எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 28, 2018

உணவே மருந்து! கம்பு!

Image result for கம்பு பயன்கள்கம்பு!

சிறு தானியங்களில் முதல் இடம் கம்புக்குத் தான். ஆனாலும் இது ஆஃப்ரிக்காவில் இருந்து வந்தது எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இப்போது சுமார் 40 நாடுகள் கம்பைப் பயிரிடுவதாய்க் கூறுகின்றனர். மானாவாரியாகவும் விளையும் கம்பு நீர்ப் பாசனத்திலும் விளையும். என்றாலும் பெரும்பாலும் புஞ்சை நிலப் பயிர்தான்!  இந்தியாவில் அதிகம் பயிரிடும் உணவுப் பொருட்களில் கம்புக்கு முக்கிய இடம் உண்டு. வட மாநிலங்களில் Baபாஜ்ரா என அழைக்கப்படும் கம்பு. இந்த Baபாஜ்ரா மாவில் ரொட்டி செய்து பச்சை மிளகாயை எலுமிச்சைச் சாறில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற வைத்து எண்ணெயில் வதக்கித் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கம்பு மாவோடு கோதுமை மாவும் சேர்த்துக்கொண்டு மிளகாய்ப் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியோடு கசூரி மேதி எனப்படும் உலர்ந்த வெந்தயக்கீரையைச் சேர்த்துச் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடுவார்கள்.  பூரியை மொறுமொறுவென எடுத்தால் சில நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.

கம்பில் தான் அதிக அளவு புரோட்டீன் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது. தோலுக்கும் நன்மை பயக்கும் என்கின்றனர். கண்பார்வைக்கு முக்கியமான  பீட்டா கரோட்டின் கம்பில் அதிக அளவு இருப்பதால் வைடமின் ஏ நிறைய இருக்கிறது.  இதைத் தவிரவும் கால்சியம், இரும்பு, ரிபோஃப்ளேவின், நயாசின், வைடமின்கள் ஆகியவை அடங்கியது கம்பு.  எண்ணெய்ச் சத்து இருப்பதால் உடலுக்கு உகந்த நல்ல கொழுப்புக் கிடைக்கும் என்பதோடு உடல் சதையைக் குறைத்து உடலை இளைக்க வைக்கும். இந்தக் கம்பு இந்தியா வந்து சுமார் 2000 வருடங்களுக்கும் மேல் இருக்கலாம் என நம்பப்படுகிறது.  அதிகமான தட்ப, வெப்பத்தையும் பொறுத்துக்கொள்ளும் கம்புப் பயிர் வறட்சியான நிலங்களிலும் வளரும் இயல்பு கொண்டது.  நிலத்தில் ஊட்டச் சத்துக் குறைவாக இருந்தாலும் கம்பு நன்றாகவே வளரும் இயல்பு கொண்டது.

கம்பை அறுவடை செய்ததும் நன்கு உலர வைப்பார்கள். இது 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வரும். அப்படியும் மிகுதி இருக்கும் தானியத்தை மீண்டும் உலர வைத்துப் பயன்படுத்தலாம். விரைவில் வீணாகாது. நொச்சி இலைகளைக் காய வைத்துக் கம்போடு கலந்து வைத்தாலும் பூச்சிகள் தாக்காது. (நான் எல்லாவற்றிலும் வசம்பு போட்டு வைத்திருக்கேன்.)  கம்பின் தொன்று தொட்டுச் செய்து வருவது கம்புச் சோறு ஆகும். இது விரைவில் வீணாகாது. கம்பில் கூழும் செய்யலாம். கம்பை ஊற வைத்த நீரும் உடலுக்கு நன்மை பயக்கும். உடல் உஷ்ணம் அடைவதைக்குறைத்து வயிற்றுப் புண், மலச் சிக்கல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. இனி கம்பில் செய்யும் உணவு வகைகளைப் பார்க்கலாம். 

8 comments:

  1. பாஜ்ரா ரொட்டி எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பாஜ்ரா ரொட்டி ஒரு முறை தான் சாப்பிட்டிருக்கேன். ஆனால் மற்றவை பண்ணி இருக்கேன்.

      Delete
  2. கம்பு நான் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை.

    ஒரு புரிதலுக்காகக் கேட்கிறேன். பிராமணர்கள் இல்லத்தில் 'கம்பு' உணவுக்கு உபயோகப்படுத்துவார்களா (படுத்தியிருக்காங்களா?)

    கேப்பை நான் கேள்விப்பட்டிருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. மத்தவங்க வீடுகளில் தெரியாது. எங்க வீட்டில் நான் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாகக் கம்பு பயன்படுத்தி வரேன். மற்ற சிறு தானியங்கள் இப்போ 5,6 வருடங்களாக! கம்பு அடை அடிக்கடி பண்ணி இருக்கேன். எங்க வீட்டிலேயே மாமியாரோ, மற்றவங்களோ இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க. என் பிறந்த வீட்டுப் பக்கம் அம்மா வழி உறவினர்கள் பலரும் சிறுதானியங்கள் சாப்பிடறாங்க. என் அண்ணா வீட்டில் இல்லை. தம்பி வீட்டில் சாப்பிடுவாங்க. இதெல்லாம் அவரவர் மனப்போக்கு!

      Delete
  3. நான் பஹ்ரைனில் இருக்கும்போது கம்பு, இரண்டு 15 கிலோ மூடைகள் ஒரு மாதத்துக்கு வாங்கி, தினமும் இரு இடங்களில் புறாக்களுக்கு உணவாகப் போடுவேன் (நடைப் பயிற்சி செல்லும்போது). எப்போவாவது சில தானியங்களை நான் வாயில் மெல்லுவேன். மற்றபடி உணவுக்கு உபயோகப்படுத்தியதில்லை (அதுவும் பாஜ்ரா என்ற பேரைப் பார்த்ததும்தான் ரிலேட் செய்ய முடிந்தது. அந்தப் பெயரைச் சொல்லித்தான் மொத்த வியாபாரம் செய்பவர்களிடம் இந்த மூடைகளை வாங்குவேன்)

    ReplyDelete
    Replies
    1. நெ.த. வட மாநிலங்களில் எல்லா தானியங்களும் கலந்து வைச்சுக் கொண்டு பறவைகளுக்குப் போடுவாங்க. நாங்களும் போடுவோம். கம்பை நன்கு வறுத்தால் பொரிபட்டு நன்கு பொரியும். பொரியைப் போலவே இருக்கும். வெள்ளைச் சோளமும் நன்கு பொரியும்.

      Delete
  4. பாஜ்ரா ரொட்டி மருமகள் செய்வார் கீதா மா. பயனுள்ள தகவல். மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, கேழ்வரகு+கோதுமை ரொட்டி பண்ணிய அளவுக்குக் கம்பு ரொட்டி பண்ணலை, தோசை, இட்லி, குழி அப்பம், அடைனு பண்ணுவேன்.

      Delete