எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, October 18, 2012

அல்வாக் கொடுக்கிறேன், வாங்க!

ஒரு வழியா மீனாக்ஷி கேட்ட கோதுமை அல்வாவைப் பத்தி எழுதப் போறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளாஷ் பாக்.  இந்த கோதுமை அல்வா செய்யறதிலே எங்க அம்மாவைப் போல் எக்ஸ்பெர்ட் (ஹிஹி, மீனாக்ஷி மன்னிக்க) நான் பார்த்ததில்லை.  பிறந்த வீட்டில் இருந்த வரைக்கும் சமையல் செய்கையில் கூடமாட ஒத்தாசை செய்தது உண்டு என்பதால் அல்வாவுக்கு கோதுமையை ஊற வைத்து அரைத்துக் கொடுத்ததும் உண்டு என்பதாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஓரளவுக்கு அல்வா கொடுக்க வரும்.  என்றாலும் தனியாகச் செய்தது இல்லை.

எங்க கல்யாணம் ஆகி முதல் வருஷ நிறைவு நாள்.  அப்போ நான் வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.  எங்க பொண்ணு வயித்திலே நான்கு மாசம்.  அம்மா என்னோட மசக்கைக்காக வந்திருந்தா.  அப்போத்தான் திருமண நாள் வந்தது. நாங்க இரண்டு பேருமே என் அம்மாவின் அல்வாவுக்குத் தீவிர ரசிகர்கள் என்பதால் அம்மாவிடம் கல்யாண ஆண்டு நிறைவுக்கு அல்வா வேணும்னு நான் கேட்க, என் கணவரும் ஆவலுடன் பதிலை எதிர்பார்க்க அம்மாவும் சரினு சொல்ல அல்வாவுக்கு என சம்பா கோதுமை வாங்கி ஊற வைச்சாச்சு.  மறுநாள் போக மறுநாள் எங்க கல்யாண நாள்.  காலம்பர வீட்டிலே விருந்து சமைச்சுச் சாப்பிட்டுவிட்டு (அதுக்குத் தனி மெனு, அவியல் அதிலே ஒரு ஐடம்). நாங்க ரெண்டு பேரும் பீச்சுக்குப் போயிட்டு அங்கே சிறிது நேரம் கழித்துவிட்டு மவுன்ட் ரோட் தேவி பாரடைஸில் அப்போ பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த ஹிந்திப் படம் பார்த்துட்டு சென்னை சென்ட்ரல் அருகே இருந்த ஹோட்டல் பிக்னிக்கின் ரூஃப் கார்டனில் ராத்திரி சாப்பிட ஐடியா.  திட்டம் என்னமோ பிரமாதமாக இருந்தது.  மறுநாள் காலம்பர எழுந்து அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்பத் தயாராயிட்டிருந்தேன்.

இதிலே பத்துத் தரம் வாந்தி வேறே. அம்மாவோட முகம் என்னமோ காலம்பர இருந்தே சரியில்லைனு தோணித்து.  என்னனு கேட்க முடியாமல் வாந்தி எனக்கு.  மசக்கை வாந்தினு பேரே தவிர வாந்தி எடுத்து எடுத்து ரத்தம் வர ஆரம்பிச்சுடும். :))) அப்போ திடீர்னு சமைச்சுட்டு இருந்த அம்மா அப்படியே கீழே படுத்தார்.  என்ன ஆச்சு?  பதட்டத்தோடு போய்க் கேட்டால் அம்மாவுக்கு லூஸ் மோஷன் ராத்திரியில் இருந்தே.  எங்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம்னு சொல்லலையாம்.  சாப்பாடில் ஏதோ ஒத்துக்கலை போல.  திகைத்த நான் அவசரம் அவசரமாக மிச்சமிருந்த சமையலைக் கவனிச்சு அம்மாவை எதிரே இருக்கும் என்னோட உறவினரோட ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்துட்டு ஆரோரூட் கஞ்சி போட்டு வைச்சுட்டு, என்னோட அலுவலகம் கிளம்பினேன்.

கோதுமை ஊறிக் கொண்டிருந்தது. அது நினைவில் இல்லையா என்ன?  எல்லாம் இருந்தது.  என்ன செய்யலாம்னு மண்டைக்குடைச்சல்.  அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் உத்தரவே போட்டுட்டார்.  நீயே அல்வாக் கிளறிடு.
என்னது நானா?  நான் திகைக்க, ஏன் எல்லாம் வரும் பண்ணு! சர்வாதிகாரி ஆர்டர் போட்டாச்சு.  நான் அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டையில் இருக்கும் என்னோட அலுவலகம் கிளம்பிச் சென்றேன். 

8 comments:

  1. 'அல்வா கொடுக்கிறது' என்றால் என்ன, ஏமாத்தறதா? சென்னை விட்டு வந்ததுல தமிழே தெரியாம போயிடுச்சு, போங்க.

    சர்வாதிகாரியா? ம்ம்ம்ம்.

    அந்த நாள்ல அம்பத்தூர்லந்து தண்டையார்பேட்டைனா ரொம்ப நேரமாகியிருக்குமே? ரெண்டு பஸ்ஸா?

    ஆரோரூட் - வருஷக்கணக்காச்சு இந்தப் பெயர் கேட்டு.

    அவங்கவங்க கோயில் குளம்னு போவாங்க பாத்திருக்கேன், நீங்க தம்பதிகளா சினிமா பீச்சுனு சுத்தினீங்களா? வெரி குட், வெரி குட். ஒரு சச்சரவுனா, "என்னை ஒரு கோயில் குளம்னு எப்பனா கூட்டிண்டு போனதுண்டா?"வா?

    ReplyDelete
  2. அல்வா குடுத்திட்டீங்களே !!

    கோதுமையை அரைத்து அல்வா செய்யாமல் !!!

    ReplyDelete
  3. இப்போதைய கேள்வி அல்வா கொடுத்தீங்களா அல்வா கெடுத்தீங்களாத்தான்!!! :))))))))
    பாதியிலேயே நிறுத்தி அல்வா கொடுத்துருக்கீங்களே! நங்கள் ஒருமுறை அல்வா செய்து டம்ளரில் சாப்பிட்டது (குடித்தது) உண்டு! அல்வா செய்ய வேலை ஜாஸ்தி.

    ReplyDelete
  4. அல்வா கொடுக்கறேன் வாங்கன்னு சொல்லிட்டு இப்ப நிஜமாவே அல்வா கொடுத்துடீங்களே! :) இப்பதான் நீங்க முதல் முறை அல்வா கிளற ஆரம்பிச்ச கதை தொடங்கி இருக்கு. அப்படியே இது படி படியா முன்னேறி கடைசியா நான் அல்வா கிளற ஆரம்பிக்கறதுல வந்து நிக்கும்னு நம்பறேன். :)

    நீங்க முதல் முறை அல்வா கிளறினது ரொம்ப பிரமாதமா வந்து, அதை கேட்ட அம்மா சந்தோஷத்துல எனக்கு ஆரோரூட் கஞ்சி எல்லாம் ஒண்ணும் வேண்டாம், நீ பண்ணின அல்வாதான் வேணும்னு அடம் பிடிசிருப்பாங்க, இல்லையா!
    உங்க பிளாஷ் பாக் தொடர்ச்சி சரியா?

    ReplyDelete
  5. ஹிஹி அப்பாதுரை, சர்வாதிகாரியே தான். நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி! :)))))

    அம்பத்தூரிலே இருந்து ரெயிலே போவேன். ஹிஹிஹி, அதுவும் அப்போ (எழுபதுகளிலே)கரி எஞ்சின் தான். பேசின் பிரிட்ஜ் வரைக்கும் ரயில் பயணம், அங்கே இறங்கிக் குறுக்கு வழியில் வால்டாக்ஸ் ரோடுக்கு வந்தால் தண்டையார்ப்பேட்டை போற, திருவொற்றியூர் போற பேருந்துகள் வரும். அது எதிலானும் ஏறினா மின்ட், வாஷர்மேன்பேட் தாண்டித் தண்டையார்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே அலுவலகம். இப்போவும் அங்கேயே இருக்கு. :)))))

    கோயில், குளமும் போவோம். இதுவும் போவோம். என்றாலும் அந்த வயசிலே இதுக்குத் தானே முன்னுரிமை இருக்கும். எனக்குப் பத்தொன்பது; அவருக்கு இருபத்தி ஆறு. ஆகவே வோட் பீச், சினிமா, ஹோட்டலுக்குத் தான் விழுந்தது.

    அதெல்லாம் எங்கே கூட்டிட்டுப் போனீங்கனு கேட்கிறது இல்லை. போறது அலுத்துப் போய் என்னை அலைய வைக்கறீங்களேனு தான் சண்டை வரும். இங்கே எல்லாம் உல்டா தான்!:))))))

    ReplyDelete
  6. ராஜராஜேஸ்வரி, பொறுமை, பொறுமை. அல்வாவும் கிடைக்கும். :))))

    ReplyDelete
  7. ஸ்ரீராம், என்னை ஏமாத்தின, இன்றும் ஏமாத்துகிற ஒரே ஸ்வீட் பால் கேக் தான். :))))) இன்றளவும் அதுக்கும் எனக்கும் ஒத்துக்காது. ஒண்ணு ரொம்ப சாஃப்டா இருக்கும்; இல்லையா, ரொம்பவே அடிச்சா காயம் வராப்போல கட்டியா ஆயிடும். :))))) மற்றபடி ஜிலேபி கூட ஜுஜுபிதான்! :)))))

    ReplyDelete
  8. வாங்க மீனாக்ஷி, அதுக்குள்ளே அலுத்துண்டா எப்படி? அம்மா அதெல்லாம் ஆரோரூட் கஞ்சி வேண்டாம்னு சொல்லலை. அதைத் தான் சாப்பிட்டா. வேறே வழி. :)))))

    @அப்பாதுரை, போன மாசம் கூட எனக்கு காஸ்ட்ரோ என்ட்ரிடிஸ் வந்தப்போ ஆரோரூட் கஞ்சி தான் குடிச்சேன். வீட்டிலே எப்போவும் இரண்டு டப்பா ஸ்டாக்கிலே இருக்கும். எது இருக்கோ இல்லையோ அது மட்டும் இருந்தாகணும். :)))))

    ReplyDelete