எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 7, 2016

சிய்யம், சுகியம், சீயன், சுய்யம் எதுவேணா சரி!

இது ஒரு பாரம்பரிய பட்சணம் என்றே சொல்லலாம். ஏனெனில் இது சிராத்தங்களில் பரிமாறப்படும் ஓர் பட்சணமாகவும் இருக்கிறது. திரு நெல்லைத் தமிழன் சொல்லி இருக்கிறாப்போல் எங்க வீட்டிலும் கிருஷ்ண ஜயந்தி, சரஸ்வதி பூஜை, சில சமயங்களில் ஆவணி அவிட்டம், மற்றும் சிராத்தங்களில் சிய்யம், அல்லது சீயன் செய்யப் படுவது உண்டு. அநேகமா இது தென் மாநில பட்சணங்களில் ஒன்று என்றே நினைக்கிறேன். எனெனில் என் மாமியார் வீட்டில் இதைச் செய்தே பார்த்தது இல்லை. என் ஓரகத்தில் சரஸ்வதி பூஜைக்குச் செய்வதாகச் சொல்லி இருக்கிறாள். ஆனாலும் நான் அதிகம் செய்ததில்லை. ரங்க்ஸுக்கு இது அவ்வளவாப் பிடிக்கலை என்பதே முக்கியக் காரணம். ஆனாலும் இது எனக்குப்பிடிக்கும்.

அம்மா வீட்டில் சிராத்ததில் தேங்காய் சேர்ப்பதில்லை என்பதால் சீயனுக்குப் பருப்புப் பூரணம். அதுவும் பாசிப்பருப்புப் பூரணம் வைத்திருப்பார்கள். மற்ற நாட்களில் பண்டிகை தினங்களில் திரு நெ.த. சொல்லி இருப்பது போல் தேங்காய்ப் பூரணம் தான். ஆனால் மேல் மாவுக்கான செய்முறை முற்றிலும் வேறு. இதுக்கு மைதா மாவே பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. பொதுவா சிராத்தம் அன்னிக்கு மைதாவுக்குத் தடா இருக்குமே! அதோடு இதற்கான மாவைத் தயாரிப்பதில் தான் சீயனின் ருசியும் அடங்கி இருக்கிறது. இதற்கு அரிசியை ஊற வைத்துப் பின் நீரை வடிகட்டிப் பின்னர் மிக்சியில் அல்லது மிஷினில் பொடியாக்கிய அரிசி மாவு வேண்டும். சிராத்தம் அன்று எல்லா மாவுகளும் அப்போதே தயாரிக்கப்படும். மற்ற நாட்களில் அரிசி மாவை மட்டும் முன்னாடியே தயாரிச்சு வைப்பாங்க. என் அம்மா அந்தக் காலத்தில் கையால் திரிக்கும் இயந்திரத்தினால் மாவு திரிச்சு வைப்பாங்க. இல்லைனா கல் உரலில் போட்டு இடித்துச் சலித்து எடுத்துக்கணும். இப்போதெல்லாம் ஈர அரிசியே மிஷினில் அரைத்துக் கொடுப்பதால் அப்படி அரைச்சு வாங்கி வைச்சுக்கலாம்.

இப்போ அடுத்துச் செய்ய வேண்டியது, சீயன் தயாரிக்கத் தேவையான பொருட்கள்.

ஒரு அரைக்கிண்ணம் அரிசி மாவு

உளுந்து ஒரு கிண்ணம் குவியலாக

உப்பு தேவைக்கு

சீயனுக்கான பூரணம் தயாரிக்க

தேங்காய் நடுத்தரமாக ஒன்று

வெல்லம் பாகு வெல்லம் சுத்தமானதும் தூளாக்கியதும் இரண்டு கிண்ணம்

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

உளுந்தை ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்கு தளதளவென்று அரைத்துக்கொள்ளவும். அரைத்து எடுத்த உளுந்து மாவில் அரிசிமாவு, உப்புச் சேர்த்துக் கலக்கவும். கலந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
தேங்காயைத் துருவி எல்லாத் துருவலையும் எடுத்துக் கொள்ளவும். வெல்லம் சுத்தமானதாக இருந்தால் தேங்காய்த் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்தே ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டுக் கிளறிப் பூரணம் தயாரிக்கலாம். வெல்லம் அழுக்காக இருந்தால் வெல்லத் தூளை நீரில் கரைத்து வடிகட்டி அழுக்குகளை எடுத்து விட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். பின்னர் அந்தப் பாகில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளற வேண்டும். கிளறிய பூரணத்தில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து ஆற விட வேண்டும். ஆறிய பின்னர் ஒரு சின்ன எலுமிச்சை அளவு உருண்டையை எடுத்துக் கொண்டு கலந்து வைத்திருக்கும் மாவில் போட்டு முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.உங்கள் சீயன்கள் மேலே மொறு மொறுவென்றும் உள்ளே மிருதுவாகவும், தித்திப்பாகவும் வரும்.
Image result for சுகியம்

படத்துக்கு நன்றி தினமணி.காம். வலைப்பக்கம் கூகிளார் வாயிலாக

இந்த மாவையே காலையில் அரைத்துக் கலந்து வைத்து விட்டு அப்படியே வைத்திருந்து மாலையில் மாவில் கடுகு, உபருப்பு, கபருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம் தாளித்துக் கரண்டியால் எண்ணெயில் எடுத்து ஊற்றி வெள்ளை அப்பம் தயாரிக்கலாம். அல்லது குழிச் சட்டியில் ஊற்றிக் குழி ஆப்பமாகவும் தயாரிக்கலாம்.

    

இது நான் முன்னர் பண்ணினப்போ எடுத்த படங்கள். மேல் மாவு தயாரிக்கும் முறை சீயனுக்கும் இதுக்கும் ஒண்ணு தான். மேல்மாவு

9 comments:

  1. கீதா மேடம்... நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். அரிசி, உளுந்து போட்ட மேல் மாவு. நான் மைதாவில்தான் செய்தேன். சிராத்தத்துக்கு தேங்காய் உபயோகப்படுத்துவார்கள் ஆனால் வெளியில் அரைத்த மாவு (மைதா, கோதுமை) கிடையாது.

    ஆனா உங்க படம்தான், சீயன் மாதிரியே வரவில்லை. அது தொஞ்சுபோன இனிப்பு போண்டா மாதிரி இருக்குன்னு சொன்னா, உங்க வீட்டுக்கு வந்தால் ஒன்றும் தரமாட்டீர்கள். அதனால் உண்மையைச் சொல்லவில்லை.

    சீயனின் ருசி மேல்மாவு கொஞ்சம் உப்பாக இருப்பதில்தான் இருக்கிறது. அதிலும் சமயத்தில் ஓடு கெட்டியாக இருந்து, அங்கங்கே உள்ள விரிசலில் தேங்காய் பாகு கொஞ்சம் வெளியில் வந்திருந்தால் இன்னும் நல்லாத்தான் இருக்கும். ஓடு ரொம்ப கெட்டியாக இருந்தால் பல்லுக்குக் கஷ்டம்.

    வெள்ளையப்பம் செய்முறையும் படமும் நன்றாக இருக்கு. எனக்கு வார இறுதியில் செய்வதற்கு ஒரு டிபன் கிடைத்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. @நெல்லைத் தமிழன், சீயன் நான் வீட்டில் செய்தது இல்லை! ஆகவே கிடைச்ச படத்தைப் போட்டேன். வெள்ளையப்பம் அடிக்கடி செய்வேன். :)

      Delete
  2. இப்போது கையில் இரண்டு பிளேட் சீயன், இரண்டு பிளேட் வெள்ளை அப்பம் (சட்னியுடன்) கிடைத்தால் ஒரு வெட்டு வெட்டுவேனாக்கும்!

    ReplyDelete
  3. நாங்களூம் இப்படித்தான் செய்வோம்.

    ReplyDelete
  4. பாரம்பரிய உணவு வகை செய் முறைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பாசிப் பருப்பு பூரணம் எப்படி செய்வது என்று கூற முடியுமா

    ReplyDelete