எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 27, 2017

உணவே மருந்து-- கொத்துமல்லி--3

கொத்துமல்லி பல வியாதிகளுக்கும் நன் மருந்து. கொத்துமல்லி விதையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு சாதத்தோடு கலந்து சாப்பிடலாம். அதற்குத் தேவையான பொருட்கள்

கொத்துமல்லி விதை ஒன்று அல்லது இரண்டு கிண்ணம்

மி.வத்தல் காரமானதாக இருந்தால் 4,5 போதும். இல்லை எனில் பத்து வேண்டும்.

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் விரும்பினால் அல்லது பொடிக்கையில் பவுடரைச் சேர்த்துக்கலாம்.

மிளகு இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மேலே சொன்ன அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பின்பு மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். சூடான சாதத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு சாப்பிட்டால் வாய்க்கு ருசியாக இருக்கும். பித்தம் இருந்தால் குறையும்.

இந்தக் கொத்துமல்லி விதையோடு, ஜீரகம், கருஞ்சீரகம், சதகுப்பை, அதிமதுரம், கிராம்பு, லவங்கப்பட்டை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம்  எடுத்துக் கொண்டு, கால் கிலோ கொத்துமல்லி விதையையும் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு வெள்ளைக் கற்கண்டோடு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொண்டு வெந்நீரோடு கலந்து சாப்பிட்டு வர நெஞ்செரிச்சல், விக்கல் ஆகியன தீரும்.

கொத்துமல்லி சாதம்:

கொத்துமல்லி இப்போ விக்கிற விலையிலே கொத்துமல்லி சாதமானு முறைக்காதீங்க! மலிவாக் கிடைக்கும்போது செய்துக்கலாம்.

இதுக்குச் சாதத்தை முதலிலேயே உதிர் உதிராக வடிச்சுக்கணும். தேவையான பச்சைப்பட்டாணி புதிதாகக் கிடைச்சால் வாங்கிக்கலாம். இல்லைனா கடையில் கிடைக்கும் காய்ந்த பச்சைப்பட்டாணியை ஒரு கைப்பிடி முதல்நாளே ஊற வைச்சு சாதத்தோடு சேர்த்து வேக வைச்சுக்கலாம்.

கொத்துமல்லி ஒரு கட்டு

பச்சை மிளகாய் 4,5 காரத்திற்கு ஏற்ப

இஞ்சி ஒரு துண்டு

ஜீரகம் தேவைப்பட்டால்

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு

உப்பு தேவையான அளவு

பெருங்காயம் சிறிதளவு

மேலே சொன்ன சாமான்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு அல்லது வேர்க்கடலை மட்டும். பச்சைப்பட்டாணி போடுவதால் ஏதேனும் ஓர் பருப்பு வகை போதும்

வெங்காயம் தேவை எனில் ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மசாலா சாமான்கள் தேவை எனில் பிரிஞ்சி இலை, ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு சின்ன துண்டு லவங்கப்பட்டை

மேலே கொடுத்திருக்கும் தாளிக்கும் சாமான்களை எல்லாம் எண்ணெய் காய்ந்த பின் ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளித்து வெங்காயம் தேவை எனில் அதைப் போட்டு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் கொத்துமல்லி விழுதைத் தேவையான அளவுக்குப் போட்டு நன்கு வதக்கவும். சமைத்து ஆற வைத்திருக்கும் உதிர் உதிரான சாதத்தைப் போட்டு நன்கு கலக்கவும்.  சாதம் நன்கு கலந்ததும் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, காரட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டுத் தயிர்ப் பச்சடி தயாரிக்கலாம். 

6 comments:

  1. இஞ்சி ஜீரகத்துக்கு கொத்தமல்லி சாத்த்துல என்ன வேலை? மசாலாவுமா? ஐயோடா..... இவைகள் இல்லாம உங்க மெதட்ல நாளையே செய்துபார்க்கிறேன். 2 கொத்தமல்லிக் கட்டு இருக்கு.

    ஒருவாரம் முன்பு ஒரு கட்டு 32 ரூபாய் பழமுதிர்ச்சோலைல. ஆனாலும் ஹஸ்பண்டை தக்காளி சாத்துமது, சேம்பு ரோஸ்ட் பண்ணச்சொன்னதுனால வாங்கினேன். இன்று அதே சைஸ். கட்டு இங்க (ஆனா more fresh) 24 ரூ... எப்படித்தான் அங்க survive பண்ணுவதோ.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, மசாலா சாமான்கள் எல்லாம் தேவைப்படுபவர்களுக்குத் தான் நெ.த. நான் வெங்காயம் கூடப் போட மாட்டேன். கொத்துமல்லி சாதம் எனில் கொத்துமல்லி மிளகாய்ப் பொடி பண்ணி அதைச் சாதத்தில் கலந்து சாப்பிடுவேன். நம்ம ரங்க்ஸுக்கு அதுவும் பிடிக்காது! இது பிடித்தவர்கள் பண்ணப் போட்ட ரெசிபி. கொத்துமல்லிச் சட்னி பச்சைமிளகாய் வைச்சுப் பண்ணும்போது அதைச் சாட் தயாரிப்பில் கலக்கவென்றாலோ, தயிர்வடைக்கு என்றாலோ இஞ்சி சேர்ப்பேன். அதே போல் மசாலா ஃப்ரைட் ரைஸ் போன்றவற்றிற்குப் பொடி சேர்க்காமல் அரைத்து விடும்போது பச்சைமிளகாயோடு ஒரு துண்டு இஞ்சி வைப்பேன். அதுவே தோசைக்குச் சட்னி எனில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, ஒரு சின்னச் சுண்டைக்காய் அளவு புளி, பெருங்காயம் உப்பு இவை தான்! :)

      Delete
  2. //மி.வத்தல் காரமானதாக இருந்தால் 4,5 போதும். இல்லை எனில் பத்து வேண்டும்.//

    எங்கள் வீட்டில் இருக்கும் பச்சை மிளகாய்ச் செடியில் வரும் ப.மி யில் காரமே இல்லை என்று தோன்றுகிறது. ஊசி மிளகாய் போல இருக்கிறது!

    மிளகு, து ப இல்லாமல் தனியாப்பொடி பாஸ் செய்வார். அடுத்த முறை இதையும் சேர்க்கச் சொல்கிறேன்.

    புதினா சாதம் செய்திருக்கிறோம்.அது வேற மாதிரி! வேற சில அடிஷ ன்ஸ் உண்டு! கொம சா செய்ததில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஊசிமிளகாய் என்றால் காரம் என்றே நாங்கல்லாம் சொல்வோம். சின்னதாகக் குட்டிக் குட்டியாக இருக்கும் நாட்டு மிளகாய் தான் காரம் அதிகம் இருக்காது. புதினா சாதம் நாங்களும் செய்வோம். துவையல் அரைத்தும் துவையல் அரைக்காமலும், :) தனியாப் பொடிக்கு நான் பருப்பு வைப்பதில்லை. சிலர் வைக்கிறாங்க என்பதால் இங்கே கொடுத்தேன். தனியா, மிளகு, மி.வத்தல், உப்பு, பெருங்காயம் தான் நான் வைப்பேன்.

      Delete
    2. ஸ்ரீராம் - நீங்கள் தவறுதலா ஊசி மிளகாய் என்று எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இது கர்னாடகா மற்றும் எல்லைப் பகுதிகளிலும் நாகர்கோவில் சைடுலயும் கிடைக்கும். சின்ன ஊசி மாதிரி இருக்கும். பயங்கர காரம். நான் 6 வருஷத்துக்கு முன், நாகர்கோவில் தொட்டிப்பாலம் அருகே குடும்பத்தோடு போயிருந்தபோது வீம்புல 1 மிளகாய் வெறும்ன சாப்பிட்டேன். வயத்தவலி தாங்கலை, அவங்க உடனே மோர் கொடுத்தாங்க.

      Delete
    3. இப்போ சந்தையிலே வரும் மிளகாய்களே காரமாகத் தான் இருக்கின்றன. அதோடு நீளமும் அதிகம். ஒரு மிளகாயை மூன்றாக்கிப் பயன்படுத்துகிறேன். அப்படியும் காரம் என்றே தோணும்.

      Delete