எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 29, 2018

உணவே மருந்து! முள்ளங்கிக் கீரை!

Image result for முள்ளங்கிக்கீரை!

நன்றி கூகிளார்

முள்ளங்கியின் சிறப்பு மிகச் சிறப்பு! முக்கியமாய் நீரிழிவு உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். தினம் முள்ளங்கியை சாலடாகச் சாப்பிட்டு வரலாம். அல்லது சாறு பிழிந்து சாப்பிடலாம். வட மாநிலங்களில் முள்ளங்கி பயிராகும் பருவத்தில் பெரிய முள்ளங்கியை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். போன புதுசிலே அதைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கும். முள்ளங்கியை சாம்பார் தான் அதிகம் செய்து பார்த்திருக்கேன். அதுவுமே பிறந்த வீட்டில் அப்பாவுக்கு அந்த வாசனையே பிடிக்காது என்பதால் அவர் இல்லாத சமயங்களில் தான் அம்மா செய்வார். அப்புறமாக் கல்யாணம் ஆகி வந்தும் முள்ளங்கி சாம்பார் தான் செய்திருக்கேன். சொல்லப் போனால் இலையோடு முள்ளங்கியைப் பார்த்ததே இல்லை. முதல் முறையாக எழுபதுகளில் ராஜஸ்தான் போனப்போத் தான் முள்ளங்கியைக் கீரையோடு பார்த்தேன். வீட்டிலும் பயிராக்கினோம். கீரையைப் பயன்படுத்துவார்கள் என்பது தெரியாததால் சந்தையிலிருந்து முள்ளங்கி வாங்கி வரும்போதே கீரையை நறுக்கிவிட்டுத் தரச் சொல்லுவேன். அவங்க விசித்திரமாய்ப் பார்ப்பாங்க! பின்னர் தான் அதை வைத்துப் பல சமையல்கள் செய்யலாம் என்பதே புரிந்தது.

முள்ளங்கியில் ரொட்டி செய்வார்கள் என்பதும் அப்போது தான் புரிந்தது. முள்ளங்கிக்கீரை, கடுகுக்கீரை, ஸ்பினாச் எனப்படும் பாலக் மூன்றும் போட்டு சர்ஸோன் கா சாக் என்னும் உணவு தயாரிப்பார்கள். பெரும்பாலும் அதில் கடுகுக்கீரையே முக்கிய இடம் பெற்றாலும் சிலர் முள்ளங்கிக்கீரையையும் அதில் சேர்ப்பார்கள். கீரையைப் பொடியாக நறுக்கி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கிக் கூட்டுப் போல் பண்ணுவார்கள். கடலைமாவில் உப்பு, காரம், கரம் மசாலா போட்டு எண்ணெய், நீர் சேர்த்துப் பிசைந்து அதில் கீரையை நறுக்கிப் போட்டு பகோடா தயாரிப்பார்கள். ஆவியில் வேக வைத்து பருப்புசிலி போலும் பண்ணுவார்கள். பாலக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக்கீரை எல்லாமும் சேர்த்துப் போட்டு பஜியா எனப்படும் தூள் பஜ்ஜி வட மாநிலங்களில் மிகப் பிரபலம்.

அதுக்கு மேலே காரட், முள்ளங்கித் துருவல் எலுமிச்சம்பழம் பிழிஞ்சு உப்புச் சேர்த்துக் கடுகு தாளித்துச் சேர்த்து பச்சை வெங்காயத்தையும் துருவிக் கொடுப்பார்கள். 50 கிராம் பஜியா சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். இப்படி நாம் வேண்டாம் எனச் சொல்லும் கீரை வகைகள் நிறைய இருக்கு. எல்லாவற்றையும் வடக்கே பயன்பாட்டிலும் இருக்கு. வெந்தயக்கீரை கூட எனக்கு அங்கே போய்த் தான் தெரியும். கொஞ்சம் கசப்பு இருக்கும் என்பதால் நாம் தவிர்க்கிறோமோ என்னமோ! ஆனால் நாங்க பாகற்காய் கூடச் சாறு எடுத்துச் சாப்பிடுவதால் கசப்புத் தெரிவதில்லை. முள்ளங்கிக்கீரையைப் பாசிப்பருப்புப் போட்டு தேங்காய், ஜீரகம் அரைத்து விட்டுக் கூட்டாகவும் செய்யலாம்.மிளகு வறுத்து அரைத்துப்பொரிச்ச குழம்பும் பண்ணலாம். முள்ளங்கியின் பயன்களை முதலில் பார்த்துவிட்டுப் பின்னர் முள்ளங்கியிலிருந்து தயாரிக்கும் உணவு வகைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முக்கியமாய் வாதம் அதிகம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். சிறுநீரகக் கற்கள் கரைய இது அருமருந்து. கால்சியம், இரும்பு, வைடமின் ஏ,பி,சி மற்றும் புரதச் சத்து இருப்பதால் சிறு குழந்தைகளுக்கு ஒரு முள்ளங்கி வில்லையை வேக வைத்து நன்கு பருப்பு சாதத்தோடு மசித்துக்கொடுக்கலாம். அதோடு இது விலை எப்போவும் உயராது! விலை குறைவாகவே இருக்கும். 

Monday, June 25, 2018

உணவே மருந்து! தூதுவளை!

pictures of keerai

தூதுவளை கற்ப மூலிகைகளில் ஒன்றாகும். உடலை வலுவாக்கிக்கல் போல் ஆக்கும் மூலிகைகள் சிலவற்றில் தூதுவளையும் ஒன்று. கற்பம் என்றால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்து நோய் அணுகாதவண்ணம் செய்து நோய்களில் இருந்து விடுபட வைக்கும் என்ற பொருள் ஆகும். காயகற்பம் என்பார்கள். காயம் என்றால் உடம்பு.  இத்தகைய காயகற்ப மருந்தைச் சாப்பிடும்போது உடல் தூய்மை மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் சாப்பிடும் மருந்தில் நம்பிக்கையும் இருத்தல் வேண்டும். பொதுவாகவே மருத்துவரிடம் செல்லவும், மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் நல்ல நாள் பார்ப்பார்கள். இந்தக் காயகற்ப மருந்துகளுக்கும் அவ்வாறே நல்ல நாள் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிதாக எடுத்துக் கொண்டு நாள் ஆக, ஆக அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இத்தகைய மருந்துகள் சாப்பிடும்போது அகத்திக்கீரை உண்ணக் கூடாது.

தூதுவளையும் இந்தியா முழுவதும் கிடைக்கும் கீரைகளில் ஒன்று.  சிங்கவல்லி, அளர்க்கம் என்னும் பெயர்களிலும் அழைக்கப்படும். அநேகமாக வேலியோரச் செடியாகவே வளரும். இதில் முட்கள் காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் எல்லாமும் மருத்துவ குணம் உள்ளது. முக்கியமாகச் சளி, ஜலதோஷத்துக்கு நல்ல மருந்து. தூதுவளை இலையுடன், துளசியும் சேர்த்துக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டால் தொண்டைக்கரகரப்பு, தொண்டை வலி, தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.  தூதுவளை இலையுடன் , மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி உப்பு சேர்த்துத் துவையல் அரைத்துச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.  இடைவிடாத இருமல், இரைப்பு போன்றவற்றுக்கு இது நல்லது. ஆண்களுக்கு இது மிகுந்த சக்தியைக் கொடுக்கும். எலும்புக்கும் பற்களுக்கும் இது நன்மை பயக்கும் என்பதால் பருப்புடன் சேர்த்துச் சமைத்து நெய்யில் தாளிதம் செய்து சாப்பிடலாம். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

இதன் பொடியையும் தொடர்ந்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும். இலையை அரைத்து அடை போல் செய்தும் சாப்பிடலாம். இதனால் இரைப்பு நோய்க்கு நிவாரணம் கிடைக்கும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு,  பல் ஈறுகள், சூலை நீர் ஆகியவற்றுக்கு இது சிறந்த மருந்தாகும்.  தூதுவளைக் காயைச் சமைக்கலாம். அல்லது வற்றலோ, ஊறுகாயோ போடலாம். கண்களுக்கு நல்லது. தூதுவளைப் பூவை உலர்த்திப்பொடியாக்கிப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். பழத்தை வெயிலில் காய வைத்துப் பொடியாக்கித் தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச் சளி, இருமல் குணமாகும். விஷத்தை முறிக்கும். மலச்சிக்கல் நீங்கும். கீரை, வேர்,காய் இவற்றை வற்றலாகவோ ஊறுகாயாகவோ செய்து சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இலையைக் குடிநீர் செய்து அருந்தி வரலாம்.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கும் என்கின்றனர். சித்த வைத்திய முறையில் தூதுவளையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நெய் மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. தூதுவளை நெய்யை ஒரு தேக்கரண்டி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், ஈளை நோய், கப நோய், மேக நோய், வெப்ப நோய், இரைப்பு, இருமல், வாய்வு, குண்டல வாய்வு போன்றவைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.  தூதுவிளங்காயிலும் சத்துக்கள் இருப்பதால் அதையும் சமைத்துச் சாப்பிடலாம். பித்தத்திற்கு நல்லது.

தூதுவளை ரசம் செய்முறை: இதற்குச் சிலர் பூண்டு சேர்க்கின்றனர். பொதுவாக நான் பூண்டைக் குறைவாகவே பயன்படுத்துவதால் பூண்டு இல்லாமலேயே இங்கே கொடுக்கிறேன். நான்கு பேருக்கு!

தூதுவளை இலைகள் ஒரு கைப்பிடி அல்லது 50, 60 இலைகள்

மி.வத்தல் இரண்டு, மிளகு ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், ஜீரகம்

பெருங்காயம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு (இதில் தக்காளி சேர்க்க வேண்டாம்)
உப்பு தேவையான அளவு
தாளிக்க நெய் ஒரு தேக்கரண்டி. கடுகு அரை டீஸ்பூன், மிவத்தல் பாதி, கருகப்பிலை, ஜீரகம்.

ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், துவரம்பருப்பு, மிளகு போட்டு, பெருங்காயமும் சேர்த்து வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும்.அந்தச் சட்டியிலேயே தூது வளை இலைகளைப் போட்டு வதக்கவும். ஜீரகத்தை வறுக்க வேண்டாம். பச்சையாகச் சேர்த்து அரைக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். அம்மி இருந்தால் நல்லது தான். ஆனால் இந்தக் காலத்தில் எங்கே போறது!

புளியைக் கரைத்து ஈயச் செம்பு அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் விட்டுத் தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைப்போட்டுக்கொதி விடவும். மேலே நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விட்டுக் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.




Saturday, June 23, 2018

உணவே மருந்து! பருப்புக்கீரை!

Image result for பருப்புக்கீரை

இந்தப் பருப்புக்கீரை இயற்கையாக இந்தியா முழுவதிலும் விளைகிறது. இதன் மருத்துவத் தன்மைக்காக இது வளர்க்கவும் படுகிறது.  இது மணமற்றக் குறுஞ்செடியாக சுமார் 90 செ.மீ உயரம் வரை வளரும் இயல்பு கொண்டது. இது உடல் வெப்பம் மிகுந்தவர்களுக்குத் தக்க பலன் கொடுக்கக் கூடியது. இதை நன்கு அரைத்து உடலில் அக்கி கண்ட இடத்தில் அடர்த்தியாகத் தடவி வர வேண்டும். எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இம்மாதிரித் தடவலாம். அப்படித் தடவி வந்தால் உடனடியாக அக்கியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு அக்கி வந்ததால் ஏற்படும் தழும்புகளும் மறையும். உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். இந்தப் பருப்புக்கீரை இலைகளை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றி, பிடரி, கழுத்துப் பகுதிகளில் பற்றாகப் போட்டு வந்தால் தீராத தலைவலி குணமாகும். சாறை உடலில் தடவிக் கொண்டு குளித்தால் வியர்க்குரு வராது என்பதோடு வந்திருந்தாலும் பட்டுப் போகும்.  தீப்புண், சொறிசிரங்கு போன்றவற்றிற்கும் இது நல்லதொரு நிவாரணி ஆகும். புண்கள் செப்டிக் ஆகாமல் தடுத்து ஆற வைக்கும். 

மலச்சிக்கல் இருக்கும் குழந்தைகள் முதியவர்களுக்கு மலச்சிக்கல் தீரப் பருப்புக்கீரையைச் சமைத்துக் கொடுக்கலாம். பருப்புக்கீரைச் செடியை நன்கு கழுவி அலசிக்கொண்டு இளநீரோ மோரோ விட்டு முழுச்செடியையும் அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக் கொண்டு காலை வெறும் வயிற்றில் நீராகாரத்துடன் சாப்பிட்டு வந்தால் குடல் பிரச்னைகள் தீரும். முக்கியமாய் மஞ்சள்காமாலை குணமாகும். நீர்க்கடுப்பு, எரிச்சல், ஆகியன நீங்கும். இதன் விதைகளையும் பொடி செய்து இளநீருடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலஹீனம் நீங்கும். இந்தக்கீரையில் புரதம், கொழுப்புச் சத்து, தாதுச் சத்துக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. 

பருப்புக்கீரை சமையல்

பருப்புக்கீரை ஒரு கட்டு

பாசிப்பருப்பு சின்னக் கிண்ணம் ஒன்று

தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

மி.வத்தல் ஒன்று, ஜீரகம் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க தே.எண்ணெய் (பொதுவாய்க்கீரை வகைகளுக்கே தே.எண்ணெயில் தாளித்தால் நன்றாக இருக்கும்.)

கடுகு, உபருப்பு

கீரையை நன்கு அலசிப் பொடியாக நறுக்கி வேக விடவும். பருப்பைத் தனியாகக் குழைவாக வேக வைத்துக் கொள்ளவும். கீரையும் நன்கு வெந்தபின்னர் பருப்பைச் சேர்த்து மத்தால் நன்கு மசிக்கவும். தேவையான உப்பைச் சேர்க்கவும்.  தேங்காய்த் துருவலோடு மிளகாய் வற்றலையும் ஜீரகத்தையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்துச் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். கீரையில் தண்ணீர் அதிகம் இருந்தால் எடுத்துத் தனியாக வைக்கவும்.  பின்னர் அதில் மிளகுபொடி,பெருங்காயப் பொடி சேர்த்து நெய் அல்லது வெண்ணெய் போட்டு சூப் போல் குடிச்சுக்கலாம்.

கீரைக்கு அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதி வந்ததும் கீழே இறக்கித் தே. எண்ணெயில் கடுகு, உபருப்புத் தாளிக்கவும். கீரை மொளகூட்டல் என்றே இதைச் சொல்லலாம்.

இம்முறையில் மிவத்தல் சேர்க்காமல் மி.பொடி சேர்த்து, வெங்காயம், பூண்டு வதக்கிச் சேர்த்தும் பண்ணலாம். இதற்குப் பச்சை மிளகாய் தாளிதத்தில் சேர்க்கலாம்.  சிலர் கீரையைக்குக்கரில் வேக வைக்கின்றனர். அது அவ்வளவு நல்லது இல்லை. இதை நன்கு வேக விட்டுக் கொண்டு புளி சேர்த்து சாம்பார்ப்பொடி போட்டு, துவரம்பருப்புச் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொண்டு, சின்ன வெங்காயம், பூண்டு (பிடித்தால்) பச்சை மிளகாய், மி.வத்தல், கடுகு, வெந்தயம், கருகப்பிலை தாளித்துச் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம். 

Friday, June 15, 2018

உணவே மருந்து! வல்லாரை!

pictures of keerai

வல்லாரை

ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம் என்பார்கள். நீர் அதிகம் இருக்கும் பகுதிகளிலேயே தானாக வளர்ந்திருக்கும். இதுவும் ஒரு கீரை வகையாகவே கருதுவார்கள். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதால் "சரஸ்வதி கீரை" என்னும் பெயரும் இதற்கு உண்டு. இதில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தி, வைடமின்கள் ஏ, சி ஆகியன உள்ளன. தாது உப்புக்கள் நிறைந்ததும் கூட. ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை உள்ளது இந்தக் கீரை! உடல் புண்கள், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். கபம் நீங்கும். பல் துலக்கினால் மஞ்சள் நிறம் மாறிப் பற்கள் பளிச்சிடும்.

காலை வேளையில் வெறும் வயிற்றில் அப்போது தான் பறித்த கீரையை வாயிலிட்டு மென்றால் மூளை நன்கு செயல்படும். அதன் பின்னர் பசும்பால் குடித்தால் மாலைக்கண் நோய் குணம் ஆகும். இந்தக்கீரையுடன் மிளகு சேர்த்து உண்டால் உடல் குளிர்ச்சி அடையும். சூடு தணியும்.  ஆனால் இதற்குப் பத்தியம் உண்டு. அகத்திக்கீரை, பாகல் காய் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இது உண்ணுவது பொதுவாக அரிதாகக் காணப்படும் இக்காலத்தில் சித்த மருத்துவத்தில் சூரணம், லேகியம், மாத்திரை ஆகிய வடிவங்களில் பக்குவம் செய்து சித்த மருத்துவர்கள் தருகின்றனர்.

இதன் இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவில் தினமும் பசும்பாலில் கலந்து அருந்தினால் வயிர்ருப் பூச்சிகள் ஒழியும்.  இலைகளைச் சுத்தம் செய்து சின்ன வெங்காயம், பூண்டு , மிளகு சேர்த்து அரைத்து உப்புச் சேர்த்துத் துவையலாகச் சாப்பிடலாம். ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரை ஒரு பங்குடன் கீழா நெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்துச் சாறை அருந்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் தீரும். இந்தக் கீரை மலச்சிக்கலை அகற்றுகிறது. நீரிழிவு நோய்க்கு மிக அரிய மருந்தாகும் இது.  யானைக்கால் வியாதி, விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகள் ஆகியவற்றின் மீது இந்தக்கீரையை நன்கு அரைத்துக் கட்டினால் குணம் தெரியும். இதை முறைப்படி எண்ணெய் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு தணியும்.  வாய்ப்புண்ணால் அவதிப் படுபவர்கள் வல்லாரை இலையைப் பச்சையாக மென்று தின்றால் நல்ல குணம் தெரியும்.

அதோடு இந்தக்கீரையைச் சமைக்கையில் புளி சேர்க்கக் கூடாது. புளி சேர்த்தால் அதன் மருத்துவ குணம் மாறி விடும். சிறுநீர் மஞ்சளாகப் பிரிந்தாலும் வல்லாரை சிறந்த நிவாரணியாகப் பயனாகிறது. இதனுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து பாசிப்பருப்புப் போட்டு சாம்பார் மாதிரிச் செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்புடன் தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்துக் கூட்ட்டாகவோ பொரிச்ச குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். வல்லாரை, உளுத்தம்பருப்பு, தேங்காய் போன்றவற்றை வதக்கிக் கொண்டு அதனுடன் உப்புச் சேர்த்து மிளகு போட்டுத் துவையல் செய்தும் சாப்பிடலாம். 

Wednesday, June 13, 2018

உணவே மருந்து! முடக்கத்தான் கீரை!

pictures of keerai

முடக்கத்தான், அல்லது முடக்கித்தான் கீரை அநேகமாய் எல்லார் வீட்டுக்கொல்லைப்புறங்களில் தாராளமாகக் கிடைக்கும் ஒரு வகைக் கீரை. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது இந்தக் கீரையும். முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தக் கீரை நல்ல மருந்து. தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது இதைச் சமைத்து உண்டு வந்தால் மூட்டு வலி, நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்தக் கீரையை நீர் விட்டு மைய அரைத்துப் பிரசவம் ஆகக் கஷ்டப்படும் பெண்களின் அடி வயிற்றில் தடவினால் உடனே சுகப் பிரசவம் ஆகி விடும் என்கின்றனர்.

கைகால்கள் அறவே முடங்குவதைத் தடுப்பதால் இதற்கு முடக்கு+அற்றான் என்னும் பெயர் வந்தது. இதை ரசம் வைத்துச் சாப்பிடலாம்.  மலச்சிக்கல், வாய்வு, வாதம் போன்றவை வெளியேறும்.

ரசம் வைக்கும் முறை

சாதாரணமாகப் புளி கரைத்து ரசப்பொடி போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இந்தக் கீரையைத் தண்டு, காம்பு இலை ஆகியவற்றுடன் நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். அதைச் சாறு எடுத்து ரசத்தில் பருப்பு ஜலத்துக்கு பதிலாக விளாவவும். நெய்யில் கடுகு, மிளகு ஜீரகம் தாளித்துச் சூடான சாதத்துடன் சாப்பிடவும். இதைத் தவிரவும் மலம் சரியாகப் போகவில்லை என்றாலும் முடக்கத்தான் கீரையைச் சாப்பிடலாம். கைப்பிடி அளவுக் கீரையுடன் பூண்டு சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்பளர் நீரில் இடவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துச் சேர்க்கவும். கால் தம்பளராக வற்றும் வரை கொதிக்க விடவும். விடியற்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்கள் எல்லாம் பிரிந்து மலம் நன்கு வெளியேறும். பேதி அதிகம் ஆனால் எலுமிச்சைச் சாறில் உப்புச் சேர்த்து அருந்தவும். ரசம் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும். இதைத் தோசை மாவோடு சேர்த்து அரைத்து தோசையாக வார்த்தும் சாப்பிடலாம். இந்தக்கீரையைப் பொடியாக நறுக்கி தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் போல் வார்த்தும் சாப்பிடலாம்.

இந்தக்கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து நன்கு ஊறியபின்னர் குளித்து வந்தால் தலை மயிர் கொட்டுவது நிற்கும். நரை வருவதைத் தடுக்கும். இந்தக்கீரையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கீல் வாயு இருப்பவர்கள் வீக்கத்தில் கட்டிக் கொண்டால் குணம் ஆகும். 

Sunday, June 10, 2018

உணவே மருந்து! பொன்னாங்கண்ணி

 பொன்னாங்கண்ணிக் கீரை பல விதங்களிலும் பயன்படும். முக்கியமாய் அதன் பெயரைப் பார்த்தாலே சருமம் பொன்னைப் போல் மினுங்கும் என்பது தெரிகிறது அல்லவா! இந்தக்கீரையுடன் மிளகு சேர்த்து உப்புப் போட்டு மசித்து உண்டால் எடை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும். கண் பார்வைக்கும் இந்தக் கீரை மிகவும் பயன்படும். தொடர்ந்து இந்தக்கீரையை உண்டு வந்தால் கண் பார்வை பிரகாசமாக இருக்கும் என்பார்கள். எடை குறைய இந்தக் கீரை பயன்படுவது போல எடை கூடவும் இதே கீரையைத் துவரம்பருப்புடன் சேர்த்து நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும். மூல நோய் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இந்தக்கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு மசித்து உண்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இந்தக் கீரையில் புரதம், ஊட்டச் சத்து, மினரல் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. முக்கியமாய் இப்போது கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அதிகம் ஆகி விட்டார்கள். சின்னச் சின்னக் குழந்தைகள் கூடக் கணினியில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோரும் இந்தக் கீரையை மசித்தோ அல்லது வதக்கிப் பொரியல்/கறி மாதிரித் தேங்காய் பருப்புச் சேர்த்தோ உண்டால் கண் எரிச்சல் குறையும்.கண் சிவப்பு மாறும்.  உடலே புத்துணர்வு பெற்று விடும் தன்மை கொண்டது பொன்னாங்கண்ணிக் கீரை! இதில் நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி என இரு வகைகள் உண்டு. சீமைப் பொன்னாங்கண்ணியில் மருத்துவ குணம் இருக்காது. ஆகவே பார்த்து வாங்க வேண்டும்.


Image result for பொன்னாங்கண்ணி

அழகுக்கு வளர்க்கப்படும் சீமைப் பொன்னாங்கண்ணி.


Image result for பொன்னாங்கண்ணி

மருத்துவ பலன் கொண்ட நாட்டுப் பொன்னாங்கண்ணி

படங்களுக்கு நன்றி கூகிளார்

Friday, June 8, 2018

உணவே மருந்து! கரிசலாங்கண்ணிக்கீரை!

பொதுவாக இந்தக்கீரையைப்பெண்களின் தலை மயிர் வளருவதற்காக எண்ணெய் காய்ச்சவே பயன்படுத்திப் பார்த்திருக்கோம். ஆனால் இதைச் சமைத்தும் சாப்பிடலாம். இதைக் "கையாந்த கரை" என்னும் பெயரிலும் அழைப்பார்கள். இதை வைத்துக் கண் மை,சாந்து போன்றவையும் தயாரிப்பார்கள் எனப் படித்த நினைவு. வட மாநிலங்களில் பிருங்கராஜ் என அழைக்கப்படுவதும் இந்தக் கீரையே! நீலி பிருங்காதித் தைலம் என்னும் தலைக்குத் தேய்க்கும் தைலம் இதை வைத்துத் தயாரிக்கப்படுவதே! மற்ற பிருங்கராஜ் தைலங்களும் கரிசலாங்கண்ணியில் இருந்து எடுக்கப்பட்டவையே.

இதற்குப்பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இதன் பூக்கள் சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். கீரையின் தரத்தை இதை வைத்துப் பிரிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வெள்ளை நிறக் கரிசலாங்கண்ணி தான் கிடைக்கிறது. மஞ்சள் கரிசலாங்கண்ணி உடலுக்குப் பொன்னிறத்தைக் கொடுக்கும். சருமத்தைப் பாதுகாத்துப் பொலிவுடன் விளங்கச் செய்யும் என்கிறார்கள். ஆனால் அது கிடைப்பதில்லை. மஞ்சள் காமாலை நோய்க்குக் கரிசலாங்கண்ணிக்கீரையைச் சாறு எடுத்து மோருடன் சேர்த்துக் குடித்தால் குணம் அடையும். ஆனால் சுத்தமான பசுமோராக இருக்க வேண்டும்.

வாய்க்கசப்பு, வாந்தி, ஜீரணம் ஆகாமை, ஆகியவற்றுக்கு இந்தக்கீரையை உப்பு, மிளகாய், தேங்காய், புளி சேர்த்துத் தேவையானால் பூண்டு வைத்து வதக்கித் துவையல் அரைத்துக் கொடுக்கலாம். அல்லது நெய் விட்டு, வெங்காயம், ஜீரகம், பூண்டு சேர்த்து வதக்கிப் பருப்புப் போட்டுக் கீரையை நன்கு மசித்துக் கொடுக்கலாம்.


படத்துக்கு நன்றி கூகிளார்

Image result for கரிசலாங்கண்ணிக்கீரை!




Wednesday, June 6, 2018

உணவே மருந்து! புளிச்ச கீரை!

Image result for புளிச்ச கீரை


படத்துக்கு நன்றி கூகிளார்

இந்தக் கீரை புளிப்புச் சுவை கொண்டது. ஆகவே இதைப் புளி சேர்க்காமலேயே சமைக்கலாம். காசினிக் கீரை என்றும் வழங்கும் இதை ஆந்திர மக்கள் கோங்குரா என அழைப்பார்கள். உடல் வலிமைக்கு இந்தக்கீரை உதவும். இளம் வயதிலேயே உடல் வலிமை இல்லாமல் நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்தக்கீரையைச் சமைத்துக் கொடுக்கலாம். உடல் வலிமை பெறுவார்கள். இதில் வைடமின்கள், தாதுப் பொருட்களோடு இரும்புச் சத்தும் அதிக அளவில் உள்ளது. உடல் வெப்பத்தைத் தணிக்கவும் இந்தக் கீரையைச் சமைத்து உண்ணலாம். சரும நோய்களுக்கும் இந்தக் கீரையின் சாற்றை உட்கொள்வது பலன் தரும். சட்டினியாகவும் செய்து சாப்பிடலாம். வாதம், வாயு போன்றவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். வாயில் ஏற்படும் அருசி இந்தக் கீரையை உண்பதால் குறையும். காய்ச்சலால் உணவின் மீது ஏற்படும் ருசியின்மை குறையும். மஞ்சள் காமாலை, காச நோய் ஆகியவற்றுக்கும் இந்தக்கீரையை அரைத்துச் சாறு எடுத்துக் குடிக்கலாம். மலச்சிக்கலும் தீரும். எனினும் உடலில் பித்த தோஷம் அதிகம் உள்ளவர்கள் கூடியவரை இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

இப்போது இந்தக் கீரையை வைத்து கோங்குரா சட்னி தயாரிக்கும் விதம் பார்ப்போம்.

புளிச்ச கீரை ஒரு கட்டு

மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப 10 அல்லது 15

கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவுக்கு

வதக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம்

கடுகு, வெந்தயம், தேவையானால் ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், மஞ்சள் பொடி, பெருங்காயம்

கீரையை நன்கு ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக இலைகளை மட்டும் நறுக்கி வைக்கவும்.

கடாயில் முதலில் வெந்தயத்தை வெறும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துத் தனியே வைக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு மி.வத்தல், தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கீரையையும் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மி.வத்தல், கொத்துமல்லி விதை, வெந்தயம் போட்டு நன்கு அரைத்த பின்னர் வதக்கிய கீரையையும் போட்டு நன்கு அரைக்கவும்.

மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம் தாளித்து மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்கு வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும். வெளியே இருந்தால் கூடக் கெட்டுப் போகாது.