எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 11, 2025

புளிக்காய்ச்சல் செய்முறைகள்!

 இது நிறையத் தரம் எழுதி ஆச்சு. இருந்தாலும் மீண்டும் போடுகிறேன்.

வீடுகளில் செய்யும் புளிக்காய்ச்சல், இதை இரு முறைகளில் செய்யலாம்.  ஒன்று மிளகாய் மட்டுமே தாளித்துச் செய்வது. இன்னொன்று தாளிப்பில் மிளகாயைக் குறைத்துக் கொண்டு, வறுத்துப்பொடி செய்து சேர்ப்பது.  முதலில் மிளகாய் தாளிப்புப் புளிக்காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:  புளி 200 கிராம், மி.வத்தல் காரம் உள்ளதானால் 10 முதல் 12 வரை. வெந்தயம் ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்தது.  உப்பு தேவையான அளவு, மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன். நல்லெண்ணெய், ஒரு சின்னக் கிண்ணம் அல்லது குறைந்த பக்ஷமாக நூறு எண்ணெய். தாளிக்கக் கடுகு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை என்றால் முன்னாடியே ஊற வைத்துக்கொள்ளவும்.  வேர்க்கடலை எனில் அப்படியே தாளிப்பில் போடலாம்.  கருகப்பிலை. பெருங்காயம்.

புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  காய்ந்ததும் முதலில் மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போடவும். மிளகாய் நன்கு கறுப்பாக ஆக வேண்டும்.  அதன் பின்னர் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது ஊறிய கொண்டைக்கடலையைப் போடவும்.  அனைத்தும் நன்கு வறுபட்டதும், கருகப்பிலை சேர்த்துக் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.  நன்கு  கொதிக்க வேண்டும்.  கொதித்து எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த வெந்தயப் பொடியைச் சேர்க்கவும்.  பின் கீழே இறக்கவும். 

இதை நேரிடையாகச் சாதத்தில் போட்டுக் கலந்து விடலாம்.  தனியாக சாதத்தில் தாளிப்பு தேவை இல்லை.

வறுத்துப் பொடி செய்து போடும் முறை: மேலே சொன்ன அளவுக்கு எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  தாளிப்பில் இருந்து எல்லாவற்றுக்கும் அதே சாமான் தான், கூடுதலாகச் செய்ய வேண்டியது.  ஒரு டீஸ்பூன் எள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஆகியவை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து கொள்ளவும்.  இதைத் தவிர தனியா ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வறுக்கவேண்டும்.  அதோடு பெருங்காயத்தையும் வறுத்துக் கொண்டு மிளகாய் வற்றலில் நாலைந்தை மட்டும் தாளிப்புக்கு வைத்துக் கொண்டு மிச்சத்தை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மிளகாய், தனியாவையும் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  தேவைப் பட்டால் வெல்லத்தூள்  ஒரு டேபிள் ஸ்பூன். வெல்லம் பிடிக்காதவர்கள் போட வேண்டாம்.

புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.  பின்னர் கடாயில் மேலே சொன்னபடி  முதலில் மிளகாயைத் தாளிக்க வேண்டும்.  இம்முறையில் தாளித்த மிளகாய் நாலைந்து தான் இருக்கும்.  அவை கறுப்பாக ஆனபின்னர் மற்றவற்றைத் தாளித்துப்புளிக்கரைசலை ஊற்றவும்.  கொதிக்க வேண்டும்.  எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த பொடிகளைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும்.  வெல்லம் சேர்ப்பதானால் பொடிகளைச் சேர்க்கும்போதே போட்டு விடலாம்.

அடுத்துப் பச்சைப் புளியஞ்சாதம் என்னும் திடீர்த் தயாரிப்பு.  வீட்டுக்குத் திடீரென யாரோ வந்துடறாங்க.  சாம்பார் , ரசம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்றாங்க.  புளியோதரைனா சாப்பிடறதாச் சொல்றாங்க. என்ன பண்ணலாம்னு யோசிப்போம் இல்லையா?

ஆழாக்கு அரிசியைக் களைந்து கொள்ளவும்.  தேவையான தண்ணீர் இரண்டு கிண்ணம் எனில் ஒரு கிண்ணம் தண்ணீர் மட்டும் சேர்த்துக் குக்கரிலோ அல்லது வேறு சாதம் வடிக்கும் முறையிலோ வேக வைக்கவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும்.  இப்போது எலுமிச்சை அளவுப் புளியை எடுத்துக் கரைத்து ஒரு கிண்ணம் வரும்படி எடுத்துக்கொள்ளவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும் சாதத்தில் இந்தப்புளிக்கரைசலை ஊற்றி, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும்.  அரிசியை நன்கு வேக விட வேண்டும்.  சாதம் உதிர் உதிராக ஆனதும் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு தாம்பாளத்தில் பரத்திக் கொள்ளவும்.

 இரண்டு டீஸ்பூன் வறுத்த மிளகாய், கொத்துமல்லிப்பொடியுடன், கடுகு, வெந்தயம், எள் வறுத்த பொடியையும் ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கவும்.  பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, ஒன்றிரண்டு மிளகாய்(முதலில் போட்டுக் கறுப்பாக்கியது), கருகப்பிலை, தேவைப்பட்டால் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துத் தாளிதம் செய்து சாதத்தில் கலக்கவும்.  இது ஊற ஊற நன்றாக இருக்கும். புளிக்காய்ச்சலே செய்யாமல் செய்யும் விதம் இது.  திடீரென வீட்டில் சமாராதனை, வேறு நிவேதனம் கோயில்களில் கேட்டால் இம்முறையில் வெண்கலப்பானை அல்லது உருளி அல்லது ரைஸ் குக்கர் போன்றவற்றில் வைத்துச் செய்து விடலாம்.

Sunday, September 7, 2025

புளிக்காய்ச்சல், புளியஞ்சாதம் வகைகள்!

 முதல்லே கோயில் புளியோதரைக்குப் புளிக்காய்ச்சல் செய்யறதைப் பத்திப் பார்ப்போம்.  கோயில்னு இல்லை;  பொதுவாகவே நிவேதனம் செய்யும்  உணவுகளில் பாரம்பரியமாக வரும் மிளகுக் காரமே சேர்க்கப்படும்.  உதாரணமாக ஆஞ்சநேயருக்கான வடைமாலைக்கு உள்ள வடை, புளியோதரை போன்றவற்றில் மிளகாய் வத்தல், பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை.  தயிர்சாதம் என்றால் கூடப் பெருங்காயம் கூடப் போட மாட்டார்கள்.  பாலில் குழைய வேக வைத்து வெண்ணெய் சேர்த்து, சுக்குத் தட்டிப் போட்டு அல்லது இஞ்சி, கருகப்பிலை போட்டுக் கடுகு மட்டும் தாளித்திருப்பார்கள்.  ஆகவே இந்தக் கோயில் புளிக்காய்ச்சலுக்கும் மி.வத்தல் எல்லாம் வேண்டாம்.

நூறு கிராம் புளி, தேவையான உப்பு, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்.  மிளகு இரண்டு டீஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.  ஒரு டீஸ்பூன் வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துத் தனியாகப் பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:  கடுகு, கடலைப்பருப்பு/கொண்டைக்கடலை(கறுப்பு)/வேர்க்கடலை, இவை ஏதானும் ஒன்று அல்லது கொஞ்சம் போல் கடலைப்பருப்புப் போட்டுவிட்டு, வேர்க்கடலை தோல் நீக்கி வறுத்துச் சேர்க்கலாம். கருகப்பிலை இரண்டு ஆர்க்கு.  தாளிக்க நல்லெண்ணெய்,  சாதத்தில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்.

இப்போது புளியை நன்கு கரைத்துக் கொண்டு கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி இருந்தால் நல்லது.  இல்லை எனில் நீங்கள் சமைக்கும் ஏதேனும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றவும்.  நல்லெண்ணெய் காய்ந்ததும்  மஞ்சள் தூளைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  புளிக்கரைசல் நன்கு கொதித்துக் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.  பேஸ்ட் மாதிரி ஆனதும் கீழே இறக்கி வைக்கவும்.  இதை முதல் நாளே பண்ணி வைத்துக்கொள்ளலாம்.

மறு நாள் ஒரு ஆழாக்கு அல்லது 200கிராம் அரிசியைப் பொலபொலவென சாதம் ஆக்கிக் கொள்ளவும்.  சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றிக் கலக்கவும். அரை  டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும்.  புளிப் பேஸ்டையும் சாதத்தில் தேவையான அளவு போடவும்.  இந்த அளவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் சரியாக இருக்கும்.  நன்கு கலந்ததும் மிளகுபொடி, வெந்தயப் பொடி சேர்க்கவும்.

இப்போது கடாயில் நல்லெண்ணெய் வைத்துக் காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும்.  இறக்குகையில் கருகப்பிலையைச் சேர்க்கவும்.  தாளிதத்தைத் தயாராய் இருக்கும் சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.  அரை மணி நேரம் நன்றாய் ஊறியதும் சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டுப் பரிமாறவும்.  பெருமாள் கோயில் புளியோதரை தயார்.

அடுத்தது புளிக்காய்ச்சல் வீடுகளில் தயாரிக்கும் இரு முறைகளும், பச்சைப் புளியஞ்சாதம் தயாரிப்பு முறையும்.  நாளை வரை காத்திருக்கவும்.

சாதம் வடிக்கையிலேயே புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியைப் போட்டுப் பின்னர் தாளிதம் சேர்த்தும் புளியஞ்சாதம் தயாரிப்பது உண்டு. அரிசியைச் சாதமாக வடிக்கையில் பாதி வேகும்போதே நீர் அதிகம் இருந்தால் எடுத்து விட்டு அதற்குப் பதிலாகப் புளிக்கரைசலைச் சேர்த்து உப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு அரிசியைப் பொல பொலவென வடித்துக் கொண்டு பின்னர் நல்லெண்ணெயில் முதலில் மி.வத்தலைக் கருக வறுத்துக் கொண்டு அதிலேயே கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்புப் போட்டுக் கொண்டு கருகப்பிலை சேர்த்துச் சாதத்தில் கொட்டிக் கிளற வேண்டும். இது புளிக்காய்ச்சல் செய்யாமல் புளியோதரை தயாரிக்கும் விதம். இது எல்லோருக்கும் பிடிக்குமானு சந்தேகம் தான். இன்னொரு முறை அப்போது தான் வடித்த சாதத்தைத் தாம்பாளத்தில் கொட்டிவிட்டுப் பின்னர் அதில் புளிஜலம்/தாளிப்புச் சேர்த்துக் கொண்டு சாதத்தைக் குவித்து மூடி விட்டுப் பின்னர் அரை மணி கழிச்சு நன்கு கலந்து விட்டும் தயாரிக்கலாம்.

Thursday, September 4, 2025

வெல்லச் சாதம், எள் சேர்த்த வெல்லச் சாதம் வகைகள்!

 எலுமிச்சைச் சாதம் அவ்வளவா போணி ஆகலை. அதனால் பரவாயில்லை. இப்போ வேறே சாதங்களைப் பார்ப்போம். அடுத்து வருவது வெல்லச் சாதம். சர்க்கரைப் பொங்கலுக்கும் இதுக்கும் வித்தியாசம் உண்டு. பொங்கல் அரிசி, பருப்புச் சேர்த்துப் பால் விட்டுக் குழையப் பண்ணுவோம். பின்னர் வெல்லம் சேர்த்துக் கிளறுவோம். தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. தேவையானால் தேங்காயப் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம். ஆனால் பதினெட்டாம் பெருக்குப் போன்ற விசேஷ நாட்களில் வெல்லச் சாதமே பண்ணுவார்கள்.

இதுக்கும் சாதத்தைப் பொல பொலவென வடிச்சுக்கணும். ஒரு தட்டில் நெய்சேர்த்துக் கிளறி ஆற விட வேண்டும். தேங்காயைச் சீராகத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பூத்துருவலாக இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் வாணலி(அலுமினியம்)யை வைத்து அல்லது வெண்கல உருளியில் ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவலைப் போட்டு அதிலேயே வெல்லத் தூள் அரைக்கிண்ணம் சேர்க்கவும். நல்ல பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.

வெல்லமும் தேங்காயும் சேர்ந்து வரும். பாகு பதம் வரும்போது ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும். அடியில் ஒட்டாமல் வரும். அடுப்பை நிறுத்திக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஆறிய நெய் சேர்த்த சாதத்தைப் போட்டுக் கிளறவும். சாதமும் பூரணமும் நன்றாய்க் கலக்க வேண்டும். நன்கு கலந்த பின்னர் ஏலக்காய் ஐந்தாறை எடுத்துப் பொடி சேய்து சேர்த்துக் கலக்கவும். இதற்கு முந்திரிப்பருப்பெல்லாம் தேவை இல்லை. விரும்பினால் போட்டுக் கொள்ளலாம்.

அடுத்து எள்ளுச் சாதம்

இதுக்கும் வடித்த சாதத்தை ஆற வைச்சு உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு நன்கு கலந்து விடவும். நல்ல கறுப்பு எள்ளைக் களைந்து கொண்டு வடிகட்டிப் பின்னர் வெறும் இரும்பு வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்படி வறுக்கவும். 50 கிராம் எள்ளுக்கு இரண்டு பட்டை மிளகாய் (மிளகாய் வற்றல்) சேர்க்கவும். எள்ளை வறுத்த சூட்டிலேயே வத்தலையும் போட்டு அதற்கேற்ற அளவில் உப்புச் சேர்க்கவும். சாதத்தில் ஏற்கெனவே உப்புப் போட்டிருப்பதால் கவனமாக உப்புச் சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு சிலர் இதற்குத் தாளிக்கும் வெள்ளை உளுத்தம்பருப்பும் சேர்ப்பார்கள். தோசை மிளகாய்ப் பொடி மாதிரி இருக்கும் என்பதால் நான் சேர்ப்பதில்லை. இந்த எள்ளுப் பொடியைத் தேவையான அளவுக்குச் சாதத்தில் போட்டு நன்கு கலக்கவும். இதுக்கும் மோர்க்குழம்பு நன்றாக இருக்கும். எள்ளுப்பொடி/மோர்க்குழம்பு என் புக்ககத்தில் பிரபலமான ஒன்று. சாதாரண நாட்களிலேயே சனிக்கிழமை அன்று ஒரு மாறுதலுக்காக இதைச் செய்வார்கள்.

இந்த எள்ளுப்பொடி தென் மாவட்டங்களில் காரமாக இல்லாமல் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பண்ணூவார்கள். அங்கே  எல்லாம் காரமான எள்ளுப் பொடியைப் பார்க்க முடியாது. எள்ளை நன்கு வறுத்த பின்னர் மிக்சி ஜாரில் அதோடு வெல்லப் பொடியைச் சேர்த்துக் கொண்டு ஒரே சுத்துச் சுத்திவிட்டுத் தேங்காய்த் துருவலையும் சேர்ப்பார்கள். உப்புச் சேர்க்காமல்.  இதில் தான் சாதம் கலப்பார்கள். புரட்டாசி சனியன்று வெங்கடாசலபதி சமாராதனையில் இந்த எள்ளுச் சாதம் அங்கெல்லாம் பிரபலமான ஒன்று.

Monday, September 1, 2025

எலுமிச்சை சாதம்.

 அடுத்து நாம் பார்க்கப் போவது எலுமிச்சை சாதம்.எல்லோருக்கும் தெரிந்தது தான்.   இது மிகவும் எளிது. சிலர் இதிலேயே மசாலாப் பொடி சேர்த்து மசாலா கலந்த எலுமிச்சைச் சாதமாகவும் செய்கின்றனர். நம் விருப்பத்திற்கேற்பச் செய்யலாம். முதலில் ஒரு கிண்ணம் அரிசியைப் பொல பொலவென வடித்து ஒரு தாம்பாளத்தில் பரப்பி ஆற விடுங்கள். அதில் நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி வைக்கவும். நல்ல எலுமிச்சம்பழமாக நடுத்தர அளவில் சாறு உள்ளதாக ஒரு பழம் தேவை. சாறை ஒட்டப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தாளிக்கத் தேவையான பொருட்கள்:

எண்ணெய் நல்லெண்ணெய் தான் நன்றாக இருக்கும். சாதத்தில் ஏற்கெனவே எண்ணெய் சேர்த்திருப்பதால் கொஞ்சம் போல் தாளிக்க மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

கடுகு ஒரு தேக்கரண்டி, 

உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி,

கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி,

வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.

பின்னர் அதில் பச்சை மிளகாய் பெரிதானால் இரண்டு சிறிதானால் நான்கு போட்டுக் கருகப்பிலையும் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து விடவும். இந்தத் தாளிப்பை ஆற வைத்திருக்கும் சாதத்தில் போட்டு நன்கு கலக்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்க்கவும். நன்றாகக்கலந்து விடவும். மசாலா சேர்ப்பதானால் தாளிப்பில் சோம்பு கலந்து கொண்டு இஞ்சி நறுக்கிச் சேர்க்கவும். தாளிப்பைப் போட்டுக் கலந்த பின்னர் அரை டீஸ்பூன் கரம் மசாலாப் பொடியைச் சேர்த்துக் கிளறவும். சற்று நேரம் ஊற வைத்துப் பின்னர் பரிமாறவும்.

இதற்கும் மோர்க்குழம்பே தொட்டுக்க நன்றாக இருக்கும். மோர்க்குழம்பு செய்முறை பாரம்பரியச் சமையல்கள் புத்தகத்தில் கிடைக்கும். என்றாலும் எளிதாகச் செய்வதெனில் நல்ல கெட்டி மோரில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி சேர்த்துக் கொண்டு பச்சைமிளகாய் இரண்டு, தேங்காய்,த் துருவல், ஒரு மேஜைக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி ஊற வைத்த அரிசி அல்லது இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து அரைத்துக் கொண்டு மோரில் கலக்கவும். அடுப்பில் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் பொங்கி வரும் சமயம் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், சின்னதாய் ஒரு மி.வத்தல், கருகப்பிலை தாளித்துச் சேர்க்கவும். விசேஷ தினனங்கள் என்றில்லாமல் தினசரி சாப்பிட்டிலேயே மாறுதலுக்காக இந்த மாதிரிப் பிசைந்த சாத வகைகளைப் பண்ணலாம். தினமும் சாம்பார், ரசம் எனச் சாப்பிட்டு அலுப்பாய் இருக்கையில் மாறுதல் ஓர் புதிய சுவையைக் கொடுக்கும்.


 

 

Saturday, August 30, 2025

பாரம்பரியச் சமையல்கள் பாகம் மூன்று. தேங்காய்ச் சாதம்

 21ஆம் வருஷத்துக்குப் பின்னர் இங்கே வரவே இல்லை. அதுக்கப்புறமா எத்தனையோ நடந்து விட்டது. தம்பியின் சின்னப்பிள்ளை கல்யாணத்துக்குப் போன பின்னர் 22 ஆம் வருஷத்தில் எங்கேயும் போகலை. 23 ஆம் வருஷம் தான் சொந்தக்காரங்க கல்யாணம் ஸ்ரீரங்கத்திலேயே நடந்தது. பின்னர் உடனே சென்னை போனோம். ஒரு -ஹோமத்தில் கலந்து கொள்ள. முதல்நாள் கிளம்பிப் போயிட்டு லாட்ஜில் தங்கிட்டுப் பின்னர் ஹோமத்தை முடித்துக் கொண்டு உடனே திரும்பினோம். அதன் பின்னர் எங்கேயுமே போகலை. நவராத்திரி, தீபாவளினு ஆச்சு. கார்த்திகையின் போது தான் திடீரென ரங்க்ஸ் உடம்பு ரொம்ப முடியாமல் படுத்துண்டார். பெயருக்குப் பொரி பண்ணி விளக்கேற்றினேன். இரண்டு நாளைக்கெல்லாம் அவரை மருத்துவமனையில் சேர்த்தாச்சு. அதன் பின்னர் எல்லாம் தலைகீழ் மாற்றங்கள். க்ணினியையே தொடலை. யாருடைய பதிவுக்கும் போகலை. யாருடைய பதிவையும் படிக்காததோடு நானும் எதுவும் எழுதலை. மனசு பதியலை. இப்போத் தான் சில நாட்களாக எழுதலாமா என ஆரம்பிச்சிருக்கேன். இந்தப் பக்கத்தில் பாரம்பரியச் சமையல் எழுதி இரண்டு பாகம் கின்டிலில் வெளியிட்டாச்சு. மூன்றாம் பாகமாகப் பிசைந்த சாதம், சில குறிப்பிட்ட சமையல் வகைகள்னு எழுத எண்ணம். அதான் இங்கே வந்து இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கேன்.


இன்னிக்குப் பிசைந்த சாதங்கள் வகைகளிலே தேங்காய்ச் சாதம் பற்றிய எளிய குறிப்புக் கொடுக்கிறேன். சிலர் பல்வகை உணவு வகைகள் (வெரைட்டி ரைஸ்) எனச் சொல்கின்றனர். சிலர் கலந்த சாதம் என்கின்றனர். எங்க வீட்டில் பிசைந்த சாதம்னே சொல்லிப் பழக்கம். இப்போ முதலில் தேங்காய்ச் சாதம்.

தேவையான பொருட்கள்:

நல்ல தேங்காயாக ஒன்று. நடுத்தரமான அளவில் போதும். அதோடு தேங்காய் ரொம்ப முற்றாமல் இருத்தலும் நல்லது. எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் என்பதற்கேற்பத் தேங்காயைத் துருவிக் கொள்ளலாம். நான்கு பேருக்கு மேல் எனில் ஒரு முழுத் தேங்காயையும் பூப் போலத் துருவி எடுத்துக் கொள்ளவும். சாதம் நன்கு பொல பொலவென வரும்படி வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். தேவையான உப்புச் சேர்த்துக் கொண்டு இரண்டு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். சர்க்கரை சேர்ப்பதால் தேங்காய்ச் சாதத்தின் மணமும் ருசியும் அதிகம் ஆகும்.

இனி தாளிக்கும் பொருட்கள்:

தாளிக்கத் தேங்காய் எண்ணெயே பயன்படுத்தவும். ஒரு சின்னக்கிண்ணம் அல்லது இரண்டு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்.

கடுகு இரண்டு டீஸ்பூன், உ.பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பு இரண்டு மேஜைக்கரண்டி., பச்சை மிளகாய் இரண்டு, , கருகப்பிலை புதியதாக ஒரு சின்னக் கொத்து, பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கொண்டு முதலில் வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொண்டு தனியே எடுத்து வைக்கவும்.. பின்னர் கடுகு தாளித்துப் பொரிந்ததும் உ.பருப்பு, கடலைப்பருப்பைச் சேர்க்கவும். அவை சிவந்ததும் பச்சை மிளகாய், கருகப்பிலை போட்டுப் பொரித்துக் கொண்டு துருவிய தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். பெருங்காயப் பொடி சேர்க்கவும். ரொம்பச் சிவக்க வறுக்காமல் சிறிது நேரம் தேங்காய்த் துருவலைப் போட்டுப் புரட்டி எடுத்துக் கொண்டு வறுத்த வேர்க்கடலை, முபருப்பைச் சேர்க்கவும். கவனமாக அரைத் தேக்கரண்டி உப்புச் சேர்க்கவும். சாத்தத்தில் தேவையான உப்பு இருப்பதால் கவனமாகச் சேர்க்கவும். பின்னர் சாதத்தைத் தட்டில் பரப்பி அதன் மேல் கலவையைக் கொட்டி இரண்டு டீஸ்பூன் நெய்யை விட்டுச் சாதத்துடன் நன்கு கலக்கவும். நன்றாகக் கலந்து விட்டுப் பின்னர் சிறிது நேரம் கழித்து நிவேதனம் செய்வதானால் செய்த பின்னர் பரிமாறவும். இதற்கு மோர்க்குழம்பு நன்றாக இருக்கும்.

இங்கே (தோஹாவில்) நான் சமைப்பதில்லை என்பதாலும், பிசைந்த சாத வகைகள் இங்கே அவ்வளவாகப் பண்ணுவதில்லை என்பதாலும் படங்கள் போடுவது கஷ்டம். பின்னால் புத்தகம் வெளியிடும்போது எங்கே இருந்தாவது எடுத்துப் போடணும். பார்க்கலாம்.