எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 28, 2012

மீனாக்ஷிக்காக அடை!

அடை செய்யறச்சே படம் எடுக்கிறேன்.  இப்போ செய்முறை மட்டும். நான் இரண்டு, மூன்று விதங்களில் அடை செய்வேன்.  முதல்லே  புழுங்கல் அரிசி சேர்த்துச் செய்யும் அடை.  இதுக்கும் தவலை வடை செய்முறைக்கும் அதிக வித்தியாசம் இருக்காது என்றாலும் இதுக்குப் பயத்தம் பருப்புப் போடறதில்லை.  இஞ்சி, ப.மிளகாய் நறுக்கிப் போட்டுக் கடுகு, உ.பருப்புத் தாளிதம் எல்லாம் இல்லை.

புழுங்கல் அரிசி ஒரு கிண்ணம்,  பச்சை அரிசி ஒரு கிண்ணம், துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு  அரைக்கிண்ணம். மி. வத்தல் ஆறில் இருந்து எட்டு வரை, பச்சை மிளகாய் 2 அல்லது மூன்று, பெருங்காயம் கட்டி எனில் ஊற வைக்கவும். உப்பு. கருகப்பிலை, கொத்துமல்லி.

புழுங்கல் அரிசி, பச்சை அரிசியை ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊற வைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக வேறொரு பாத்திரத்தில்  ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊற வைக்கவும்.  துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை நிறமாக இருப்பதோடு மொறு மொறுப்பாகவும் இருக்கும்.  கடலைப்பருப்புக் கூடப் போட்டால் அடை மெத்தென்று இருக்கும்.  உ.பருப்புக் கூடப் போனால் பொது பொதுவென வரும்.  அடை க்ரிஸ்ப்பாக வேண்டுமெனில் மேற்சொன்ன அளவின் படி போடலாம். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.  ஒரு சிலர் அடைக்கு ஊற வைக்க வேண்டாம், எண்ணெய் குடிக்கும் என்பார்கள்.  அப்படி எல்லாம் இல்லை.  எண்ணெயெல்லாம் குடிக்காது.  அடை மாவைக் கல்லில் ஊற்றிவிட்டு ஒரு முறை நன்றாக எண்ணெய் ஊற்றினாலே போதும். ஆகவே நன்கு ஊற வைக்கவும்.  பின்னர் மிக்சி ஜாரில் மி.வத்தல், ப.மி, பெருங்காயம், உப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு முதலில் அரிசியைப் போட்டு அரைக்கவும்.  கிரைண்டர் எனில் மிக்சி ஜாரிலேயே மிளகாயை அரைத்துக் கொண்டு பின்னர் கிரைண்டர் பாத்திரத்தில் அரிசியைப் போடும்போது மிளகாய்க் கலவையைச் சேர்த்துப் போடவும்.  கிரைண்டரில் மிளகாய் சரியாக அரைபடாது.  ஆகவே வடை, அடைக்கெல்லாம் நான் மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டே கிரைண்டரில் போடுவேன்.

அரிசி கொர கொரவென அரைபட்டதும், கிரைண்டரில் எனில் எல்லாப் பருப்புக்களையும் சேர்த்து அதிலேயே போடலாம்.  மிக்சி என்றால் கொஞ்சம் அரிசி மாவைத் தனியாக எடுத்துவிட்டுப் பாதி பருப்புக் கலவையைப் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, பின்னர் திரும்பவும் எடுத்து வைத்த அரிசி மாவொடு, மீதம் இருக்கும் பருப்புக் கலவையையும் சேர்த்துப் போட்டு அரைத்துப் பின்னர் இரு கலவையையும் ஒன்றாய்க் கலந்து கொள்ளவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  கொஞ்ச நேரமாவது மாவை வைக்க வேண்டும்.  அடைக்கு மேலே தூவ வெங்காயம், வாழைப்பூ, முட்டைக்கோஸ், கீரை வகைகள், முருங்கைக்கீரை, பறங்கிக் கொட்டை போன்றவை நன்றாக இருக்கும்.  இல்லாட்டி வெறும் தேங்காயைக் கீறிப் போட்டும் வார்க்கலாம்.  அல்லது எதுவுமே போடாமல் வெறும் அடையாகவும் வார்க்கலாம்.  அவரவர் விருப்பம்.

தோசைக்கல்லைக் காய வைத்துச் சூடானதும் எண்ணெயை ஊற்றித் தடவிக் கொண்டு அடை மாவை அதிகம் கரைக்காமல் தோசைக்கல்லில் நன்றாகப் பரப்ப வேண்டும்.  நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம். சுற்றியும் நான்கு புறங்களில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம்.  எண்ணெய் தாராளமாக இரண்டு முட்டை விட வேண்டும்.  ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விடவும்.  எண்ணெய் தேவை எனில் விடலாம்.  நன்கு வெந்ததும் சூடான சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, அவியல், தேங்காய்ச் சட்னி, வெல்லம், வெண்ணெய் போன்ற எது உங்களுக்குப் பிடிக்குமோ அதோடு சாப்பிடலாம்.

அடுத்துப் பச்சரிசி போட்டுச் செய்யும் ஏகாதசி அடையைப் பார்ப்போம்.  இதற்குப் பச்சரிசி மட்டும் இரண்டு கிண்ணம் எடுத்துக் கொண்டு துவரம்பருப்பு மட்டும் ஒரு கிண்ணம் போட்டுக் கொள்ளவும்.  எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து களைந்து ஊற வைக்கவும்.  இது இரண்டு மணி நேரம் ஊறினால் போதும்.  நன்கு ஊறினாலும் தப்பில்லை.  பின்னர் ஆறு மி.வத்தல், பெருங்காயம், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றோடு சேர்த்து அரைக்கவும்.  கொஞ்சம் கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.  ரொம்பவே ஆசாரமானவர்கள் மி.வத்தல், ப.மி. , பெருங்காயம் போன்றவை ஏகாதசி அன்று சேர்க்க மாட்டார்கள்.  அப்போது மிளகு, உப்பு மட்டுமோ அல்லது இஞ்சி, உப்பு மட்டுமோ சேர்த்து அரைக்க வேண்டும்.  ஜீரகம் போட்டால் அடைக்கு நன்றாக இருப்பதில்லை.  கருகப்பிலை, கொத்துமல்லி போடலாம்.

வேறெதுவும் போடாமல் அடைமாவை நன்கு கலந்து கொண்டு தோசைக்கல்லில் ஊற்றிக் கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  இதுக்கு வெல்லம், வெண்ணெய் தவிரக் குழம்பு வகைகளோ, அவியலோ ஏகாதசி அன்று சேர்ப்பதில்லை.

அடுத்தது பச்சரிசி அடை தான்.  ஆனால் எல்லாப் பருப்பும் சேர்த்து.  பச்சரிசி இரண்டு கிண்ணம் என்றால் , அரைக்கிண்ணம் து.பருப்பு,  கால் கிண்ணம் கடலைப் பருப்பு, கால் கிண்ணம் உ.பருப்பு, கால் கிண்ணம் பாசிப் பருப்பு.  அரிசி, பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலந்து களைந்து ஊற வைக்க வேண்டும்.  இதை அதிக நேரம் ஊற வைப்பதில்லை.  ஒரு மணி நேரம் ஊறினால் போதும் என்பார்கள்.  (நான் ஊற வைப்பேன் என்பது வேறு விஷயம். :))))  பின்னர் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கருகப்பிலை, கொ.மல்லி போட்டுக் கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  நான் அரைக்கையிலேயே தேங்காயையும் போடுவேன்.  இதுக்குத் தேங்காய் போடாமல் அரைத்து எடுத்துப் பரங்கிக் கொட்டை, வாழைப்பூ, கீரை வகைகள் போட்டும் வார்க்கலாம்.

எல்லாரும் நல்லா அடை பண்ணிச் சாப்பிடுங்கப்பா.  என்னோட ஃபேவரிட் அடை தான். :))))))

15 comments:

  1. ரொம்ப ரொம்ப நன்றி கீதா மேடம். ஒவ்வொண்ணா ட்ரை பண்றேன்.
    என்னோட favorite அடைதான். அதுவும் எங்க அம்மா பண்ற அடைதான். நானும் நிறைய பேர் வீட்ல அடை சாப்பிட்டிருக்கேன். எல்லாமே ஒவ்வொரு விதமா நன்னாதான் இருந்துது. ஆனா எங்க அம்மா பண்ற அடை ரொம்ப ஸ்பெஷல். இது நான் எங்க அம்மா அப்படிங்கறதுக்காக சொல்லல. எங்க அம்மாவுக்கு நல்ல கைமணம். எது சமைச்சாலும் ரொம்ப பிரமாதமா இருக்கும். எங்க அம்மா சமையலை சாப்பிட்டவங்க எல்லாருமே அவங்க கைமணத்தை பாராட்டாம இருந்ததே இல்லை.
    எனக்கென்னவோ உங்க சமையல் குறிப்பெல்லாம் படிச்ச பிறகு நீங்களும் ரொம்ப அருமையா சமைக்கரவங்கதான்னு மனசுக்கு தோணி போச்சு. :)))) திருச்சி வந்தா அடை சாப்பிட உங்க வீட்டுக்கு வரணும் போல இருக்கு. :)

    ReplyDelete
  2. அரிசி பருப்பு அளவு எல்லாம் எத்தனை அடை செய்யக் காணும்?

    // வெல்லம், வெண்ணெய் தவிரக் குழம்பு வகைகளோ, அவியலோ ஏகாதசி அன்று சேர்ப்பதில்லை.
    நியாயமா இருக்கா உங்களுக்கு?

    ReplyDelete
  3. ஹிஹிஹி, அப்பாதுரை, பார்க்கப் போனா ஏகாதசி அன்னிக்கு முழுப்பட்டினி இருக்கணும். புழுங்கலரிசி பாதி வெந்ததுனு சேர்க்க மாட்டாங்க. அதனால் பச்சரிசி அடை. மத்தது எல்லாம் பத்த்து, எட்டுனு சொல்வாங்களே. அதான் சேர்ப்பதில்லை. அடை மட்டும் ஓகே. :))))) நான் ஏகாதசி மட்டும் இல்லை, எந்த விரதமும் இருக்க முடியாது, மருத்துவர் ஆணை. :))))) அதனால் தினம் தினம் ஏகாதசி தான்.

    ReplyDelete
  4. வாங்க மீனாக்ஷி, இன்னும் பயத்தம்பருப்பு அடை இருக்கு. அதை மெதுவாப் போடறேன். இப்போதைக்கு இது முயற்சி செய்ங்க. நல்லா வரும், உங்க அம்மா சமையல் சாப்பிடணும் போல இருக்கு நீங்க சொல்வதைப் பார்த்தால்.

    ReplyDelete
  5. அரிசி, பருப்பு அளவில் மூன்று நபர்கள் தாராளமாக இரண்டு அடை சாப்பிடலாம். கொஞ்சம் போல மிஞ்சலாம். இரண்டு அடைக்கு மேலே சாப்பிடுவது கஷ்டம். :))))

    ReplyDelete
  6. நான் சொன்னது கனமாக வார்த்தால், மெலிதாக வார்த்தால் நான்கு பேர் கூடச் சாப்பிடலாம்.

    ReplyDelete
  7. மீனாட்சிக்கு மட்டும் இல்லை, எனக்கும் என்னுடைய அம்மா தட்டிப் போட்டது போல அடை அப்புறம் சாப்பிடவில்லை. கரமொறு என்று பொன்னிறத்தில் தட்டில் எடுத்துப் போட்டதும் கூட எண்ணெய் மினுமினுக்க கருகாமல் .... இன்னும் எப்படி வர்ணிக்க? அரைப்பதில் இருக்கிறதா, தட்டுவதில் இருக்கிறதா சூட்சுமம் என்று அறிய முடியாத மர்மம்.

    மனைவி செய்யும் அடையும் நன்றாகத்தான் இருக்கிறது. இது வேற டேஸ்ட்!

    ReplyDelete
  8. //துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை நிறமாக இருப்பதோடு மொறு மொறுப்பாகவும் இருக்கும். கடலைப்பருப்புக் கூடப் போட்டால் அடை மெத்தென்று இருக்கும். உ.பருப்புக் கூடப் போனால் பொது பொதுவென வரும்.

    இதுதான் ரெசிபியின் மெயின் பாயின்டு. அடை காத்த ரகசியம்.


    //அம்மா தட்டிப் போட்டது போல... //அதுவும் எங்க அம்மா பண்ற அடைதான்....
    நாட்டுல சுறுசுறுப்புக்காரங்க அதிகமாயிட்டாங்கய்யா.
    நீங்க சொன்ன அளவில பாதியை வச்சு ட்ரை பண்ணப்போறேன். ஒரு ஆசாமிக்கு வராப்புல. நானே என் கையால சுயமா ட்ரை பண்ணப்போறேன்.

    ReplyDelete
  9. ஸ்ரீராம் உங்க வீட்டுக்கு என்னுடைய பரிசு புத்தகத்தை வாங்கிக்க வரும்போது
    // கரமொறு என்று பொன்னிறத்தில் தட்டில் எடுத்துப் போட்டதும் கூட எண்ணெய் மினுமினுக்க கருகாமல் ....// எனக்கும் கிடைக்குமா? :))))) ஆஹா...நீங்க எழுதி இருக்கறதை படிக்கும்போது இப்பவே உங்க வீட்டுக்கு சாப்பிட போல இருக்கே. :)))

    'தலையை பாத்ததும் கல்லை போடு' இந்த டயலாக் கேள்விபட்டிருக்கீங்களா அப்பாதுரை. வெளிய போயிட்டு வீட்டுக்கு வரும்போது நமக்காகவே காத்திருந்து நம்ம தலையை கண்டதும், அடுப்புல கல்லை போட்டு சுட சுட, தட்டுல ஒண்ணு, கல்லுல ஒண்ணுன்னு தோசையோ, அடையோ அம்மா வார்த்து போட்டா, அட அட அடா..... தேவாமிர்தம் தான். இதெல்லாம் நான் வாழ்க்கைல நல்லா அனுபவிச்சிருக்கேன். :))))) நீங்க ஆயிரம் சொல்லுங்க அப்பாதுரை, இப்படி எல்லாம் சாப்பிட கொடுத்து வெச்சிருக்கணும், தெரியுமா! :))))

    கீதா மேடம் உங்க கிட்ட இந்த அடை கதையை சொல்லியே ஆகணும். என்னோட முதல் பையன் பிறக்கும்போது big baby. டெலிவரி நாள் நெருங்கியும் எனக்கு வலி வரல. எனக்கு எப்படா டெலிவரி ஆகும்னு ரொம்ப ஆயாசமா ஆயிடுத்து. நான் அப்படி இருக்கறத பாத்துட்டு அம்மா எதாவது சாப்பிடறியான்னு கேட்டபோது எனக்கு எதுவும் வேண்டாம்மான்னு சொல்லிட்டேன். அம்மாவுக்கு மனசு கேக்கல. அம்மா உடனே உனக்குதான் அடை ரொம்ப பிடிக்குமே, சூடா வார்த்து தரேன், சாப்பிடுமான்னு சொல்லி வார்த்து கொடுத்தா. அடை சாப்பிட்டு முடித்த ஐந்தாவது நிமிஷத்தில் எனக்கு வலியெடுக்க ஆரம்பித்து விட்டது. குழந்தை பிறந்தவுடன் என் அம்மா என் கிட்ட குழந்தை வாய்ல அடை ஒட்டிண்டிருகான்னு பாத்தேன்னு கிண்டல் பண்ணினா. :))))

    ReplyDelete
  10. //தலையை பாத்ததும் கல்லை போடு
    அகிம்சைல நம்பிக்கை இல்லையோ?

    ReplyDelete
  11. நீங்க சென்னைக்கு வரும்போது தாராளமா எங்க அம்மா வீட்டுக்கு போகலாம். உங்களுக்கு எந்த வித தயக்கமும் வேண்டாம். அதிலும் நீங்க எனக்கு வேண்டியவங்கன்னு சொன்னா எங்க அம்மாவுக்கு நீங்க ரொம்பவே ஸ்பெஷல் ஆயிடுவீங்க. :)

    இப்போ வீட்ல அடைக்குதான் நெனச்சிருக்கேன். உங்களோட ரெசிபிதான். எப்படி வந்துதுன்னு சாப்பிட்ட அப்பறம் சொல்றேன்.

    வீடு வீடா போய் அடை சாப்பிட ஆசை வாந்தச்சு. அப்பாதுரை நீங்க பண்றதும் எப்படி வந்துதுன்னு சொல்லுங்க. உங்க வீட்டுக்கும் அடை சாப்பிட வந்துடறேன்.
    என் தலையை பாத்ததும் கல்லை 'அடுப்புல' போடுங்க, சரியா! :))

    ReplyDelete
  12. மீனாக்ஷி... அடை தானே ? செய்துட்டாப் போச்சு... ஆனால் நான் சொன்ன வர்ணனைகள் என் அம்மா செய்த அடை! அவர்களும் உங்கள் அம்மா போலவே அளவு கேட்டால் கண்திட்டம் தான் என்பார். அவர் மார்ச் 2002 இல் மறைந்தார். 2001 டிசம்பரில் நான் அவரைப் பார்க்க மதுரை போயிருந்தேன். என் அம்மாவின் ஸ்பெஷல்களில் ஒன்றான மிளகுக் குழம்பு செய்து கொடுத்தார்.மறுபடியும் கண் திட்டம்தான். ஆனால் கூடவே நின்று குறிப்பு எடுத்துக் கொண்டேன்! ஆனால் அந்தக் குறிப்புகளின் படி நான் செய்தாலும் அந்த டேஸ்ட் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை. கை ராசி என்று ஒன்று கட்டாயம் இருக்கிறது! (என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும்... எழுதி வைத்த அந்தக் குறிப்புகளைத் தொலைத்து விட்டேன்!)

    ReplyDelete
  13. அடை இன்னிக்கு ரொம்ப பிரமாதம். என் மகன் கூட ரொம்ப ரசிச்சு சாப்பிட்டான். இதுவரைக்கு நான் பண்ணின அடைல இதுதான் எனக்கு தெரிஞ்சு பெஸ்ட். உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இனிமே உங்களுக்கு நல்ல அடை, சுட சுட வார்த்து போடணும்னா எங்க வீட்டுக்கு வாங்க நான் பண்ணி தரேன். :))
    சாப்பிடும்போது உங்களுக்கு மனசார 'ஜே' போட்டுட்டேன். :)) அடுத்து வெந்தய தோசை ட்ரை பண்ணிட வேண்டியதுதான்.

    உங்கள் பதிலுக்கு நன்றி ஸ்ரீராம். என்ன இருந்தாலும் அம்மா கை பக்குவம் அலாதிதான். நீங்க எழுதி இருக்கா மாதிரி எங்கம்மாவும் மிளகு குழம்பு ஸ்பெஷலிஸ்ட். எங்கம்மா பண்ணும்போது அவங்க பக்கத்துலேயே இருந்து அவங்க அளவெல்லாம் எவ்வளவு போடறாங்கன்னு பாத்து, அந்த அளவெல்லாம் சரியா எழுதி வெச்சுண்டு நானும் பண்றேன். பரவாயில்லை ஓரளவுக்கு நல்லாவே வரது. இப்ப என்னோட மிளகு குழம்பு இங்க கொஞ்சம் பாபுலர்.

    ReplyDelete
  14. ஹாஹா, எல்லாரும் அடையிலேயே மூழ்கிப்போயிட்டீங்க போல! பல மலரும் நினைவுகள் நல்லாவே இருக்கு.

    ஸ்ரீராம், உங்க அம்மாவின் மிளகு குழம்பு பகிர்ந்துக்கோங்க. மீனாக்ஷி, நீங்களும்.

    அப்பாதுரை, அடுத்து மிளகு குழம்பா? :))))

    அனைவருக்கும் நன்றி. மீனாக்ஷி அடை நன்றாக வந்தது குறித்து சந்தோஷம். வெந்தய தோசையும் நன்றாகவே வரும். வாழ்த்துகள். :)))

    ReplyDelete
  15. ஃபேவரிட் அடை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete