எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, April 12, 2013

சித்திரை விஷுவுக்கான பாயசம்!



பச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும்.  கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும்.  ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.

குருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு  நன்கு கரைய விடவும்.  குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.  பால் எடுக்கவும் தனியாக வைக்கவும்.  இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும்.  அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும்.  மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும்.  நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும்.  பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது.  உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம்.  ஏலத்தூள் சேர்க்கவும்.  பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.  அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது.  கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

6 comments:

  1. மணக்கும் பாயசம்...

    நன்றி...

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்ம்.தேங்காய்ப் பால் பாயாசம்.இதில நெய்,முந்திரிப்பருப்பு.படிக்க நன்றாக இருக்கு. ரெண்டு சொட்டு வாயில் விட்டுக்கிறேன். அருமை.!!!

    ReplyDelete
    Replies
    1. விட்டுக்கோங்க, கண்ணை மூடிண்டு விட்டுக்கோங்க. :)))

      Delete
  3. சுவையை நாக்கில் உணர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நல்லா இருக்கா?:))))

      Delete