எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, January 24, 2018

உணவே மருந்து! கருகப்பிலை! 2

கறிவேப்பிலைக் குழம்பு!

கறிவேப்பிலை அல்லது கருகப்பிலை இரண்டு, மூன்று கைப்பிடி! ஆர்க்கு என்று சொல்லப்படும் குச்சியில் சத்து நிறைய இருப்பதால் நான் அதை வீண் செய்ய மாட்டேன். எல்லோரும் உதிர்த்து இலையாக வைத்துக் கொண்டால் நான் தலைகீழ்! அந்த ஆர்க்கோடு பொடியாக நறுக்கிச் சேர்ப்பேன். அப்படி நறுக்கிச் சேர்த்த கருகப்பிலை ஒரு கிண்ணம் நிறைய!

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு

வறுத்து அரைக்க:-

மிளகு ஒரு டீஸ்பூன் (மிளகு பிடிக்கும்னால் இரண்டு டீஸ்பூன்)

மி.வத்தல் 2 அல்லது மூன்று. மிளகு பிடிக்காதவங்க மிளகைக் குறைத்துக் கொண்டு மிவத்தல் நான்கு, ஐந்து வரை வைச்சுக்கலாம்.

பெருங்காயம்! ஒரு துண்டு (பெரும்பாலும் பெருங்காயம் சேர்க்க மாட்டாங்க, ஆனால் நான் சேர்க்கிறேன்.)

வறுக்க ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்

உப்பு தேவையான அளவுக்கு

நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்கக் கடுகு, மஞ்சள் பொடி (தேவையானால்)

புளியைக் கரைத்துக் கொண்டு வடிகட்டித் தயாராக வைக்கவும்.  அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஒவ்வொன்றாக வறுத்து எடுக்கவும். கடைசியில் அந்தக் கடாயிலேயே ஆய்ந்து வைத்த கருகப்பிலையையும் போட்டுப் புரட்டி எடுக்கவும். ஆற விட்டுப் பின்னர் நல்ல விழுதாக நைசாக அரைக்கவும். கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலில் போட்டுக் கரைக்கவும். மிக்சியை அலம்பியும் ஜலத்தை விட்டுக் கொள்ளலாம். உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளிக்கவும். விரும்பினால் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். இல்லை எனில் கரைத்து வைத்துள்ள குழம்புக்கலவையை மெதுவாக ஊற்றவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது கீழே இறக்கி வைக்கவும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடச் சுவை! மோர்க்கூட்டு, மோர்க்கீரை, தயிர்ப்பச்சடி நல்ல துணை!

கருகப்பிலைத் துவையல்:- இதை இரண்டு முறையில் அரைக்கலாம். ஒன்று சாதாரண நாட்களில் செய்வது! இன்னொன்று ச்ராத்தம் போது செய்வது!

மி.வத்தல் 4

கடுகு, உபருப்பு தலா ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

புளி ஒரு சுண்டைக்காய் அளவுக்கு நீரில் ஊற வைக்கவும்

உப்பு தேவையான அளவு

நல்லெண்ணெய் வறுக்க

நல்லெண்ணெயைக் கடாயில் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு முதலில் வறுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் மி.வத்தல், பெருங்காயம் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு அதிலேயே கருகப்பிலையையும் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஆற விட்டு மிக்சி ஜாரில் முதலில் புளியுடன்,   மி.வத்தல் உப்பு, பெருங்காயம், கருகப்பிலையைப் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு பின்னர் கடுகு, உபருப்புச் சேர்த்துக் கொரகொரவென்று அரைத்து எடுக்கவும். தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

ச்ராத்தத்தின் போது செய்யும் கருகப்பிலைச் சட்னி

கருகப்பிலை, இஞ்சி சுமார் 25 கிராம், உப்பு, புளி, கடுகு, உபருப்பு (வறுத்தது)

வெறும் வாணலியில் கருகப்பிலையை வறுத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு வறுத்து எடுத்துக் கொண்டு இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கிக் கொண்டு இவை ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கடைசியில் தாளிதத்தைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்க வேண்டும்.

கருகப்பிலைப் பொடி! கருகப்பிலை சுமார் 100 கிராம். நன்கு காய வைக்கவும்.

மி.வத்தல் 5 அல்லது ஆறு

உப்பு,

ஓமம் அல்லது பெருங்காயம்

கருகப்பிலையை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த வாணலியிலேயே மி.வத்தலையும் போட்டுக் கருகாமல் வறுத்துக் கொண்டு ஓமத்தையும் போட்டு வறுக்கவும். பெருங்காயம் தேவையானால் சேர்க்கலாம். எல்லாம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும். சுமார் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.


Tuesday, January 9, 2018

உணவே மருந்து! கறிவேப்பிலை!

Image result for கறிவேப்பிலை

படத்துக்கு நன்றி கூகிளார்.

கறிவேப்பிலையை வளர்ப்பதே பெரிய விஷயம்!  கறிவேப்பிலைக் கன்னு மாதிரி ஒரே பெண்! அல்லது ஒரே பையர்! என்று சில பெற்றோர் சொல்வதில் இருந்து கறிவேப்பிலைக் கன்று வளருவதற்கு நாம் படும் கஷ்டமும் புரியும்! உணவில் வாசனைக்காக மட்டுமில்லாமல் அதன் மருத்துவ குணத்துக்காகவுமே கறிவேப்பிலை பயன்படுத்தப் படுகிறது. பொதுவாகக் கறிவேப்பிலையை எந்த உணவில் போட்டாலும் நாம் அதை எடுத்து எறிந்துவிட்டே சாப்பிடுகிறோம். ஒரு சிலர் தாங்கள் பிறருக்குப் பயன்படும் வரை உதவி செய்த பின்னர் அவர்கள் தங்களைக் கவனிக்காமல் இருப்பதைக் குறித்துச் சொல்லும்போது, "கறிவேப்பிலையைப் பயன்படுத்துகிற மாதிரி அவங்க தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டாங்க! அப்புறமாத் தூக்கி எறிஞ்சுட்டாங்க!" என்று சொல்வது உண்டு.

ஆனால் அந்தக் கறிவேப்பிலையைப் பச்சையாக நாம் தினம் சாப்பிட்டு வருவதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டிருக்கிறோமா? கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலை மயிர் வளரும் என்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரம் நரைக்கவும் நரைக்காது! அதோடு காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலைக் கொழுந்துகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமானால் ஏற்படும் நன்மைகள்:-

இதில் ஏ விடமின், பி, பி2, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்துகள் இருக்கின்றன.  இந்தக் கறிவேப்பிலையைப் பச்சையாகத் தினம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். வயிற்றைச் சுற்றி இருக்கும்மடிப்புகள் எல்லாம் கரைந்து போய் வயிறு சாதாரணமாகக் காட்சி அளிக்கும். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கப் பேரிச்சையோடு கறிவேப்பிலையைக் காலை நேரத்தில் உண்ண வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு சீராக இருக்கத் தினமும் காலைவேளையில் கறிவேப்பிலைக் கொழுந்துகளை மென்று தின்னலாம். தலையில் மயிர் வளரவும் கறிவேப்பிலைபயன்படும். கறிவேப்பிலையைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொண்டு தினம் ஒரு டீஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிகட்டிக் கொண்டு அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். கறிவேப்பிலை கல்லீரலுக்கும் பாதுகாப்புக் கொடுக்கும்.

வயிற்றுப் போக்கு சமயத்தில் கறிவேப்பிலையுடன், இஞ்சி, சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொண்டு ஒரு லிட்டர் மோரில் இந்துப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் போக்கும் குறையும். அதே சமயம் வாய் ருசியில்லாமல் இருந்தால் அதுவும் சரியாகும். மூல நோய்க்குக் கூடக்கறிவேப்பிலை சிறந்த மருந்தாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சிக்கல்களுக்கும் கறிவேப்பிலைச் சாறு நல்ல பலன் அளிக்கிறது. இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொஞ்சம் உப்புடன் உட்கொண்டால் நல்லது.  புற்று நோய்க்காக எடுத்துக்கொள்ளும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் கறிவேப்பிலையை உணவில் தாராளமாகச் சேர்க்கலாம் என்கின்றனர். இதன் மூலம் சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறையும் என்கின்றனர்.  உடலில் ஏற்படும் நோய்த் தொற்றையும் குணமாக்கும். கண் பார்வையைச் சீராக்கும்.