எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, May 31, 2016

உணவே மருந்து, தென்னை, தேங்காய்!

தேங்காய் எண்ணெயின் அபரிமிதமான பலன்களைச் சொல்லி முடியாது. அது முக்கியமாக நம் சருமத்துக்கு நல்லதொரு பாதுகாப்பைக் கொடுத்து சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும். குளிர் காலமாக இருந்தாலும் சரி, வெயில் அல்லது மழைக்காலமாக இருந்தாலும் தேங்காய் எண்ணெயை நம் உடலில் தடவிக் கொண்டால் நல்ல பலன் தரும்.  வெப்பத்தின் பாதிப்பிலிருந்தும் குளிரின் வறட்சியிலிருந்தும் சருமம் பாதுகாக்கப்படும். ஆறாத புண்களுக்குத் தேங்காய் எண்ணெயைத் தடவினால் பாதிப்புக் குறையும்.  முக்கியமாக நம் அன்றாட வாழ்வில் தலைக்கு தினந்தோறும் தடவிக் கொள்ளும் ஓர் எண்ணெய் எது எனில் அது தேங்காய் எண்ணெய் தான்.

நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெயை தினந்தோறும் தலைக்குத் தடவிக் கொண்டு வந்தோமெனில் நம் தலை மயிர் நன்கு வளர்ச்சி பெறுவதோடு அல்லாமல் பளபளவென்றும் மிருதுத் தன்மையோடு பட்டுப்போல் இருக்கும். தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளப் பிடிக்கவில்லை எனில் இரவில் தலை மயிரில் தடவிக் கொண்டு தலையில் உச்சந்தலையில் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு படுத்துக் காலை நல்ல குளியல் பொடி பயன்படுத்தித் தலையை அலசினால் தலை மயிரும் தலைப்பகுதியும் சுத்தமாக இருக்கும். வெயிலிலோ அல்லது குளிரிலோ உடலில், உதடுகளில், கால்களில் தோன்றும் வெடிப்புக்குத்தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து.

தேங்காய் எண்ணெய் நூறு எடுத்துக் கொண்டு அதில் சாம்பிராணியைப் பொடித்துப் போட்டு நன்கு கலந்து அடுப்பில் வைத்துக் கிளறிப் பசை போல் ஆனதும் ஒரு பாட்டிலில் எடுத்துப் போட்டுக் கொண்டு தினமும் காலில் பித்தவெடிப்பால் அவதியுறும் பகுதிகளுக்குப் பூசி வந்தால் நாளடைவில் வெடிப்புகள் மறையும். இது வெகு காலம் கெடாது. கூட மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சுத்தமான மஞ்சள் கிழங்கில் மட்டுமே பொடித்த மஞ்சள் தூளாக இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெயைச் சூடாக்கிக் கீழே இறக்கி அதில் கட்டிக் கற்பூரம் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு வெதுவெதுப்பாக இருக்கையில் சளி பிடித்திருக்கும் நெஞ்சுப் பகுதிகளில் நன்கு தேய்த்துக் கொண்டு முதுகிலும் தேய்க்க வேண்டும். சளி குறைந்து நன்கு மூச்சு விட முடியும். தினம் தினம் முகத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொண்டு சிறிது நேரம் ஊறிய பின்னர் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயோடு எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கலக்கித் தலையில் தடவி ஊறிய பின்னர் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறிது நாட்களிலேயே அதில் ஒருவித வாசனை வரும். கடைகளில் விற்கப்படும் கலப்பட எண்ணெயில் வாசனையே வராது. சிறு குழந்தைகளுக்கு முக்கியமாகப் பிறந்த குழந்தைகளுக்கு நல்ல தேங்காய் எண்ணெயில் குளிப்பாட்டி வந்தால் சருமத் தொந்திரவே வராது. ஒரு சிலர் முற்றிய தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு கல்லுரல் அல்லது மிக்சி ஜார் அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக் கொண்டு அதைக் கொஞ்சம் நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுவார்கள். சிறிது நேரத்தில் எண்ணெய் தனியாகப் பிரியும். அந்த எண்ணெயை உடலில் தேய்ப்பார்கள். இதன் மூலம் சுத்தமான தேங்காய் எண்ணெய் நம் கண்ணெதிரே கிடைக்கும். கொஞ்சம் வேலை இருந்தாலும் இது நம்பகத் தன்மை உள்ளது. ஆகவே இனியாவது தேங்காயையோ தேங்காயில் செய்த பொருட்களையோ ஒதுக்காமல் தேங்காய் எண்ணெயையும் உரிய முறையில் பயன்படுத்தி வாருங்கள். நலம் பெறுவோம்.

4 comments:

  1. நல்ல பதிவு. கொஞ்ச காலமாக மாலை நேரங்களில் தலைவலி வருகிறது என்றதும் கேஜி தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவிப் பாரேன் என்றார்! நான் தலைக்கு எண்ணெய் தடவி 30 வருடங்கள் ஆகிறது!

    ReplyDelete
  2. தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. தேங்காய் எண்ணெயின் நற்பலன்களை சொன்ன நல்ல பதிவு! நானும் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி வருடங்கள் ஆகிவிட்டது. இனி மீண்டும் முயற்சிக்க வேண்டும்!

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு ..தேங்காயில் நிறைய சத்துக்கள் இருப்பதால் இங்கே வெளிநாட்டுகாரங்களே virgin கோகோனுட் ஆயில் விற்கிறாங்க ..
    எனக்கு நினைவிருக்கு லேசா அழுகின தேங்காய் மருந்து கடைகளில் விற்பாங்க நிறைய பேர் அதை வாங்கி அதில் எண்ணெய் காய்ச்சி உடலுக்கு தேய்ப்பாங்க .தலைக்கும் தேய்ப்பாங்க

    ReplyDelete