எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, June 29, 2016

உணவே மருந்து! சுண்டைக்காய்!

சுண்டைக்காய் விஷயம்! என்பார்கள் ஒன்றுமே இல்லாததுக்கு. ஆனால் சுண்டைக்காயில் அப்படி விஷயம் இல்லாமல் இல்லை! ஹிஹிஹி, சுண்டைக்காய் விஷயம் என்பது வேறே! சுண்டைக்காயில் உள்ள விஷயங்கள் வேறே! எத்தனை பேருக்குச் சுண்டைக்காய் பிடிக்கும்? கை தூக்குங்க பார்ப்போம்! இந்தச் சுண்டைக்காய் மருத்துவ ரீதியாகவும் பலன் தரும் ஒன்று! சமையலில் அதிகம் பயன்படுத்தினால் மிகவும் நன்மை தரும். முக்கியமாக நீரிழிவு நோய்க்கு நன்மை தரும். இதிலே இரண்டு வகை உண்டு. ஒன்று காட்டுச் சுண்டை! இன்னொன்று நாட்டுச் சுண்டை!


Image result for சுண்டைக்காய்

படத்துக்கு நன்றி வெப் துனியா!


இது கிட்டத்தட்டக் கத்திரிச் செடி போலவே இருக்கும். இலைகள், பூக்கள் எல்லாம் கத்திரிப் பூப் போலவே காணப்படும், ஆனால் செடிகள் கத்திரிச் செடியை விட உயரமாக வளரும். சில செடிகளில் முட்கள் காணப்படும். கொத்துக் கொத்தாகக் காய்க்கும். காட்டுச் சுண்டை கொஞ்சம் கசப்புடன் இருக்கும். நாட்டுச் சுண்டைக்காயில் கசப்புத் தெரியாது. ஆனால் மருத்துவ குணத்தில் இரண்டும் ஒரே மாதிரித் தான்.

வயிற்றுக்கே இதம் தரும் சுண்டைக்காய். தினம் இரவு சுண்டை வற்றலை நல்லெண்ணெயில் வறுத்துச் சாப்பிட்டால் தீராத மலச்சிக்கல் தீரும், வயிற்றுப் பொருமல் இருந்தால் சுண்டைக்காய் வறுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, வேப்பம்பூ, பெருங்காயம், இந்துப்பு, ஓமம் ஆகியவற்றையும் வறுத்துப் பொடி செய்து கொண்டு சூடான சாதத்தில் அரைக் கரண்டி/ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைப் போட்டுக் கொண்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும். வாயுத் தொந்திரவு குறையும். பித்தம் குறையும். வாயில் சுவை தெரியாமல் இருந்தால் தெரிய ஆரம்பிக்கும்.

இந்தச் சுண்டைக்காய் கபம் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். ரத்தம் சுத்தியடையும். கல்லீரல், கணையத்துக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் அருமருந்து. சுண்டைக்காயோடு மிளகு பொடித்துச் சேர்த்துக் கருகப்பிலையும் சேர்த்துக் கஷாயம் செய்து சாப்பிட வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் ஒழியும்.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம் - வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்!
என்று சுண்டைக்காயைப் பற்றி அகத்தியர் கூறி இருப்பதாக விக்கி பீடியா கூறுகிறது. இந்தப் பாடல் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இனி சுண்டைக்காயை வற்றல் போடுவது குறித்தும், பச்சையாகச் சாப்பிடுவது குறித்தும் ஒவ்வொன்றாக அறிவோம்.

5 comments:

  1. சுண்டைக்காய்..... எனக்கும் பிடிக்கும். மேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. காட்டுச் சுண்டைக்காய்தான் நம்ம சாம்பார் சுண்டைக்காயா? அது கிடைக்கும் எங்கும். மதுரைப் பக்கம் மட்டுமே கிடைக்கும் சுண்டைக்காய் ரகம் மோரில் ஊறப்போட்டு வறுத்துச் சாப்பிட மட்டுமே முடியும். சாம்பார் சுண்டைக்காய் அடிக்கடி கிடைக்கிறது. இன்னொன்று சாப்பிட்டு ரொம்ப நாட்களாகிறது...இல்லை, இல்லை, வருடங்களாகிறது!

    ReplyDelete
    Replies
    1. மலைச்சுண்டைக்காய், நாட்டுச் சுண்டைக்காய் என்பார்கள். இரண்டுமே நல்லது தான்.

      Delete
  3. சுண்டக்காய் சாம்பார், வற்றல் என நானும் சுவைத்திருக்கிறேன்! பிடித்த உணவு! எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த செடி பட்டுப்போய்விட்டது. இப்போது புதிதாக முளைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தானாகவே வரும்!

      Delete