எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, August 21, 2017

உணவே மருந்து! மாங்காய் 8

மாங்காய் சாதம்:-

இது எங்க வீட்டில் அவ்வளவா போணி ஆவதில்லை. நானும் யார் வீட்டுக்காவது போகும்போது அவங்க செய்தால் தான் சாப்பிட்டிருக்கேன். பெரும்பாலும் இதற்கு வெங்காயம், பூண்டு சேர்ப்பதில்லை.  எனக்கு என்னமோ மாங்காய்த் தொக்கை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும் உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. எனினும் எளிமையான ஒரு குறிப்பு மட்டும் தரேன்.

நல்ல கல்லாமை (ஒட்டு மாங்காய்) ரகம் பெரிதாக ஒன்று. தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.  தனியே வைக்கவும்.

நல்ல அரிசியில் சாதம் சமைத்து உதிர் உதிராக வைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் சாதம்.

தாளிக்க

நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு,

உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை போன்றவை. வேர்க்கடலை மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மற்றவை ஒரு டீஸ்பூன் போதும்.

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி விழுது இரண்டு டீஸ்பூன்

மி.வத்தல்

பெருங்காயம், கருகப்பிலை

மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லியை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, மி.வத்தல், பெருங்காயம் கருகப்பிலை என வரிசையாகத் தாளிக்கவும்.

பின்னர் துருவிய மாங்காயைப் போட்டு வதக்கிப் பச்சை மிளகாய் விழுது, மி.பொடி மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். உப்புச் சேர்க்கவும். இப்போது சமைத்த சாதத்தை அதில் போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும். இதற்குத் தக்காளிப் பச்சடி நல்ல துணையாக இருக்கும். தக்காளியை நன்கு வதக்கிக் கொண்டு தயிரில் கலந்து உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொண்டு மாங்காய் சாதத்தோடு பரிமாறவும்.

மாங்காய் மோர்க்குழம்பு:-

இதற்கு அரைப் பழங்களாக இருக்கும் காய்கள் நன்றாக இருக்கும். தோலைச் சீவிக் கொண்டு துண்டங்களாக்கி மாங்காயை வேக விடவும். மாங்காய்க்குத் தேவையான உப்புச் சேர்க்கவும்.

வற்றல் மிளகாய், பச்சைமிளகாய் தலா இரண்டு

ஜீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

புளிப்பு அதிகம் இல்லாத மோர் ஒரு கிண்ணம் (மாங்காயில் புளிப்பு இருப்பதால் மோரில் புளிப்புத் தேவையில்லை)

மஞ்சள் பொடி

உப்பு மோருக்குத் தேவையானது, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்கத் தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஒரு மி.வத்தல், கருகப்பிலை

புளிப்பில்லாத மோரில் மிளகாய்கள், ஜீரகம், தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவையானால் அரிசியை ஊறவைத்துச் சேர்த்து அரைக்கலாம். அல்லது அரிசி மாவு இரண்டு டீஸ்பூனை அரைக்கையில் சேர்க்கலாம். இந்தக் கலவையை மோரில் மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து கொண்டு வெந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களோடு சேர்க்கவும். கரண்டியால் நன்கு கிளறவும். குழம்பு ஒரே ஒரு கொதி வந்தால் போதும். மேலே நுரைத்து வரும்போது கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.

மாம்பழ சாம்பார்:- அதே போன்ற தித்திப்பும் புளிப்புமான மாங்காய்கள் தோல் சீவித் துண்டங்களாக்கிக் கொள்ளவும். உப்புச் சேர்த்து வேக விடவும்.

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்

உப்பு தேவையான அளவு

துவரம்பருப்பு குழைய வெந்தது அரைக்கிண்ணம்

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் தலா ஒரு டீஸ்பூன் ஒரு வற்றல் மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி

வெந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களில் புளி ஜலத்தைச் சேர்த்து அதற்கேற்றவாறு உப்புச் சேர்த்துக் கொண்டு, சாம்பார்ப் பொடி, பெருங்காயப் பொடி தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வந்ததும் கீழே இறக்கி எண்ணெயில் கடுகு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளித்துக் கொட்டிப் பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கித் தூவவும். 

11 comments:

  1. படம்லாம் சேர்த்துப் போட்டால் அட்டஹாசமாக இருக்கும். இருந்தாலும் நல்ல விளக்கமான செய்முறை. அடுத்த மாங்காய் சீசன் வரும்வரை காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பண்ணலையே, இதெல்லாம் அவ்வளவாப் பண்ண முடியாது! போனால் போகிறதுனு நான் மட்டும் சாப்பிடுவேன். :)

      Delete
  2. மாங்காய் சாதம் யாரோ கொடுத்து ஒருமுறை சுவைத்திருக்கிறேன். எனக்கு ரசிக்கவில்லை! மற்ற இரண்டும் சுவைத்ததேயில்லை. ஆசையும் இல்லை!!!

    மூன்று ஐட்டங்கள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை பெரிய எழுத்துகளிலோ, கோடிட்டோ வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் வித்தியாசம் காட்டி எழுதணும்னு தோணலை! மாங்காய் சாதம் எனக்கும் பிடிக்காது! :)

      Delete
  3. recipes attakasam. mangayai theduthu manasu. but season mudinchu pochey :(

    ReplyDelete
    Replies
    1. நன்றி தேனம்மை! கார் மாங்காய் வருமே! அப்போப் பண்ணிச் சாப்பிடலாம்.

      Delete
  4. உங்களைப் போன்றவர்கள், நல்ல வரிசையில் எல்லாவித செய்முறைகளையும் எழுதி, புத்தகமாகப் போடவேண்டும். அதற்குப் படங்கள் சேர்த்தால், நல்ல மின்னூலாகவும் எல்லோருக்கும் உபயோகப்படும்படியும் இருக்கும்.

    எனக்கு, இந்தத் தளம் உங்கள் பொது எண்ணங்களை எழுதும் தளத்தைவிட உபயோகமான தளமாகத் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, பொதுவாப் புத்தகக் கண்காட்சியிலேயே சமையல் புத்தகங்களே அதிகம் விற்பனை ஆகும் என்பார்கள்! நீங்க சொல்வது அதை நிரூபிப்பது போல் இருக்கு! :)

      Delete
    2. எழுதப்போறீங்களா இல்லையா? அதைச் சொல்லலையே? நான் வேண்டுமானால், தலைப்புகளும் வரிசையும் தரவா?

      Delete
    3. பார்க்கலாம் நெ.த. :)

      Delete
  5. எங்கள் கிராமத்து வீட்டில் மாங்காய் மரங்கள் மூன்று.விதம்விதமாய் செய்வோம். மாங்காய் தேங்காய்ப்பால் சொதியும்உண்டு.

    ReplyDelete