எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, April 19, 2017

உணவே மருந்து! எலுமிச்சை!

எலுமிச்சை ஊறுகாய்! முதலில் எலுமிச்சைக்கு உப்பு மட்டும் போட்டு ஊறுகாய் போடுவோம். அதற்குத் தேவையான பொருட்கள்.

எலுமிச்சை நடுத்தர அளவில் 10

உப்பு  ஒரு பெரிய குழிக்கரண்டி

மஞ்சள் பொடி  மூன்று டீஸ்பூன்

பெருங்காயப் பொடி அல்லது கட்டிப் பெருங்காயம் ஒரு துண்டு

இஞ்சி 50 கிராம்

பச்சை மிளகாய் 50 கிராம்

வெந்தயம்  ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு

எலுமிச்சம்பழத்தைத் துண்டாக நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்க்கவும். கூடவே இஞ்சி தோலைச் சீவிக் கொண்டு, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். எலுமிச்சை நல்ல புளிப்பான பழமாக இருந்தால் 50 கிராம் இஞ்சியும், 50 கிராம் பச்சை மிளகாயும் தேவைப்படும். இல்லை எனில் பழத்தின் அளவுக்கும் புளிப்புக்கும் ஏற்றவாறு கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இதை இரண்டு, மூன்று நாட்கள் ஊற வைக்கவும். வெந்தயம் ஊறினால் பிடிக்கும் எனில் எலுமிச்சையை நறுக்கிச் சேர்க்கையிலேயே வெந்தயத்தையும் சேர்த்துடலாம். இல்லை எனில் ஊறுகாய் ஊறிய பின்னர் நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கையில் வெந்தயத்தையும் தாளித்துச் சேர்க்கலாம். குழம்பு சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, மோர் சாதம் போன்ற எல்லாவற்றுக்கும் இது நல்ல துணை. முக்கியமாய் வற்றல் குழம்பு சாதத்துக்கு!


எலுமிச்சைக் கார ஊறுகாய்

பத்து நடுத்தர அளவு எலுமிச்சம்பழம்

உப்பு தேவையான அளவு

பெருங்காயப் பொடி அல்லது கட்டிப் பெருங்காயம்

மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி இரண்டு டீஸ்பூன்

நல்லெண்ணெய்  100 கிராம் அல்லது இரண்டு குழிக்கரண்டி

கடுகு

முதலில் எலுமிச்சையை நன்கு நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஊற வைக்கவும். நறுக்கிய துண்டத்தை எடுத்துப் பார்த்தால் கைக்கு மிருதுவாக ஊறி இருப்பது தெரிய வரும். அப்போது அதில் மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். எண்ணெயை ஆறிய பின்னர் ஊறுகாயில் ஊற்றிக் கலந்து பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஊறுகாய்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது அவ்வளவு சரியில்லை. ஊறுகாய்கள் வெளியேயே இருக்க வேண்டும். தினம் தினம் எடுத்துப் பார்த்து ஒரு மரக்கரண்டியால் அல்லது நீளமான கரண்டியால் கிளறி விட வேண்டும்.

6 comments:

  1. 'நான் கார எலுமிச்சங்காய் ஃபேன். சப்பாத்திக்கு, அரிசி உப்புமாவுக்கு, ரவாப் பொங்கலுக்கு, இல்லையென்றால் வெறும் சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் கார எலுமிச்சையைக் கலந்துகொண்டு எலுமிச்சை ஊறுகாய் சாதம் சாப்பிடுவேன். உப்பு எலுமிச்சை ஊறுகாய் எனக்குப் பிடிக்காது. (ஜுரம் இருப்பவர்களுக்குத்தான் உப்பு எலுமிச்சை இல்லைனா நாரத்தை உப்பு ஊறுகாய்)

    ஏன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது? ஏதேனும் பிரச்சனை ஆயிடுமா?

    ReplyDelete
    Replies
    1. ஊறுகாயின் சுவை மாறி விடும். வெளியில் வைத்திருந்தால் எண்ணெய்ப் பளபளப்புடன் அப்படியே இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ருசி நிச்சயம் மாறும்.

      Delete
    2. இப்போதெல்லாம் ஹோட்டல்களில் (தமிழ்நாட்டில் மட்டும்னு நினைக்கிறேன்.) காய்ந்த நாரத்தங்காயை வெந்நீரில் ஊற வைத்து மி.பொடி, கடுகு, பெருங்காயம் போட்டு திடீர் ஊறுகாய் செய்து போட்டுடறாங்க. இல்லைனா மாங்கா இஞ்சியை மி.வத்தலோடு சேர்த்து அரைத்துத் தொக்கு!

      Delete
  2. பயனுள்ளது... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. உண்மையில் எலுமிச்சை ஊறுகாய் எனக்குப் பிடிப்பதில்லை. ஒரேயொரு முறை அதன் செய்முறையால் கவரப்பட்டு சாப்பிட்டிருக்கிறேன்!

    ReplyDelete