எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, October 27, 2018

உணவே மருந்து! வரகு 2

வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன்.

ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி

அரை கப் இட்லி புழுங்கலரிசி

முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்

பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!


தொட்டுக்கக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி. ரங்க்ஸுக்கு மிளகாய்ப் பொடி மேல் திடீர்க் காதல். ஆகையால் அவர் அதைத் தான் தொட்டுக் கொண்டார்.  தோசை கொஞ்சம் போல் நிறம் சிவந்திருந்தாலும் தீயவில்லை. ருசியும் பரவாயில்லை.




அடுத்த நாள் காலை சப்பாத்தி பண்ணியதால் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்


இட்லிக் கொப்பரையில் மாவு விட்டு வைத்திருக்கேன் அரை வேக்காட்டில் எடுத்த படம்! :)


வெந்த இட்லிகள். இட்லியும் பஞ்சு, தோசையும் பஞ்சு!  தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க!  தொட்டுக்க சாம்பார் தான்! ஹூம் ஹூம் இல்லை, இல்லை ஶ்ரீராம் சாம்பார் இல்லை. சாதாரண சாம்பார் தான். 

Saturday, October 6, 2018

உணவே மருந்து! வரகு 1

நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள்! திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்லை என்கிறார். லேபல் எல்லாம் கொடுப்பதில்லை. ஏனெனில் குறிப்பிட்ட தலைப்பைக் கொடுத்தால் எனக்கு என் பதிவுகள் வருகின்றன என்பதோடு படிக்கும் சிலரும் சொல்கின்றனர். ஆகவே ரொம்பவே இதுக்காகவெல்லாம் கஷ்டப்படுத்திக்கலை. பெரிய அளவில் போய்ச் சென்று நிறையப் பின்னூட்டங்கள், கருத்துகளை எதிர்பார்த்துச் செய்வதில்லை. இங்கே வந்தால் குறிப்பிட்ட உணவு வகைகளின் செய்முறைகள் கிடைக்கும் என்பது அநேகமாக இங்கே அடிக்கடி வருபவர்களுக்குத் தெரியும். அந்த அளவில் போதும் என வைத்து விட்டேன். எனினும் சில குறிப்பிட்ட உணவுகளின் செய்முறைகளை மட்டும் தனியாகத் தொகுத்து மின்னூலாக ஆக்கும் எண்ணம் இருக்கிறது. விரைவில் அதற்கான வேலைகளைத் தொடங்கணும்.  வீட்டு வேலைகள் மட்டுமில்லாமல் சில சம்பவங்கள், சில சந்திப்புகள், சில நிகழ்வுகளினால் பதிவுகளின் தொடர்பு, போக்கு எல்லாம் மாறி விடுகின்றன. இப்போ நவராத்திரி வேறே நெருங்குவதால் அது சம்பந்தமான பதிவுகளைத் தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அப்போதும் பதிவுகள் இடுவது மாறலாம். அதன் பின்னர் முன்பு எழுதியவற்றைத் தொடரும்போது ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இருக்காது! இது சகஜமே!

முன்னுரை முடிஞ்சாச்சு! இப்போ வரகு பத்திப் பார்ப்போம். வரகு சிறுதானியங்களில் மிகவும் சத்துள்ளதும் பிரபலம் ஆனதுமான ஓர் உணவு. இது எங்கே வேண்டுமானாலும் விளையும். இதைப் பறவைகளோ ஆடு மாடுகளோ உண்ணாது. கடும் உணவுப் பஞ்சத்தில் கைகொடுக்கும் உணவு. இதைப்பாதுகாத்து வைத்தால் ஆயிரம் வருஷம் கூட முளைக்கும் திறன் கொண்டது. அதோடு அல்லாமல் இது இடி தாங்கும் திறன் உள்ளது என்பதால் தென்னிந்தியக் கோயில் கோபுரங்களின் கலசங்களை வரகு அரிசியால் நிரப்பி வைத்து மூடுவார்கள். இது தொன்று தொட்டு வரும் வழக்கம்.  தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பெருமளவு உண்ணப்பட்டு வந்த இந்த தானியம் பின்னர் பயன்பாடு பெரிதும் குறைந்து மிகவும் அருகிப் போய் இப்போது சில காலமாக மீண்டும் தலையெடுக்கத்தொடங்கி இருக்கிறது.

அரிசிக்குப் பதிலாகவோ அல்லது மாற்றாகவோ இதைச் சமைத்து எப்போதும் போல் குழம்பு, ரசம், மோருடன் உண்ணலாம். இட்லி, தோசைக்குப் புழுங்கல் அரிசி போடுவதற்குப் பதிலாக வரகரிசியைப் போட்டு இட்லி, தோசை செய்யலாம்.  இதில் மாவுச் சத்து மிகவும் குறைவு. நார்ச்சத்து மிக அதிகம். ஆகவே தினமும் இதைச் சமைத்து உண்பவர்களின் உடல் எடையும் குறையும்.  ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் புரதம், கால்சியம், வைடமின் பி, தாதுப் பொருட்கள் ஆகியன இருப்பதோடு மற்றச் சிறுதானியங்களைப்போல் அல்லாமல் விரைவில் ஜீரணமும் ஆகும். இதைத் தொடர்ந்து உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதன் தோலைச் சரியாக நீக்கிவிட்டு உண்ண வேண்டும். இல்லை எனில் தொண்டையில் பிரச்னை வரும். வரகுத் தாளை வீட்டுக்கூரையில் கூரை வேயவும் பயன்படுத்துவார்கள். இதனால் வீட்டிற்குள் சூரிய வெப்பம் தெரியாது. பொதுவாக ஆடி மாதம் பயிரிட நல்லது என்றாலும் இதை எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். எவ்வகை மண்ணிலும் விளையும் தன்மை கொண்டது. களர் மண்ணிலும் நன்கு விளையும். இதைப் பயிரிட்டதும் ஐந்து மாதங்களில் அறுவடை செய்யலாம். மழை பெய்து முடிந்த பின்னர் மண்ணில் அதிக ஈரம் இல்லாமல் இருக்கையில் விதைக்கலாம். விதைக்கையில் மழை இல்லை என்றாலும் பின்னர் மழை பெய்ததும் முளைத்து விடும். விதைத்து ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்துவிடும். இதற்கு உரமோ, பூச்சிக்கொல்லியோ தேவை இல்லை என்பதோடு வயலில் களை எடுக்கவும் தேவை இல்லை. ஆடு, மாடுகள் மேய்ந்தாலும் பின்னர் கிளை பரப்பி அதிக வேகத்தில் வளர்ந்து விடும். நான்காம் மாதம் கதிர் விட ஆரம்பித்து ஐந்தாம் மாதம் அறுவடை செய்யலாம்.

வரகைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும். மூட்டுவலிக்கு நல்லது.  கல்லீரலைச் செயல்பட வைக்கும். கண் நோய்களைத் தீர்க்கும். நிணநீர்ச் சுரப்பிகளைச் சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளையும் சீராக்கும் தன்மை கொண்டது.