எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, January 27, 2017

உணவே மருந்து! மாங்காய் இஞ்சி!

மாங்காய் இஞ்சியை எல்லோருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. இது மாங்காயின் மணத்தோடு இருந்தாலும் பார்க்க இஞ்சி மாதிரி இருக்கும். இஞ்சியைப் போல் அதிகம் நார் இருக்காது. சுவை நன்றாகவே இருக்கும். இதுவும் இஞ்சி, மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்தது தான். இதிலும் மருத்துவ குணம் நிறைய உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இந்தியாவில் இது விளையும் இடங்கள் குஜராத், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகம் ஆகிய இடங்களில் அதிகம் விளைகிறது.

Image result for மாங்காய் இஞ்சி

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன்.

முதலில் இதன் மருத்துவ குணங்கள் என்ன என்று பார்க்கலாம். இது ஆஸ்த்மா போன்ற நுரையீரல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது. விக்கலுக்குச் சிறந்த மருந்து. ஜுரம், காதுவலி, இருமல் போன்றவற்றிற்கும் நல்லது. வயிறு சம்பந்தமான பிரச்னைகளான வாயுத் தொல்லை, ஜீரண சக்தி, பசியை அதிகரிக்கப் பயன்படுகிறது. மஞ்சளைப் போல் இதுவும் ஓர் ஆன்டி ஆக்சிடென்ட் ஆகப் பயன்படுத்தப்படுவதால் புற்று நோய்க்கும் சிறந்த மருந்து என்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. பூஞ்சை நோய், சருமத்தில் ஏற்படும் காயங்கள், தசை வலி, சருமத்தில் அரிப்பு போன்றவற்றிற்கும் மாங்காய் இஞ்சி சிறந்த மருந்தாகும்.

மாங்காய் இஞ்சி, காரட், பீட்ரூட், புதினா கலந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். அல்லது தேநீரில் இஞ்சியோடு சேர்த்து மாங்காய் இஞ்சியையும் போட்டுத் தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதய நோய்க் காரர்களும் மாங்காய் இஞ்சியை எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொஞ்சம் போல் உப்புப் போட்டு ஊறுகாயாகச் சாப்பிடலாம். இப்போது நான் நேற்றுப் போட்ட மாங்காய் இஞ்சித் தொக்கு செய்முறை. நான் வெறும் மாங்காய் இஞ்சி மட்டும் போடலை. பச்சை மஞ்சள் (இங்கே நிறையக் கிடைக்கிறது.) இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன்.
தேவையான பொருட்கள்:

மாங்காய் இஞ்சி 100 கிராம்

இஞ்சி சுமார் 50 கிராம்

பச்சை மஞ்சள் 100 கிராம்

பச்சை மிளகாய் 50 கிராம்

பெருங்காயம் கட்டி எனில் ஒரு துண்டு

உப்பு தேவைக்கு

புளி ஒரு எலுமிச்சை அளவுக்குக் கொஞ்சம் போல் நீரில் ஊற வைக்கவும். அப்போத் தான் அரைக்கச் சௌகரியமாக இருக்கும்.

தாளிக்க நல்லெண்ணெய் 100 கிராம்

கடுகு

ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள் (தேவையானால்)

நல்லெண்ணெயைக் கடாயில் ஊற்றிக்கொண்டு முதலில் இஞ்சி, மாங்காய் இஞ்சி, மஞ்சளை வதக்கிக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாயை வதக்கவும்.எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.

கீழே வதக்கிய பச்சைமிளகாய், புளி, உப்புச் சேர்த்துப் பெருங்காயத்துடன் மிக்சி ஜாரில்! இதைக் கொஞ்சம் அரைத்துக் கொண்டு பின்னர் மாங்காய் இஞ்சி, இஞ்சி, மஞ்சள் கலவையைப் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.


மஞ்சள், இஞ்சி, மாங்காய் இஞ்சி வதக்கிக் கொண்டிருக்கையில்



எல்லாவற்றையும் அரைத்த விழுது


அரைத்த பின்னர் மீண்டும் கடாயில் நூறு கிராமுக்குக்குறையாமல் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக்கொண்டு அரைத்த விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்க வேண்டும். இறக்கும் முன்னர் அதில் வெல்லத் தூளைச் சேர்த்துக்கொண்டு சற்று வதக்கிய பின்னர் கீழே இறக்கி ஆறியதும் கண்ணாடி பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.  இதையே பச்சை மிளகாய் போடாமல் மிளகாய் வற்றல் வறுத்துக் கொண்டு அரைத்துச் சேர்க்கலாம். அல்லது எல்லாவற்றையும் வதக்காமல் புளி சேர்த்துப் பச்சையாக அரைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு தாளித்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டு மிளகாய்ப் பொடி, உப்புச் சேர்த்தும் அரைக்கலாம். ஆனால் இதை நீண்ட நாட்கள் வைக்க முடியாது. சீக்கிரம் செலவு செய்ய வேண்டும். 



இது செய்யும்போது நினைவாகப் படம் எடுத்தேனா, ரங்க்ஸ் பார்த்துட்டுச் சிரிச்சார். இதை எல்லாம் யாரு பார்ப்பாங்கனு கிண்டல்! எல்லோரும் வந்து பார்த்துட்டுக் கருத்துச் சொல்லுங்கப்பா! 

21 comments:

  1. மஞ்சள் "இங்கே" நிறைய கிடைக்கிறது என்று சொன்னால் இப்போது படிக்கும் நிறைய பேர்களுக்கே எங்கே என்று குழம்புவார்கள். அப்புறம் நாட்கள் மாதங்கள் கழிந்து படிப்போரும் அங்ஙனமே! ஸோ, எங்கு என்று சேர்த்து விடவும்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, சேர்க்கிறேன். :)

      Delete
  2. உடனுக்குடன் படங்கள் சேர்த்திருப்பது சிறப்பு. பதில் கொடுக்கும்போது ரிப்ளை பட்டனில் பதிலளித்தாலும் அவரவர் பேர் சொல்லி பதிலளித்தால் தன்யனாவேன்.

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், @ஶ்ரீராம், (போன பதிலில் கூப்பிடலைனு இரண்டு தரம்) ஓகே, ஓகே!

      Delete
  3. மாங்காய் இஞ்சி சாப்பிட்டு வெகு காலமாகிறது. அதுவும் சிறு துண்டுகளாக வெட்டி, எ.ப சாறு பிழிந்து மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன். இது புதுசு. ஆனால் ......

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சாப்பிடலாம். இப்படியும் சாப்பிடலாம்.

      Delete
  4. ஆனால் மிக்ஸியில் போட்டு அரைத்து கூழாக்கி சாப்பிடுவதை விட பத்தை சிறு துண்டுகளாக சாப்பிடுவது ரசிக்கும் எனக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. பல்லுள்ள மஹாராஜன்! @ஶ்ரீராம்!

      Delete
  5. என்னை மாதிரி சா.ரா க்கள் இருக்கும் வரை படிக்க ஆள் நிறைய உண்டு என்று சாம்பு மாமா கிட்ட சொல்லுங்க... வாராவாரம் எங்கள் ப்ளாக்ல ஒரு நாளை "திங்க" ஒதுக்கினவங்க நாங்க..... ஹா..... ஹா..... ஹா.....

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், ஆமா இல்ல! நாங்களும் சாப்பாட்டு ராமிங்க தான்! :)

      Delete
  6. மாங்காய் இஞ்சியோட நிறைய பொருட்கள் (பச்சை மஞ்சள், இஞ்சி எல்லாம்). மாங்காய் இஞ்சி அதன் மாங்காய் வாசனைக்குத்தான் எனக்கு ரொம்பப்பிடிக்கும் (ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ போல). அதை வெறும்ன கட் பண்ணிச் செய்கிற ஊறுகாயே நல்லா இருக்கும். நீங்கள் கொடுத்தபடிச் செய்தால் அதன் வாசனை மட்டுப்படாதோ!

    சாப்பாடு ஐட்டம் படிக்க (நம்ம செய்கிற சாப்பாட்டு ஐட்டங்கள்) எல்லோருக்கும் பிடிக்கும். அவர் சிரித்ததனால் சில படங்கள் பதட்டத்தினால் ஆடிவிட்டது போலிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், ஆட்டமெல்லாம் உங்க கண்ணிலே கரெக்டாப் படுது! எல்லாமும் சேர்த்துச் செய்தால் ஒரு ருசி. தனியாயும் செய்யலாம். ஆனால் நான் மாங்காய் இஞ்சியை நிறையச் சேர்க்க வேண்டாம்னு எல்லாமும் கலந்தேன்.

      Delete
  7. மாங்கா இஞ்சி எனக்கும் பிடிக்கும். வெறுமனவே சாப்பிடலாம்!

    ReplyDelete
    Replies
    1. அட! வெங்கட்! நீங்களும் ஒரு ரசிகரா?

      Delete
    2. அட! @நெல்லைத் தமிழர், குறிப்பிட மறந்துட்டேன்! :) பழக்கமே இல்லையா வரலை!

      Delete
  8. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பித்தம் என்று சொல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், அதுக்குத் தான் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்னு சேர்க்கிறோமே!

      Delete
  9. மாங்காய் இஞ்சி ரொம்பவே பிடிக்கும்.. கைவசம் பொங்கலுக்கு வாங்கின பச்சை மஞ்சளும் இருக்கு.. என்ன செய்யன்னு நினைச்சிட்டிருந்த போது, சூப்பரா ஒரு ரெசிபி தந்ததுக்கு நன்றி!.. பண்ணி, ஒரு பிடி பிடிச்சிடலாம்!!..

    ReplyDelete
    Replies
    1. பச்சை மஞ்சளில் மட்டுமே ஊறுகாய் போடலாம்! ஹிஹிஹி! :)

      Delete
  10. இங்கே மாங்கா இஞ்சி கிடைக்குது ..குஜராத்தி பஞ்சாபி கடைகளில் ..amba haldi ..இஞ்சினு சொன்னாலும் இது மஞ்சளில் ஒரு வகையாம் ..நான் வீகன் ஸ்மூத்தில சேர்த்து அரைச்சு குடிப்பேன் ..மாஇஞ்சி சாதம் குழம்பு எல்லாமே செய்வேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், குஜராத் ஜாம்நகரில் பார்த்திருக்கேன். ஆனால் அப்போ அதிகம் வாங்கினதில்லை! :)

      Delete