எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, March 16, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்

பசலைக்கீரையைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். பாலக்கும் கிட்டத்தட்டப் பசலைக்கீரை வகைதான்! இரண்டிலுமே நீர்ச் சத்து அதிகம். நறுக்கிவிட்டு அலம்பினால் வேக விடும்போது நீர் அதிகம் சேர்க்க வேண்டாம். நான் எப்போவும் நறுக்கிட்டுத் தான் அலசுவேன். அப்போத் தான் இலை, தண்டுகளில் மண் இருந்தால் நன்கு போகும். கிட்டத்தட்ட அரிசி களைகிறாப்போல் திரும்பத் திரும்பப் போட்டு அலசும்படி இருக்கும். இந்தக்கீரைகளில் பருப்பு உசிலியும் செய்யலாம். அநேகமாய் எல்லாக் கீரைகளுக்கும் ஒரே மாதிரி செய்முறை தான். என்றாலும் ஏதேனும் ஒன்றின் செய்முறையைக் கொடுக்கிறேன்.

பசலைக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, முருங்கைக்கீரை போன்ற எல்லாக்கீரைகளுமே கூட்டு, கறி, உசிலி, பொரிச்ச குழம்பு, சாம்பார் போன்றவை செய்து சாப்பிடலாம். மணத்தக்காளிக்கீரை பற்றி ஏற்கெனவே எழுதிட்டேன். முருங்கைக்கீரையும் எழுதி இருக்கேன். இப்போ மற்றக் கீரைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு சமைக்கலாம்.

முளைக்கீரை ஒரு கட்டு! நன்கு ஆய்ந்து தண்டு பெரிசாக இருந்தால் நீக்கிவிட்டு நறுக்கிக் கொள்ளவும். நன்கு அலசி வடிதட்டில் போட்டு வைக்கவும். கல்சட்டி, அல்லது உருளி அல்லது ஏதேனும் அடி கனமான பாத்திரத்தில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றிக் கொண்டு அலசி வைத்திருக்கும் கீரையைப் போடவும். கீரையை வேகவிடும்போது கட்டாயமாய் மூடக் கூடாது. கீரை நன்கு வெந்து குறைந்து விடும். அளவு குறையும். அப்போது உப்புச் சேர்த்தால் போதும். முதலிலேயே உப்புச் சேர்த்தால் கீரை நிறைய இருப்பதைப் பார்த்து உப்பும் கூடப் போகும். நான் பொதுவாக மசித்த பின்னரே உப்பைச் சேர்ப்பேன். அப்போத் தான் உப்பு அளவு சரியாக வரும். கீரையை மசித்த பின்னர் பெருங்காயம் சேர்க்கும் வழக்கம் இருந்தால் சேர்க்கலாம். சிலர் ஜீரகம் பச்சையாகச் சேர்ப்பார்கள். கீரை மசிந்து நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டுச் சூட்டோடு வைத்திருந்தால் சாப்பிடும்போது நன்கு இறுகி மசியல் பதமாக இருக்கும். மாவு எல்லாம் கரைத்து விடும் தேவை இல்லை.

மேலே சொன்னது வெறும் மசியல்! அதற்குத் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிவத்தல் தாளிக்கலாம். என் அம்மா வீட்டில் கடுகு, உபருப்போடு மோர் மிளகாய், குழம்புக் கருவடாம் தாளிப்பார்கள். அதுவும் தனி சுவையைக் கொடுக்கும். சிலர் வெறும் தேங்காய்த் துருவலைத் தே. எண்ணெயில் பிரட்டிக் கொடுத்துச் சேர்ப்பதும் உண்டு. இவை எல்லாம் வெறும் கீரை மசியலுக்கு.

கீரையை மசித்த பின்னர் அதை வேறு சுவையாகத் தயாரிக்கணும்னா தேங்காய் சேர்த்து ஜீரகம், மிவத்தல் போட்டு அரைத்துச் சேர்க்கலாம். ஒரு கொதி விட்ட பின்னர் தே. எண்ணெயில் கடுகு, உபருப்பு தாளிக்கலாம். அல்லது தேங்காயோடு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கலந்து ஒரு கரண்டி புளிக்காத மோர் அல்லது தயிர் சேர்க்கலாம். இதை மோர்க்கீரை என்போம். வத்தல்குழம்போடு நல்ல துணை இந்த மோர்க்கீரை!

இதைத் தவிரவும் பாசிப்பருப்புச் சேர்த்து மொளகூட்டலும் செய்யலாம். மொளகூட்டல் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். புளிக்கீரையும் இரு விதங்களில் செய்யலாம். பருப்புச் சேர்த்து ஒரு முறை. பருப்புச் சேர்க்காமல் இன்னொரு முறை. இரண்டுமே நன்றாக இருக்கும். கீரையை நறுக்கிக் கொண்டு நன்கு அலசி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைத்து விட்டுப் பின்னர் உசிலிக்குச் சேர்க்கலாம்.

பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்:

து.பருப்பு ஒரு கிண்ணம், அரைக்கிண்ணம் க.பருப்பு நன்கு ஊற வைத்துக் களைந்து கொண்டு உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும். இதோடு நறுக்கி வைத்திருக்கும் கீரையைக் கலக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் இலையைப் போட்டு அல்லது தட்டில் எண்ணெய் தடவிக் கொண்டு பருப்பு உசிலிக்கலவையைப் பரப்பவும். வேக விடவும்.  பின்னர் தே எண்ணெயில் கடுகு, உபருப்பு தாளித்துக் கொண்டு வேக விட்ட கலவையைப் போட்டு உதிர்க்கவும். எல்லாக் கீரைகளிலும் இப்படிப் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.