எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 6, 2012

சேவை செய்யறேன், வாங்க, சாப்பிடலாம்!

சேவை, இடியாப்பம் எல்லாம் ஒண்ணுதான்னு நினைக்கிறேன்.  கிட்டத்தட்ட 2 வருஷங்களுக்கு மேல் ஆச்சு சேவை செய்து.  இங்கே வந்து கொழுக்கட்டை மாவு மிஞ்சினால் அதிலே செய்து வைப்பதோடு சரி.  சேவைக்குனு அரைச்சுச் செய்யவே இல்லை.  ரங்க்ஸும் ரொம்ப நாளாக் கேட்டுட்டு இருந்தார். அவருக்கு சேவையே பிடிக்காது.  கேட்கிறாரேனு கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருந்தது.  இன்னிக்கு என்னமோ தோசைக்கு மாவு இருந்தும் சேவை செய்யணும்னு தோணித்து.

தேவையான பொருட்கள்:  புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது 200கிராம், பச்சரிசி சம அளவு. இரண்டையும் நன்கு களைந்து குறைந்தது மூன்று, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.  மிக்சியில் அரைப்பதை விட கிரைண்டர் தான் சரியாக இருக்கும்.  கிரைண்டரில் அரைக்கவும்.  கொஞ்சம் போல உப்புப் போட்டுக் கொள்ளவும்.  முழு உப்பும் போட வேண்டாம். ஒரு டீஸ்பூன் போதும்.  மாவை ரொம்ப நீர்க்க இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் கரைத்து வைக்கவும்.

இப்போ செய்முறை.  நான் இட்லி மாதிரி வார்த்துத் தான் சேவை செய்வேன். ஒவ்வொருத்தர் அரைத்த மாவைக் கிளறிக் கொட்டிக் கொண்டு பின்னர் உருண்டை பிடித்து மீண்டும் வேக வைத்து அல்லது கொதிக்கும் நீரில் போட்டுச் செய்வார்கள்.  எனக்கு அதெல்லாம் சரிப்படலை.  ஆகவே இட்லிப் பானையில் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டு, இட்லித் தட்டில் அரைத்த மாவை இட்லியாக ஊற்றவும்.  இட்லி வெந்துவிட்டதானு பார்க்கவும்.  சில சமயம் நடுவில் வேகாது.  ஆகவே நடுவில் விரலைக்கொடுத்தும் பார்க்கலாம், சூடு தாங்கினால் :))) இல்லைனால் ஒரு ஸ்பூனால்குத்திப் பாருங்க.  ஒட்டாமல் வரும்.  பார்த்தால் நமக்கே புரிந்து விடும்.  வெந்துவிட்டதா இல்லையானு.  வெந்த இட்லியைச் சேவை நாழியில் போட்டுப் பிழியவும்.  இதோ இது தான் சேவை நாழி.  எழுபதுகளில் 2 ரூபாய்க்கு சீதனமாக வாங்கித் தந்தாங்க.  பல வீடுகள் பார்த்திருக்கு. பல சேவை செய்முறைகளையும் பார்த்திருக்கு இந்த நாழி.

சேவைகளை இப்படி இட்லியாக வார்த்து மொத்தமாகப் பிழிந்து கொள்ளவும்.



இதை மீண்டும் ஒரு முறை வேக வைக்க வேண்டியதில்லை.  நல்ல கம்பி, கம்பியாக ஒட்டாமல் வரும்.  அரைத்த மாவு மொத்தத்தையும் இப்படி இட்லியாக வார்த்துச் சேவையாகச் செய்து கொள்ளவும்.  அடுத்துக் கலவை.

பல விதங்களில் கலக்கலாம்.  தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, வெல்லச் சேவை, தயிர்சேவை, உளுத்தம் சேவை இதெல்லாம் பாரம்பரியம்.  இப்போ உள்ள நாகரீகப்படி தக்காளி சேவை, காய்கறிகள் போட்டு வெஜிடபிள் சேவை, சூப் சேவைனும் பண்ணலாம்.  நான் அதெல்லாம் பண்ணறதில்லை.  எப்போவுமே பாரம்பரியம் தான்.

தேங்காய் சேவை:  தேங்காய் ஒரு மூடித் துருவல், இரண்டு ப.மி கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப் பருப்பு. பெருங்காயம் உப்பு தேவையான அளவு, கொஞ்சம் நெய், இரண்டு டீஸ்பூன் இருக்கலாம், ஒரு டீஸ்பூன் சர்க்கரை.  தாளிக்க எண்ணெய்


வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை போன்றவற்றைப் போட்டு அவை நன்கு வெடித்து வந்ததும் ப.மி. கருகப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு தேங்காய் துருவலைப் போடவும்.  வறுத்தால் பிடிக்குமென்றால் சிறிது நேரம் வறுக்கலாம்.  இல்லை எனில் ஒரு கிளறுகிளறிவிட்டு இறக்கவும்.  வேக வைத்து எடுத்த சேவையில் தேங்காய்ச் சேவைக்குத் தேவையான சேவையைப் போட்டுக் கொண்டு, உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும்.

புளி சேவை:  சேவையில் தேவையான அளவு எடுத்துக் கொண்டு புளிக்காய்ச்சலைப் போட்டு விட்டு நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றிக் கிளறி வைக்கவும்.

வெல்லச் சேவை:  வெல்லத் தூள்  நூறு கிராம்.  தேங்காய் தேவையான அளவு அல்லது ஒரு சின்ன மூடித் துருவல், ஏலக்காய்.  நெய் இரண்டு டீஸ்பூன்.

வாணலி அல்லது உருளியில் வெல்லத்தூளோடு தேங்காய் சேர்த்துக் கிளறவும்.  இரண்டும் நன்கு சேர்ந்து கொண்டு வருகையில் நெய்யைச் சேர்த்துச் சேவையைப் போட்டு நன்கு கலக்கவும்.  ஏலத்தூள் சேர்க்கவும்.





17 comments:

  1. கொழுக்கட்டை மாவு மிஞ்சவேறு செய்கிறதா.... நாங்கள் மிஞ்ச விட மாட்டோம்! மிஞ்சினாலும் அம்மிணிக் கொழுக்கட்டைதான்!

    ReplyDelete
  2. இட்லி போல வார்த்து, சேவை நாழியில் பிழிந்து எல்லாம் எங்க அம்மா காலத்தோட போச்! இப்போல்லாம் ரெடிமேட் தான்!

    தேங்காய்த் துருவல் கூட காரம் சேர்த்து என்று சொல்லியிருக்கிறீர்கள். வெல்லம் ப்ளஸ் தேங்காய்த் துருவல் ஒன்று சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் தேங்காய்த் துருவலை வறுக்காமல் கலந்து சர்க்கரை கலந்தும் சாப்பிடுவோம்!

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், எழுதும்போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். தேங்காய்ச் சேவை நான் சொல்லி இருக்கும் முறையிலேயேஎங்க வீடுகளில் செய்வோம். தேங்காய்ச் சர்க்கரை கலந்து சாப்பிடுவதும் உண்டு. அது பண்ணினதும் சூடா இருக்கும்போது! அவசரம் அவசரமாத் துருவலையும், சர்க்கரையையும் போட்டுக் கலந்து கொள்வது உண்டு. குழாய்ப் புட்டுக்கும் தேங்காய், சர்க்கரை தான்.

    ReplyDelete
  4. எங்க அம்மாவுக்கு என்னை பத்தி ரொம்பவே நல்லா தெரியும். அதான் சேவை நாழி எல்லாம் வாங்கியே தரல. :) வக்கனையா சாப்பிட தெரிஞ்ச அளவுக்கு சமைக்க தெரியாது. இப்பவும் அம்மா வீட்டுக்கு போனா நான் சமையல் கட்டுல ஏதாவது பண்ணறேன்னு வந்தாலே கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா வெளில
    அனுப்பிடுவாங்க. :) அப்படியே இத்தனை வருஷம் வளந்தாச்சு. எங்கேந்து உருப்படறது. :)

    இந்த பதிவை படிக்கும்போதே சேவை பண்ணி பாக்க ஆசை வரது. கொஞ்சமா பண்ணி பாக்கறேன். இந்த செய்முறைல ஈசியா பிழிய வருமா? பிழிய கஷ்டபட்டா நேர உங்க வீட்டுக்கு சாப்பிட வந்துருவேன். நீங்கதான் ஆசையா சாப்பிட வாங்கன்னு கூப்படறீங்களே. :)
    தேங்காய் சேவை, வெல்ல சேவை சொல்லிடீங்க. கொஞ்சம் புளிக்காய்ச்சல் எப்படி பண்றதுன்னு தயவு பண்ணி சொல்லிடுங்க. நானும் ரொம்ப நாளா (வருஷமான்னுதான் சொல்லணும் ஹிஹிஹி...) இந்த புளி காய்ச்சலை ஒரு தடவையாவது பண்ணி பாக்கணும்னு ஒரு துடிப்போட இருக்கேன். பாரம்பரிய சமையலுக்கு உங்க ரெசிபிதான் ரொம்ப நல்லா இருக்கு. அதனால சரியான அளவோட புளிக்காய்ச்சல் பண்றதை கொஞ்சம் தயவு பண்ணி சொல்லுங்க.

    வெந்தய தோசை மெல்லிசா வார்க்க வரல. கொஞ்சம் மெத்துன்னு வார்த்த நடுல எல்லாம் வேக மாட்டேங்கறது. கரைச்ச தோசை மாதிரி மாவை ரொம்ப நீர்க்க
    பண்ணிண்டு வார்த்த கொஞ்சம் பரவாயில்லை. எதனால இப்படி? ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பை வேணும்னா அரிசியோட சேர்த்து ஊற வெச்சு அரைக்கலாமா? இல்லை எப்படி வார்த்த கிண்டாம வரும்னு சொல்லுங்க.

    அம்மணி கொழக்கட்டை என்னோட favorite. எங்க அம்மா வீட்ல இதுக்கு பேர் உசிலிச்ச கொழக்கட்டை. இது என் பசங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி பண்ண சொல்லுவாங்க. சேவை ஒரு வேளை பிழிய முடியலன்னா அந்த மாவுல இந்த கொழக்கட்டை பண்ணிடலாம். நல்ல ஐடியா. நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம்ம்,வெந்தய தோசைக்குக் கொஞ்சம் கனமா வார்த்தால் தான் நல்லா இருக்கும். ரொம்ப மெல்லிசா பேப்பர் ரோஸ்ட் மாதிரி இருந்தா நல்லா இருக்காது. நடுவிலே வேகலைனா, மாவை ஊத்திட்டுக் கரண்டியை ஒரு செகண்ட் நடுவிலே வைங்க. ரொம்ப நேரம் வைச்சாக் கரண்டியில் உள்ள மாவு வேக ஆரம்பிச்சுடும். பழகப் பழகப் புரியும். புளிக்காய்ச்சல் ரெசிபி ஏற்கெனவே கொடுத்த நினைவு. பார்க்கிறேன். இல்லைனா தரேன். சேவை நாழி இல்லைனா எப்படிப் பண்ணுவீங்க? இட்லி மாதிரி வார்த்துத் தேங்குழல் சொப்பிலே எல்லாம் பிழிய முடியாது. அதுக்குப் பச்சரிசியை அரைத்துக் கிளறி, நேரடியாகப் பிழிந்து மறுபடி வேக வைக்கணும். அதையும் விபரமா எழுதறேன்.

    ReplyDelete
  6. எப்போ வேணாலும் வாங்க, உங்களுக்குப் பிடிச்ச சமையலைச் செய்து போடறேன். சமைச்சுப் போட்டுட்டுச் சாப்பிடறவங்களைப் பார்க்கிறதிலே உள்ள ஆத்ம திருப்தி எதிலேயும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இதுக்காகவாவது கீசா மேடத்தை ஸ்டிராங்க் ஆக ஆக்கிடு கடவுளே. எனக்கு வெறும் சேவையும் புளிசேரி/மோர்க்குழம்பு போதும். கலந்த சேவைலாம் வேண்டாம்.

      Delete

  7. நன்றி மேடம், நீங்க சொன்ன மாதிரி வார்த்து பாக்கறேன். புளிக்காய்ச்சல் ரெசிபி நானே உங்க பதிவுல எங்க இருக்குன்னு பாத்துக்கறேன். நன்றி.

    சேவை நாழி இங்க என்னோட தோழி ஒருத்திக்கிட்ட இருக்கு. அவளும் சேவை நல்லா பண்ணுவா. ஆனா பிழியறது ரொம்ப கஷ்டம்னு சொல்லுவா. அவ
    எப்பவுமே அவளோட husband appointment வாங்கிண்டுதான் இதையே பண்ணுவா. ஏன்னா முழுக்க முழுக்க பிழிஞ்சு குடுக்கறது அவர்தானாம். :)
    அதனாலதான் இந்த செய்முறைல பிழியறது சுலபமா இருக்குமான்னு கேட்டேன். தேன்குழல் நாழில பிழியறது ரொம்ப கஷ்டம்.

    //சமைச்சுப் போட்டுட்டுச் சாப்பிடறவங்களைப் பார்க்கிறதிலே உள்ள ஆத்ம திருப்தி எதிலேயும் இல்லை.//
    உண்மைதான் மேடம். சமைச்சு போடறதுல எனக்கும் ஆத்ம திருப்தி உண்டு. அதே நேரம் சாப்பிடறவங்க திருப்தி அடையற மாதிரி சமைக்கணும் இல்லையா. என்னதான் சிரத்தையா பண்ணினாலும் நல்லா வரணுமே. சில பேருக்குதான் அந்த கைமணம் உண்டு. உங்களுக்கு நிச்சயமா அது இருக்குன்னு சாப்பிட்டு பாக்காமலே சத்தியம் பண்ணுவேன். :)

    ReplyDelete
  8. புளிக்காய்ச்சல் இதிலே இல்லை; நான் பார்த்துட்டேன். ஒரு முறை இன்னிக்கு எழுதி இருக்கேன். மற்றவை நாளைக்கு. இங்கே ஆறு மணிக்கு மின்சாரம் போயிடும். :))))

    ReplyDelete
  9. இடியாப்பம் (என்கிற சேவை) செய்முறை ஆச்சரியமாருக்கு. நாங்க, ஆட்கள் வைத்து, அரிசியை மொத்தமா ஊற வைச்சு, அரைச்சு வறுத்து வச்சுக்குவோம். அது ஒரு முழு நாள் வேலைப்பாடு. அதனால, நினைச்சா இடியாப்பம் செய்திடலாம். ஆனாலும், அதைப் பிழிவது என்பது இன்றும் ஒரு போராட்டம்தான் எனக்கு. வீட்டுக்காரர் தயவுல ஓடுது! :-))

    இடியாப்பத்தை இப்படி சேவையாக்கிச் சாப்பிட்டதில்லை. இட்லி, தோசை போல, இதனோடு ஒரு குழம்பு வைத்து சாப்பிடுவோம்.

    பை தி வே, கேட்க வந்ததை மறந்துட்டு (வழக்கம்போல) எதோ பேசிகிட்டிருக்கேன். அந்த சேவை அச்சு - எங்கே கிடைக்கும்? நல்லா வசதியா இருக்கும்போல இருக்கே.

    ReplyDelete
  10. ஹூசைனம்மா, கோவை2தில்லி பதிவிலே உங்க புலம்பலைப் பார்த்துட்டு இங்கே லிங்க் எடுத்துக் கொடுக்கலாம்னு வந்தால் நீங்க ஏற்கெனவே வந்துட்டுப் போயிருக்கீங்க. ஹிஹிஹி, இன்னிக்குத் தான் பார்க்கிறேன். இந்த அச்சு இங்கே திருச்சியிலேயே கிடைக்குது. அவ்வளவு கஷ்டமா இருக்காது. நீங்க சொன்ன மாதிரி மொத்தமா அரிசியை ஊற வைச்சு அரைச்சு வைக்கிறதிலே எனக்குச் சரியா வரதில்லை. பச்சரிசியையும் நன்கு ஊற வைச்சுப் பின் இட்லி மாவு போல் நீர் விட்டு அரைச்சுக் கிளறி அதை அச்சில் போட்டு இடியாப்பம் மாதிரிப் பண்ணுவேன். அதையே தூளாக்கிச் சேவையாகவும் பண்ணுவதுண்டு. :)))) திருச்சி வந்தால் கடைகளில் பாருங்க கட்டாயமாய்க் கிடைக்கும். எனக்குச் சீரில் வந்தது. அப்போ 2 ரூபாய்க்கு வாங்கினதாக்கும். :))))

    ReplyDelete
  11. //நீங்க ஏற்கெனவே வந்துட்டுப் போயிருக்கீங்க.//

    எல்லாம் அந்த இடியாப்பம் படுத்தும் பாடு!! எங்கே பார்த்தாலும் படையெடுத்துவிடுவேன். :-)))) எனக்கு ரொம்பப் பிடிச்சது, ஆனா செய்ய வரலை... என்ன செய்ய... :-(((

    //திருச்சி வந்தால் கடைகளில் பாருங்க கட்டாயமாய்க் கிடைக்கும்.//
    இறைநாடினால், கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

    ரொம்ப நன்றி மேடம்.

    ReplyDelete
  12. சேவைக்கும், இடியாப்பத்திற்கும் வித்தியாசம் உண்டில்லையோ..

    நாகர்கோவிலில் இருந்ததால் கேரள கல்ச்சர். அதனால் எங்கள் வீட்டில் சேவை புழுங்கலரிசியில் அதுவும் டொப்பு அரிசி என்று சொல்லப்படுவதில் நீங்கள் சொன்ன முறையேதான்...ஆனால் னீங்கள் குறிப்பிட்டுள்ள கொழுக்கட்டை செய்து......
    இப்போதும் அப்படித்தான்....கொழுக்கட்டையை நீரில் இடாமல் இட்லி போல வேகவைத்து....

    அதற்கு கேரளா மோர்குழம்பு/பச்சை புளிசேரி பப்பட் / வற்றல் வடாம் என்று காம்பினேஷனில்....

    நீங்கள் சொல்லியிருக்கும் வெரைட்டு சேவையும் செய்வதுண்டு...தேங்காய்ப்பால் வெல்லம்...நோ நவீன சேவை வெரைட்டிஸ்

    இடியாப்பம் பச்சரிசி மாவில் கிளறி அச்சில் பிழிந்து இடியாப்பத் தட்டில் வேகவைப்பது....அதற்கு சிலோன் சொதி....செய்வதுண்டு நல்ல காம்பினேஷன்...அப்புறம் தேங்காய்பாலும் தமிழ் நாட்டைப் போல...

    ReplyDelete
  13. அமர்க்களம் நாக்கு ஊர்றது

    ReplyDelete
  14. நாங்க வாரம் ஒரு முறை செய்யறோம். 1 1/2 மாத இடைவெளிக்கு அப்புறம் சில நாட்கள் முன்பு செய்தோம்.

    நாங்க கொழுக்கட்டை போல் உருட்டி வேகவைத்து பிழிவோம். இரண்டு முறை வெந்துடறது இல்லையா (அடுப்பில் கிளறி, பிறகு கொழுக்கட்டை போல் உருட்டி இட்லி குக்கரில் வேகவைப்பது)

    சேவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த டிஷ். அதுல ஒரே ஒரு பிரச்சனை, ஆசைல நிறைய சாப்பிட்டுடுவேன். அப்புறம் தண்ணீர் தாகம் எடுத்து கழுத்து வரைல சாப்பிட்ட ஃபீலிங் கொடுத்துடும். அன்னைக்கு காய் உடம்புல சேராது.

    ReplyDelete