எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, January 5, 2013

பொரிச்ச கூட்டுன்னா எண்ணெயிலேயா பொரிப்பீங்க?

அடுத்துப் பார்க்கப் போறது ரொம்பச் சாதாரணமான, ஆனால் எல்லாரையும் குழப்பும் ஒரு சமையல் குறிப்பு. அதான் பொரிச்ச கூட்டு.  இந்தப் பொரிச்ச கூட்டுக்கும், பொரிச்ச குழம்புக்கும் குழப்பம் பண்ணிக்கிறவங்க நிறைய உண்டு.  முதல்லே பொரிச்ச கூட்டைப் பார்க்கலாம்.  இதற்கான காய்கள் ஒரு சில தான்.

அவரைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், பூஷணிக்காய்(வெள்ளை), பறங்கிக்காய்(பழுக்காதது), செளசெள, கொத்தவரை,  புடலை, கீரைத்தண்டு, முட்டைக்கோஸ் மற்றும் எப்போதேனும் வாழைக்காயிலும் செய்யலாம்.

அதே சமயம் பொரித்த குழம்பும் அவரைக்காய், முருங்கைக்காய்,  கீரைத்தண்டு, கத்திரிக்காய், புடலங்காய், கொத்தவரை போன்றவற்றில் செய்யலாம்.  மற்றக் காய்களில் பொரித்த குழம்பு அதிகம் செய்வதில்லை.  என்றாலும் எங்க மாமியார் வீட்டில் மிகுந்திருக்கும் காய்களை எல்லாம் போட்டுச் சில சமயம் செய்வதுண்டு. அதிலே உருளைக்கிழங்கும், காரட்டும் கூட இடம் பெறும்.  அதே போல் முட்டைக்கோஸ் பொரித்த கூட்டில் காரட்டைப் போடலாம்.  பச்சைப்பட்டாணி கிடைத்தால் அதையோ அல்லது ஊற வைத்த பச்சைப் பட்டாணியோ போடலாம்.  பொரிச்ச கூட்டுச் செய்யப் பருப்பு வேண்டும்னு அவசியம் இல்லை.  ஆனால் பொரிச்ச குழம்புக்குப் பாசிப்பருப்புப் போடணும்.  ஒரு சில சமயம் பாசிப்பருப்பும், துவரம்பருப்பும் கலந்து போடுவதும் உண்டு.  பொரிச்ச குழம்பு சாதத்தோடு சேர்ந்து சாப்பிடவும், பொரிச்ச கூட்டு சைட் டிஷாகவும் பயன்படுத்துகிறோம்.  இன்னிக்கு பீன்ஸ் பொரிச்ச கூட்டு.  முடிஞ்சால் படம் எடுக்கிறேன். :))))


பொரிச்ச கூட்டு வகைகள் நிறையவே இருக்கு.

முதல் வகை.   மேலே சொன்ன ஏதேனும் ஒரு காய். நான்கு பேருக்கு எனில் ஒரே ஒரு கூட்டு மட்டும் தான் என்றால் அரை கிலோவுக்குக் கொஞ்சம் குறைச்சலாக இருந்தால் போதும்.  பருப்புப் போடாமல் செய்வதே முதலில் சொல்லப் போறேன்.காய்களைக் கழுவிக்கொண்டுப் பொடித்துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  நறுக்கிய துண்டங்கள் குறைந்த பக்ஷமாக மூன்று அல்லது நான்கு கிண்ணங்கள் வரும்.  அதற்குத் தேவையானவை, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு.  இவை இரண்டையும் நன்கு நைசாக நீர் விட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

காய்களை ஒரு உருளி அல்லது கல்சட்டி, அல்லது அலுமினியம் கடாய் அல்லது நான்ஸ்டிக் கடாய் அல்லது பாத்திரம் ஏதேனும் ஒன்றில் ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.  கறிகளுக்கு ஊத்தறாப்போல் எண்ணெயை நிறைய விட்டெல்லாம் வதக்கக் கூடாது.  ஒரு முட்டைனா ஒரே ஒரு முட்டைதான்.  காய் சீக்கிரம் வேகவும், நிறம் மாறாமல் இருக்கவுமே இப்படி வதக்க வேண்டும்.  வதக்கிய பின்னர் தேவையான நீரை ஊற்றி மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சாம்பார் பொடி பிடித்தமானால் சேர்க்கவும்.  காய் நசுங்கும் பதம் வெந்ததும் உப்புச் சேர்த்து ஓரிரு நிமிடம் வேக வைக்கவும்.  அரைத்த விழுதைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கிக் கொண்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.  இப்போது உங்கள் கூட்டு சாப்பிடத் தயார்.



கூட்டுசாதம் பிடித்தால் சாதத்தோடும் சாப்பிடலாம்.  அல்லது சைட் டிஷாகவும் பயன்படுத்தலாம்.  மிகவும் மிதமான உணவுக் குறிப்பு இது.  எண்ணெயும் அதிகம் தேவையில்லை.  தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கு என்பவர்கள் ஒரு முறை ஏதேனும் பண்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களிடம் பேசிப் பார்த்தால் தேங்காய் நம் உடலுக்கு எவ்வளவு தேவை என்பது புரியும்.  கொப்பரை பயன்படுத்தக் கூடாது.  சமையலில் தாளிக்கும் அளவு தே. எண்ணெயோ, கூட்டில், கறியும் சேர்க்கும் தேங்காயோ உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைத் தரக்கூடியவை.

அடுத்தடுத்த முறைகள் தொடரும்.  இதுவே பெரிசாயிடுச்சே.  படம் எடுத்தாச்சு. சேர்க்கணும்.  சேர்த்துடுவோம். :))))

சேர்த்துட்டோமுல்ல!

14 comments:

  1. கூட்டுசாதம் பிடித்தால் சாதத்தோடும் சாப்பிடலாம். அல்லது சைட் டிஷாகவும் பயன்படுத்தலாம்.

    அருமையாய் சுவையான கூட்டு ..

    ReplyDelete
  2. நல்லா சொல்லியிருக்கீங்க. எல்லா காய்கறியையும் போட்டுட்டா அதுக்கு பேரு அவியல் இல்ல :-) நன்றி.

    ReplyDelete
  3. பொரிச்ச கூட்டு ரெசிபி சூப்பர். நாளைக்கே பண்றேன். ஒரு முட்டை நல்லெண்ணெய்ல காயெல்லாம் வதகிக்கனும்ங்கறது எனக்கு தெரியாது. இப்ப தெரிஞ்சுண்டேன். இப்படி பண்ணி பாக்கறேன். நன்றி.

    ReplyDelete
  4. வாங்க ராஜராஜேஸ்வரி, ரசனைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாங்க மயில் ராவணன், முதல் வருகைக்கும், அருமையான கருத்தைச் சொன்னதுக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  6. வாங்க மீனாக்ஷி, காய்களை வதக்கிப் பின் வேக விடுவதால் வேகும் நேரம் குறைவதோடு நிறமும் மாறாது. அதே சமயம் எல்லாக் காய்களையும் வதக்கவும் கூடாது. அவரை, கொத்தவரை, கத்திரிக்காய், முருங்கைக்காய், புடலங்காய் போன்ற காய்களை வதக்கலாம். வாழைக்காயில் கூட்டுச் செய்தால் வதக்கக் கூடாது. சேனைக்கிழங்கு போன்றவற்றையும் வதக்கக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. வாழைக்காயில் கூட்டு என்பது எனக்கு புதிதாக (புதுமையாகவும்) உள்ளது.

      Delete
  7. அரைத்து விடாமல் பொடி மட்டும் போட்டு சாம்பார் செய்கையில் அதில் போடும் தான்களை வதக்கினால் நன்றாக இருக்கும். குடைமிளகாய், அவரைக்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றில் சாம்பார் செய்கையில் வதக்கிச் சேர்க்கலாம். வெங்காய சாம்பார் செய்கையில் சின்ன வெங்காயத்தை காம்பிலும் அதிகம் நறுக்காமல் வால் பாகமும் நிறைய வெட்டாமல் கொஞ்சம் விட்டு வைத்து அதை நல்லெண்ணெயில் நன்கு வதக்கி விட்டுப் பின்னர் சாம்பார் வைத்தால் மணம் ஊரைத்தூக்கும். இரண்டு நாட்களுக்கு மணம் சுற்றி வரும்.

    ReplyDelete
  8. பின்னூட்டத்தில் கொடுத்த டிப்ஸ்க்கு மிகவும் நன்றி.

    அதென்ன நல்லெண்ணையில்தான் வதக்க வேண்டுமா? எனக்கு நல்லெண்ணெயில் செய்வது மிகவும் பிடிக்கும். ஆனால் பொதுவாக கேட்கிறேன்.
    இன்னிக்கு பெங்களூர் கத்தரிக்காய் பொறிச்ச கூட்டு இந்த முறையில்தான் பண்ணினேன். மிகவும் பிடித்தது. ரொம்ப ரொம்ப நன்றி. :)

    //அரை ஸ்பூன் சாம்பார் பொடி பிடித்தமானால் சேர்க்கவும். // இதை சேர்க்காமல் இருந்தால் காரத்துக்கு என்ன சேர்ப்பது. தாளிச்சு கொட்டும்போது போடும் வத்த மிளகாய் போதுமா?
    உங்களை நிறைய கேள்வி கேட்டு ரொம்ப தொந்தரவு பண்றேனோ? :))

    ReplyDelete
  9. உங்களை நிறைய கேள்வி கேட்டு ரொம்ப தொந்தரவு பண்றேனோ? :)//

    அதெல்லாம் இல்லை. இப்படிக் கேள்வி கேட்பதால் என் சமையல் முறையில் இன்னமும் கொஞ்சம் முன்னேற்றங்களே ஏற்படும்! :)))))

    பொதுவாகப் பொரிச்ச கூட்டே வயிற்றுக்கு இதமாக இருக்க வேண்டிக் காரம் அதிகம் இல்லாமல் பண்ண வேண்டிய ஒன்றே. தாளிக்கும் மிளகாயே எங்க வீட்டிலே போதும்னு விட்டுடுவோம். காரம் தேவை இருக்கிறவங்க மட்டும் சாம்பார் பொடி சேர்க்கலாம். கொஞ்சமே கொஞ்சம் ருசி மாறும். அம்புடுதேன்! :))))

    ReplyDelete
  10. நல்லெண்ணெயில் சீக்கிரம் வதங்கும் என்பதோடு எண்ணெயில் வதக்கிய வாசனையும் வராது. வயிற்றையும் எதுவும் செய்யாது. கடலை எண்ணெய், மற்ற சமையல் எண்ணெயில் வதக்கினால் அப்படி இருப்பதில்லை. சொந்த அனுபவம்! :))))

    ReplyDelete

  11. ஆமாம், பொரிச்ச கூட்டுக்கும், பொரிச்ச குழம்புக்கும் ரொம்பவே குழம்பும்தான்! கைகளை முதலிலேயே வதக்கிக் கொள்வது வெந்தயக் குழம்புக்கு மட்டும்தான் செய்வோம். இங்குமா? செய்து பார்த்துடலாம்.

    (மறுபடியும் கணினி 4 நாட்கள் படுத்து சண்டி செய்து விட்டது!)

    ReplyDelete

  12. காய்களை என்பது கைகளை ஆகி விட்டது. நோ இம்போசிஷன் ப்ளீஸ்!

    ReplyDelete
  13. கூட்டங்கள் கூடங்களானப்போவே இம்பொசிஷன் கொடுக்க நினைச்சேன், நம்ம பதிவு இல்லைனு வந்துட்டேன். :))))) இங்கே கூடக் கொடுக்காட்டி எப்படி?

    எழுதுங்க லக்ஷம் முறை! ஹிஹிஹி

    எல்லாக் காய்களையும் வதக்கணும்னு இல்லை. பறங்கி, செளசெள, பூஷணி போன்றவற்றை வதக்காமல் வேக விடலாம். அதிலேயும் ஒரு முக்கியமான டிப்ஸ் இருக்கு. துண்டமாக நறுக்கினால் ஒரு டேஸ்டும், நீளமாக நறுக்கினால் வேறு மாதிரியும் இருக்கும். :)))) நான் மோர்க்கூட்டுக்கு என்றால் நீளமாக குழந்தை கைவிரல் மாதிரி நறுக்குவேன். பொரிச்ச கூட்டு என்றால் துண்டமாக நறுக்குவேன்.

    ReplyDelete