எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 28, 2017

உணவே மருந்து! எலுமிச்சை!

எலுமிச்சை கல்யாண ஊறுகாய்! இதை இரண்டு விதமாய்ப் போடலாம். ஒரு முறை பாரம்பரிய முறை!  எலுமிச்சை அதிகம் கிடைக்கும் நாட்களில் பத்து முதல் இருபத்தைந்து வரையான நடுத்தர அளவு எலுமிச்சம்பழங்களை நாரத்தங்காய் போலச் சுருளாகவோ அல்லது பெரிய துண்டங்களாகவோ நறுக்கிக் கொண்டு விதைகளை நீக்கிவிட்டு உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஊற வைக்கவும். பின்னர் அதை வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவசரமாக ஊறுகாய் தேவைப்படும் சமயங்களில் இந்தக் காய்ந்த எலுமிச்சைத் துண்டங்களைத் தேவையான அளவில் நறுக்கிக்கொண்டு தேவையான அளவு கொதிக்கும் வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் வைக்கவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெயை நன்கு காய்ச்சிக் கொண்டு, மிளகாய்ப் பொடியை ஊறிக் கொண்டிருக்கும் எலுமிச்சைத் துண்டங்களின் மீது போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயை ஊற்றிக் கடுகு, வெந்தயப்பொடி போட்டுக் கிளறி உடனடியாகப் பரிமாறலாம். இம்மாதிரிக் காய்ந்த நாரத்தங்காயிலும் செய்யலாம்.

இதே இன்னொரு முறையில் எலுமிச்சம்பழங்களைக் கொதிக்கும் வெந்நீரில் வேக வைத்தோ அல்லது குக்கரில் ஒரு விசில் கொடுத்து வேக வைத்தோ எடுத்து ஆற வைத்துக் கொண்டு விதைகளை நீக்கிவிட்டுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மேலே சொன்னபடி மிளகாய்ப் பொடியோடு மறக்காமல் உப்புச் சேர்த்து நல்லெண்ணெயைக் காய்ச்சிச் சூடாக ஊற்றிக் கடுகு, வெந்தயப் பொடி கலந்து பரிமாறலாம். இம்முறையில் எலுமிச்சைத் துண்டங்களில் லேசான கசப்புத் தெரியும். ஆனால் அவசரமாகத் தயாரிக்க இது தான் வசதி!

எலுமிச்சைத் தொக்கு! சாறு எடுத்த எலுமிச்சைத் தோல்களை வைத்தும் பண்ணலாம். ஆனால் சாறுள்ள எலுமிச்சையில் செய்வதே நன்றாக இருக்கும். எலுமிச்சம்பழங்களை மேலே சொன்ன மாதிரியில் வெந்நீரில் ஊற வைத்தோ அல்லது வேக வைத்தோ எடுத்துக் கொண்டு விதைகளை நீக்க வேண்டும். பின்னர் நல்லெண்ணெயில் அவற்றை வதக்கிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு விழுதாக அரைக்கவேண்டும். அதன் பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக்கிளறிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கிளறியதும் மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கிளறிச் சேர்ந்து வரும் சமயம் கொஞ்சம் சர்க்கரை அல்லது வெல்லத் தூள் சேர்த்துக் கிளறவும். ஆறியதும் ஒரு பாட்டிலில் அல்லது பீங்கான் ஜாடியில் கண்ணாடி ஜாடியில் எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.  

எலுமிச்சை இனிப்பு ஊறுகாய்

பத்து எலுமிச்சம்பழங்களை நறுக்கிக் கொண்டு தேவையான உப்பு, மஞ்சள் பொடி, இரண்டு டீஸ்பூன் காரப்பொடி, ஒரு குழிக்கரண்டி வெள்ளைச் சர்க்கரை சேர்த்து நன்கு ஊற வைக்கவும். நல்ல வெயில் காலம் எனில் ஊறுகாயை தினமும் வெயிலில் வைத்து எடுக்கலாம். சர்க்கரைப் பாகு பதத்துக்கு வரும். இம்மாதிரி ஒருவாரம் வைத்து எடுத்த பின்னர் வெறும் வாணலியில் இரண்டு டீஸ்பூன் ஜீரகம், இரண்டு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் பொடித்துக் கொண்டு ஊறுகாயில் சேர்க்கவும். கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். சப்பாத்திக்கு இந்த ஊறுகாய் நல்ல துணையாக இருக்கும்.