி இரண்டு டீஸ்பூன் போட்டு நாரத்தங்காய்த் துண்டங்களோடு வதக்கிக் கொண்டு கரைத்த புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். சேர்ந்து வரும்போது ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கவும். கீழே இறக்கி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும்.

நாரத்தை இலைகளைக் கொஞ்சம் இளசாக இருக்கும்போதே பறித்து நன்கு கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். ஒரு கிண்ணம் நிறைய இலைகள் இருந்தால் அவற்றிற்குத் தேவையான அளவு சாமான்கள் கீழ்க்கண்டவாறு எடுத்துக் கொள்ளவும். கருகப்பிலையும், எலுமிச்சை இலையும் கூட இருந்தால் நல்லதே!

பத்து அல்லது பனிரண்டு மிளகாய் வற்றல்

வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

ஓமம் இரண்டு டீஸ்பூன் (இதற்குப் பெருங்காயம் வேண்டாம்)

ஒரு சிலர் புளி, பெருங்காயம் சேர்ப்பார்கள். சேர்த்தாலும் தவறில்லை. புளியையும் வெறும் வாணலியில் பிரட்டிக் கொண்டு இலைகளை அரைக்கையில் சேர்த்து அரைக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பின்னர் அதே வாணலியில் இலைகளையும் போட்டுச் சூடு வரப் பிரட்டிக் கொள்ளவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாயில் ருசி இல்லாமல் இருந்தாலோ அல்லது வாந்தி வரும்போல் இருந்தாலோ இந்தப் பொடியை வாயில் போட்டுக் கொள்ளலாம். அல்லது சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயுடன் பொடி சேர்த்துக் கலந்து உண்ணலாம். மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளலாம். கரைத்த மோரில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் போட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்: நாரத்தை இலைகள் இரண்டு பெரிய கிண்ணங்கள், எலுமிச்சை இலையும் சம அளவு. செடிகளிலிருந்தும் கொடிகளிலிருந்தும் பறித்துச் சுத்தம் செய்து நரம்பை நீக்கி வைத்துக்கொள்ளவும்.

மேலே சொன்ன அளவிற்குக் காரம் வேண்டுமெனில் 15 முதல் 20 மிளகாய் வற்றல், ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி அல்லது தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

மேலே சொன்ன சாமான்களை நன்கு வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வாணலிச் சூட்டிலேயே நாரத்தை, எலுமிச்சை இலைகளைப் போட்டுக்கொண்டு சூடானதும், எல்லா சாமான்களையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அல்லது இடித்தும் வைத்துக்கொள்ளலாம்.

பச்சை நாரத்தங்காயைக் கழுவிக் கொண்டு வட்டமாகச் சுருள் சுருளாக வரும்படி நறுக்கிக் கொள்ளவும். நாரத்தங்காய் சுமார் பத்து இருந்தால் ஒரு கிண்ணம் உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயப் பொடி எடுத்துக் கொண்டு. மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொண்டு நாரத்தங்காய்ச் சுருளுக்குள் அடைத்து வைக்கவும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் அந்தச் சுருளைப் பாத்திரத்திலேயே வைத்துக் கிளறி விட்டு நல்ல வெயிலில் எடுத்துக் காய வைக்கவும். ரொம்பவும் காயவும் கூடாது. கையால் கிள்ளும் பதம் வந்ததும் எடுத்து வைக்கலாம். இதையே வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு மிளகாய்ப்பொடி, கடுகு, வெந்தயப் பொடி சேர்த்து நல்லெண்ணெயில் கடுகு தாளித்துக் கார ஊறுகாயாகவும் பயன்படுத்தலாம். விருந்தினர் வரும்போது வீட்டில் ஊறுகாய் இல்லை எனில் கை கொடுக்கும்.

Thursday, July 14, 2016

உணவே மருந்து! நாரத்தங்காய்!

உண்மையில் நான் அடுத்து நெல்லிக்காய் குறித்தே எழுத இருந்தேன். அம்பி வந்ததும் நாரத்தங்காய் சாதம் செய்ததும் பற்றிச் சொல்லப் போக நாரத்தங்காய்க்கு எக்கச்சக்கமான விளம்பரம் கிடைச்சுடுத்து! ஆகவே நாரத்தங்காயைப் பத்தியே முதல்லே எழுதிடலாம்னு ஒரு எண்ணம்!

நாரத்தங்காய் மரமாக வளரக் கூடியது. எங்க அம்பத்தூர் வீட்டிலே இரண்டு உண்டு. காய்க்காமல் இருந்ததைப் பௌர்ணமி தினத்தன்று வேரில் வெட்டுப் போட்டுச் செருப்பால் அடித்துப் பின்னர் புட்டு நிவேதனம் செய்து காய்க்க வைத்தேன். நல்ல ஜாதி நாரத்தங்காய்! அங்கிருந்து கிளம்புகையில் மரத்தையே வெட்டியாச்சு! ரொம்பவே மனசுக்கு வேதனையா இருந்தது. என்ன செய்ய முடியும்! இப்போ விலை கொடுத்து நாரத்தங்காய் வாங்கறோம்.

நாரத்தங்காய் மரம் குறைந்த பட்சமாக நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். இதன் வேரிலிருந்து பூக்கள், காய்கள், பழங்கள் எல்லாமும் பயன் தரக்கூடியவையே!  நாரத்தம்பழத்தில் வைடமின்களோடு மட்டுமில்லாமல் கொழுப்பு அமிலங்களும், அமினோ அமிலங்களும் இருக்கின்றன. அவை யாவன,  அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் ஆகியன ஆகும்.

இதன் பூக்கள் தசையை இறுக்கமடைய வைக்கும். ஊக்குவிக்கும் சக்தி கொண்டது. வேர் வாந்தியைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப் புழுக்கள், மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக் கல் போன்றவற்றிற்கும் மருந்தாகும். வயிற்றுப் புண்ணிற்கு நாரத்தங்காய் சிறந்த மருந்தாகும்.  இதன் தோல் வயிற்றுப் போக்கை நிறுத்தும். இதை எவ்வகையிலாவது உணவில் தினமும் சேர்த்து வர ரத்தம் சுத்தியடையும். வாதத்தை நீக்கி வயிற்றுப் புண்களை ஆற்றிப் பசியை அதிகரிக்கச் செய்யும்.  இதன் கனிகளைச் சாறு எடுத்துச் சாத்துக்குடி ஜூசைப் போல் குடிக்கலாம். கொஞ்சம் சர்க்கரை சேர்க்கவேண்டும். இந்தச் சாறு உடலுக்கும் வாய்க்கும் ரொம்பவே நன்மை தரும். வாயில் ஏற்படும் பித்தசம்பந்தமான நோய்கள் தீரும்.

உணவு ருசிக்காமல் இருந்தால் அதை ருசிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளது நாரத்தங்காய். இதைச் சாறாகவோ அல்லது ஊறுகாயாகவோ அல்லது சாதத்திலோ சேர்த்துச் சாப்பிட்டால் வாயின் ருசிகள் மீண்டும் வரும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து  தாகம் போக்கும். தோலைத் தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம். அல்லது நெல்லிக்காயை ஊற வைப்பது போல் சர்க்கரைப் பாகிலும் ஊற வைத்துச் சாப்பிடலாம். சீதக் கழிச்சலுக்கு இது நன்மை பயக்கும்.  உடல் சூடு உள்ளவர்களுக்கு சூடு தணியும்,. வெயில் வேளையில் நாரத்தங்காய்ச் சாறு எடுத்துச் சர்க்கரை, நீர் சேர்த்து அருந்தினால் வெயிலின் தாக்கம் குறையும்.

நாரத்தம்பழச் சாறுடன் பனங்கல்கண்டு அல்லது தேன் சேர்த்துச் சாப்பிட்டால் வெள்ளை அணுக்கள் நன்றாக உற்பத்தி ஆகி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.  கர்ப்பிணிப் பெண்களுக்கும் சுகப்பிரசவத்திற்கு இதன் சாறை சர்க்கரையோ வெல்லமோ பனங்கல்கண்டோ சேர்த்துச் சாப்பிட்டால் சுகப் பிரசவம் ஆகும். வயிற்றில் வாயுத் தொல்லை அதிகரித்து வயிறு உப்புசமாக இருக்கையில் சாறோடு வெந்நீர் கலந்து சாப்பிடலாம். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொடரும்

Friday, July 8, 2016

உணவே மருந்து! மணத்தக்காளி வற்றல்!

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப்பருப்போடு சின்ன வெங்காயம் சேர்த்துக் கூட்டாகச் செய்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.  இதன் இலைச் சாறோடு வேறு ஏதேனும் பழச்சாறைக் கலந்து கொண்டு குடிக்கலாம். அப்படிக் குடித்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப் புண், குடல் புண், நாக்குப் புண், மூலவியாதி போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.  உடல் களைப்பும் நீங்கி நிம்மதியான தூக்கமும் வரும்.  கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் நீக்கும் இந்தக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கும் சிறந்த மருந்தாகும்.

நல்லகாய்ச்சல் இருக்கும் நேரங்களில் இந்தக்கீரைப் பொடியோடு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிச் சூடாக அருந்தினால் காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். மணத்தக்காளிப் பழமும் காய்ச்சலைக் குணமாக்கும் சக்தி உள்ளது. இதை வற்றலாகச் செய்துப் பொரித்து உண்ணலாம். உடல் நலம்பெறும் வரை தொடர்ந்து இந்தக்கீரையை உண்டு வரலாம். ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இந்தப் பழம் சீரான மூச்சு விடுவதற்கு உதவும். புதுமணத் தம்பதிகளுக்குக் கர்ப்பம் தரிக்கவும் இந்த மணத்தக்காளிப் பழம் பயன்படும்.  கரு வலிமை அடையவும், ஆண்களுக்கு தாது வலுவுடன் இருக்கவும் இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடலாம்.

தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்தாக உதவுகிறது. கீரையின் சாற்றை இளநீர், மோர், தயிர், பால் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தொடர்ந்து அருந்தி வந்தால் சருமம் மினுமினுப்பு அடையும்.  இந்தக்கீரையைத் தினமும் சாப்பிட்டாலும் பிரச்னை ஒன்றும் இல்லை. மனச் சஞ்சலம் நீக்கி அமைதியைத் தரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ரிபோஃப்ளோவின் என்னும் வைடமின் பி2யும், வைடமின் நியாசினும் இந்தக் கீரையில் இருப்பதால்  தசைகள் பலமாகிக் கண்பார்வைக்கும் இது உற்ற மருந்தாகச் செயல்படுகிறது. நெஞ்சுவலி வந்தால் கூடகீரையையும், பழத்தையும் காய வைத்துப் பொடியாக்கி தினம் அரைக்கரண்டிப் பொடியைத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.

மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ ஆகியவற்றை நல்லெண்ணெயில் வறுத்துக் கொண்டு இதோடு இந்துப்பு, பெருங்காயம், ஓமம், சுக்குச் சேர்த்துப்பொடியாக்கிக் கொண்டு தினம் ஒரு ஸ்பூன் பொடியில் ஒரு கைப்பிடி சூடான சாதத்தைக் கலந்து நெய் ஊற்றிச் சாப்பிட்டு வரலாம். தீராத வயிற்றுக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

பொதுவாக வற்றல் குழம்புகள் எது செய்தாலும் அவரை வற்றல், கொத்தவரை வற்றல், கத்திரி வற்றல், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல் என்று எது செய்தாலும் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து வைத்துக் கொண்டு குழம்பைத் தாளிதம் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கும் முன்னர் வற்றல்களைச் சேர்த்து ஒரு கொதி வந்தபின் இறக்கினால் வற்றல் சுவையுடன் இருக்கும். சிலர் வற்றல்களை வெந்நீரில் ஊற வைத்துச் சேர்ப்பார்கள். அதில் ருசியும், மணமும் மாறுபடும். 

Monday, July 4, 2016

உணவே மருந்து! மணத்தக்காளி!

மணத்தக்காளி, மனைத்தக்காளி, மிளகு தக்காளி என்றெல்லாம் அழைக்கப்படும் இதை அநேகமாக வேலி ஓரங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் சாதாரணமாக யாரும் பயிரிடாமலேயே முளைத்திருப்பதைக் காணலாம். எங்கும் பயிராகும் தாவரம் இது. சுமார் ஐம்பது அல்லது அறுபது  சென்டிமீட்டர் வரை வளரும். காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்க்கும். காய்கள் பச்சை நிறத்தில் இருந்தாலும் பழங்கள் ஆழ்ந்த கறுப்பு வண்ணத்தில் அல்லது சிவந்த நிறத்தில் காணப்படும். இதுவும் கத்திரி வகையைச் சேர்ந்ததே!

Image result for மணத்தக்காளிக் கீரை

படத்துக்கு நன்றி செல்லியல் கூகிளார் வாயிலாக!

இதன் கீரை, காய்கள், பழங்கள் என அனைத்துமே நாம் உண்ணக் கூடியதே! கீரையின் தண்டையும் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டுச் சமைத்து உண்ணலாம். இதன் மூலம் மேற்கு ஆப்பிரிக்கா என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இது இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். வாயில் அடிக்கடி புண் வந்து அவதிப்படுபவர்கள் மணத்தக்காளிக்கீரையைப் பாசிப்பருப்புப் போட்டுச் சமைத்து உண்டால் வாய்ப் புண்ணிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நோய்களைக் குணப்படுத்தும் குணம் இந்தக் கீரைக்கு அதிகம் உண்டு.

இதயத்துக்கு பலம் ஊட்டுவதாக இது உள்ளது. கீரையையும், பழத்தின் உள்ளிருக்கும் விதைகளையும் காய வைத்துப் பொடித்துக் கொண்டு தினம் காலை அரை டீஸ்பூன், மாலை அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், நெஞ்சு வலி, நாள்பட்ட வயிற்றுப் புண்கள் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.  நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களைச் சரியாக எந்த இடத்துக்கு அனுப்பவேண்டுமோ அந்த வேலையை இந்தக் கீரை சரியாகச் செய்துவிடும்.  சாப்பிடும் உணவுப்பொருட்கள் நல்ல ஜீரணம் ஆகிக் கழிவுகள், சிறுநீர் ஆகியவை உடனே வெளிவரவும் உதவி செய்கிறது. உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுப்பதோடு அல்லாமல் காரணமில்லாம மன எரிச்சல், உடலில் குத்துவது போன்ற உணர்வுகள் இருந்தாலும் கூட இந்தக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் மனமும் அமைதி அடையும். உடல் உறுப்புகளும் சீராகும்.

உடலில் தோன்றும் வீக்கங்கள், சூட்டினால் வரும் கட்டிகள் ஆகியவற்றை இந்தக் கீரை சாப்பிட்டால் அது அவற்றை எதிர்த்துப் போரிட்டு அவற்றை நீக்கிவிடும். சிறுநீரகக் கோளாறை இருந்தால் அதைச் சரி செய்து விடும். சிறுநீர் நன்கு பிரிய வழி அமைத்துக் கொடுக்கும். கசப்புச் சுவையுடன் இந்தக்கீரை இருந்தாலும் சமைத்துச் சாப்பிட்டால் கசப்புத் தெரியாது.  மணத்தக்காளிப் பழங்களும் விலை உயர்ந்த டானிக் சாப்பிடுவதை விடச் சிறப்பான சத்தைத் தரும். நீண்ட நாட்கள் மலச்சிக்கல் இருந்தால் தீர்த்து வைக்கும். நல்ல பசியை உண்டாக்கும். முக்கியமாக ஆஸ்த்மா நோயாளிகளுக்கு மணத்தக்காளி, சுண்டைக்காய் இரண்டுமே  சிறந்த மருந்து. வாரம் இரு நாட்கள் மட்டுமே மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து மணத்தக்காளிக்கீரையையும் சமைத்து உண்டு மணத்தக்காளிப் பழத்தையும் வற்றல் போட்டுச் சமைத்து உண்டால் இதில் உள்ள நார்ச்சத்தின் வேலையால் மலச்சிக்கல் தீரும்.

இந்தக்கீரையை நெய்யில் வதக்கிக் கொஞ்சம் பொடித்த மிளகு, சீரகம், உப்புச் சேர்த்துப் பெருங்காயம் போட்டு நிறைய நீர் விட்டுக் கொதிக்க விட்டுக் கஷாயமாகச் செய்து அருந்தலாம். இதன் மூலம் நீர்க்கோவை உள்ளவர்களுக்கு நீர்க்கோவை தீரும். மசியல், பொரியலாகவும் சாப்பிடலாம். கீரையையும் தண்டுகளையும் மிக்சியில் போட்டு அரைத்து சாறெடுத்தும் குடிக்கலாம். எல்லாமே வயிற்றுக்கு மிக நல்லது.


தொடரும்!