எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, November 7, 2019

பாரம்பரியச் சமையல்கள்! உருளைக்கிழங்கு தொடர்கிறது.

வாழைக்காய்ப் பொடிமாஸ் போல உருளைக்கிழங்கிலும் பொடிமாஸ் பண்ணலாம். கீழே அதன் குறிப்பு!

நான்கு பேருக்கான செய்முறைக்குறிப்பு:-

அரை கிலோ உருளைக்கிழங்கு, தேங்காய் மூடி ஒன்றின் துருவல், பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, உப்பு, தாளிக்க கடுகு, உபருப்பு, க.பருப்பு, பெருங்காயத் தூள், கருகப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சை மூடி ஒன்று. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.

உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக்கொண்டு (ஹிஹிஹி) உதிர்த்துக் கொள்ளவும்.  உப்புப் பொடி சேர்த்துக் கிளறிக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு, உப்புப் போட்டுக் கலந்த உருளைக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.  தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நன்கு கிளறி விட்டுக் கீழே இறக்கிக் கொத்துமல்லிப்பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  சற்று ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.  வத்தல் குழம்போடு அருமையான துணை!



உருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட காரக்கறி: நான்கு பேருக்குத் தேவையான அளவு

அரைக்கிலோ உருளைக்கிழங்கு, கால் கிலோ சின்ன வெங்காயம் அல்லது 2 பெரிய வெங்காயம். தோலை உரித்துக்கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் 4, கருகப்பிலை, தாளிக்க எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு தேவைக்கு. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி தேவையானால் அரை டீஸ்பூன், பெருங்காயம் தேவையானால் பொடியாக கால் டீஸ்பூன்.

உருளைக்கிழங்கைக் கழுவி மண் போக அலசிவிட்டுக் குக்கரிலோ அல்லது பெரிய கடாயிலோ வேகப் போடவும். கடாயில் வேகப்போட்டால் உருளைக்கிழங்கை நான்காக வெட்டிப் போட்டு வேக வைக்கலாம். பின்னர் தோலை உரித்துக்கொண்டு நிதானமான அளவில் எல்லாக் கிழங்குகளையும் ஒரே மாதிரி வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் குழைவாக வேண்டுமெனில் குழைவாக வேக விட்டு உதிர்த்தாற்போல் வைத்துக்கொள்ளலாம். அவரவர் ருசிக்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கொள்ளவும்.

மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நன்கு கலந்து கொண்டு உருளைக்கிழங்குத் துண்டங்களில்  போட்டு நன்கு கலந்து வைக்கவும். பின்னர் அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு தாளிக்கத் தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கடுகு, பருப்பு வகைகள் தாளித்துக்கொண்டு பச்சை மிளகாய்,  கருகப்பிலை போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும். பின்னர் கலந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்துவிட்டால் வதக்கியது போதும். அடுப்பை அணைக்கவும். இது சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி ஆகிய எல்லாவற்றோடும் நன்றாக இருக்கும்.

9 comments:

  1. உருளைக் கிழங்கு பொடிமாஸ் வெங்காயம் போட்ட காரக் கறி - சாப்பிட்டு ரொம்ப ரொம்ப நாளாயிடுச்சு (வருடங்களாயிடுச்சு). பொடிமாஸ்ல எலுமிச்சை சாறு சேர்க்காமலும் செய்வாங்க. ஆனா எலுமிச்சை சாறு இன்னும் நல்லா இருக்கும்.

    உருளைக் கிழங்குதான் எத்தனை உபயோகம், அனேகமா எல்லாருக்கும் பிடித்தது.

    ReplyDelete
    Replies
    1. உருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடிச்சாலும் பலருக்கும் ஒத்துக்கிறதே இல்லை. எங்க வீட்டில் எனக்கு ஒத்துக்கும், அவருக்கு ஒத்துக்காது. ஆனாலும் கொஞ்சமாய்ச் சாப்பிடுவார்.

      Delete
  2. உருளைக்கிழங்கு பொடிமாஸ் பற்றிப் பேசும்போது என் பாஸ் அறிவாளி முத்துலட்சுமி மாதிரி.  ஆனால் செய்ததில்லை!

    ReplyDelete
    Replies
    1. வெந்தயக் குழம்பு, சாத்துமது இவைகளுக்கு நல்லா இருக்கும். அவங்க ஏன் செய்யணும்? இப்போதான் செய்முறை போட்டாசே. எ.பிக்கு செய்து அங்கு எழுதிடுங்க ஸ்ரீராம்.

      Delete
    2. ஆமாம், ஸ்ரீராம், நீங்க செய்து பாஸுக்குப் போட்டுட்டு அதை எ.பியிலும் சொல்லுங்க. :)))) நான் அப்படியே சாப்பிடுவேன். மிஞ்சிப் போனாலும் கவலை இல்லை. கொஞ்சம் போல் காரப்பொடி போட்டுக் கலந்துட்டு மத்தியான டிஃபனுக்கு உ.கி.போண்டாவாகப் போட்டுடலாம்.

      Delete
  3. காரக்கறி அடிக்கடி செய்வதுதான்.   நம்ம வீட்டுல சுலபம்!  உ கி வேகவைத்துக்கொண்டு உரித்து, நறுக்கிய வெங்காயத்தை தாளிதத்தோடு வதக்கி உருளைக்கிழங்கை சேர்த்ததுஉப்பு போட்டுகொஞ்சம் வதக்கியபின் காரப்பொடி சேர்த்து இன்னும் மொறுமொறு செய்து இறக்கிவிடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. இன்று எண்ணையில் பெ., காரப்பொடி, ம.பொடி, உப்பு-இந்துப்பு எல்லாம் நல்லா கலந்து, வேகவைத்து கட் பண்ணின உருளையை அதில் நன்றாக பிரட்டி காரக் கறி செய்தேன். நல்லா வந்தது (கீசா மேடம் இதற்கு முன்னால சொல்லியிருந்தாங்க)

      Delete
    2. ஸ்ரீராம், நான் சொன்ன முறையில் செய்தால் உப்பு, காரம் சீராக இருக்கும் என்பதோடு எண்ணெய் குறைவாகச் செலவு ஆகும்.

      Delete
  4. நெ.த. உப்பு சேர்த்தால் இந்துப்பு சேர்க்கணும்னு இல்லை. உணவில் உப்புக் குறைச்சலாச் சாப்பிடணும் என்பவர்கள் இந்துப்பை முழுப் பயன்பாட்டில் வைச்சுக்கலாம். இந்தக் கடல் உப்பை விட இந்துப்பின் குணத்தால் உப்பின் தாக்கம் குறைவாக இருக்கும்.அதிக வித்தியாசம் தெரியாது. நான் ஒரு காலத்தில் கோடம்புளியும், இந்துப்புமே சமைத்தேன். பின்னர் அடிக்கடி கிடைக்காமல் போவதால் விட்டுட்டேன்.

    ReplyDelete