எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 15, 2018

உணவே மருந்து! வல்லாரை!

pictures of keerai

வல்லாரை

ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம் என்பார்கள். நீர் அதிகம் இருக்கும் பகுதிகளிலேயே தானாக வளர்ந்திருக்கும். இதுவும் ஒரு கீரை வகையாகவே கருதுவார்கள். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதால் "சரஸ்வதி கீரை" என்னும் பெயரும் இதற்கு உண்டு. இதில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தி, வைடமின்கள் ஏ, சி ஆகியன உள்ளன. தாது உப்புக்கள் நிறைந்ததும் கூட. ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை உள்ளது இந்தக் கீரை! உடல் புண்கள், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். கபம் நீங்கும். பல் துலக்கினால் மஞ்சள் நிறம் மாறிப் பற்கள் பளிச்சிடும்.

காலை வேளையில் வெறும் வயிற்றில் அப்போது தான் பறித்த கீரையை வாயிலிட்டு மென்றால் மூளை நன்கு செயல்படும். அதன் பின்னர் பசும்பால் குடித்தால் மாலைக்கண் நோய் குணம் ஆகும். இந்தக்கீரையுடன் மிளகு சேர்த்து உண்டால் உடல் குளிர்ச்சி அடையும். சூடு தணியும்.  ஆனால் இதற்குப் பத்தியம் உண்டு. அகத்திக்கீரை, பாகல் காய் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இது உண்ணுவது பொதுவாக அரிதாகக் காணப்படும் இக்காலத்தில் சித்த மருத்துவத்தில் சூரணம், லேகியம், மாத்திரை ஆகிய வடிவங்களில் பக்குவம் செய்து சித்த மருத்துவர்கள் தருகின்றனர்.

இதன் இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவில் தினமும் பசும்பாலில் கலந்து அருந்தினால் வயிர்ருப் பூச்சிகள் ஒழியும்.  இலைகளைச் சுத்தம் செய்து சின்ன வெங்காயம், பூண்டு , மிளகு சேர்த்து அரைத்து உப்புச் சேர்த்துத் துவையலாகச் சாப்பிடலாம். ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரை ஒரு பங்குடன் கீழா நெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்துச் சாறை அருந்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் தீரும். இந்தக் கீரை மலச்சிக்கலை அகற்றுகிறது. நீரிழிவு நோய்க்கு மிக அரிய மருந்தாகும் இது.  யானைக்கால் வியாதி, விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகள் ஆகியவற்றின் மீது இந்தக்கீரையை நன்கு அரைத்துக் கட்டினால் குணம் தெரியும். இதை முறைப்படி எண்ணெய் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு தணியும்.  வாய்ப்புண்ணால் அவதிப் படுபவர்கள் வல்லாரை இலையைப் பச்சையாக மென்று தின்றால் நல்ல குணம் தெரியும்.

அதோடு இந்தக்கீரையைச் சமைக்கையில் புளி சேர்க்கக் கூடாது. புளி சேர்த்தால் அதன் மருத்துவ குணம் மாறி விடும். சிறுநீர் மஞ்சளாகப் பிரிந்தாலும் வல்லாரை சிறந்த நிவாரணியாகப் பயனாகிறது. இதனுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து பாசிப்பருப்புப் போட்டு சாம்பார் மாதிரிச் செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்புடன் தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்துக் கூட்ட்டாகவோ பொரிச்ச குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். வல்லாரை, உளுத்தம்பருப்பு, தேங்காய் போன்றவற்றை வதக்கிக் கொண்டு அதனுடன் உப்புச் சேர்த்து மிளகு போட்டுத் துவையல் செய்தும் சாப்பிடலாம். 

10 comments:

  1. அஆவ் !!! எனக்கு ரொம்ப பிடிக்குமே ஸ்மூத்தி வல்லாரையை அரைச்சு குடிப்பேன்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிக்கும் ஏஞ்சல், ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்தில் கிடைக்கலை!

      Delete
    2. எப்போ கிடைச்சாலும் வாங்கி அந்த தண்டுகளை தொட்டியில் நட்டா வளரும் .ட்ரை பண்ணிப்பாருங்கக்கா .நான் தண்டு /முளை /கொங்க்ரா எல்லாம் அப்படி வளர்த்திருக்கேன் .

      Delete
  2. இங்கே பிரபல ஆங்கில நேச்சுரல் மெடிசின்ஸ் கடையில் gotu kola என்றது காப்ஸ்யூலாக்கி விக்கிறாங்க .நம்மூரில் எவ்ளோ தாராளமா கிடைக்கும் .
    நன் சாம்பார் செஞ்சேன் துவையல் செஞ்சேன் ஆனா எனக்கு பச்சையா அரைச்சு குடிச்சாதான் பிடிக்குது

    ReplyDelete
    Replies
    1. துவையல் சாப்பிட்டிருக்கேன். பொரிச்ச குழம்பு மாதிரி செய்து சாப்பிட்டோம். பச்சையாச் சாப்பிடலை.

      Delete
  3. வல்லாரை என்று சொன்ன உடனே எனக்கு தேம்ஸ்தான் ஞாபகம் வந்தது. அவங்கதான் 'வல்லாரை யூஸ்/ஊஸ்' என்று சொல்லிக்கிட்டே இருப்பார்.

    இந்தக் கீரையும் நான் சாப்பிட்டதில்லை. கீரைல பெரிய ஆராய்ச்சி பண்றீங்க போலிருக்கு. நேற்று பழமுதிர்ச்சோலை வாசல்ல ஏகப்பட்ட கீரைகளைப் பார்த்தேன். என்ன என்ன வெரைட்டி என்று கேட்கணும்னு நினைத்தேன்... மறந்துட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. ஆராய்ச்சி எல்லாம் இல்லை. எப்போவுமே கீரைகள் சாப்பிடுவோம். அதுவும் அம்பத்தூரில் இருக்கும்போது முள்ளங்கிக் கீரையைக் கூட விட்டதில்லை. இப்போத் தான் கொஞ்சமாச் சாப்பிட வேண்டி இருக்கு! :)))))

      Delete
  4. பயனுள்ள, பயன்படுத்திக்கொள்ளவேண்டிய உத்தி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  5. வல்லாரை என்றதும் எனக்கும் அதே நினைவுதான் வந்தது நெல்லை! நிறைய கீரைகளை நான் சாப்பிடுவதில்லை, சாப்பிடுவதில்லை என்று சொல்ல கூச்சமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

    ReplyDelete