எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, October 31, 2016

பொரிச்ச குழம்பா அல்லது மொளகூட்டலா? எது சரி? :)

உணவே மருந்து தொடர் தான் தொடரணும். ஆனால் இன்று நெல்லைத் தமிழன் எங்கள் ப்ளாகில் போட்டிருந்த புடலைப் பொரிச்ச குழம்பைப் பார்த்ததும் இங்கே கொஞ்சம் விளக்கம் எழுதலாம்னு கை துறு துறு! நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பது முழுக்க முழுக்கப் பொரிச்ச குழம்பு வகையே! ஏனெனில் மிளகூட்டல் அல்லது மொளகூட்டல் என்றால் அதுக்கு மிளகு வைக்கவே கூடாது. :) இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். பொரிச்ச குழம்புக்கும் மிளகூட்டல் அல்லது மொளகூட்டலுக்கும் வித்தியாசம் உண்டு.

அதோடு பொரிச்ச கூட்டையும் சிலர் இப்படித் தான் ஜீரகம் வைத்துத் தேங்காய் சேர்த்து அரைத்துட்டுப் பொரிச்ச கூட்டுனு சொல்றாங்க. உண்மையில் பொரிச்ச கூட்டுக்குப் பருப்பே போட வேண்டாம். காய்களை நறுக்கிக் கொண்டு அலம்பிப் போட்டு லேசாக நல்லெண்ணெயில் ஒரு வதக்கு வதக்கிக் கொண்டு நீர் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொண்டு வெறும் தேங்காயும்,கொஞ்சம் ஊற வைத்த அரிசி அல்லது அரிசி மாவு சேர்த்து அரைத்துக் காயில் கலந்து ஒரு கொதி விட்டுப் பின்னர் கடுகு, உபருப்பு, கருகப்பிலை, மி.வத்தல் தாளித்தால் பொரித்த கூட்டு!

அல்லது காய்கள் வேகும்போதே ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து உப்போடு வேக வைத்துப் பின் தேங்காய், அரிசி மாவு அரைத்துக் கலப்பதும் பொரித்த கூட்டு வகை தான். ஆனால் பொரித்த கூட்டுக்கு நாட்டுக் காய்கள் தான் நன்றாக இருக்கும். உதாரணம் புடலை, கத்திரி, அவரை, கொத்தவரை போன்றவை. அபூர்வமாகச் சில சமயம் சௌசௌவும் பொரித்த கூட்டுக்கு எடுபடும். இதில் கொத்தவரையில் பொரித்த கூட்டுச் செய்கையில் கடலைப்பருப்பை ஊற வைத்துக் கொத்தவரை வேகும்போது சேர்த்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடி, பெருங்காயம் உப்போடு சேர்த்து வேக வைத்துக் கொண்டு, தேங்காயத்துருவலை அரைத்து விடாமல் தாளிதத்தில் போட்டு வறுத்துக் கொட்டுவதும் ஒரு முறை பொரிச்ச கூட்டு.

ஆனால் பொரிச்ச குழம்பு என்றால் மி.வத்தல், மிளகு, உபருப்பு, தேங்காய்த் துருவல் வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இதற்குப் பாசிப் பருப்பு மட்டும் போதும். மொளகூட்டல் எனில் துவரம்பருப்புச் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். அல்லது துவரம்பருப்பும் பாசிப்பருப்பும் கலந்தும் போடலாம்.  மொளகூட்டலுக்கு இரண்டு, மூன்று காய்கள் கலந்தும் போடலாம். நாட்டுக்காய்கள் அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும். பூஷணி, பறங்கி, அவரை, கத்திரி, புடலை போன்றவற்றில் மொளகூட்டல் நன்றாக இருக்கும். முளைக்கீரையிலும் மொளகூட்டல் செய்வது உண்டு! அதுவும் நன்றாக இருக்கும். 

7 comments:

  1. பொரித்த கூட்டுக்கு என்று இல்லை, எதிலுமே மஞ்சள் பொடி சேர்ப்பதில்லை! அரிசி மாவு கரைத்து ஊற்றும் வழக்கம் என் அம்மாவுக்கு உண்டு. நான் செய்வதில்லை! சிலசமயங்களில் தேங்காய் அரைக்கும்போது அதன் கூட ஒரு ஸ்பூன் ஊறவைத்த அரிசி சேர்த்து அரைத்ததுண்டு. அதுவும் ஆரம்ப காலங்களில்!

    ReplyDelete
    Replies
    1. மளிகை சாமான் பட்டியலில் முதலில் எழுதும் பொருளே மஞ்சள் பொடி தான். :) நான் சின்னவளா இருக்கும்போது என் அம்மா கிழங்கு மஞ்சளை அம்மியில் உரசி விழுதாக எடுத்துக் கொண்டு சமையலில் சேர்ப்பார். மஞ்சள் வயிற்றுக்கு நல்லது, புண்ணை ஆற்றும். தினம் மஞ்சள் பொடியை உணவில் சேர்ப்பது மிக நல்லது. முன்னெல்லாம் அதாவது என் காலம் வரைக்கும் பிரசவம் ஆன பெண்களுக்குப் பிரசவம் ஆனதுமே ஒரு மணி நேரத்துக்குள்ளாகப் பச்சை மஞ்சளை அரைத்து விழுதாகக் கொடுத்து அப்படியே சாப்பிடச் சொல்லுவார்கள். பிரசவம் ஆனதால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் புண்கள் ஆற வேண்டும் என்று தான்.

      Delete
    2. நாங்களும் மளிகை லிஸ்ட்டில் மஞ்சள் போடுவோம்தான். அதைச் சமையலில் சேர்ப்பது நல்லதுதான். மருத்துவ குணங்கள் உண்டுதான்... ஆனாலும்.....

      Delete
  2. போனாப் போவுது.. சமையல் ஜாம்பவான். அதுனால சும்மா ஒண்ணும் சொல்லாம விட்டுடறேன். நெல்லையில் மிளகூட்டல் என்றுதான் சொல்வார்கள். (மிளகைக் கூட்டுவதால்..அதாவது சேர்ப்பதால்) இது நிச்சயமா கன்யாகுமரி, திருவனந்தபுரத்திலிருந்து வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதுக்கு கோஸ், புடலை, அவரை அட்டஹாசமா இருக்கும். எங்கம்மா அதோட, 2 கத்திரிக்காயையும் திருத்திப்போடுவார்கள். எனக்குத்தான் இரண்டு காயைக் கலப்பது பிடிக்காது.

    பொரிச்ச குழம்பு கிழக்குன்னா, மிளகூட்டல் மேற்கு. அப்படித்தான் எனக்குத் தோணுகிறது.

    இருந்தாலும், ஜாம்பவானிடம் வம்பு வச்சுக்கக்கூடாதுன்னு சும்மா இருக்கேன் (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

    ReplyDelete
    Replies
    1. நெல்லைக்காரங்க செய்து நானும் பார்த்திருக்கேன். மிளகு சேர்த்துச் செய்வது பொரிச்ச குழம்பு அல்லது பொரிச்சோரம்பு என்று சொல்வார்கள்.

      Delete
  3. என் பின்னூட்டத்துடன் ஸ்மைலியைச் சேர்க்க விட்டுப்போய்விட்டது. :|). I wrote in lighter vein. கோச்சுக்காதீங்க.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம், நான் கோவிச்சுண்டுட்டேன். :)

      Delete