எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 21, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 5

இன்னிக்குப் பார்க்கப் போறது கேழ்வரகுக் கஞ்சி போடுவதற்கு மாவு தயாரிக்கும் முறை. இது சின்னக் குழந்தைகள் முதல் பெரியவங்க வரை சாப்பிடலாம். எனினும் வளரும் குழந்தைகளுக்கு முதல் திட உணவாக இதைக் கொடுத்தால் குழந்தைக்கு எல்லாவிதச் சத்துகளும் நிறைவாக சரியான முறையில் கிடைக்கும். தேவையான பொருட்களை இப்போது பார்க்கலாம்.

கேழ்வரகு ஒரு கிலோ! களைந்து கல்லரித்து நீரில் ஊறப்போடவும்.  எப்போதும் போல் நீரை அடிக்கடி மாற்றவும். ஒரு நாள் முழுதும் ஊறியதும் மறுநாள் நீரை வடிகட்டிக் கொண்டு வெள்ளைத் துணியில் போட்டு முடிச்சுக் கட்டி முளைக்கட்ட வைக்கவும். ஒரு நாள் முழுவதும் துணியிலேயே கட்டப்பட்டு இருந்தால் நன்றாக முளை வந்துவிடும்.

மேலே சொன்ன அளவு கேழ்வரகுக்குத் தேவையான மற்ற சாமான்கள்

புழுங்கல் அரிசி அரைக்கிலோ

கோதுமை  அரைக்கிலோ

பாசிப்பருப்பு அரைக்கிலோ

வேர்க்கடலை கால் கிலோ

பொட்டுக்கடலை அரை கிலோ

பாதாம் 50 கிராமிலிருந்து 100க்குள் அவரவர் வாங்கும் வசதிக்கு ஏற்ப

முந்திரிப்பருப்பு அதே போல் 50 கிராமிலிருந்து 100க்குள்

ஓமம் கால் கிலோ ஓமத்தில் கல் இருக்கலாம். ஆகவே களைந்து கல்லரித்து வடிகட்டிச் சூடான வாணலியில் உடனே போட்டு வறுத்தால் வறுபடும்.

கேழ்வரகு முளை வந்தவுடன் துணியிலிருந்து எடுத்து வெறும் வாணலியில் (இரும்பு வாணலி நலம்) வறுத்து எடுக்கவும். பின்னர் வரிசையாக மேற்சொன்ன சாமான்களையும் வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.  எல்லாவற்றையும் சேர்த்து ஒரு துணிப்பை அல்லது தூக்கில் போட்டு மிஷினில் கொடுத்து ரொம்ப நைஸாக இல்லாமல் அதே சமயம் ரவையாகவும் இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பான மாவாக அரைக்கவும்.

சின்னக் குழந்தைகளுக்கு இந்த மாவில் இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணம் கொதிக்க வைத்து ஆறிய வெந்நீரில் கலந்து பின்னர்  ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். கஞ்சியாகக் கொடுப்பதெனில் கொஞ்சம் நீர்க்கவே இருக்கட்டும். நீர் அதிகம் சேர்க்கலாம். கஞ்சி வேண்டாமெனில் கொஞ்சம் நீர் குறைத்துச் சேர்த்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரையோ, உப்போ தேவைக்கு ஏற்பச் சேர்க்கலாம். ஓமம் போட்டிருப்பதால் சர்க்கரை போடலாமா கூடாதா என யோசிக்க வேண்டாம். ஓமம் குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுவை நீக்கும். நேரடியாக ஓமத் தண்ணீர் கொடுத்தால் பல குழந்தைகளும் சாப்பிடாது என்பதால் உணவில் சேர்க்கலாம்.

இந்த மாவையே களி போலவும் கிளறலாம். ஒரு கிண்ணம் மாவுக்கு ஒன்றரைக்கிண்ணம் நீர் விட்டுக் கொதிக்க வைத்து உப்புச் சேர்த்துக் களியாகக் கிளறலாம். இதற்கு அநேகமாய் பாகற்காய் கொஜ்ஜு தான் தொட்டுப்பாங்க. அவரவர் விருப்பம் போல் பண்ணிக்கலாம். வத்தக்குழம்பு கூட நன்றாக இருக்கும்.

இந்த மாவிலேயே சப்பாத்தி, பூரி போன்றவையும் செய்யலாம். மாவு பிசையும்போதே அதில் கீரை வகைகள் அல்லது முட்டைக்கோஸ் துருவியது, காரட் துருவியது, முள்ளங்கி துருவியது என ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொண்டு மி.பொடி, மஞ்சள் பொடி,பெருங்காயப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு உப்புச் சேர்த்துப் பிசைந்து கொண்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்த மாவை அதில் புரட்டிச் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் சப்பாத்திகளாகவோ, ஃபுல்கா ரொட்டிகளாகவோ, பரோட்டாவாகவோ செய்யலாம். சப்பாத்திக்குச் செய்யும் சைட் டிஷ் எதுவானாலும் இதனுடன் ஒத்துப் போகும்.  இந்த மாவு தற்சமயம் கைவசம் இல்லை. ஆதலால் ரொட்டி செய்ய முடியவில்லை. ஆனால் ஆஷிர்வாத் ஆட்டாவில் இப்படி ஒரு மாவு எல்லா சிறுதானியங்களும் கலந்தது எனச் சொல்லி விற்கின்றனர். வாங்கிப் பார்க்கவில்லை. 

15 comments:

  1. சத்து மாவு என்று தலைப்பு வச்சிருக்கலாம். கேழ்வரகு கஞ்சிக்கு வெறும் கேழ்வரகு மாவு (கடையில் கிடைப்பது) போதுமானது.

    சத்துமா தயாரிப்பை எளிமையா சொல்லியிருக்கீங்க. ஓமம் போடாம, ஏலக்காயையும் சேர்த்து அரைத்தால் வாசனையா இருக்காது?

    ReplyDelete
    Replies
    1. தேவையானா ஏலக்காய் போடலாம். இது உப்புப் போட்டு மோர் விட்டும் குடிக்கலாம் என்பதால் ஓமம்!

      Delete
    2. எங்க வீட்டில் சத்துமா என்றால் அரிசி+கோதுமை மட்டும் தான். வறுத்து அரைத்து வைத்துக் கொண்டு வெல்லம் போட்டு நெய் விட்டு மாலை டிஃபன் இல்லை எனில் தருவாங்க. தேங்காயும் துருவிப் போடுவது உண்டு. ஆசாரமான வயதானவர்களுக்கு விரத நாட்களில் இதான் ஆகாரம்.

      Delete
    3. சத்துமாவு என்று தனியாக நவதானியங்களை சேர்த்து வைத்த கலவை கடைகளில் கிடைக்கிறது. அல்லது நவதானியங்களை தனித்தனிப் பொட்டலங்களாக்கி ஒரு பொட்டலமாகத் தருவார்கள். நீங்கள் வாங்கி மாவாக அரைத்துக் கொள்ளலாம். நாமும் நம் விருப்பத்துக்கு கூட ஒன்றிரண்டு பொருட்கள் சேர்த்தும் கொள்ளலாம். முன்னர் நாங்கள் செய்திருக்கிறோம்.

      Delete
    4. ஆமாம். ஏலக்காயோ, ஓமமோ தனியாக வைத்துச் சேர்த்தால் மோர் பெருங்காயமா, பால் சர்க்கரையா என்று அவ்வப்போது முடிவு செய்து கொள்ளலாம்!

      Delete
    5. ஸ்ரீராம்.... நல்ல ஐடியா இது.

      Delete
    6. நாங்க பொதுவா கடையில் விற்கும் தானியங்களை மட்டுமே வாங்குவோம். அதிலும் நவ தானியங்களில் சத்துமா செய்ததில்லை. சத்துமா எனில் கோதுமை+அரிசி+பாசிப்பருப்பு இவை தான். கஞ்சி மாவு எனில் கேழ்வரகு முக்கிய இடம்! மற்றவை விருப்பத்துக்கு ஏற்ப. இப்போத் தான் சில ஆண்டுகளாகக் கஞ்சி மாவில் சிறு தானியங்கள் சேர்க்கிறோம். நவகிரக பூஜை என்றால் தான் நவ தானியத்துக்கு வேலை. இல்லை எனில் வாங்குவதில்லை.

      Delete
  2. எங்க ஊர்ல (மும்பையிலும் இருக்கும்) ஆதில் ஸ்டோர்ஸில் அங்கேயே அரைக்கும் வசதியும் உண்டு. நம்ம சொல்லற காம்பினேஷன்ல அரைச்சுக் கொடுப்பாங்க. அவங்களே பல தானிய சப்பாத்தி மாவு, இன்னும் பல காம்பினேஷன்ல சப்பாத்தி மாவு வச்சிருப்பாங்க. அது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வட மாநிலங்கள் அனைத்திலும் கோதுமை வாங்கினால் அந்த மளிகைக்கடைக்காரங்களே அவங்க பொறுப்பில் சுத்தம் செய்து மாவு அரைத்துக் கொடுப்பாங்க. தனியாக் காசு இல்லை. அதே போல் புடைவைகள் வாங்கினாலும் அந்த ஜவுளிக்கடைக்காரங்களே புடைவைகளுக்கு ஓரம் அடித்து ஃபால்ஸ் வைத்துத் தைத்துக் கொடுப்பாங்க! இலவசம்!

      Delete
  3. கோதுமையிலேயே அத்தனை வெரைட்டி இருக்கும். பஞ்சாப், ஹரியானா, இன்னும் பல பெயர்களி. நாம் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதை அவங்க அரைத்து மாவா தருவாங்க. நீங்க ஒருவேளை பலவித கோதுமைகள் பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ராஜஸ்தானின் கங்காநகர் கோதுமை மிகப் பிரபலம். நாங்க அநேகமா மூட்டையாய் கோதுமை வாங்கி வைத்துக் கொள்வோம். அங்கே இருந்தவரை அரிசி குறைவு தான். இப்போதும் குறைவு தான் என்றாலும் இங்கே இரவில் தினமும் சப்பாத்தி இல்லை. ஏனெனில் அங்கே காலை டிஃபன், மதியம் சாப்பாடு, இரவு டிஃபன் என்பதால் இட்லி, தோசை எல்லாம் காலையே செய்துடுவேன். ராத்திரிக்குக் கட்டாயமாய்ச் சப்பாத்தி தான். அதுவும் ஃபுல்கா ரொட்டி தான்!

      Delete
  4. இருக்கும் கோதுமையிலேயே சிறந்தது என M.P. கோதுமையைத் தான் சொல்வார்கள். இங்கே கோதுமை கூடவே வேறு தானியங்களும் சேர்த்து அரைத்துத் தருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், எம்பி கோதுமையும் நல்லா இருக்கும்னு சொல்வாங்க. நாங்க பெரும்பாலும் சாப்பிட்டது கங்கா நகர் கோதுமை அல்லது ஹரியானா கோதுமை தான்!

      Delete
  5. இங்கே கிடைக்கிறது. ராகி ,உடம்பு பெருக்கும்னு சொல்வார்கள் இல்லையா. அளவோடு சேர்த்தால் நல்லதுதான். திடம் தரும் உணவு. நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, உடல் பெருக்கும்னு சொல்வாங்க தான்,ஆனால் எங்க பெண்ணும் சரி, அவள் பெண்ணும் சரி ஒல்லியாகவே தான் இருக்காங்க! :)

      Delete