எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, June 3, 2012

இட்லிக்கு ஏற்ற காம்பினேஷன் கொத்சா, சாம்பாரா? ஒரு பட்டி மன்றம்

கொத்சைப் பற்றி அப்பாதுரை எழுதி இருந்ததைப் படித்தேன்.  அவர் பார்த்த/கேட்ட/ருசித்த கொத்சு கிட்டத்தட்ட சாம்பாரின் மறு பிறவியே.  ஒரிஜினல் நயம் கொத்சு இங்கே கொடுக்கப் படும். இட்லி, பொங்கல், அரிசி உப்புமா,  ரவா, சேமியா கிச்சடிகளோடும், சிதம்பரம் சம்பா சாதத்தோடும் ருசிக்கலாம், வாங்க.

கீழே கொடுப்பவை எல்லாம் நான்கு பேருக்கானது. முதலில் பார்க்கப் போவது வெங்காயம் போடாத கொத்சு.

முதலில் காய்கள் போட்ட கொத்சு:  கத்திரிக்காய் நடுத்தரமான அளவில் நான்கு, முருங்கைக்காய் ஒன்று, பீன்ஸ் ஒரு கைப்பிடி, காரட் பெரிதாக ஒன்று, பறங்கிக்காய் ஒரு துண்டு, செளசெள சின்னதாக ஒன்று. காய்களைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பச்சைக் கொத்துமல்லி.

புளி எலுமிச்சை அளவு நீரில் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு ஒரு கிண்ணம் நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும். உப்பு தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: மி.வத்தல் ஆறு, தனியா அரைக்கிண்ணம், கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, வெந்தயம் ஒரு டீஸ்பூன். தேங்காய் சேர்க்கக் கூடாது.  மேலே சொன்னவற்றை எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

தாளிக்க: கடுகு, மி.வத்தல் 2, பச்சை மிளகாய் 2, கருகப்பிலை, பெருங்காயம். எண்ணெய். மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை.

கடாய் அல்லது உருளியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி சேர்க்கவும்.  பின்னர் நறுக்கிய காய்களை நன்கு அலம்பிக் கொண்டு எண்ணெயில் போட்டு வதக்கவும்.  காய்கள் நன்கு வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  மஞ்சள் பொடி நிறம் கொடுக்கவில்லை எனில் இன்னொரு அரை டீஸ்பூன் சேர்க்கலாம்.  காய்கள் வேகும்வரை கொதிக்கவிட்டு வெந்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும்.  பருப்புச் சேர்த்துக் கொதித்ததும், வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  இது விரத நாட்களுக்கு ஏற்ற கொத்சு.  பொங்கல், அரிசி உப்புமா, கிச்சடி வகையறாக்களோடும் , இட்லியோடும் ஒத்துப் போகும்.  அடுத்து நாம் வெங்காயம் போட்ட கொத்சைப் பார்க்கலாம்.

வெங்காய கொத்சு:

சின்ன வெங்காயமாய் இருந்தால் நல்லது.  கால் கிலோ சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  அல்லது பெரிய வெங்காயம் கால் கிலோவைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்றவை மேலே சொன்னாப் போல் செய்ய வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றித் தாளிதப் பொருட்களைப் போட்டுக் கொண்டு, வெங்காயத்தைப்போட்டு நன்கு வதக்கிக் கொண்டு புளி ஜலத்தை விட வேண்டும்.  உப்புச் சேர்த்துக் கொதித்ததும், பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். பின்னர் வறுத்துப் பொடி செய்த பொடியைப் போட்டுக் கீழே இறக்கவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  இதையே பருப்புச் சேர்க்காமலும் செய்யலாம்.  இட்லிக்கு, காஞ்சிபுரம் இட்லிக்கு மிகவும் நல்ல துணையாக இருக்கும்.

மேலே சொன்ன காய்களோடும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டு கொத்சு செய்யலாம். இதைத் தவிர தனிக் கத்தரிக்காய் சுட்ட கொத்சு இருக்கிறது,  வதக்கிச் செய்யும் கொத்சு ஏற்கெனவே கொடுத்திருக்கேன்.  கத்தரிக்காய் சுட்ட கொத்சுக்குக் கத்தரிக்காயை நன்கு சுட்டு எடுத்துத் தோலை உரித்துக் கொண்டு கைகளால் நன்கு மசித்துக்கொள்ளவும்.

எலுமிச்சை அளவுப் புளியை நீரில் கரைத்துக் கொண்டு, மசித்த கத்தரிக்காயை அதில் போட்டுக் கலக்கவும்.  பின்னர் அடுப்பில் வாணலியை வைத்துக் கொண்டு கடுகு, கருகப்பிலை, பச்சை மிளகாய், மி.வத்தல் தாளித்துக் கொண்டு கரைத்த புளிக்கரைசலை கத்தரிக்காயோடு சேர்த்துக் கொட்டவும்,  உப்புச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும். வறுத்த பொடியைப் போட்டுக் கலந்து அரிசி உப்புமாவோடு சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.


4 comments:

  1. இதில் நீங்கள் சொல்லியுள்ள சுட்ட கத்தரிக்காய் கொத்சுதான் என் அம்மா அந்தக் காலத்தில் செய்து தந்து ருசித்தது. வெண் பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள உற்ற தோழன்! கறி அடுப்பில் சுட்டு எடுக்கும் நீளக் கத்தரிக்காயை தோலுரித்து துவையலும் செய்வதுண்டு. கரியடுப்புக் காலம் பொற்காலம். கரி வாங்குவதில்தான் பெரும்பாலும் எனக்குக் கமிஷன் கிடைக்கும்!!!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, எனக்கு ஸ்கூல் பஸ்ஸுக்குக் கொடுக்கும் காசில் கிடைக்கும். கடைசியில் அப்பாவுக்குத் தெரிஞ்சு போய்ப் பாஸ் எடுத்துட்டார். :))))))))இப்போவும் கத்தரிக்காய் சுட்டுத் துவையல், கொத்சு செய்வதுண்டு. கரி அடுப்பு, (குமுட்டி) வைச்சிருக்கேனாக்கும். :)

    ReplyDelete
  3. //நறுக்கிய காய்களை நன்கு அலம்பிக் கொண்டு// - இது தவறு. முதலில் காயை அலம்பிவிட்டு திருத்தணும். அப்புறம் அலம்பினால் சத்து போயிடும். ஹாஹாஹா. எப்படி தவறு என் கண்ணில் மாட்டுது பாத்ட்ஈங்களா?

    ReplyDelete
    Replies
    1. சில காய்களை நறுக்கிய பின்னரும் அலம்பறாப்போல் இருக்கும். உதாரணமாகக் கத்திரிக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு போன்றவை நறுக்கிய பின்னரும் தண்ணீரிலேயே தான் போட்டு வைப்பாங்க. இதுக்காகவே நான் சமைக்கும் முன்னரே நறுக்குவேன். முன் கூட்டி நறுக்கி வைப்பதில்லை. தண்ணீரில் போட்டு வைப்பதைத் தடுக்கவே அவ்வாறு செய்வேன். அப்படியும் சில காய்களை அலம்பறாப்போல் இருக்கும். என் நாத்தனார் எல்லாம் வெங்காயத்தைக் கூடப் பொடியாக நறுக்கிட்டு அலசு அலசுனு அலசி வைப்பாங்க! :)

      Delete