எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, May 11, 2019

மிஞ்சினால் கெஞ்சுவோம், கெஞ்சினால் மிஞ்சுவோம்! திப்பிசமோ திப்பிசம்!

சில திப்பிச வேலைகளை இங்கே தரப் போறேன். பிடித்தவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும்.
காலை ஆகாரத்துக்கு இட்லிக்குத் தேங்காய்ச் சட்னி அரைச்சால் மிஞ்சிப் போனால் அதை மாலைக்குள் எப்படிச் செலவு செய்வது? என்ன தான் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சாலும் அது மறுநாள் அவ்வளவு நன்றாக இருக்காது தான். ஆகவே அன்றே செலவழித்து விடுங்கள். ஒண்ணும் வேண்டாம். அன்றைய சமையல் திட்டத்தில் மோர்க்குழம்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  மோர்க்குழம்புக்குச் சாதாரணமாப் பருப்பு வகைகள் ஊற வைச்சு அரைச்சோ இல்லைனா பச்சை மிளகாய், இஞ்சி மட்டும் தேங்காயோடு சேர்த்து அரைச்சோ இல்லைனா மிளகாய் வற்றல், வெந்தயம், தேங்காய் வறுத்து அரைத்தோ பண்ணுவார்கள். இவை ஒவ்வொன்றிற்கும் செய்முறைக்கேற்பப் பெயர் மாறினாலும் இங்கே மோர்க்குழம்புன்னே குறிப்பிடுகிறேன்.

அந்த மோர்க்குழம்பு பண்ணுவதற்கு இந்தச் சட்னி இருந்தால் போதும். கொஞ்சம் போல் தனியா/ கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து ஊற வைச்சு அரைக்கவும். மிளகாயோ அல்லது மிவத்தலோ வேண்டாம். அதான் சட்னியிலே போட்டு அரைச்சிருக்கீங்களே அது போதும். காரம் தேவைப்பட்டால் ஒரே ஒரு பச்சை மிளகாய் பருப்புக்களோடு சேர்த்து அரைக்கலாம். இதையும் சட்னியையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். அல்லது சட்னியைத் தனியாகவே வைக்கலாம், பரவாயில்லை. அடுப்பில் மோர்க்குழம்புக்கான தானைப் போட்டு அதற்கு மட்டும் உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும். வெண்டைக்காய் எனில் தே.எண்ணெயில் கடுகு தாளித்துக் கொண்டு கருகப்பிலை சேர்த்து வெண்டைக்காயைப் போட்டு மஞ்சள் பொடியும் வெண்டைக்காய்க்கு மட்டும் உப்பும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இந்தப் பருப்பு அரைத்த விழுதோடு தேவையான அளவு தேங்காய்ச் சட்னி மிச்சத்தைச் சேர்த்துக் கலந்து கொண்டு அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும். 

நல்ல கெட்டியான மோரில் கொஞ்சம் போல் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். சிறிது நேரத்திலேயே கெட்டியாகிப் பொங்கி வர ஆரம்பிக்கும். கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.

அடுத்த திப்பிச முறை! மிஞ்சி இருக்கும் சட்னியை உடனே எடுத்து வீணாகி விடாமல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மாலை அரிசி உப்புமாவுக்கான ஏற்பாடுகளைப் பண்ணவும்.அரிசி உப்புமாவுக்கு அந்தச் சட்டினியையே போட்டுக் கொண்டு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். அல்லது அரிசி உப்புமாவுக்கு அரைத்து விடலாம். ஹிஹிஹி! மேலே சொன்னாப்போல் துபருப்பு, கபருப்புக்களோடு சின்னதாய் ஒரு மி.வத்தல் சேர்த்து ஊற வைக்கவும் இதை நன்கு நைஸாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரவென அரைக்கவும். அரிசி உப்புமாவுக்கு உருளி அல்லது வெண்கலப்பானை அல்லது கடாயில் நீங்கள் வழக்கம் போல் தாளிக்கும் முறையில் தாளிக்கவும். இந்த அரைத்த விழுதோடு தேவையான அளவுக்குச் சட்டினியைக் கலந்து கொண்டு அரிசி உப்புமாவுக்குத் தேவையான நீரைச் சேர்த்துக் கலக்கிக் கொண்டு தாளித்திருக்கும் உருளி/வெண்கலப்பானை/கடாயில் கொட்டவும். தேவையான உப்புச் சேர்க்கவும். கொதி வந்ததும் அரிசி உப்புமாவுக்கு உடைத்து வைத்திருப்பதைப்போட்டுக் கிளறவும்.

இன்னொரு முறையில் மாலை டிஃபனுக்கு கோதுமை ரவை, கொஞ்சம் புழுங்கல் அரிசி/பச்சரிசியோடு கபருப்பு, உபருப்பு, துபருப்பு வகைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நனைச்சு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் ஒன்றிரண்டு மி.வத்தல், உப்புக் கொஞ்சமாக, பெருங்காயம் போட்டு அரைத்ததும் ஊற வைச்ச தானியங்களைப் போட்டு அரைத்த பின்னர் இந்தச் சட்னித் தேங்காய் விழுதையும் சேர்த்து அரைக்கவும். பின்னர்  அடை தோசை போல வார்க்கலாம். எல்லாவற்றுக்கும் நீங்கள் கலவையைச் சேர்க்கும் விகிதத்தில் தான் இருக்கிறது.  முந்தாநாள்/அக்ஷய த்ரிதியை அன்று வடைக்கு அரைத்த மாவு எல்லாம் வடையாகத் தட்டவில்லை. கொஞ்சம் மாவு மிச்சம். கோதுமை மாவு சேர்த்து இந்த உளுந்து மாவைப் போட்டு கோதுமை தோசை வார்க்கலாம்னு நினைச்சேன். அப்படியும் செய்யலாம் தான். ஆனால் கோதுமை ரவை நிறைய இருப்பதால் அதைச் செலவு செய்ய வேண்டி கோதுமை ரவையோடு அரிசி+பருப்பு வகைகள் கொஞ்சம் போல் நனைத்துக் கொண்டு ஊறியதும் ஒரே ஒரு மிவத்தலோடு ஊறியதை அரைத்துக் கொண்டு வடை மாவையும் போட்டு நன்றாகக் கலந்து தோசை வார்த்தால் அடை மாதிரியே வாசனையாக நன்றாக இருந்தது.  இதே போல் ஆமவடைக்கு அரைத்த மாவு இருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு மறுநாள் பருப்பு உசிலி போல் பண்ணலாம். அல்லது அரிசி மட்டும் ஊற வைத்து அரைத்துக் கொண்டு இந்த வடைமாவையும் போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு அடை தோசையாகவும் வார்க்கலாம்.

கூடியவரை மிஞ்சாமல் சமைப்பதே நல்லது! மிஞ்சினால் அதை உடனடியாக வேறு விதத்தில் மாற்றிச் செய்து விடலாம். ரவை உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவை காலை செய்தது மிச்சம் இருந்தால் மதியம் ஒரு உருளைக்கிழங்கு அல்லது 2 கிழங்கை நன்கு வேக வைத்துக் கொண்டு ப்ரெட் இருந்தால் இரண்டு ஸ்லைஸையும் தண்ணீரில் நனைத்துச் சேர்த்துக் கொண்டு உப்புமாவையும் போட்டுக் கலந்து கொண்டு கட்லெட்டாகப் பண்ணிவிடலாம். தொட்டுக்க சாஸ் அல்லது தக்காளிச் சட்னி! மாற்றிப் பண்ணுவதற்கேற்ற பொருட்கள் வீட்டில் இருக்கணும்! இரண்டே நபர்கள் தான் என்றால் கூடியவரை கொஞ்சமாகப் பண்ணுவதே நல்லது. முந்தாநாள் சேவை செய்ய வேண்டி இரண்டு ஆழாக்குப் புழுங்கலரிசி ஊற வைத்து அரைச்சேன். சேவைக்கு எனக்கு மூன்று ஈடு இட்லிக்கான மாவே தேவை. மிச்சம் மாவு இருந்தது. அதற்கேற்றாற்போல் அரைக்கிண்ணம் பச்சரிசியை ஊற வைத்துத் தேங்காய்த் துருவலைப் போட்டு நன்கு அரைத்து மிச்சப் புழுங்கலரிசி மாவோடு கலந்து கொண்டு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து நேற்று நீர் தோசையாகப் பண்ணி விட்டேன். மாவு செலவு ஆகி விட்டது. புழுங்கலரிசி மாவு சேவைக்கு அரைத்தது நிறையவே இருந்தால் அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பின்னர் துணியில் வடிகட்டி நீரை எடுத்து விட்டு வறுத்து அரைத்த உளுத்தமாவும் வெண்ணெயும் போட்டுக் கொண்டு சீரகம் சேர்த்துக் கை முறுக்கு,  தேன்குழல் அல்லது காரம் போட்டுத் தட்டை  போன்றவையும் பண்ணலாம்.


எல்லாம் சரி, சாதம் மிஞ்சினால்? காலை வடித்த சாதம் எனில் இரவே அதைத் தயிர்சாதம் பிடித்தால் பிசைந்து சாப்பிடலாம். இல்லை எனில் கொஞ்சம் போல் பாசிப்பருப்பை வறுத்து வேக வைத்துக் கொண்டு, காய்கறிகளைப் போட்டு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம் போட்டு வதக்கி மிச்சம் சாதத்தையும் வெந்த பருப்பையும் கொட்டிக் கலந்து நெய்யில் பெருங்காயம், மிளகு, ஜீரகம், கருகப்பிலை பொரித்துப் போட்டு வட இந்தியக் கிச்சடி மாதிரிச் செய்யலாம். வெங்காயம் நறுக்கி வதக்கி உ.கி. தக்காளி, வேர்க்கடலை போட்டுப் பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து இந்தச் சாதத்தையும் கொட்டிக் கலந்து எலுமிச்சம்பழம் பிழிந்து கொத்துமல்லி தூவிக் கொண்டு அவல் உப்புமா மாதிரியும் பண்ணிச் சாப்பிடலாம்.  பிடித்தால் துபருப்பு வேக வைத்துக் கொண்டு நீர்க்கப் புளி ஜலம் ஊற்றிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு சாதத்தையும் போட்டுக் கலந்து கொண்டு நெய்யில் காய்களை வதக்கிச் சேர்த்துக் கடுகு, கருகப்பிலை, பச்சை மிளகாய் தாளித்துக் கொண்டு கொஞ்சம் சாம்பார்ப் பொடி போட்டுக் கலந்தும் சாப்பிடலாம்.அல்லது மிவத்தல், தனியா, கபருப்பு, வெந்தயம், சோம்பு, கிராம்பு வறுத்துப் பொடித்துக் கலக்கலாம்.

இதை எல்லாம் படித்து விட்டு எப்போவும் மிஞ்சும்; இப்படித் தான் பண்ணுகிறேன் என நினைக்க வேண்டாம். மிஞ்சும் சமயங்களில் எப்போதேனும் யாரேனும் இருந்தால் பண்ணுவேன். சாப்பிடவும் ஆள் வேண்டுமே! எங்க இரண்டு பேருக்கெனில் நான் சாதம் வைப்பதே ஓரே ஓரு ஆழாக்குத் தான். கைப்பிடி மிஞ்சும். அதை ராத்திரி இரண்டு பேரில் யாரானும் போட்டுக் கொள்வோம். சில நாளைக்கு மிச்சமே இருக்காது. இப்போது வேலை செய்யும் பெண்மணி வருவதால் குழம்பு, ரசம் மிஞ்சினால் அவர் கொண்டு போகிறார். இவை எல்லாம் வீட்டில் நிறையப் பேர் இருந்து சமைத்து மிஞ்சும்போது செய்ய வேண்டியவை. அல்லது இரண்டு பேருக்கே சிலர் சமைக்கத் தெரியாமல் நிறையச் சமைத்துவிடுகிறார்கள் அப்போது இம்மாதிரிச் செய்து செய்தவை வீணாகாமல் தீர்க்கலாம்.

லூந்ல்

18 comments:

  1. எங்க வீட்டில் தேங்காய் சட்னி மிஞ்சவே மிஞ்சாது. (நான் வெறும்ன கூட சாப்பிட்டுடுவேன்). ஆனால் திப்பிச வேலை ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. ரொம்ப உபயோகமானதுதான்

    ReplyDelete
  2. இன்னைக்கு நடந்த பிரச்சனைக்குத் தீர்வு சொல்லுங்க.

    காலைலதான் நான் சமையல் பண்ணணும்னு தகவல் வந்தது. அதுவும் 8 1/2 மணிக்குள் சாப்பாடு ரெடியாகணும்னு 6:30 மணிக்குத் தகவல். எனக்கு காலைல நிறைய வேலைகள் உண்டு. ஏதோ நினைவில், கோஸ் மிளகு கூட்டு, பீட்ரூட் கறி செய்வதற்காக, முதலில் பீட்ரூட்டை ஒரு தட்டிலும் இன்னொன்றில் பாசிப்பருப்புக்குப் பதில், உளுத்தம்பருப்பைப் போட்டு தண்ணீர் மஞ்சள் பொடி போட்டு குக்கரில் வைத்தேன். பிறகுதான், பாசிப்பருப்பு வேறு பாட்டிலில் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். (உ.பருப்பு சிறியதாக இருந்ததும், சட்னு எனக்கு வித்தியாசம் தெரியாததும்தான் பிரச்சனை ஹாஹா)

    இப்போ, தளிகை செய்து வைத்திருக்கிற மஞ்சள் பொடி போட்ட உ.பருப்பை என்ன செய்வது? பெரிய வேலைலாம் இல்லாம சுலபமா இதனை எப்படி உபயோகப்படுத்துவதுன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  3. குக்கரில் எல்லாம் நான் வைக்க மாட்டேன்.என்றாலும் இப்போ உளுத்தம்பருப்பு வேக வைத்தது இருப்பதால் அதோடு மிவத்தல் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து உளுத்தம்பூரணமாகப் பண்ணிடுங்க! ரெடி மிக்ஸ் சேவை இருந்தால் உளுந்தம்பூரணத்தைப் போட்டுக் கலந்து சேவையாகச் செய்துடலாம். இல்லைனால் சேமியாவை வேகவைத்துக் கொண்டு ஜலத்தை வடிகட்டிவிட்டு உளுத்தம்பூரணத்தோடு சேர்த்துக் கலந்து வைங்க! இது எதுவும் பிடிக்கலைனால் அப்படியே சாப்பிடலாம். அல்லது அரிசி உப்புமாவுக்குக் கொஞ்சமாக ரவை உடைத்துக் கொண்டு அதிலே போட்டுக் கிளறலாம். பின்னர் தவலை அடை மாதிரித் தட்டிடலாம். வேக வைத்ததையே கூட உப்புக் காரம் சேர்த்து அரைத்து ஆவியில் வேக வைத்து டோக்ளா மாதிரிக் கட் பண்ணிச் சாப்பிடலாம்.

    ReplyDelete
  4. வேக வைத்ததையே உப்புக்காரம் அல்லது மிளகு உப்புச் சேர்த்து வடை மாதிரித் தட்டிடலாம். எல்லாம் எப்படி வெந்திருக்கு என்பதைப் பொறுத்து இருக்கு!

    ReplyDelete
  5. பீட்ரூட் கறிக்குப் பாசிப்பருப்புச் சேர்க்காமல் வேக வைத்த பீட்ரூட்டைக் கறியாகத் தாளிக்கும் முன்னர் பச்சைமிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக ஓட்டிக் கொண்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, உபருப்பு, அரை மி.வ.கருகப்பிலை தாளித்துக் கொண்டு மிக்சியில் அரைத்த கலவையைப் போட்டுப் பிரட்டிக் கொண்டு பின்னர் வெந்த பீட்ரூட்டைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும். ஒரு மாறுதலான பீட்ரூட் கறி.

    ReplyDelete
  6. படித்துவிட்டேன். மிக்க நன்றி....

    ReplyDelete
  7. இந்த முறையில் செய்யும் பீட்ரூட், காரட், முட்டைக்கோஸ் கறிக்கு வெங்காயமும் வதக்கிச் சேர்க்கலாம். தாளிப்பில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிய பின்னர் அரைத்த கலவையைப் போட்டுப் பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஏதேனும் பண்ணும்போது வெங்காயம் சேர்ப்பேன். ஆனால் என் மனைவிக்கு பாரம்பர்யத்தை விட்டு விலகி நான் செய்வது பிடிக்காது. இன்றைக்குக்கூட, மிஞ்சின தோசை மாவில், கோதுமை மாவு சேர்த்து, அலங்காரங்கள் பண்ணி, சிறிய வெங்காயம் நிறைய சேர்த்து பண்ணின தோசை அவள் மனத்தைக் கவரலை. (எதுக்கு சும்மா வெங்காயம் சேர்க்கறீங்கன்னுட்டா). இதில், கரேமதுக்கு வெங்காயம் சேர்த்தால்..............

      Delete
    2. நெ.த. உங்க மனைவி ரொம்பக் கட்டுப்பாடு உள்ளவராய்த் தெரிகிறார். அநேகமாக ஓட்டல்களில் எல்லாம் சாப்பிட மாட்டார் என நம்புகிறேன். நாங்க ச்ராத்தம் வரும்போது ஒரு மாதம் முன்னால் இருந்தும், அமாவாசை வரும்போது முந்தின நாள், பிந்திய நாளைக்கும் வெங்காயம், பூண்டு(எப்போவுமே இல்லை) மற்ற மசாலா பொருட்கள் சேர்ப்பதில்லை. அதே போல் மாதப்பிறப்பு தர்ப்பணங்கள், மஹாலயம் போன்ற தினங்களிலும் முருங்கை, முள்ளங்கி, முட்டைக்கோஸ் கூடக் கிடையாது! இதுக்கே என் புக்ககத்தில் சிலர் சிரிப்பார்கள்! :))))) ரொம்பப் பார்க்கிறோம்னு!

      Delete
  8. சுவாரஸ்யமான திப்பிச வேலைகள்தான். அல்லது அல்லது அல்லதுன்னு எவ்வளவு ஐடியா கொடுக்கறீங்க.... பாஸுக்கு படித்துக் காட்டினேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீராம், இந்தச் சட்டினி மிஞ்சினால் அன்னிக்கே மதிய சமையலில் கீரை செய்தாலோ அல்லது ஏதேனும் கூட்டுப் பண்ணினாலோ தேங்காய் அரைத்து விடுவதற்கு இதைப் பயன்படுத்திக்கலாம். முட்டைக்கோஸ், சௌசௌ போன்றவற்றோடு நன்றாகச் சேரும்! :)))))

      Delete
  9. ஆனால் ஒன்று இதில் எதுவும் மனத்தைக் கவரவில்லை! அடைதோசை, நீர் தோசை கொஞ்சம் ஓகே!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீராம், எங்க வீட்டிலும் இதைக் கேட்டு அல்லது செய்யும்போது பார்த்துச் சிரிப்பது உண்டு. என் நாத்தனார் எல்லாம் இம்மாதிரிச் செய்வதைப் போட்டுக்கவே மாட்டாங்க! அதோட அண்ணாவைப் பார்த்து, "பாவம்! அண்ணா! கஷ்டப்படுகிறார்!" என்பார்கள்! :)))))) நான் கவலையே பட்டுக்க மாட்டேன். புதினா துவையல் மிஞ்சினால் பட்டாணி ஊற வைச்சு அரை உப்புப் போட்டு வேக வைத்துக் கொண்டு வெங்காயம், தக்காளியோடு இந்தப் பட்டாணியும் போட்டு வதக்கிப் புதினாத் துவையலைப் போட்டுக் கலந்து கொண்டு, சமைத்த சாதம் தேவையான அளவுக்குப் போட்டுக் கலந்து கொள்வேன். தேவை எனில் மசாலா சாமான்கள் தாளிப்பில் சேர்க்கலாம். மேலே வெண்ணெய் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி தூவினால் சுவையான புதினா சாதம் தயார்!.

      Delete
  10. கீதாக்கா சட்னி மீந்தால் கவலையே இல்லை. அன்றைய சாப்பாட்டில்....கூட்டு, கீரை, அல்லது குழம்பில் போட்டு அல்லது புளிசேரியாக்கி விடுவதுண்டு.

    சாதம் மீந்தால் கவலையே இல்லை...கலந்த சாதம் அல்லது சாதத்தின் டெக்சருக்கு ஏற்ப சாம்பார் சாதம், பிசி பேளா அல்லது பொங்கல் அல்லது அளவு கம்மியாக இருந்தால் ஆப்பத்தில்/தோசைக்கு அரைக்கும் போது அன்று மீறும் என்று தெரிந்துவிட்டால் டிபன் அதற்கு ஏற்றார்ப் போல் மாவில் போட்டு அரைத்துவிடுவதுண்டு.

    ரொம்ப மீறுவது இல்லை மீந்தாலும் நிறைய உருமாற்றங்கள் நடக்கும். சாதத்தை வைத்து தேங்காய் போட்டு அரைத்து கொஞ்ச அரிசியும் ஊற வைத்து சேர்த்து களிக்கஞ்சி தோசை அல்லது நீர் தோசை...

    இருங்க உங்க திப்பிசம் என்னனு முழுசும் வாசிக்கலை...சட்னி சாதம்னதும் போய்ட்டேன் நான் செய்வதை நினைத்து..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் தோசை மாவில் சாதத்தை அரைத்துக் கலப்பதில்லை. மிஞ்சினால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க முடியாது! :) மற்றபடி அதை எப்படியேனும் செலவு செய்துடுவேன்.

      Delete
  11. உங்க திப்பிசங்களும் சூப்பர் கிட்டத்தட்ட நான் மாற்றும் உருமாற்றங்கல் ஹிஹிஹி.

    அப்புறம் சில சமயம் இந்த திப்பிசமும் மீறி பயமுறுத்தும். என்பதால் கூடியவரை மேலும் எதுவும் போடாமல் இருப்பதை உரு மாற்றிச் செய்துவிடுவதுண்டு. அதுவும் இப்போதெல்லாம் மீறுவதில்லை...அதெல்லாம் சென்னையில் இருந்த வரை அதுவும் எப்போதேனும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் எப்போவும்மிஞ்சாது! எப்போதாவது தான்! ஆனால் சட்னி மிஞ்சும். அப்போ அன்றைய தினம் கூட்டு அல்லது மறுநாளைக்குள் கூட்டில் பயன்படுத்தி விடுவேன்.

      Delete