எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 7, 2017

உணவே மருந்து கொத்துமல்லி!

கொத்துமல்லியில் அதன் இலை, வேர், தண்டு, விதைகள் அனைத்துமே பயன்பாட்டில் இருக்கின்றன. கொத்துமல்லி சாதாரணமாக வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம். வெகு விரைவில் வளரும். நம் நாட்டுத் தட்ப வெப்பம், அதிலும் தமிழ்நாட்டின் தட்ப வெப்பம் அதற்கு ஏற்றதாகவே உள்ளது. கொத்துமல்லி விதையை ஓர் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் அதை நன்றாகத் தேய்த்து ஒரு தொட்டியில் மண், சாம்பல், உரம் போன்ற கலவையோடு சேர்த்து விதைத்தால் பதினைந்து நாட்களில் சின்னச் சின்னச் செடிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

Image result for கொத்துமல்லி

படத்துக்கு நன்றி தினகரன் கூகிளார் வாயிலாக!

வாழைத் தோட்டங்களில் ஊடு பயிராகவும் வளர்ப்பார்கள். இது அதிக அளவு வளர்ப்பதற்குச் சரியாக இருக்கும். சுமார் 50 சென்டிமீட்டர் வரை உயரமாக வளரும் இந்தச் செடியை அப்படியே பிடுங்கி சமையலுக்குப் பயன்படுத்தலாம். விதைகளுக்காகவும் செடியை விட்டு வைப்பார்கள். அடிக்கடி களை எடுக்க வேண்டும். கொத்துமல்லி இலையைச் சமையலில் சேர்த்தால் வாசனை மட்டுமின்றி பசியைத் தூண்டவும் செய்யும். உடல் சூடு, தலைச்சூடு போன்றவற்றைக் குறைப்பதோடு தூக்கம் வரவும் உதவும்.  உடலுக்கு உறுதியை ஏற்படுத்திப் பித்தத்தைக் குறைக்கும். இலைகளைத் துவையல், சட்னி செய்து சாப்பிடலாம்.

விதைகளும் வாசனைக்கு மட்டுமில்லாமல் சாம்பார் தயாரிக்கையில் முக்கிய மசாலாப் பொருளாகப் பயனாகிறது. வட நாட்டு சமையலிலும் கொத்துமல்லி விதை "தனியா" என்னும் பெயரிலே முக்கிய இடம் வகிக்கிறது. வயிற்றுப் பொருமல், வயிற்றுக் கழிச்சல்,  அஜீரணம் போன்றவற்றிற்குக் கொத்துமல்லி விதைகளை வறுத்துக் கொண்டு பொடி செய்து சூடான சாதத்தில் நெய்யை ஊற்றிச் சாப்பிட்டால் சரியாகும். இந்தியா முழுவதும் பயிராகும் கொத்துமல்லியின் வாசனை ஊரைத் தூக்கும்.

ரசம், சாம்பார் மட்டும் சில காய்கள், கூட்டு வகைகளில் கொத்துமல்லி சேர்க்கப்படும்போது அதன் மணம் உணவின் மேல் விருப்பத்தைத் தூண்டும். இதில் கால்சியம், இரும்புச் சத்து. மங்கனீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங் போன்ற சத்துக்கள் அடங்கியது. இதன் தண்டைப் பெரும்பாலும் களைந்து எறிந்து விடுகின்றனர். மாறாக அதையும் சேர்த்துத் துவையலாக அரைத்து உண்ணலாம். அல்லது காய வைத்து ரசப்பொடி அரைக்கையில் சேர்க்கலாம்.  கொத்துமல்லி விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம் என்றும் அறிகிறோம். இந்த எண்ணெய் மருத்துவத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.  சர்க்கரை வியாதிக்கும் நல்ல மருந்தாகச் சொல்கின்றனர்.  பித்தம், வாந்தி, விக்கல் போன்றவற்றிற்கும் கொத்துமல்லி நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.

அதிகமாகக் குடி போதையில் இருப்பவர்களுக்கும், சாராயம் குடிப்பவர்களுக்கும் போதை தெளியக் கொத்துமல்லியை அரைத்து அதைக் காடி நீர் எனப்படும் புளித்த நீரில் கலந்து கொடுத்தால் சரியாகும். காடி நீர் என்பது பெரும்பாலும் அரிசி களைந்த கழுநீரைப்புளிக்க வைத்தது என்பார்கள்.  அல்லது புளித்த கஞ்சி, வினிகர் போன்றவற்றையும் சொல்லலாம். 

5 comments:

  1. கொத்துமல்லி இல்லாத சமையல் (சாம்பார், ரசம்) இருக்க முடியுமா? ஆனால் இதை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வரவழைக்க நான் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை!!! :(

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கொத்துமல்லிக்கு அவ்வளவா ரசிகர்கள் இல்லைனு நினைக்கிறேன். :)

      Delete
  2. ஸ்ரீராம் - எல்லாவற்றிலும் கொத்துமல்லியைச் சேர்க்கமுடியாது (மோர் சம்பந்தமானது-மோர்க்குழம்பு, மோர்ச்சாத்துமது, எதில் இன்னொன்றின் வாசனை தூக்கலாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அதில்-வெங்காய சாம்பார், மிளகு/ஜீராமிளகு ரசம் போன்று)

    கொத்துமல்லியில் எனக்கு ரொம்பவும் பிடித்தது, எங்க அம்மா செய்யும், கொத்துமல்லி/புளி (ofcourse உ.பருப்பு, மிளகாய் போன்றவை சேர்த்து) தொக்கு. இதை மிக்சியில் அரைத்தால் சரிப்படாது. நீர் விடாமல், இடித்துச் செய்யவேண்டும். அதுவும் மோர் சாதமும், அல்லது மாவு தோசையும் அல்லது அடை கூட ஓகே - ரொம்ப அருமையா இருக்கும். மிக்சில, சிக்கிடும்னு, தண்ணீர் சேர்ப்பதால் அம்மா செய்த பக்குவம் வந்ததில்லை.

    ReplyDelete
  3. கொத்துமல்லி பொடி எனக்குப் பிடித்த ஒன்று..... அதில் தான் எத்தனை வாசமும் சுவையும்!

    ReplyDelete
    Replies
    1. கொத்துமல்லி விதைப் பொடியா? எனக்கும் பிடிக்கும். அதைப் பொடியாக அரைக்காமல் என் அம்மா வறுத்து அரைத்துத் துவையலாகவும் செய்வார்.

      Delete