எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 29, 2016

உணவே மருந்து! தென்னை, தேங்காய்!

தேங்காய்ப் பால் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் அடிக்கடி வாய்ப்புண் வருபவர்களுக்கு வயிற்றிலும் புண்கள் இருக்கும். அத்தகையோருக்கு இந்தத் தேங்காய்ப் பால் மிக நன்மை பயக்கும். அதிக வெயிலின் காரணமாகவும் சிலருக்கு வாயில் புண்கள் ஏற்படும். அத்தகையோரும் தேங்காய்ப் பால் விட்டுக் கஞ்சி சாப்பிட்டால் வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் தீர்ந்து போகும்.

புழுங்கலரிசியைக் களைந்து வறுத்துக் கொண்டு அத்துடன் (விருப்பப்பட்டால் பூண்டு,) வெந்தயம்(கட்டாயமாய்) சேர்த்துக் கொண்டு குழைய வடிக்க வேண்டும். அரிசியை வறுத்ததும் கொஞ்சம் பொடியாக ஆக்கிக் கொண்டால் விரைவில் குழையும். அதில் உப்புச் சேர்த்துத் தேங்காய்ப் பாலை விட்டுக் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

புதிதாகத் திருமணம் ஆனவர்களுக்கு ஆடி மாதம் பிறந்ததும் ஆடிக்கு அழைத்துத் தலை ஆடிச் சீர் செய்வார்கள். அப்போது மாப்பிள்ளைக்கு வெள்ளித் தம்பளரில் (வசதி படைத்தவர்கள் கொடுப்பார்கள்) தேங்காய்ப் பால் விட்டுக் குடிக்கக் கொடுப்பார்கள். இந்தத் தேங்காய்ப் பாலைச் செய்யத் தேங்காய்த் துருவலை நன்கு அரைத்து இரண்டு முறை பிழிந்து பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.  வெல்லத்தைப் பொடி செய்து  நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டிக் கொதிக்க விடவேண்டும். வெல்லம் கொதித்துப் பாகு வரும் நேரத்தில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி விட்டுப் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு ஏலக்காய்த் தூள் சேர்க்கவேண்டும். விரும்பினால் முந்திரிப்பருப்பை வறுத்துச் சேர்க்கலாம்.

இளம் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றாலும் வாய்ப்புண் சரியாகும். இப்போதைய ஆங்கில மருத்துவர்கள் மட்டுமே தேங்காயில் கொழுப்புச் சத்து இருப்பதாகவும், தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கும்படியும் சொல்லி வருகின்றனர். உண்மையில் தேங்காய் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதே அல்ல! நன்மையே தரும். ஆகவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கூட தைரியமாகத் தேங்காயைச் சேர்க்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத் தேங்காய்ப் பால் உடலில் மங்கனீசுக் குறைபாட்டை நீக்கும். சருமம் மற்றும் ரத்தக்குழாய்கள் நெகிழ்வுடன் இருக்கும். எலும்புகள் உறுதியாகும். அனீமியா எனப்படும் ரத்தசோகை குணமாகும். தசை இறுக்கம், நரம்புகள் முறுக்கிக் கொள்வதிலிருந்து தடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல் குண்டானவர்கள் சிறிதும் கவலை இல்லாமல் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். உடல் எடை குறையும். கீல் வாதம் உள்ளவர்களும் தேங்காய்ப் பால் சாப்பிடலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தத் தேங்காய்ப் பால் சாப்பிடலாம். நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. முக்கியமாக ஆண்களுக்குப் ப்ரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

அடுத்துத் தேங்காய் எண்ணெயைப் பார்க்கலாம்.

4 comments:

  1. சிறப்பான தகவல்கள்.... தேங்காய்ப் பால் விட்டு புழுங்கலரிசி கஞ்சி சாப்பிட்டதுண்டு.

    ReplyDelete
  2. தேங்காய்ப்பால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். பயனுள்ள தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  3. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete