எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 1, 2011

உங்கள் மேனிப் பராமரிப்புக்கு

வீட்டு மருந்துக் குறிப்புகள்:

கண்களுக்குக்கீழே உள்ள கருவளையம் போக்கப் பயத்த மாவு, கசகசாவை அரைத்துப் பூசி வர வேண்டும்.

தோல் தடிப்புக்கு பூவன் வாழைப்பழத்தை மசித்து மேலே தேய்க்கவும்.

சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்க பச்சைப் பயறு மாவு, கொண்டைக்கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை சம அளவு எடுத்துக் குழைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். சற்று நேரம் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். கடுக்காய்ப் பிஞ்சை வாங்கி மோரில் ஊற வைத்து அம்மியில் அரைத்து விழுதைத் தலையில் தேய்த்துக்கொள்ளவேண்டும். பதினைந்து நிமிடம் ஊறிவிட்டுக் குளித்தால் உடலுக்கும், தலைச்சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.

50 கிராம் எள்ளை நன்கு ஊற வைக்கவும். அதை நன்கு அரைத்துத் தலையில் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளிக்கவும். தலைச்சூடு குறைவதோடு நரையும் தெரியாது.


வீட்டிலேயே சீயக்காய்த் தூள் கலக்கும் முறை:

சீயக்காய், காய்களாக அரைகிலோ வாங்கிக் காய வைத்துக்கொள்ளவும். இதோடு பச்சைப் பயறு கால் கிலோ, புழுங்கலரிசி, நூறு கிராம், கோரைக்கிழங்கு கால் கிலோ, வெந்தயம் நூறு கிராம், வேப்பிலை காய வைத்தது இரண்டு கைப்பிடி, வெட்டி வேர்(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம், எலுமிச்சைத் தோல்கள் காய வைத்தது, செம்பருத்திப் பூக்கள், இலைகள், இரண்டு கைப்பிடி, கறிவேப்பிலை காய்ந்தது இரண்டு கைப்பிடி, நெல்லிமுள்ளி(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம் அல்லது பத்து பெரிய நெல்லிக்காய்கள் காய வைத்தது. இவை அனைத்தையும் நன்கு காய வைத்து சீயக்காய் அரைக்கும் மாவு மிஷினில் கொடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கையில் பயன்படுத்தலாம். தினசரி உடலுக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஊறிப் பின்னர் இந்தப் பொடியாலும் உடலைத் தேய்த்துக்கழுவலாம்.


இப்போதெல்லாம் இவை பொய்யாய்ப்பழங்கதையாய்ப் போய்விட்டன. என்றாலும் இம்முறையில் சீயக்காய் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக்குளித்தபோது இருந்த சுகமும், தலைமுடியின் அடர்த்தியும், நீளமும் இப்போதெல்லாம் காண முடியவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்கள் வேறே எண்ணெய்க் குளியலே கூடாது என்றும் உடலில் எண்ணெயே பட வேண்டாம் என்றும் கூறிவிடுகிறார்கள். அவ்வப்போது இம்மாதிரிக்குறிப்புகள் வரும்.