எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, December 9, 2009

வாழ்க்கையே ரசம் தான், வந்து பாருங்களேன்!

இப்போ அடுத்துக் கண்டந்திப்பிலி ரசம் வைப்போமா?? பின்பற்றுகிறவங்க எண்ணிக்கை அதிகமாயிருக்கு, அந்த அளவுக்குச் செய்து பார்க்கிறாங்களானு புரியலையே?? கண்டந்திப்பிலிக் குச்சிகள் நாலு அல்லது ஐந்து எடுத்துக்குங்க. தேசாவரம்னு தென் மாவட்டங்களில் சொல்லுவாங்க இதை. திப்பிலி அரிசித் திப்பிலியைத் தான் திப்பிலிம்பாங்க. அதுவேண்டாம், இது வேர் போலக் காய்ந்து குச்சி, குச்சியாக இருக்கும். சின்னச் சின்னக் குச்சியாக நறுக்கி நாலு, ஐந்து வேண்டும். நறுக்கற வேலை எல்லாம் ரங்ஸுக்குக் கொடுத்துடுங்க. ஆச்சா??
அடுத்து மி.வத்தல் காய்ந்தது ஒன்று அல்லது இரண்டு, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு ஸ்பூன் ஜீரகம், கருகப்பிலை, புளி ஒரு எலுமிச்சை அளவு. இதுக்குத் தக்காளி எல்லாம் வேண்டாம், விருப்பப் பட்டால் போட்டுக்குங்க. உங்க ரங்ஸுக்குப் பிடிக்காதுனா போடலாம், பிடிக்கும்னா வேண்டாம், எல்லாம் தலைகீழ் விகிதம், அவ்வளவே!

எல்லாச் சாமான்களையும் நெய் அல்லது எண்ணெயில் வறுத்துக்குங்க. பெருங்காயம் ஒரு துண்டு. அதையும் நெய்யிலேயே வறுத்துக்கலாம். புளியை நீர்க்கக் கரைச்சு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். வறுத்த சாமானை மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ, அரைச்சு, (ஹிஹிஹி, அம்பிமேலே இல்லை, பாவம் எரியும் அம்பிக்கு, விட்டுடுவோம்)புளி வாசனை போகக் கொதிச்சதும் அரைச்சதைக் கலந்து ஒரு கொதி வந்ததும் வேண்டிய அளவு ஜலம் விட்டு விளாவிவிட்டு நுரைச்சு வந்ததும் கீழே இறக்கவும். நெய்யில் கடுகு, கருகப்பிலை தாளித்துத் தேவையானால் கொத்துமல்லித் தழை போடலாம்.

இதுக்குத் தொட்டுக்கக் காம்பினேஷன் பருப்புத் துவையலும், அரிசி அப்பளமும். அரிசி அப்பளம் சுட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டுத் தடவிட்டுத் தொட்டுக்கலாம். பருப்புத் துவையலுக்குத் தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், ஒன்றிரண்டு மிளகாய் வற்றல், உப்பு, புளி, பெருங்காயம் எல்லாவற்றையும் வெறும் சட்டியில்/வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். ரசத்தோடு சேர்த்துச் சாப்பிட ரசமாக இருக்கும். அதுவும் இந்தக் குளிருக்கு அருமையான காம்பினேஷன்.