எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, January 11, 2012

பொங்கலுக்குத் தனித்தனியான ஒரு கூட்டு!

சர்க்கரைப்பொங்கல்:

இதுவும் கிட்டத்தட்ட அக்கார அடிசில் போலத்தான். ஆனால் அவ்வளவு பால் தேவையில்லை. அக்கார அடிசிலுக்கு முழுக்க முழுக்கப் பாலிலேயே வேக வைத்தால் நன்றாய் இருக்கும். இதற்குக்கொஞ்சம் நீரும் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம், பாசிப்பருப்பு முக்கால் கிண்ணம், வெல்லம் அரை கிலோ தூள் செய்து கொள்ளவும். பால் அரை லிட்டர், நெய் 200 கிராம், முந்திரிப்பருப்பு 50 கிராம், திராக்ஷை 50 கிராம், தேங்காய்ப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய், ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக்கற்பூரம்(பிடித்தால்) வேக வைக்க நீர்.

வாணலியை அடுப்பில் ஏற்றிச் சூடாக்கிக்கொண்டு பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக நன்கு சிவக்க வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடி கனமான உருளி அல்லது வேறு கனமான பாத்திரத்தை வைத்துப் பாலும் நீரும், நெய்யுமாய்க் கலந்து வைக்கவும் . பால் கொதித்து வருகையில் பாசிப்பருப்பை நன்கு களைந்து அதில் சேர்க்கவும். பருப்பு நன்கு உருத்தெரியாமல் வெந்ததும், அரிசியைச் சேர்க்கவும். மீதம் இருக்கும் பாலையும் ஊற்றிவிட்டுத் தேவையானால் நீரும் சேர்த்துக்கொள்ளவும். அரிசியும், பருப்பும் நன்கு குழைந்து கெட்டிப்படும் போது வெல்லத்தைச் சேர்க்கவும். தேவையானால் கொஞ்சம் நெய் சேர்க்கலாம். கைவிடாமல் கிளறவும். அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெல்ல வாசனை நன்கு போய்ச் சேர்ந்து சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் பக்கத்தில் வேறொரு வாணலியில் நெய்யை ஊற்றிக்கொண்டு, முந்திரிப்பருப்பு, திராக்ஷை, தேங்காய்க் கீற்று போன்றவற்றைப் போட்டு நன்கு வறுத்துப் பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய்ப் பொடியைச் சேர்க்கவும்.

தனிக்கூட்டு:

இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.

இதற்குத் தேவையான காய்கள்:

வாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.

கத்திரிக்காய் கால் கிலோ

பறங்கிக்காய் கால் கிலோ

அவரைக்காய் கால் கிலோ

சேனைக்கிழங்கு கால் கிலோ

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ

பச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்

கறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்

மொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.

கிரேவி தயாரிக்க

புளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.

அரைக்க

மிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. ஒரு சின்ன மூடி. வறுக்க எண்ணெய்.

முதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம் இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.

காய்களுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் படையலுக்கு வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.

பொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும்.

No comments:

Post a Comment