எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, November 29, 2015

உணவே மருந்து! 1 முருங்கை!

சாப்பாட்டுப் பதிவுகளை எல்லாம் "எண்ணங்கள்" பக்கமே கொண்டுபோனதால் இந்தப் பக்கத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இனி இங்கேயும் கவனம் வைக்கணும்னு நினைக்கிறேன். மருந்தாகப் பயன்படும் ஒரு சில காய்கள், இலைகள் போன்றவற்றின் பலன்கள், சமைக்கும் முறை, ஆகியவற்றைச் சொல்லலாம் என்று எண்ணம். முதலில் முருங்கைக் காயைக் குறித்துப் பார்ப்போம்.
Image result for முருங்கைக்காய்
Image result for முருங்கைக்காய்

முருங்கைக்காய், இலை, பூ அனைத்துமே மருந்து தான். பூவை நெய்யில் வதக்கி திராக்ஷைப் பழம், சோம்பும் சேர்த்துப் பிள்ளைத் தாய்ச்சிகளுக்குக் கஷாயம் வைத்துக் கொடுப்பார்கள்.இது குடித்தால் பொய் வலி இருந்தால் அது சரியாகும். உண்மையான வலி என்றால் வலி நீடித்துச் சிக்கல்களைப்போக்கிப் பிரசவம் நன்கு சுமுகமாக நடக்க வழி வகுக்கும்!
Image result for முருங்கைப்பூ மருத்துவ குணங்கள்
முருங்கைப் பூவைப் பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய், சீரகம் அரைத்துவிட்டுக் கூட்டுச் செய்யலாம்.  பொரிச்ச குழம்பு செய்யலாம். முருங்கைக் கீரையையும் சமைக்கலாம். முருங்கைக்கீரைப்பருப்பு உசிலி செய்யலாம். வெங்காயம் சேர்த்துப் பாசிப்பருப்புப் போட்டுக் கறி செய்யலாம். வெங்காயம் போடாமலும் பாசிப்பருப்பு, தேங்காய் போட்டுக் கறி செய்யலாம். முருங்கைக்கீரையையும் பொரிச்ச குழம்பு, புளி விட்ட குழம்பு செய்யலாம். அடைக்குப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

முருங்கைக்காயையும் சாம்பார், பொடியாக நறுக்கி வேகவைத்து விழுதைச் சுரண்டிக் கொண்டு அதில் கூட்டு, கறி செய்யலாம். முருங்கைக்காயையும் பொரிச்ச குழம்பு செய்யலாம்.

முருங்கை சாப்பிடுவதின் பலன்கள்: சிறுநீர் எளிதாகப் பிரியும். வலியைப் போக்கும். முருங்கைப் பூ பெண்களின் மாதவிடாய்ச் சிக்கலைத் தீர்க்கும். உடலை உரமாக்கும். முருங்கை இலைச்சாறோடு எலுமிச்சைச்சாறையும் சேர்த்து முகத்தில் பூசினால் பருக்கள் மறையும். தலைவலிக்கு முருங்கை இலையோடு மிளகையும் வைத்து இடித்துச் சாறு எடுத்துப் பத்துப் போடத் தலைவலி நீங்கும்.

வீக்கம் உள்ள இடங்களில் முருங்கை இலைச்சாறைப் பூச வீக்கம் குறையும். எல்லாவற்றையும் விட நாய்க்கடிக்குச் சிறந்த மருந்து முருங்கை இலைச்சாறு. 2 பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு முருங்கை இலையோடு சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசினால் புண் ஆறி நாய்க்கடியினால் ஏற்பட்ட நஞ்சு முறியும்.

வளரும் குழந்தைகளுக்கு சாறோடு பால் சேர்த்துக் கொடுக்கலாம். வயிற்று வலி, வயிற்றுப் புழுக்கள் ஆகியனவற்றுக்கு முருங்கை இலையைக் கிள்ளி எடுத்தபின்னர் கிடைக்கும் ஈர்க்கு,கருகப்பிலை ஈர்க்கு இரண்டையும் சேர்த்துக் குடிக்கும் நீரில் போட்டு ஊற வைத்துக் குடிக்கலாம். ஆண்களுக்கு முருங்கைப் பூ தாது விருத்தியைப் பெருக்கும். மலட்டுத் தன்மை நீங்கும். கீல் வாதங்களுக்கும், அது குறித்த வலிகளுக்கும் முருங்கை விதை எண்ணெயோடு கடலை எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம். முருங்கை மரத்தின் பட்டையும் உபயோகமானதே!

முருங்கைப்பட்டையை இடித்துச் சாறு எடுத்துச் சமமாகப் பால் கலந்து நெற்றியில் பத்துப் போட்டால் தலைவலி நீங்கும். வேரைக் கஷாயமாகச் செய்து குடித்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கங்களுக்கு நல்ல மருந்து. வேரை இடித்த சாறோடு பால் கலந்து அருந்தினால் இரைப்பு, கீல் வாதம் போன்றவை நீங்கி ஜீரண சக்தியும் அதிகம் ஆகும்.

6 comments:

  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்பாட்டுக் கடை இங்கே திறந்திருக்கிறது.... நல்ல விஷயம். தொடரட்டும்.

    முருங்கையின் பல பயன்கள் - பிரமிக்க வைக்கிறது. நெய்வேலியில் இருந்தவரை நிறையவே சாப்பிட்டிருக்கிறேன். வீட்டிலேயே மரம் இருந்தது. தில்லி வந்த பிறகு ரொம்பவும் குறைவு! மார்க்கெட் போகும்போது வாங்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், முருங்கைக்காயின் வாசனை தில்லியிலிருந்து இழுத்து வந்திருக்கு போல! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. முருங்கை இல்லை, பூ, பிடிச்ச ஐட்டம்! நமக்குப் பிடிச்சது வீட்டில் அதிகமாகச் செய்ய மாட்டார்கள்! அது நான் வாங்கி வந்திருக்கும் வரம்!

    முருங்கைப்பூ போட்டுப் பொரியல் செய்து சாப்பிட ஆசை. அவ்வளவு பூ கிடைப்பதில்லை.

    இரண்டு நாட்களுக்கு முன் தான் உங்களின் இந்த தளம் நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருக்கிறதே என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, உங்க பாஸ் நீங்க சொல்லிக் கேட்க மாட்டாங்களா? என்ன? மறுபடியும் சொல்லிப் பாருங்க! :)

      Delete
  3. பயன் தரும் தகவல்கள் அம்மா... நன்றி...

    இங்கும் தொடரவும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, தொடரத்தான் ஆசை! பார்க்கலாம்! :)

      Delete